search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pest Attack"

    • நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
    • பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு பிறகு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருவையாறு பகுதியில் விளையும் கரும்புகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆண்டுதோறும் திருவையாறு மற்றும் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி, நடுபடுகை, நடுக்காவேரி பகுதிகளில், பொங்கலுக்கான செங்கரும்பு ஆண்டுதோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்.

    இப்பகுதிகளில் விளையும் கரும்பின் சுவையும், தன்மையும் சிறப்பாக இருப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பே கரும்பை பார்த்து, முன்பணமும் விவசாயிகளிடம் கொடுத்து சென்று விடுவார்கள்.இதனால் தான் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் பருவநிலை மாற்றம், மற்ற மாவட்டங்களில் பெய்த பருவமழையில் பாதியளவு கூட தஞ்சை மாவட்டத்தில் பெய்யாதது போன்ற காரணங்களால் பத்து மாத பயிரான பொங்கல் கரும்பு தற்போது 6 அடிக்கு மேல் வளந்திருக்க வேண்டிய நிலையில் மூன்று அடிக்கு மேல் வளராமல், தோகை பழுப்பு நிறமாக மாறி உள்ளது. மேலும் பூச்சி தாக்குதலால் ஒரு கரும்பு பாதித்தால், அருகில் உள்ள மற்ற கரும்புகள் பாதிப்பை சந்தித்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட கரும்புகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கூடுதல் செலவு செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே காவிரியில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக சரிவை சந்தித்தது. சம்பா, தாளடியும் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. அதேபோல் தற்போது பொங்கல் கரும்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து நடுப்படுகையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறும்போது:-

    இந்தாண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்தும், பூச்சி தாக்குதலால் பாதிப்பு கரும்புகளை அழிக்கும் நிலை உள்ளது.

    ஒரு ஏக்கரில் பயிரிடப்படுள்ள கரும்பு விதைகள், 50 சதவீதம் முற்றிலும் வீணாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கரும்பை வாங்க ஆர்வம் காட்டாமல், பயிரை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகிறார்கள். இருப்பினும் நல்ல முறையில் உள்ள கரும்பை காப்பாற்ற போராடி வருகிறோம். தோட்டக்கலைத்துறையினர் பூச்சி தாக்குதலுக்கு என்ன காரணம், என்ன வகையான நோய் என கண்டறிய வேண்டும்.

    தமிழக அரசு பொங்கல் தொகுப்பில், எங்கள் பகுதியில் நல்ல முறையில் இருக்கும் கரும்பை கொள்முதல் செய்தால், எங்களுக்கு நிவாரணம் வழங்கியது போல் இருக்கும். 50 சதவீதம் செலவு தொகையாவது கிடைக்கும் என்றார்.

    • பூக்கள் முற்றிலும் கருகி, பாசி என்னும் பிஞ்சுகள் அனைத்தும் வாடி உதிர்ந்து மரம் முழுவதும் வெறும் குச்சிகளாக மட்டுமே காட்சி அளித்து வருகிறது.
    • மாங்காய் விளைச்சலில் பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விவசாயிகள் வேதனை அடைந்தள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதிகளில் சுமார் 25000 ஏக்கருக்கு மேல் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.

    முற்றிலும் மலைகள்சூ ழ்ந்த பகுதிகளில் பெரும்பா லும் இயற்கை நன்னீர் விவசாயத்தில் உற்பத்தியா வதால் தரத்திலும் சுவை யிலும் தென்னிந்தியா விலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்பகுதி மாங்காய் உள்ளது.

    கல்லா மாங்காய், பந்தானவள்ளி, காதர், செந்தூரம், கிளி மூக்கு, மல்கோவா, சப்பட்டைகாசா, இமாம் பசந்த், போன்ற முதல் வகை ஏற்றுமதி ரக மாம்பழங்கள் இப்பகுதியில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் மாங்காய் மற்றும் மாம்பழங்கள் பல்வேறு அயல் நாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதிசெய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் மாம்பழ விளைச்சல் மற்றும் விற்பனை அதிகளவில் நடைபெறும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த சூழலில், திடீரென்று ஏற்பட்ட வினோதமான செல் பூச்சி தாக்குதலால் விவசாயிகளின் கனவுகள் கலைந்து போனது.

    பூக்களிடையே உற்பத்தியான செல் பூச்சிகளால் மரத்தில் உள்ள பூக்கள் முற்றிலும் கருகி, பாசி என்னும் பிஞ்சுகள் அனைத்தும் வாடி உதிர்ந்து மரம் முழுவதும் வெறும் குச்சிகளாக மட்டுமே காட்சி அளித்து வருகிறது.

