search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shekharbabu"

    • 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
    • உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2023- 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 27 திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் அமைப்பதற்கு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழில், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம் (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலாளர் வெங்கடேஷ் , சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், நிதித் துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநெரே, குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    திருச்செந்தூர்: 

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:

    இந்து சமய அறநிலையத்துறை உருவான ஆண்டு முதல் எந்த ஆட்சியிலும் செய்ய தோன்றாத வகையில், பல்வேறு புதுப்புது திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்தி வருகிறோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் என முக்கிய கோயில்களில் பெருந்திட்ட (மாஸ்டர் பிளான்) வரைவை ஏற்படுத்தி, அத்திட்ட அறிக்கையின்படி பக்தர்களின் அடிப்படை தேவைகள், கோயில்களை பழைமை மாறாமல் பாதுகாக்க வேண்டிய பணிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 


    வடமாநிலங்களில்தான் 100 கோடி, 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்விப்பட்டிருப்போம். முதன் முதலில் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பங்கேற்புடன் ரூபாய் 300 கோடி செலவிலே இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மேம்பாட்டுப் பணிகளும், ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    வருகின்ற 28.09.2022 அன்று முதலமைச்சர், தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த பெருந்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். கோயிலுக்கு நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக பாதை அமைக்கின்ற பணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் உடன் கலந்தாய்வு செய்து அவரையும் நேரில் வர வைத்து அதற்குண்டான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

    மேலும் கோயிலுக்குள் வருவதற்கு முன்பு கடலில் சென்று கை கால் கழுவிவது ஐதீகமாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலை கடினமாக இருப்பதை அறிந்து அதையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு உண்டான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வெகு விரைவில் மாற்றுத்திறனாளிகளும் கடல் நீரை தொட்டு வணங்குகின்ற ஒரு நல்ல சூழலையும் அதற்குண்டான முயற்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    அனைத்து ஒப்புதல்களும் முறையாக பெறப்பட்டிருக்கின்றன. அன்னதான கூடம், மருத்துவ மையம், ஆழிக் கிணறுக்கு செல்லுகின்ற பாதைகள், கடலில் குளியலுக்கு பிறகு உடைமாற்றும் அறைகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளாக மேற்கொள்ளப்பட உள்ளன.

    எந்தவிதமான சிறு குற்றச்சாட்டும் இல்லாமல் முழுமையாக வெளிப்படை தன்மையோடு இந்த திருப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். திருப்பணியால், கந்த சஷ்டி விழாவிற்கு எந்த இடையூறும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள கோயில் அலுவலர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.

    இந்த பணிகள் முடிந்து சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கின்ற பொழுது இறை அன்பர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் இந்த திருப்பணி ஒன்றிற்காகவே மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும், இவர் இருந்தால் தான் பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணிகளை நிறைவேற்றி தருவார் என்ற வகையில் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தெய்வத்திற்கு பயன்படுகின்ற நகைகளை பாதுகாப்பு அறையில் வைத்திருக்கின்றோம்.
    • இந்த பணி ஆன்மீகவாதிகளால் பாராட்டப் படுகின்றது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவரிடம் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் திருக்கோவில் நகையெல்லாம் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி முறைகேடு நடப்பதாக தெரிவித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அமைச்சர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நானும், துறையின் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டோம். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சில பொருட்கள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப் பட்டிருந்தை பற்றி கேட்டபோது அது தெய்வத்திற்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கையான பலமாற்று பொன் இனம் என்று சொன்னார்கள்.

    தெய்வத்திற்கு பயன்படுகின்ற நகைகளை நாங்கள் முறையாக பதிவிட்டு பதிவேட்டில் வரவு வைத்துக் கொண்டு பாதுகாப்பு அறையில் வைத்திருக்கின்றோம். தெய்வத்திற்கு முழுவதும் பயன்படாத பலமாற்று பொன்னினங்களை மூட்டையாக கட்டி வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள் இதை உருக்குதற்கு ஏதேனும் ஆணை இல்லையா, மாற்றுவழி இல்லையா என்று துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டேன்.

    1977 ஆம் ஆண்டு இதற்காக ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கின்றது. பல்வேறு திருக்கோயிலில் நகைகளை உருக்கி அதனை வங்கியில் டெபாசிட் செய்து அதன் வட்டித் தொகையை அந்தந்த திருக்கோயில்களுக்கு செலவிட்டு வருகிறோம்,

    அந்த திருக்கோயிலின் திருப்பணிக்கு ஏதாவது தங்கம் தேவைப்பட்டால் வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கின்ற தங்கத்தை திரும்ப பெற்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தார்கள்.

    இது ஒரு அருமையான திட்டம். இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முழுமையாக செயல்படாமல் இருந்தது. அதனால் தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அவர்களின் நேரடி பார்வையில் தங்கத்தை பிரிக்கின்ற பணியினை மேற்கொண்டிருந்தோம். இடையில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றார்கள்.

    நீதிமன்றமும் இந்த தங்கத்தை பிரிக்கின்ற பணிக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற திருக்கோயில்களில் தங்கத்தை பிரித்தெடுக்கின்ற பணியை மேற்கொள்ளலாம், பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமித்து பின்னர் பணியினை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அந்த வகையில் இருக்கன்குடியில் 27 கிலோ தங்கத்தை உருக்கி அதனை வங்கியிலே டெபாசிட் செய்ததில் வட்டியாக மாதத்திற்கு 2 லட்சம் என்ற விதத்தில் ஆண்டிற்கு 24 லட்சம் ரூபாய் அந்த திருக்கோவிலுக்கு வருமானமாக வந்து கொண்டிருக்கிறது.

    அதேபோல தேவி பவானி அம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற சுமார் 130 கிலோ எடை கொண்ட பலமாற்று பொன் இனங்களை மும்பையில இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆலையிலே உருக்கி 101 கிலோ தங்கத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

    அந்த தங்கமும் வைப்பு நிதிக்கு சென்றால் ஆண்டிற்கு சுமார் ஒரு கோடி 2 லட்சம் ரூபாய் வருமானம் அத்திருக்கோயிலின் திருப்பணிக்கு கிடைக்கும்.

    இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத தங்கத்தை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்குவதற்கு முன்னால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற குழுவினரால் முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு, யாராவது பக்தர்கள் விரும்பினால் அவர்களின் முன்னிலையிலேயே அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இது ஒட்டுமொத்தமாக திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு நல்ல பணி. உண்மையிலேயே ஆன்மீக உலகத்திற்கு முதலமைச்சர் அவர்களால் செய்யப்படுகின்ற இந்த பணி ஆன்மீகவாதிகளால் பாராட்டப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×