என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரடி நெல் கொள்முதல் நிலையம்"

    • வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
    • வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். வத்தலக்குண்டு அருகே உள்ள ஆடுசாபட்டியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து நெல்மணிகளை அறுவடை செய்து அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வெகுதூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி தவசி செல்வம் அவருக்கு சொந்தமான வயல் ஆடுசாபட்டியில் 100 ஏக்கரில் உள்ளது. அங்கு நெல் பயிரிட்டு விவசாயம் செய்து தற்போது அறுவடை செய்து நெல் மணிகளை குவியல் குவியலாக குவித்து வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கமே நேரடி நெல் கொள்முதல் செய்கிறது.

    இந்த நேரடி கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தையை விட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்பினார்கள். தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் விவசாயிகள் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மணிகளை விற்பனை செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது ஆடுசாபட்டியிலிருந்து விராலிப்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டி, நிலக்கோட்டை, ராமராஜபுரத்திற்கு எடுத்து செல்வதற்கு வண்டி வாடகை ஏற்றுக் கூலி, இறக்கு கூலிக்கு அதிகமாக செலவு செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே வத்தலகுண்டு பகுதிக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு செலவுத்தொகை குறைந்து அதிக லாபம் கிடைக்கும் என்றார்.

    ஆடுசாபட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு மஞ்சள் ஆற்றில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழியாக கொடுக்கப்பட்டு வருகிறது. சிமெண்ட் வாய்க்கால் அமைத்துக் கொடுத்தால் தண்ணீர் வீணாகாமல் முழுவதும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். அமைச்சர் இ. பெரியசாமி விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறினார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம், வாச்சனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்து வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் திராவிட முருகன், ஞானவேல், மாவட்ட பிரதிநிதி மா.கி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட 17% ஈரப்பத அளவில் மட்டுமே தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்கிறது.
    • நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் முறைகேடுகளை அரசு அனுமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளால் வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாது தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

    இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, வெயிலிலும் மழையிலும் தங்கள் கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டி விவசாயிகள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர்.

    குறைந்தபட்ச கொள்முதல் விலையாகக் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிவரும் வரும் நிலையில், நெல் உற்பத்தி செலவுக்கு இணையாக, அரசு மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகின்றது.

    அதுமட்டுமின்றி, நெல்லின் ஈரப்பதம் 20% வரை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், இந்திய ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட 17% ஈரப்பத அளவில் மட்டுமே தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்கிறது.

    இந்நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் விளைவித்துக் கொண்டுவரும் 17% குறைவான ஈரப்பதம் உடைய 40 கிலோ நெல் மூட்டைகளுக்கும், ஈரப்பதத்தினால் ஏற்படும் இழப்பினை காரணம் காட்டி 1½ கிலோ வரை கூடுதலாக எடை நிறுத்தே நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் எடுத்துக்கொள்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    அதாவது, சராசரியாக 1 மூட்டைக்கு 1½ கிலோவரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகின்ற வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் பிடித்தம் செய்யப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை என்று கூறி 1 கிலோ நெல்லுக்கு 1 ரூபாய் என ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் 40 ரூபாய் வரை நெல் கொள் முதல் நிலைய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் வேளாண் பெருமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    அதன்படி, விவசாயிகள் ஒவ்வொரு மூட்டை நெல்லுக்கும் 1½ கிலோ நெல்லும், 40 ரூபாய் பணமும் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பை உறிஞ்சும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.

    ஏற்கனவே, பாசன நீர்ப் பற்றாக்குறை, இடுபொருட்கள் கிடைக்கப்பெறாமை, உரம் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, பருவகால மாற்றம் எனப் பல்வேறு தடைகளைத் தாண்டி பயிர் விளைவித்தாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி வருகின்றனர்.

    இத்தகு துயர்மிகு சூழலில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் முறைகேடுகளை அரசு அனுமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    17% ஈரப்பதம் என்பது அரசு நிர்ணயித்துள்ள விழுக்காடுதானே? அதனால் ஏற்படும் எடை குறைவையும் அரசுதானே ஏற்க வேண்டும்? அதேபோன்று ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை ஆகியவற்றையும் நெல் கொள்முதல் செய்கின்ற தமிழ்நாடு அரசுதானே ஏற்க வேண்டும்? அவற்றையெல்லாம் விவசாயிகள் தலையில் சுமத்துவது எவ்வகையில் நியாயமாகும்? ஏற்கனவே, நெல் உற்பத்தி செலவுக்கு இணையாக, அரசு நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையும் உள்ளதால், வேளாண் பெருங்குடி மக்கள் சிறிதும் லாபம் இன்றியே நெல் விவசாயம் செய்து வருகின்றனர். அதனையும் அதிகாரிகள் மூலம் அரசு தட்டிப்பறிப்பது கொடுங்கோன்மையாகும்.

    ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து, எவ்வித கையூட்டுக்கும் இடமளிக்காமல் சரியான எடையில், சரியான கொள்முதல் விலையை வேளாண் பெருங்குடி மக்களுக்கு முறையாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது பறக்கை பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடுக்கரை, சிறமடம், திட்டுவிளை, தாழக்குடி, செண்பகராமன்புதூர், தேரூர், பறக்கை, கிருஷ்ணன்கோவில் மற்றும் திங்கள்நகர் பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தற்போது பறக்கை பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதனை தனியார் அரிசி ஆலையினர் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். 1 கோட்டை (87 கிலோ) நெல் ரூ. 1,550 முதல் ரூ. 1,670 வரை கொள்முதல் செய்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையம் இப்பகுதிகளில் தொடங்கி இருந்தால் 1 கோட்டை நெல் ரூ. 1,840 வரை கிடைத்திருக்கும் தனியாருக்கு கொடுப்பதில் இருந்து ரூ. 200 வரை கூடுதலாக கிடைத்திருக்கும். இதனால் விவசாயிகள் பயனடைந்து இருப்பார்கள்.

    இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கன்னிப்பூ அறுவடையில் விவசாயிகள் அதிக மகசூல் எதிர்பார்ப்பதால், வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 60 மூடை நெல் கொள்முதல் செய்வதை உயர்த்தி 70 மூடை வரை நெல் கொள்முதல் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×