search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sniffer"

    • பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர்.

    சென்னை:

    சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

    மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னம் அருகே டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கடற்கரை முழுவதும் சோதனை நடத்தினர். மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது.

    மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எலியட்ஸ் கடற்கரை தவிர மற்ற 29 இடங்களில் உள்ள வெடிகுண்டுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 2500 பிட்காயின் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டும் எந்த வெடி பொருளும் சிக்காததால் காவல் துறையினர் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இருப்பினும் சென்னை போலீசாரை வெடிகுண்டு மிரட்டல் கலங்கடித்துவிட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
    • முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    சூலூர்:

    கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 7 மோப்ப நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நாய்கள் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஆகிய சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக லேப்ரடார் வகையை சேர்ந்த ராஜா என்ற மோப்பநாய் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த மோப்ப நாய் கடந்த ஒருவார காலமாக உடல் சரியில்லாமல் இருந்து வந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது. உயிரிழந்த மோப்ப நாய்க்கு கோவை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. தென்னரசு தலைமையில் இறுதி சடங்கு நடந்தது.

    அப்போது மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சூலூர் போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பறியும் மோப்ப நாய் பிரிவு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    உயிரிழந்த மோப்ப நாய் ராஜா சென்னையில் நடந்த சுதந்திர தின விழா, நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    • தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார்.

    திருச்சூர் கேரள போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இடுக்கி மோப்பநாய் படையில் பணியாற்றியது.

    கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்புதுலங்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது. தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.

    அதன்படி பணி ஓய்வு பெற்ற நாய் ஜெனிக்கு போலீசார் போல் மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். இடுக்கி மோப்பநாய் படை பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனி மோப்பநாய் சீருடையில் வந்தது. அதனை இடுக்கி மாவட்ட எஸ்.பி. குரியகோஸ் மாலையிட்டு வரவேற்றார். அதன்பிறகு போலீஸ் நடைமுறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    வழக்கமாக பணி ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் திருச்சூர் போலீஸ் அகாடமி ஓய்வு முகாமிற்கு அனுப்பப்படும் ஆனால் ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று எஸ்.பி. அவரிடம் ஜெனியை ஒப்படைத்தார். பல ஆண்டுகளாக பழகிய சாபுவுடன் ஜெனி உற்சாகமாக சென்றது.

    • கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில்குக்கர் குண்டுவெடிப்பு நடைபெற்றது.
    • 100 மீட்டர் அளவில் உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில்குக்கர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போலீசார் ஐ எஸ். ஐ. எஸ். அமைப்பில் தொடர்புடைய நபர்களை கைது செய்தும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டிவனத்தில் உள்ள கோவில்கள் ,மசூதிகள்,வணிக நிறுவனங்கள்,ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ரவி,தலைமையிலான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், ரவிக்குமார்,காவலர்கள் இளங்கோ,மாதவன்,வருண் நெடுஞ்செழியன் ஆகியோர் கொண்ட குழு மோப்பநாய் ராணி உதவியுடன் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

    திண்டிவனம் பஸ் நிலையத்தில் சோதனை செய்து கொண்டு இருக்கும்போது மோப்பநாய் ராணி திடீரென அங்கு பெண் ஒருவரை கவ்வி பிடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்தப் பெண் மற்றும் அங்கிருந்து 100 மீட்டர் அளவில் உள்ள கடைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர் மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    ×