search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kailasanathar"

    • பதஞ்சலி முனிவர் `நித்திய கைங்கர்யாள்' என்று அழைக்கப்படுகிறார்.
    • கருவறையில் ஆவுடையார் இல்லாத தாராலிங்கம் உள்ளது.

    பிரம்மனுக்கென்று தனி கோவில்கள் உள்ள கண்டியூர், கும்பகோணம், திருப்பாண்டிகொடுமுடி, திருக்கரம்பனூர், புஸ்கர் (ராஜஸ்தான் மாநிலம்) வரிசையில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முதல் பிரகாரத்தில் நாவில் சரஸ்வதி நற்றுணையாக வீற்றிருக்கும் பிரம்மாவின் பெருவடிவம் உள்ளது பெருமைக்குரியது.

    எல்லா சிவ ஆலயத்திலும் ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்ட மூர்த்தியாக இருந்து வருகிறார். ஆனால் இந்த கோவிலில் மட்டுமே பிரம்மா மிக பிரமாண்டமாக அதுவும் மிக சிறப்பாக தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தி படைத்தவராக தனி சன்னதியில் விமானத்துடன் காட்சி அளிக்கிறார்.

    பிரம்மாவின் நான்கு முகங்கள் கிரீடம் அணிந்து நாற்புறமும் பார்த்தபடி இருக்கும். நான்கு கரங்களில் இரண்டு கரங்களை மடிமீது வைத்தும், மற்ற கரங்களில் முறையே வலக்கரத்தில் ஜெபமாலை, இடக்கரத்தில் கமண்டலமும் உள்ளவாறு தாமரை மலர் மீது தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார்.

    இவருக்கு சந்தனக்காப்பு அல்லது மஞ்சள் காப்பு அபிஷேகம் செய்து நல்ல பலனை பெறலாம். வியாழன், ஞாயிறு, திங்கட்கிழமைகள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாகும். மேலும் திருவாதிரை, புணர்பூசம், சதயம் மற்றும் அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தல் சிறப்பு என உணரப்படுகிறது.

    சூரிய பூஜை

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15, 16, 17 ஆகிய தினங்களில் நடைபெறும் இந்த சூரிய பூஜை நிகழ்ச்சி ஓர் அரிய நிகழ்வாகும். சூரிய பூஜை ஆண்டுதோறும் பங்குனி 15, 16, 17 காலை 6.14 மணிக்கு தொடங்கி 6.45 மணிக்கு ஈசனாகிய ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை சூரிய பகவான் நேரடியாக வழிபடும் காட்சியானது கடல் நீரில் மங்களகரமான ஓர் சிவலிங்கம் தோன்றி மறைவது போன்ற அற்புத காட்சியை காண்பது மிகச்சிறப்பு.

    பதஞ்சலி முனிவர்

    இவர் நித்திய கைங்கர்யாள் என்று அழைக்கப்படுவர். இவர் இத்தலத்து ஈசனை தினந்தோறும் வணங்கி இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு யோகமாகிய ஞானத்தை வழங்கி மன நிம்மதி அளித்து அருள்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைலாச நாதர்

    இக்கோவிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோவிலாக கைலாச நாதர் ஆலயம் உள்ளது. இக்கோவில் முற்கால பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. அதாவது 7, 8-ம் நூற்றாண்டுகளை சேர்ந்தது.

    இத்திருக்கோவில் தேர் வடிவில் பல்லவர் கலை முறையில் அமைந்த கோவிலாகும். கருவறையில் ஆவுடையார் இல்லாத தாராலிங்கம் உள்ளது. இது 16 பட்டைகளை கொண்டது. இது சந்திரகலாலிங்கம் என்று அழைக்கப்படும். சிதம்பரம் நவலிங்கம் சன்னதியில் உள்ள லிங்கம், காஞ்சி கைலாச நாதர் ஆலயத்தில் உள்ள லிங்கம் ஆகியவை இந்த வகையானதே ஆகும்.

    மேலே விதானம் கொண்ட கங்கைகொண்ட சோழபுரம் போல உள்ளீடு இல்லாது உச்சிவரை செல்கிறது. இறைவன் தனியே ரிஷபாருடனாக இருக்கும் காட்சி முதல் திருக்கோவிலை சுற்றியுள்ள நடனத்தோற்றங்கள் வரை அனைத்து மனதை கொள்ளை கொள்கிறது. இத்திருக்கோவிலை பார்த்தே ராஜராஜசோழன் தஞ்சை பெரியகோவிலை அமைத்திருக்க வேண்டும்.

