search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melbourne Test"

    அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தில் கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல என மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார். #AUSvIND #MayankAgarwal
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் சொதப்பியதால், இந்த போட்டியில் மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயாங்க் அகர்வாலுக்கு தற்போதுதான் இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அறிமுகம் ஆனது அவரின் அதிர்ஷ்டம்.

    73 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்த மைதானத்தில் கம்பீரமாக இருவரும் களம் இறங்கினார்கள். முதல் போட்டியில், இவ்வளவு பெரிய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுகிறோம் என்ற பதற்றம் இல்லாமல் மயாங்க் அகர்வால் விளையாடினார். விஹாரி 8 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் 66 பந்துகள் சந்தித்து களத்தில் நின்றார். மறுமுனையில் மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடியதால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவரில் 40 ரன்கள் சேர்த்தது.

    95 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்த மயாங்க் அகர்வால் தேனீர் இடைவேளைக்கு சற்று முன் கம்மின்ஸ் பந்தில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மயாங்க் அகர்வால் கூறியதாவது:-

    புகழ் வாய்ந்த அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால், ரன்கள் குவிக்க இது தேவையானது. நான் என்னுடைய திட்டத்தில் உறுதியாக நின்று, அதை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

    என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அரைசதத்துடன் தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் போட்டி என்பது மிகப்பெரிய இடம். எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு. நான் சீனியர் வீரர்களுடன் வளம்வரும்போது இது மிகப்பெரிய நாள், மிகப்பெரிய வாய்ப்பு என்றார்கள்.

    76 ரன்கள் என்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் அதிக ரன்கள் எடுத்திருக்கனும். நான் களத்திற்கு சென்று அதிக ரன்கள் அடிக்க வேண்டும், நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

    இவ்வாறு மயாங்க் அகர்வால் கூறினார்.
    இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தியும், மிட்செல் மார்ஷ்-க்கு எதிராகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோசமிட்டது ஏமாற்றம் அளிப்பதாக டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கிய இந்த போட்டியை பார்ப்பதற்காக சுமார் 73 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் மைதானத்தில் குவிந்தனர்.

    மெல்போர்ன் மைதானம் விக்டோரியாவில் இருக்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் முதல் இரண்டு போட்டியில் இடம்பிடித்திருந்த விக்டோரியாவின் ஹெண்ட்ஸ்காம்பிற்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் இடம்பிடித்தார். இந்த மாற்றம் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

    இதனால் விக்டோரியாவைச் சேர்ந்த ரசிகர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை ஊக்கப்படுத்தும் வகையில் கோசம் எழுப்பினார்கள். மேலும், மிட்செல் மார்ஷ் பந்து வீச வரும்போது அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். ரசிகர்களின் இந்த செயலை ஆஸ்திரேலிய வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கோசம் எழுப்புவது ஏமாற்றம் அளிக்கிறது என்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறுகையில் ‘‘இது சிறந்தது என்று நான் நினைக்கவில்லை. உண்மையிலேயே விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் உற்சாகத்தில் கோசமிட்டதை நாங்கள் பார்த்தோம். ஆனால் மிட்செல் மார்ஷ் பந்து வீச வரும்போது, அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.



    பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளத்தில் இந்தியாவிற்கு மிட்செல் மார்ஷ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவிலேயே எதிர்ப்பு கோசத்திற்கு உள்ளாவது சரியானது என்று நான் நினைக்கவில்லை. இது மோசமான செயல். அதோடு ஏமாற்றமும் அளிக்கிறது.

    விக்கோட்ரியா ரசிகர்களுக்கு ஹேண்ட்ஸ்காம்ப் இல்லாதது ஏமாற்றம் அளிக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மிட்செல் மார்ஷ்க்கு எதிராக அவர்கள் திரும்புவது மோசமானது’’ என்றார்.
    கடந்த 2014-ம் ஆண்டைவிட தற்போதைய மெல்போர்ன் ‘பிட்ச்’ உயிரோட்டமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் முடிவுகள் கிடைத்தன. மெல்போர்ன் ஆடுகளம் கடந்த சில வருடங்களாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும், போட்டிகளில் முடிவு கிடைக்காமல் ‘டிரா’விலேயே முடிந்துள்ளன.

    இந்திய அணி கடந்த 2014-ம் ஆண்டு மெல்போர்னில் விளையாடியபோது, உயிரோட்டமில்லாத ஆடுகளமாக இருந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 192 ரன்களும், ரியாஸ் ஹாரிஸ் 74 ரன்களும், கிறிஸ் ரோஜர்ஸ் 57 ரன்களும், பிராட் ஹட்டின் 55 ரன்களும், ஷேன் வாட்சன் 52 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி (169), ரகானே (147) ஆகியோரின் சதத்தால் 465 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்தபோது விராட் கோலி (54), ரகானே (48) அட்டத்தால் இந்தியா போட்டியை டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. உள்ளூர் தொடரில் அதிக அளவில் சதங்கள் விளாசப்பட்டன.

    இதனால் நாளை தொடங்கும் போட்டியிலும் முடிவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நேற்று ஆடுகளத்தை பரிசோதித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தற்போதைய ஆடுகளம் உயிரோட்டமாக இருக்கிறது. முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



    தற்போதைய மெல்போர்ன் ஆடுகளம் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் ஆடுகளத்தை நேற்று பார்த்தபோது, அதன் அடிப்பகுதி உலர்ந்து காணப்பட்டது. ஆனால், மேற்பகுதி புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இது அப்படியே இருக்க வேண்டும். இந்த புற்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பந்து வீச போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கடந்த முறையை (2014) விட தற்போதைய ‘பிட்ச்’ போதுமான அளவு உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.

    முதல் இரண்டு போட்டிகளில் ஆடுகளம் என்ன செய்ததோ, அதை இந்த ஆடுகளமும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போதும் நாங்கள் வெற்றியை எதிர்நோக்கிதான் செல்வோம்’’ என்றார்.
    டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ஏன் ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. #AUSvIND #BoxingDayTest
    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயம் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அதில் பரிசு பொருட்கள் மற்றும் நன்கொடை அளிப்பார்கள். அந்த பெட்டியை மறுநாள் பிரித்து ஏழைகளுக்கு வழங்குவார்கள்.

    அந்த நாளை “பாக்சிங் டே” என்று அழைக்கிறார்கள். இதேபோல் கூலி தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்லும்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்குவார்கள்.

    இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது.



    இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி ஆஸ்திரேலியா அணி மெல்போர்ன் மைதானத்தில் ஏதாவது ஒரு அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும். இம்முறை இந்திய அணி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டில் விளையாடுகிறது.
    ×