search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jammu kashmir attack"

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு கேரள வீரர் தாயாருடன் செல்போனில் பேசியுள்ளார். #PulwamaAttack #CRPF
    திருவனந்தபுரம்:

    காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள்.

    கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் பலியானார்.

    பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடக்கிறது.

    வயநாடு, லக்கிடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வசந்தகுமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.

    பின்னர் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடக்கிறது. வசந்த குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை முதலே ஏராளமான மக்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.



    வசந்தகுமார் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் பலியாகி உள்ளார்.

    அவர், இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தாயார் வசந்தாவுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ஜம்முவில் மிகவும் குளிராக இருப்பதாக கூறி உள்ளார். தாயாருடன் பேசிய 2 மணி நேரத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் வசந்தகுமார் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.  #PulwamaAttack #CRPFAttack
    அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்பதற்காக கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
    சென்னை:

    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதினான். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் 40 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.

    இந்த கொடூர செயலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறி இருக்கிறார்கள்.



    இந்த நிலையில், வெடிகுண்டு சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. எனவே, நேற்று மாலை, தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற கனிமொழி அதே விமானத்தில் சென்னை திரும்பினார்.

    இது போல் திரிசூலம், பொழிச்சலூர் பகுதியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க இருந்த டி.ஆர்.பாலு அந்த கூட்டங்களை ரத்து செய்து விட்டு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் பலியானா 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் தெரிவித்த உருக்கமான தகவல்களை பார்க்கலாம். #JammuKashmir #CRPF
    தூத்துக்குடி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியனும் (வயது 30) வீர மரணம் அடைந்தார். சுப்பிரமணியன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் கடந்த 10-ந் தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    இதுகுறித்து சுப்பிரமணியனின் உறவினர்கள் தெரிவித்த உருக்கமான தகவல்கள் வருமாறு:-

    சுப்பிரமணியன் ஐ.டி.ஐ. படித்து விட்டு, கடந்த 5 ஆண்டு களாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வந்தார். அவர் முதலில் சென்னையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பயிற்சி பெற்றார். பின்னர் அவர் உத்தரபிரதேசத்திலும், தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பணியாற்றினார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சுப்பிரமணியம் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து அவர் மீண்டும் பணியில் சேர்ந்த அன்றே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக அவர் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் பணியில் சேர்ந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு இந்த நிலை ஏற்படும் என்று நாங்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    சுப்பிரமணியனின் தந்தை கணபதி விவசாயி ஆவார். தாயார் மருதம் அம்மாள். சுப்பிரமணியனுக்கு பேச்சியம்மாள், வேல்தாய் ஆகிய 2 அக்காள்களும், கிருஷ்ணசாமி என்ற அண்ணனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தாசில்தார் லிங்கராஜ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    சுப்பிரமணியனின் உடல் இன்று (சனிக்கிழமை) அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டுவரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

    இதே போல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் பலியாகி உள்ளார். அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் குறித்த விவரம் வருமாறு:-

    உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே கார்குடி கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி சிங்காரவள்ளி. இந்த விவசாய தம்பதிக்கு 2-வது மகனாக பிறந்தவர் சிவசந்திரன் (வயது 33). எம்.ஏ. பிஎட். பட்டதாரியான இவருக்கு நாட்டின் மீது அதிக பற்று ஏற்பட்டதால், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் நடந்த ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வானார். 2010-ம் ஆண்டு முதல் சிவசந்திரன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் இவரும் பலியான சம்பவம் அந்த கிராமத்தை மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    சிவசந்திரன் தனது கிராமத்தை சேர்ந்த காந்திமதி (28) என்கிற பெண்ணை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் சிவமுனியன் என்கிற மகன் உள்ளான். மேலும் காந்திமதி தற்போது கர்ப்பமாக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி சிவசந்திரன் காஷ்மீரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து விட்டு, கடந்த வாரம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற கடந்த 9-ந் தேதி சிவசந்திரன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றார்.

    நேற்று முன்தினம் மதியம் தான் சிவசந்திரன் தனது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது மனைவி காந்திமதியிடம் மகன் சிவமுனியனை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், கர்ப்பமாக உள்ள நீயும் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும், நன்கு உடலை கவனித்து கொள்ளுமாறும் சிவசந்திரன் பேசியதாக தெரிவித்தார்.

    வீர மரணம் அடைந்த சிவசந்திரனுக்கு ஜெயந்தி என்கிற அக்காவும், ஜெயசித்ரா என்கிற தங்கையும், செல்வசந்திரன் என்கிற தம்பியும் உள்ளனர். இதில் செல்வசந்திரன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஆண்டு வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். ஜெயந்தி திருமணமாகி கார்குடி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவரான ஜெயசித்ரா வீட்டில் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளார். சின்னையன்- சிங்காரவள்ளி தம்பதி ஏற்கனவே இளைய மகன் செல்வசந்திரனை மின்சாரம் தாக்கியதில் பறி கொடுத்தனர். இந்நிலையில் சிவசந்திரனையும் பறிகொடுத்து விட்டு தவித்து வருகின்றனர்.