    பல்வேறு பூச்சி மருந்துகள் உரங்கள் இட்டும் மரத்தில் உற்பத்தியான செல் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு விலை அதிகம் இருந்தும் அளவான விளைச்சல் இருந்ததால் ஓரளவிற்கு விவசாயிகள் தாக்கு பிடித்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு நல்ல விளைச்சலும் விலையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் திடீரென்று மரங்களை பாதித்த வினோதமான செல் பூச்சிகள் தாக்குதலால் விளைச்சல் முற்றிலும் சரிந்து, விவசாயிகளும் குத்தகைதாரர்களும் வியாபாரிகளும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் குத்தகைதாரர்கள் வியா பாரிகள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் லாரி உரிமை யாளர்கள் தொழிலாளிகள் மிகப்பெரும் வருமான இழப்பை சந்தித்து வரு கின்றனர்.

    தற்பொழுது ஏற்பட்டு ள்ள செல் பூச்சி தாக்குதல் மாங்காய் விளைச்சலில் பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக அரசு வேளாண் துறை மூலம் உரிய நட வடிக்கை எடுத்து மாமரங்களில் ஏற்பட்டுள்ள செல் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும் குத்தகை தாரர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பருவநிலை மாற்றம் நோய் தாக்குதல் காரணமாக, சம்பா மிளகாய் சாகுபடி 50 சதவிகிதமாக சரிந்து போனது.
    • சம்பா மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்டு நல்லவிலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், கொளத்தூர் என்றாலே காரம் மிகுந்த சம்பா மிளகாய்தான் நினைவுக்கு வரும். கொளத்தூரில் வசிப்பவர்கள் தங்களின் உறவினர்களை பார்க்க செல்லும்போது, சம்பா மிளகாயை கட்டாயம் கொண்டு செல்வது வழக்கம். அதேபோல், கொளத்தூரில் வசிப்பவர்களிடம் உறவினர்கள் விரும்பி கேட்பதும் சம்பா மிளகாய்தான். நாட்டு ரகமான சம்பா மிளகாய் காரம், மணம் மற்றும் நிறம் மிகுந்தது.

    கொளத்தூர் மிளகாய்க்கு தமிழகம் முழுவதும் எப்போதும் நல்ல கிராக்கி உள்ளது ஆடிப்பட்டத்தில் விதைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும். 150 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை விளைச்சலை தரும்.

    கடந்த ஆண்டு பெய்த மிக அதிக மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக, மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் சம்பா மிளகாய் பயிரிடும் பரப்பளவு குறைந்துபோனது. விவசாயிகள் வாழை, தர்பூசணி போன்ற மாற்று பயிர்களை பயிரிடத் தொடங்கி உள்ளனர்.

    கொளத்தூர் வட்டாரத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை, சம்பா மிளகாய் சாகுபடி பிரதானமாக இருந்து வந்தது. ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வந்தது. அப்போது ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் மிளகாய் உற்பத்தி இருந்து வந்தது.

    தற்போது பருவநிலை மாற்றம் நோய் தாக்குதல் காரணமாக, சம்பா மிளகாய் சாகுபடி 50 சதவிகிதமாக சரிந்து போனது. தற்போது ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

    கொளத்தூர் வாரச்சந்தையில் மிளகாய் வற்றல் கிலோ ரூ.330 முதல் ரூ.340 வரை விற்பனையாகிறது.

    நாட்டு இனமான சம்பா மிளகாய் சாகுபடி சரிந்து வருவதால், தற்போது சம்பா மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்டு நல்லவிலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    • இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
    • தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. படைப்புழு தாக்குதல், தரமற்ற விதை, சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில் மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

    இந்நிலையில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதிகளிலும் பருவ மழையை எதிர்பார்த்தும், இறவை பாசன நிலங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:- மக்காச்சோளத்தில், அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த முன் ஏற்பாடாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, கடைசி உழவின் போது, நிலத்தில் இட்டு உழுது விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நிலத்திலுள்ள தாய் அந்துப்பூச்சிகள் கூண்டுப்புழுவிலிருந்து வெளிவருவதில்லை.

