என் மலர்
நீங்கள் தேடியது "President Dravupati Murmu"
- ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
- எதிர்காலத்தில் சவால்களை சந்திக்கும் திறன் ராணுவ வீரர்களுக்கு உண்டு.
ஊட்டி:
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், பின்னர் கார் மூலமாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார். நேற்று அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ வீரர்கள் குதிரை படைகளுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு முடிந்ததும் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் சென்ற ஜனாதிபதி, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு அவர் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-
ராணுவம் உள்பட பல்வேறு துறைகளிலும் நமது நாடு வளர்ந்து வருகிறது. பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திக்கும் திறன் நமது ராணுவ வீரர்களுக்கு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
- பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
- திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.
ஊட்டி:
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார்.
இதற்காக அவர் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம், கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை ஜனாதிபதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலமாக குன்னூருக்கு செல்கிறார்.
ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.
29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி வாழ் பழங்குடி மக்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து திருவாரூர் சென்று, அங்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு முடிந்ததும், மீண்டும் திருச்சி வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி பயணிக்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி. நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, பொதுப்பணித்துறை சார்பில் ராஜ்பவனில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, நகராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்வது, சாலை சீரமைப்பு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. அங்கு ஹெலிகாப்டர் தளம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஹெலிகாப்டர் தளத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனையும் மேற்கொண்டனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சுற்றியுள்ள பகுதியில் வெளியாட்கள் நுழையவும் போலீசார் தடைவிதித்தனர்.
ஜனாபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
தீட்டுக்கல், படகு இல்லம், ஹல்பங்க், கலெக்டர் அலுவலகம், ராஜ்பவன் வரையிலான சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சாலையோர முட்புதர்கள் அகற்றப்பட்டு, சரி செய்யப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி வருகையை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
வாகனங்களில் வருபவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அவர்களின் அடையாள அட்டைகளை எல்லாம் வாங்கி பார்த்து சோதித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிப்பார்க்கிறார்.
கன்னியாகுமரி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார்.
கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார். இதற்காக அவர் தனிப்படகில் அங்கு செல்கிறார்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிப்பார்க்கிறார். அதன்பின்பு அவர் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார்.
சுற்றுலா மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் அவர், மாலை 3 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்கு ராமாயண தரிசன சித்திரகூடத்தை பார்வையிடுகிறார்.
அதன்பின்பு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்த பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
- ஈஷா யோகா மைய மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வருகிறார்.புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11.45 மணிக்கு மதுரைக்கு வருகிறார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு மீண்டும் மதுரை விமான நிலையம் வருகிறார்.இதையடுத்து அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலையில் கோவைக்கு வருகிறார். அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் குண்டு துளைக்காத பிரத்யேக காரில் புறப்பட்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
தொடர்ந்து மாலையில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலமாக ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.
இரவு 8.30 மணியளவில் காரில் புறப்பட்டு மீண்டும் ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார்.
நாளை காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு செல்கிறார். அங்கு போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, இங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையம் இன்று காலை முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் மட்டுமே விமான நிலைய பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மற்ற வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகள், உள்ளே செல்லும் பயணிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்க பட்டுள்ளனர்.
போலீசார் விமான நிலையம், ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகை, ஈஷா யோகா மையம் மற்றும் ஜனாதிபதி செல்லும் வழிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நேற்று போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது. இேத போல் குன்னூர் பகுதியில் ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடைபெற்றது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள லாட்ஜ், ஓட்டல்களில் தங்குவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு தெலுங்கானா மாநிலத்துக்கு 26ம் தேதி வருகிறார்.
- ஐந்து நாள் பயணம் செய்யும் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஐதராபாத்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்துக்கு வரும் 26-ம் தேதி வருகிறார்.
ஐதராபாத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார் என தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் தெரிவித்தார்.