    16 பட்டை லிங்கத்தை சுற்றிவரும் திருச்சுற்று சாந்தாரா அமைப்பை சேர்ந்தது. இதே போலத்தான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் லிங்கத்தை சுற்றி வர இடம் அமைத்து உள்ளீடற்ற கோபுரத்தையும் நிறுவி இருக்கிறார்கள்.

    இக்கோவிலே ஆதி கோவிலாக அமைந்திருக்கவேண்டும். இதன் பின்னரே 14-ம் நூற்றாண்டில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

    பிரம்ம தீர்த்த குளம்

    நான்கு புறமும் படித்துறைகளை கொண்ட அற்புத தீர்த்த குளம். இந்த தீர்த்தத்தால் பிரம்மன் 12 (துவாதச) சிவலிங்கங்களை அபிஷேகித்து வழிபாடு செய்ததால் இத்தீர்த்த குளம் பிரம்ம தீர்த்த குளம் என்று அழைக்கப்படுகிறது.

    மழை நீர் பிரகாரத்தின் மேல்தளங்களில் விழுந்து யார் காலிலும் படாமல் வழிந்து திருக்கோவில் அடித்தளத்தின் வழியே திருக்குளத்தில் விழும்படியாக தொழில்நுட்ப அறிவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    முக்கிய திருவிழாக்கள்

    மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றில் வரும் இரண்டு பிரதோஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

    சித்திரை மாதப்பிறப்பில் பஞ்சாங்கம் படித்தல், சிறப்பு அபிஷேகம், நீர்மோர் பாகனம் வழங்கப்படுகிறது.

    ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு தனியாக அபிஷேகம் செய்யப்பட்டு ஆண்டின் முதல் விழாவாக ஆடிப்பூர அம்மன் திருவீதி உலா வருதல் சிறப்பு. அன்று பாசிப்பயிறு முளைக்கட்டி விதைபோடுதல் என்று பக்தர்களுக்கு தருவது சிறப்பு.

    ஆவணியில் விநாயகர் அபிஷேகம், திருவீதி உலா வருதல்.

    புரட்டாசி மாதத்தில் நவராத்திரி 10 நாட்களும் அம்மன் பிரம்ம சம்பத் கவுரிக்கு அபிஷேகம், அலங்காரம், ஊஞ்சல் உற்சவம் என்று சிறப்பிக்கப்படும். இந்த விழா அம்பு போடுதல் நிகழ்வுடன் நிறைவு பெறும்.

    ஐப்பசி பவுர்ணமி அன்று ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.

    கார்த்திகை பவுர்ணமி அன்று திருக்கார்த்திகை தீபமும், திருவீதி உலாவும் நடைபெறும்.

    மார்கழி பவுர்ணமியன்று திருவாதிரையில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் திருவீதி உலா நடைபெறும்.

    தை மாதப்பிறப்பில் பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடைபெறும்.

    மாசி மாத சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கு நான்கு கால அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்.

    பிரம்மோற்சவ பெரும் திருவிழாவில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது தனிச்சிறப்பு. இந்த மாதத்தில் வரும் பூர நட்சத்திர நாளில் திருத்தேரோட்ட வடம் பிடித்தல் வைபவம் நடைபெறுவது தனிச்சிறப்பு. சூரிய வழிபாடு பங்குனி 15, 16, 17 ஆகிய நாட்கள்.

    பரிகார-பிரார்த்தனை தலம்

    ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமை வார்கள். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடு கின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இந்த கோவில் உள்ளது.

    திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே புதிய திசுக்களை படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை தலம் ஆகும்.

    • பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார்.
    • ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.

    'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்பது சத்தியமான வார்த்தை! நம் தீவினை நமக்குள்ளேயேதான் உள்ளது. அது... கர்வம்! 'நான்' என்பதை அழிக்க, முனிவர்களும் ஞானிகளும் தெளிவுற வலியுறுத்தியுள்ளனர்.

    கர்வத்தால் துயரத்தைச் சந்தித்த இன்னொருவரும், 'கர்வம் கூடாது, தலைக்கனம் வேண்டாம்' என அறிவுறுத்தியுள்ளார், கர்வத்தால் தன் தலையையே இழந்த அவர்- பிரம்மா! தலையை இழந்தார், பதவியை இழந்தார்; பணியை இழந்தார். வெறுமனே இருந்தார்.

    'சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து, எனக்கும் ஐந்து தலைகள்' என்று ஆணவம் கொண்டிருக்க... பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார்.

    'இழந்த ஆற்றலையும் தேஜசையும் வழங்குங்கள் ஸ்வாமி' என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், 'கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்த தலத்துக்கு வரும் வேளையில், 'விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!' என்றார்.

    அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார், வரம் பெற்றார். இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!

    திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

    இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்!

    தலத்தின் நாயகி- கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்!

    குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர: குருசாட்சாத் பர பிரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்பதற்கு ஏற்ப, ஆலயத்துள்... சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிச்சந்நிதியில் ஸ்ரீபிரம்மா, கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு, அடுத்து மூலவரான ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என காட்சி தருவது விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.

    ஆரம்பத்தில், திருப்படையூர் என அழைக்கப்பட்டதாம்! முருகப்பெருமான், அசுரர்களை அழிப்பதற்காக இங்கே... சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பிறகு படை திரட்டிச் சென்றாராம். இதனால் இந்த ஊர் திருப்படையூர் எனப்பட்டு திருப்பட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல வரலாறு! இங்குள்ள ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.

    இன்னொரு விஷயம்... பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான... அதாவது முக்தி அடைந்த தலங்களாக, ராமேஸ்வரம் முதலான பத்து தலங்களைச் சொல்வர். இவற்றுள், திருப்பட்டூர் தலமும் ஒன்று! இங்கு, சிவபெருமானுடன் பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்தர் பாடலில் 'பதஞ்சலி பிடவூர்' என இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது.

    இப்போது இந்தப் பகுதியையே தியான மண்டபமாக அமைத்துள்ளனர். யோக நிலையை அடைய விரும்புபவர்கள், மனதில் அமைதி இன்றி தவிப்பவர்கள், இங்கே வந்து பதஞ்சலி மகரிஷி சமாதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால், நன்மை உண்டு என்கின்றனர் பக்தர்கள்! வைகாசி சதய நாளில், குரு பூஜை விசேஷம். தவிர, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள், மகரிஷியை வணங்குகின்றனர்.

    இதோ... ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கி விட்டது; 2010-ஆம் வருடத்தை வரவேற்கவும் உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் வாழ்த்துகளைப் பரிமாறவும் தயாராகி விட்டோம். இந்த வேளையில்... நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள்; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா!

    மஞ்சள் காப்பு... புளியோதரை!

    வாழ்வில் துன்பம், கடன் தொல்லை, நிலையான வேலையின்மை, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கப் பெறாதவர்கள், இங்கே வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்; தொட்டில் சத்தம் கேட்கும்! வியாழக்கிழமை காலை 6 மணி; மற்ற நாளில் 8 மணிக்கு பிரம்மாவுக்கு அபிஷேகம் நடைபெறும்!

    • பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம்
    • அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கப்படுகிறாள்.

    திருப்பட்டூர் - பிரமாண்டமான பிரம்மா பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோவில்கள் மட்டுமே இருக்கின்றன.

    அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே.

    திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார். திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் இறைவி, பிரம்மநாயகி.

    ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.

    அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.

    ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும். உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.

    இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான். வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும், கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.

    இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!

    திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா. குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.

    படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.

    அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.

    மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்த தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன. பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.

    பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார். அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க! என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.

    திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும், அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.

    பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள். பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம் இது. இவர் இந்தத் தலத்தில் லிங்க உருவில் பிரம்மாவின் அருகில் உள்ளார்.

    வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அருகே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று. உட்பிராகாரத்தில் கற்பக விநாயகர், பழமலைநாதர், கந்தபுரீசுவரர், கஜலட்சுமி, நடராஜர் சபை, கால பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.

    தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகே தாயுமானவர் சன்னதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன.

    அம்மன் சன்னதியை அடுத்துளள வெளிவட்டத்தில் சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், ஐம்புகேசுவரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டூகயநாதர் ஆகியோரது சன்னதிகள் தனித்தனியே உள்ளன.

    ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களை தட்டினால் மனதை வருடும் மெல்லியநாதம் எழுந்து நம்மை சிலிர்க்க வைக்கும்.

    இங்கு அருள்பாலிக்கும் பிரம்மன் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.

    • திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.
    • பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு கைலாச புரத்தில் அமைந்திருக்கும் சவுந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் அதிகாலையில் நடைபெற்றது.

    இந்த விழாவுக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி கைலாசநாதர்-சவுந்தரவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செப்பு கேடயத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கொடி பட்டத்துடன் சுவாமி- அம்பாள் வீதி உலாவும், பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதியும், அதற்கு மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. கொடியேற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது.
    • இந்த ஆனி திருமஞ்சன அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது.

    இதையொட்டி உற்சவர் நடராஜ பெருமானுக்கும்,தாயார் சிவகாமி அம்மையாருக்கும் 16 திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன் பின்பு அலங்கார பூஜை நடந்தது.

    இந்த ஆனி திருமஞ்சன அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    ×