என் மலர்
நீங்கள் தேடியது "திருவிதாங்கூர் தேவஸ்தானம்"
- சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும்.
- கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வழக்கமான பூஜை, வழிபாடுகளுடன் உத்சவ பலி, ஸ்ரீபூத பலி உள்பட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவில் வருகிற 10-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டையும், 11-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழாவும் நடைபெறும்.
வழக்கமாக சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ஊர்வலத்திற்கு 2 யானைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆராட்டு விழா, சாமி ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்படும் யானைகளுக்கு போதிய ஓய்வு அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சபரிமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெறும் ஆராட்டு சாமி ஊர்வலத்திற்கு சபரிமலையில் இருந்து பம்பைக்கு ஒரு யானையும், ஆராட்டுக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மற்றொரு யானையும் பயன்படுத்தப்படும்.
இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெளிநல்லூர் மணிகண்டன் என்ற யானை நேற்று சபரிமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. மற்றொரு யானையை பம்பையில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊர்வலத்தின் போது செண்டை உள்ளிட்ட மேளங்களை தவிர்த்து தவில் உள்ளிட்ட மேளங்கள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது.
- நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் கடந்த 18-ந்தேதி நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். அவர் நடிகர் மம்முட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியதாக, சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன் பின்னரே நடிகர் மம்முட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்தது. இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், நடிகர் மம்முட்டிக்கு தான் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து தேவையின்றி திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர் பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடிகர் மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. வழிபாடு ரசீதை பெற்று சென்ற நடிகரின் உதவியாளர் வெளியிட்ட தகவல் வைரலானது. இதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவிற்கு இதுவரை 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.
- நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். இதற்காக பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் (சத்ரம்) ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவிற்கு இதுவரை 35 சதவீதம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். முன்பதிவு செய்த அய்யப்ப பக்தர்கள் தங்களது முன்பதிவை ரத்து செய்தால் அந்த தரிசன காலி இடத்திற்கு ஏற்ப உடனடி முன்பதிவின்படி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
சன்னிதானம்-பம்பை இடையேயான ரோப் கார் இணைப்பு திட்ட பணிகளை நடப்பு சீசனிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- தற்போது சராசரியாக தினமும் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. மறுநாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. நடை திறக்கப்பட்டு 7 நாட்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டில் இந்த காலக்கட்டத்தில் சாமி தரிசனம் செய்தவர்களை விட 1.75 லட்சம் பேர் அதிகம்.
இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்கள், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி தரிசன முன்பதிவு செய்யப்படுகிறது.
ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் குறிப்பிட்ட இலக்கான 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதில்லை. அதாவது தற்போது சராசரியாக தினமும் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு வருகிறார்கள்.
முன்பதிவு செய்த பக்தர்கள் கடைசி நேரத்தில் வர முடியாமல் போனால் தங்களது ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் வலியுறுத்தி உள்ளது. அவ்வாறு ரத்து செய்யும்போது உடனடி முன்பதிவு செய்ய வரும் பக்தர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் வாய்ப்பு அளிக்க முடியும்.
அதேநேரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை தினசரி 80 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக கேரள ஐகோர்ட்டு அனுமதிக்காக காத்து இருக்கிறது. ஐகோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்த்தப்படும் என தேவஸ்தானம் சார்பில் கூறப்படுகிறது.






