search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக ஆட்சியில் புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்- அமைச்சர் சேகர்பாபு
    X

    திருச்செந்தூர் கோயில்,சேகர்பாபு

    திமுக ஆட்சியில் புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்- அமைச்சர் சேகர்பாபு

    • ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:

    இந்து சமய அறநிலையத்துறை உருவான ஆண்டு முதல் எந்த ஆட்சியிலும் செய்ய தோன்றாத வகையில், பல்வேறு புதுப்புது திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்தி வருகிறோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் என முக்கிய கோயில்களில் பெருந்திட்ட (மாஸ்டர் பிளான்) வரைவை ஏற்படுத்தி, அத்திட்ட அறிக்கையின்படி பக்தர்களின் அடிப்படை தேவைகள், கோயில்களை பழைமை மாறாமல் பாதுகாக்க வேண்டிய பணிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.


    வடமாநிலங்களில்தான் 100 கோடி, 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்விப்பட்டிருப்போம். முதன் முதலில் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பங்கேற்புடன் ரூபாய் 300 கோடி செலவிலே இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மேம்பாட்டுப் பணிகளும், ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    வருகின்ற 28.09.2022 அன்று முதலமைச்சர், தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த பெருந்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். கோயிலுக்கு நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக பாதை அமைக்கின்ற பணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் உடன் கலந்தாய்வு செய்து அவரையும் நேரில் வர வைத்து அதற்குண்டான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

    மேலும் கோயிலுக்குள் வருவதற்கு முன்பு கடலில் சென்று கை கால் கழுவிவது ஐதீகமாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலை கடினமாக இருப்பதை அறிந்து அதையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு உண்டான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வெகு விரைவில் மாற்றுத்திறனாளிகளும் கடல் நீரை தொட்டு வணங்குகின்ற ஒரு நல்ல சூழலையும் அதற்குண்டான முயற்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    அனைத்து ஒப்புதல்களும் முறையாக பெறப்பட்டிருக்கின்றன. அன்னதான கூடம், மருத்துவ மையம், ஆழிக் கிணறுக்கு செல்லுகின்ற பாதைகள், கடலில் குளியலுக்கு பிறகு உடைமாற்றும் அறைகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளாக மேற்கொள்ளப்பட உள்ளன.

    எந்தவிதமான சிறு குற்றச்சாட்டும் இல்லாமல் முழுமையாக வெளிப்படை தன்மையோடு இந்த திருப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். திருப்பணியால், கந்த சஷ்டி விழாவிற்கு எந்த இடையூறும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள கோயில் அலுவலர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.

    இந்த பணிகள் முடிந்து சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கின்ற பொழுது இறை அன்பர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் இந்த திருப்பணி ஒன்றிற்காகவே மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும், இவர் இருந்தால் தான் பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணிகளை நிறைவேற்றி தருவார் என்ற வகையில் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×