search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Chennai Expressway"

    8 வழிச்சாலை தொடர்பாக மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சேலத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டினர்.
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7,500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மேலும் வனப்பகுதி, பள்ளி கூடங்கள் பல ஆயிரம் வீடுகள், கோவில்கள் இடிக்கப்பட உள்ளன.

    இதற்கான நில அளவீடு நடந்த போது பாதிக்கப்படும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ததுடன் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணிகள் நடைபெற்றது.

    இதற்கிடையே தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் வழக்கு விசாரணை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறினர். இதனை அறிந்த சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தீர்ப்பை வரவேற்றனர்.

    சேலம் மாவட்டத்தில் 36 கி.மீ. தூரத்திற்கு 8 வழி சாலை அமைக்க நிலம் அளவீடு முடிக்கப்பட்டு முட்டுக்கல் நடப்பட்டது. நேற்று தீர்ப்பு வெளியானவுடன் சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் 100-க்கும் மேபட்டோர் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்தில் திரண்டனர்.

    அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சேலம் வாழப்பாடி அருகே உள்ள குப்பனூர், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்காபுரம் பகுதியில் பாதிக்கப்படும் மக்கள் கோவில்களில் திரண்டு கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

    இது குறித்து விவாசாயிகள் கூறுகையில், பல தலைமுறைகளாக எங்களிடம் இருந்த ஒரே வாழ்வாதாரமான நிலத்தை போலீஸ் உதவியுடன் பறிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஒரு தற்காலிக நிவாரணியாக உள்ளது. எங்கள் வேதனைக்கு தீர்வு காணும் வகையில் 8 வழி சாலை திட்டத்திற்கு கோர்ட் நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சேலம் - சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்ட கம்யூனிஸ்டு கட்சியினர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபயணம் புறப்படும் நிகழ்ச்சி அண்ணாசிலை அருகே நேற்று நடந்தது. போலீசார் நடைபயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

    தடையை மீறி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைப்பயணம் புறப்பட்டனர்.

    அப்போது போலீசார் தடுத்து 44 பெண்கள் உட்பட 395 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களை இரவு 7.30 மணியளவில் விடுவித்தனர். ஆனால் அவர்கள், நாங்கள் வெளியே சென்றால் தொடர்ந்து நடைபயணத்தை மேற்கொள்வோம் என்றும், 100 பேருக்கு நடைபயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றும் போலீசாரிடம் கூறினர்.

    இதை தொடர்ந்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் 15 பேர் கொண்ட குழுவினரிடம் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சி.பி. சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து போலீசார் அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர். வெளியே வந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் தலைமையில் நள்ளிரவில் 12 மணியளவில் அண்ணாசிலையில் இருந்து மீண்டும் நடைபயணத்திற்கு புறப்பட்டனர்.

    அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் நடை பயணத்திற்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து நடைபயணம் செய்ததால் அவர்களை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 பெண்கள் உள்பட 90 பேர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி சாலையை கைவிட வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடைபயணம் தொடங்கியவுடன் போலீசார் தலைவர்களையும், ஊழியர்களையும் கீழே தள்ளி வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்து அடைத்துள்ளனர்.

    போலீசாரின் இத்தகைய ஜனநாயக விரோத, ஏதேச்சதிகார நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    ஜனநாயக முறையில் நடைபெறும் நடைபயணத்தை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கு நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 873 விவசாயிகள் ஆட்சேபனை மனுக்கள் அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 277 கிலோ மீட்டர் தொலைவில் 8 வழி பசுமைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், சாலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாலை அமையும் 122 கிலோ மீட்டர் தொலைவில் நிலங்களை அளவீடு செய்து எல்லை குறியீடு கற்களை பதிக்கும் பணியை, விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை மீறி அதிகாரிகள் போலீசாரின் அடக்குமுறையோடு முடித்துள்ளனர். இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது குறித்து விவசாயிகள் கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை மனுக்கள் அளிக்க கூடுதலாக வழங்கப்பட்ட 15 நாட்கள் அவகாசமும் நேற்றுடன் முடிந்துவிட்டது.

    அதன்படி 873 விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனுக்கள் அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கூடுதல் இழப்பீடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு மாற்று இடம் போன்றவற்றை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைபயணம் நடக்கிறது. வரும் 1-ந் தேதி, திருவண்ணாமலை அண்ணா சிலையில் இருந்து தொடங்கும் நடைபயணத்தை, அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

    திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை 170 கிலோ மீட்டர் தூரம் இந்த நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்தார்.
    சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டி.டி.வி.தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக, இயற்கை வளங்களை அழித்தும், விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை வலுகட்டாயமாக அபகரிக்கும் எடப்பாடி அரசை கண்டித்து வருகிற 22-ந்தேதி மாலை 5 மணியளவில் தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும்.

