லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை- வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

சைப் அல்-இஸ்லாம் கடாபி அண்டை நாடான நைஜருக்கு தப்பி செல்ல முயன்றபோது அவரை போராளிகளால் பிடித்தனர்.சைப் அல் இஸ்லாம் கடாபிக்கு லிபிய கோர்ட்டு 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை- வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
Published on

வடஆப்பிரிக்க நாடான லிபியாவில் நீண்ட காலமாக அதிபராக இருந்தவர் முயம்மர் கடாபி. இவரது ஆட்சி கடந்த 2011-ம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது. இதில் முயம்மர் கடாபி கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் முயம்மர் கடாபியின் மகன் சைப் அல்-இஸ்லாம் கடாபி (வயது 53) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் திரிபோலியில் இருந்து தென்மேற்கே 136 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷின்டான் நகரில் உள்ள வீட்டில் சைப் அல்-இஸ்லாம் கடாபி இருந்தபோது அங்கு துப்பாக்கி ஏந்திய 4 நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் தங்களது முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர்.

அந்த மர்ம நபர்கள் சைப் அல்-இஸ்லாம் கடாபியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றனர். சைப் அல்-இஸ்லாம் கடாபி கொல்லப்பட்டதை அவரது வக்கீல் காலித் அல்-சைதி, அரசியல் ஆலோசகர் அப்துல்லா உஸ்மான் ஆகியோர் உறுதிப்படுத்தினர்

முயம்மர் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு கிளர்ச்சியாளர்கள் இடையே பிளவு ஏற்பட்டு உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்த நாட்டில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. தனது தந்தை ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது சைப் அல்-இஸ்லாம் கடாபி அண்டை நாடான நைஜருக்கு தப்பி செல்ல முயன்றபோது அவரை போராளிகளால் பிடித்தனர்.

பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். லிபிய நீதிமன்றம் அவர் மீது வன்முறையைத் தூண்டியதாகவும், போராட்டக்காரர்களைக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கில் சைப் அல் இஸ்லாம் கடாபிக்கு லிபிய கோர்ட்டு 2015-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. பின்னர் அவருக்கு லிபியாவின் போட்டி அரசாங்கங்களில் ஒன்று பொது மன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு சைப் அல்-இஸ்லாம் கடாபி, ஷின்டான் நகரில் வசித்து வந்தார். இந்தநிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com