என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிபியா"

    • சைப் அல்-இஸ்லாம் கடாபி அண்டை நாடான நைஜருக்கு தப்பி செல்ல முயன்றபோது அவரை போராளிகளால் பிடித்தனர்.
    • சைப் அல் இஸ்லாம் கடாபிக்கு லிபிய கோர்ட்டு 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

    வடஆப்பிரிக்க நாடான லிபியாவில் நீண்ட காலமாக அதிபராக இருந்தவர் முயம்மர் கடாபி. இவரது ஆட்சி கடந்த 2011-ம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது. இதில் முயம்மர் கடாபி கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் முயம்மர் கடாபியின் மகன் சைப் அல்-இஸ்லாம் கடாபி (வயது 53) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    தலைநகர் திரிபோலியில் இருந்து தென்மேற்கே 136 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷின்டான் நகரில் உள்ள வீட்டில் சைப் அல்-இஸ்லாம் கடாபி இருந்தபோது அங்கு துப்பாக்கி ஏந்திய 4 நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் தங்களது முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர்.

    அந்த மர்ம நபர்கள் சைப் அல்-இஸ்லாம் கடாபியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றனர். சைப் அல்-இஸ்லாம் கடாபி கொல்லப்பட்டதை அவரது வக்கீல் காலித் அல்-சைதி, அரசியல் ஆலோசகர் அப்துல்லா உஸ்மான் ஆகியோர் உறுதிப்படுத்தினர்

    முயம்மர் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு கிளர்ச்சியாளர்கள் இடையே பிளவு ஏற்பட்டு உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்த நாட்டில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. தனது தந்தை ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது சைப் அல்-இஸ்லாம் கடாபி அண்டை நாடான நைஜருக்கு தப்பி செல்ல முயன்றபோது அவரை போராளிகளால் பிடித்தனர்.

    பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். லிபிய நீதிமன்றம் அவர் மீது வன்முறையைத் தூண்டியதாகவும், போராட்டக்காரர்களைக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கில் சைப் அல் இஸ்லாம் கடாபிக்கு லிபிய கோர்ட்டு 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. பின்னர் அவருக்கு லிபியாவின் போட்டி அரசாங்கங்களில் ஒன்று பொது மன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

    அதன்பிறகு சைப் அல்-இஸ்லாம் கடாபி, ஷின்டான் நகரில் வசித்து வந்தார். இந்தநிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

    • துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • இதில் பங்கேற்ற லிபியா ராணுவ தளபதி அங்கிருந்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டது.

    அங்காரா:

    துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் சென்றார்.

    கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 4 பேர் பலியாகினர்.

    இதுதொடர்பாக, லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காராவிற்கு அலுவல் பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பியபோது ராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சோகமான விபத்தில் ராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.

    • ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
    • இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    இதற்கிடையே காசாவை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அங்குள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு பாலஸ்தீனம் மற்றும் காசா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் காசா பகுதியில் இருந்து 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

    மேலும் பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்றுவதற்கு ஈடாக, டிரம்ப் நிர்வாகம் லிபியாவிற்கு கோடிக்கணக் கான டாலர் நிதியை அளிக்கும் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில், பாலஸ்தீனியர்களை லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டம் குறித்து வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனக்கூறி அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    • லிபியா வெள்ளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்
    • தற்போது 3,958 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது

    வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் பலி எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன்பின் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனத் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தி ஐ.நா. வெளியிட்டுள்ளது. ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி, "3,958 பேர் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக 11,300 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது திருத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், "உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சரியான எண்ணிக்கை வெளிப்படுத்த இருக்கிறோம்'' என்றார்.

    ஆனால், லிபியாவின் செஞ்சிலுவை சங்கம், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் அதிகப்படியான உயிர்ப்பலி எண்ணிக்கையை ஐ.நா.வுக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    மிகவும் பாதிப்புக்கு உள்ளான டெர்னாவில் 1,20,000 மக்கள் வசித்து வருகின்றனர். ஒட்டுமொத்த நகரமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அல்லது சேற்றில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது.

    ரஷியா நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளது. இத்தாலி கப்பற்படைக்கு சொந்தமான கப்பலை அனுப்பியுள்ளது. அதில் தற்காலிக கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், தண்ணீர் குழாய், டிராக்டர் போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பு பிரச்சனையால் லிபியாவில் செயல்பட்டு வந்த தூதரகத்தை இந்திய அரசு மூடியது.
    • மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு திரிபோலியில் மீண்டும் திறக்கப்பட்டது.

    திரிபோலி:

    லிபியா நாட்டில் கிளர்ச்சியாளர்களின் போராட்டம், ராணுவத்தின் அடக்குமுறை தாக்குதல் என போர்க்களமாக காட்சி அளித்தது. அங்கு சிக்கித் தவித்த 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பாதுகாப்பு பிரச்சனை காரணமாக லிபியாவில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை கடந்த 2019-ம் ஆண்டில் இந்திய அரசு மூடியது.

    இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியில் மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    லிபியா குடிமக்களுக்கு விசா வழங்குதல் மற்றும் இந்திய வெளிநாட்டினருக்கான வேலை நிலைமைகளை சரிபார்த்தல் உள்ளிட்டவை இந்த தூதரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×