    மக்கள் எதிர்ப்பை புறந்தள்ளி ஜனநாயக விரோத வழியில், இத்திட்டத்தை முன்னெடுக்கும் இந்த கொடுஞ்செயலை தடுத்து, விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், மக்கள் சக்தியின் வலிமையும், எடுத்துரைக்கும் விதமாக அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாலைக்கு நிலம் எடுக்க ஆட்சேபனை தெரிவித்து மொத்தம் 627 பேர் மனு அளித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை திருவண்ணாமலை உள்பட 5 மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இத்திட்டத்திற்காக விவசாய நிலங்கள், வீடுகள் என ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகம் குறித்து ஆட்சேபனை தெரிவிக்கலாம் என கடந்த மாதம் 19-ந் தேதி முதல் நேற்று (9-ந் தேதி) வரை காலக்கெடு வழங்கப்பட்டது. அதன்படி, ஆட்சேபனை தெரிவித்து மொத்தம் 627 விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

    இவற்றில் இழப்பீட்டு தொகை அதிகம் கோரியும், நில இழப்பீட்டுக்காக அரசு வேலை வழங்கக் கோரியும், ஈடு நிலம் வழங்க கோரியும், இதர வகை கோரிக்கைகளை தெரிவித்தும் பலர் மனு அளித்துள்ளனர்.

    செங்கம் தாலுகாவில் 225 விவசாயிகள், திருவண்ணாமலை தாலுகாவில் 127 பேர், கலசப்பாக்கம் தாலுகாவில் 65 பேர், போளூர் தாலுகாவில் 51 பேர், சேத்துப்பட்டு தாலுகாவில் 89 பேர், வந்தவாசி தாலுகாவில் 32 பேர் மற்றும் செய்யாறு தாலுகாவில் 38 விவசாயிகளும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

    காலக்கெடு வழங்கப்பட்ட 21 நாட்களிலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலம் எடுக்க ஆட்சேபம் தெரிவித்து அதகாரிகளை சந்தித்து மனு அளிக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் மனுக்களை பெற்று கொள்ளாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவும் முன்வரவில்லை.

    மாறாக, பெறபட்ட ஒருசில மனுக்களை அதிகாரிகள் குப்பை தொட்டியில் வீசினர். மனுக்களை கொடுக்க செல்லும் போது வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக பேசி மிரட்டினர். அளவுக்கு அதிகமான மனுக்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.

    மத்திய-மாநில அரசுகள் உறுதியாக பசுமை சாலை அமைப்போம் எனக்கூறிய பிறகு ஆட்சேப மனுக்களை கேட்பது விவசாயிகளை ஏமாற்றும் கபட நாடகம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
    சேத்துப்பட்டில் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், கண்ணீர் புகை குண்டு வீசும் ‘வஜ்ரா’ வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    8 வழி பசுமை சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் செங்கம், செய்யாறு, போளூர் வந்தவாசி, சேத்துப்பட்டில் 122 கிலோ மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதுவரை 94 கிலோ மீட்டர் நிலங்கள் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.

    மீதமுள்ள 28 கிலோ மீட்டர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தீக்குளிக்க முயற்சி, கிணற்றில் குதிப்பு, மாணவி கழுத்தறுப்பு உள்ளிட்ட தற்கொலை மிரட்டல்களால் விடுபட்ட நிலங்களையும் அதிகாரிகள் விரைந்து கையகப்படுத்தி வருகின்றனர்.

    வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், கண்ணீர் புகை குண்டு வீசும் ‘வஜ்ரா’ வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    வஜ்ரா வாகனங்கள் செல்லும் கிராமங்களில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. சொந்த நிலத்தை பறிகொடுக்கும் விவசாயிகளை கலவரக்காரர்களை போல அடக்குவதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பசுமை சாலைக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்கள் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    பசுமை சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்த பேஸ்புக் பக்கத்தில் அழைப்பு விடுத்த திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) மற்றும் வேளுகானந்தலை சேர்ந்த மணிகண்டன் (25), பவன்குமார் (27) ஆகிய 3பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம் போலீசாரும் 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் நெய்யூர் விநாயகபுரத்தை சேர்ந்த கதிரவன் (25) என்பவரையும் திருவண்ணாமலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கதிரவன் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் கதிரவன் பசுமை சாலைக்கு எதிராக ‘மீம்ஸ்’ உருவாக்கி அந்த திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மத்திய-மாநில அரசுகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், பசுமை சாலை திட்டத்திற்கு எதிராகவும் கருத்து பதிவிடும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பசுமை சாலைக்கு எதிராக வாய் திறந்தாலே கைது செய்யப்படுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறை. அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    ×