    அடுத்து விதை நேர்த்தி அவசியமானதாகும்.விதையினை சையன்ட்ரானிபுரோல் 19.8 மற்றும் தயோ மீதாக்சோம் 19.8 மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி மற்றும் 15 லிட்டர் நீர் கலந்து அரை மணி நேரம் நிலத்தில் உலர்த்தி பின் விதைகளை நிலத்தில் விதைக்க வேண்டும்.மேலும் வரப்பு ஓரத்தில் எள், சூரியகாந்தி, துவரை, தட்டை, உளுந்து, சோளம் ஆகிய தானிய பயிர்களை வரப்பு பயிர்களாக சாகுபடி செய்தால் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.இந்த தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் படைப்புழு தாக்குதலிருந்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

      மடத்துக்குளம் :

      உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், கிணற்றுப்பாசனத்துக்கும் மக்காச்சோளம் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.இரண்டாம் மற்றும் நான்காம் மண்டல பாசனத்துக்கு, 60 ஆயிரம் ஏக்கர் வரையிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதன் சாகுபடிக்கு தேவையான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

      மண்டல பாசனத்துக்கு பிரதானமாக மேற்கொள்ளப்படும் மக்காச்சோள சாகுபடியில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து படைப்புழு தாக்குதலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வளர்ச்சி தருணத்தில் உள்ள இப்பயிரின் நடுப்பகுதியில் தங்கும் படைப்புழுக்கள், வேகமாக செடியின் ஒட்டுமொத்த பாகங்களையும் சேதப்படுத்துகிறது. குறுகிய நாட்களில் தண்டுப்பகுதி பாதித்து செடிகள் சாய்கிறது.இலைகளையும் துளையிட்டு வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கிறது.புழுக்களை கட்டுப்படுத்த 3 முறை மருந்து தெளித்தும் பலன் இருப்பதில்லை. கதிரிலும் இப்புழுக்கள் சேதம் ஏற்படுத்துகின்றன.ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 30 மூட்டை வரை சராசரியாக விளைச்சல் முன்பு இருந்தது. படைப்புழு தாக்குதலுக்குப்பிறகு கடந்த சில ஆண்டுகளாக ஏக்கருக்கு 10 மூட்டை வரை விளைச்சல் குறைந்து பொருளாதார சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் இத்தாக்குதல் குறையாமல் தொடர்கிறது.

      நடப்பு சீசனில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி பொருளாதார சேதத்தை தவிர்க்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விளைநிலங்களில், நடவுப்பணிகள் துவங்கும் முன்பே இதற்கான விழிப்புணர்வை துவங்கினால் மட்டுமே திட்டம் பலனை தரும். எனவே வட்டார வாரியாக படைப்புழு தாக்குதல் கட்டுப்பாட்டு முறைகளை வேளாண்துறையினர் துவக்க வேண்டும்.உழவு முறை, விதைத்தேர்வு, நடவு முறை, வரப்பு பயிர் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த சீசனிலும் மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு பாதிப்பு அளிப்பதாகவே இருக்கும்.

      • குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து திட்டத்தின் கீழ் இலவசமாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
      • குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை.

      பூதலூர்:

      தமிழக காவிரி பாசனப் பகுதி குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த நிலையில், காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

      அதேபோல பாசனப்ப குதிகளில் அவ்வப்போது பெய்த மழையாலும், கால்வாய்களில் தண்ணீர் வரத்து சீராக இருந்ததாலும் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு குறுவைசாகுபடி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

      தஞ்சை மாவட்ட த்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

      மேலும் கூடுதலாக சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறுவை சாகுபடி ஊக்குவிப்பதற்காக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து திட்டத்தின் கீழ் இலவசமாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

      இதற்காக குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வேளாண் துறை மூலமாக கூட்டுறவு சங்கத்தி லிருந்து உரங்களை பெற்று செல்கின்றனர்.அதே சமயத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் படவில்லை.

      கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பூச்சி தாக்குதல், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்காலம் தப்பி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழகஅரசு அறிவித்திருந்த நிவார ணமும் முழுமையாக கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

      இந்த நிலையில் நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்துள்ள விவசா யிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளி வரவில்லை.

      அண்மையில் தஞ்சையில் காட்டு தோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை குறுவை சாகுபடி பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறிவிட்டு சென்றார்.

      அது குறித்துஅறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாக வில்லை.இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தற்போதுள்ள பருவநிலை மாற்றத்தால் குறுவை சாகுபடியில் பூச்சி தாக்குதல், அறுவடை காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற சூழ்நிலையில் தமிழக அரசே மத்திய அரசுடன் போராடி குறுவை சாகுபடிக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

      இன்சூரன்ஸ்திட்டத்தில் கடைசி தேதிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க தமிழக வேளாண் துறையும், தமிழக அரசும் விரைந்து செயல்பட்டு குறுவைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு அறிவிப்பினை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட குறுவை சாகுபடி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

      ×