    சிவசந்திரனின் தந்தை சின்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறு வயது முதலே சிவசந்திரன் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்து வந்தார். எப்போதும் நாடு, நாடு என்று கூறுவார். நாட்டை காப்பாற்ற சென்றவர் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டார். விடுமுறையில் வந்திருந்தவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பே பணிக்கு சென்றார். நேற்று மதியம் (அதாவது நேற்று முன்தினம் மதியம்) 12 மணியளவில் சிவசந்திரன் அவரது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவரை அர்ப்பணித்து கொண்டார். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு கூறி கதறி அழுதார்.

    மேலும் சிவசந்திரன் வீட்டிற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. #JammuKashmir #CRPF 
    துணை ராணுவ படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். #TNPolitical #JammuKashmir #CRPF
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப்படையினரின் வாகன அணி வகுப்பு மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் துயரத்தையும், வேதனையையும் தருகிறது.

    இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முயன்றதற்காக பாகிஸ்தானுக்கு பல்வேறு தருணங்களில் இந்திய படைகள் பாடம் புகட்டியுள்ளன. அதற்கு பிறகும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    இனி வரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது குறித்தோ, ஊக்குவிப்பது குறித்தோ நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ அளவிலும், ராஜிய அளவிலும் கடுமையான பாடம் புகட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இல்லை என்று ராணுவ மந்திரி சொல்லிவந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு ராணுவத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அழிக்க மத்திய அரசு தயங்கக்கூடாது. மத்திய அரசின் முயற்சிக்கு இந்த தேசமே எழுந்து வந்து உறுதுணையாக இருக்க வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவப்படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோர் உள்பட 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. வருத்தம் அளிக்கிறது. இச்செய்தி நாடு முழுவதும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை த.மா.கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது. இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது.

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் முன் வரவேண்டும். இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தனை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘வீரம் நிறைந்த நம் படைவீரர்களின் உயிர் வீணாக்கப்பட்டது. இதுபோன்ற கோழைத்தனமான செயல் செய்வோரை உறுதியோடும், கண்டிப்போடும் கையாள வேண்டும். முடிவெடுப்பதில் உள்ள குறைபாட்டினால் நம் நாடு பெரும் விலை கொடுத்து வருகிறது’ என்றார். #TNPolitical #JammuKashmir #CRPF
    வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது. ஆனால் தேவைப்பட்டால் வீரர்களுக்கு உதவியாக ராணுவ வாகனம் ஓட்ட முடியும் என மருத்துவமனையில் ஹசாரே கூறினார். #JammuKashmir #CRPF #AnnaHazare

    சமூக ஆர்வலர் மற்றும் காந்தியவாதியான கிசன் பாபுராவ் ஹசாரே, அனைவராலும் அன்னா என அழைக்கப்பட்டு அன்னா ஹசாரே என அறியப்பட்டார்.  அவர் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30ந்தேதி தனது சொந்த கிராமமான அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.  

    அதன்பின் மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். ஆனால் உண்ணாவிரத போராட்டத்தால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி சுமார் 5 கிலோ வரை  உடல் எடை குறைந்திருந்தார்.

    இதனால் மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவரான ஹசாரே, தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்தவுடன் கூறும்பொழுது, வயது முதிர்வால் என்னால் துப்பாக்கியை தூக்க முடியாது.  ஆனால் தேவை ஏற்பட்டால், நாட்டுக்காக போரிடும் நம்முடைய ராணுவ வீரர்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனம் ஓட்ட என்னால் முடியும் என கூறியுள்ளார்.

    கடந்த 1960ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஹசாரே அங்கு ராணுவ வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.  அதன்பின் கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரில் கேம் கரன் பிரிவில் பணியாற்றி உள்ளார்.#JammuKashmir #CRPF #AnnaHazare
    தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். #JammuKashmir #CRPF #RailwayEmployee
    புனே:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.  இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.



    இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

    இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவரது பெயர் உபேந்திரா பகதூர் சிங் (39).  இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

    இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, இன்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

    அந்த இடத்திற்கு வந்த சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார்.  இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர்.

    ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர்.  அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. #JammuKashmir #CRPF #RailwayEmployee
    புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்களின் உயிரை பறித்த தாக்குதலை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #CurfewinJammu #Pulwamaattack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உள்பட மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 40 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள நிலையில் கொடூரமான இந்த  தாக்குதலை கண்டித்து ஜம்மு பகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, ஜம்மு நகருக்கு உட்பட்ட ஜிவல் சவுக், புரானி மண்டி, ரேஹாரி, சக்திநகர், பக்கா டங்கா, ஜானிப்பூர், காந்திநகர், பக்‌ஷிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானை கண்டித்து பஜ்ரங் தள், சிவசேனா கட்சியினரும் பொதுமக்களும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


    குஜ்ஜார் நகர் பகுதியில் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் சாலைகளில் சிலர் டயர்களை எரித்து போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தின்றி பல சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    ஜம்மு-காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், தெலுங்கானா மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், ஜம்மு பகுதியில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் இரு சமுதாயத்தினருக்கு இடையிலான மோதலாக திசை திரும்பலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு போலீஸ் துணை கமிஷனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #CurfewinJammu #Pulwamaattack
    காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று பிற்பகல் வந்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புல்வாமா தாக்குதலில் நேற்று மரணம் அடைந்த வீரரின் உடலை தோளில் சுமந்து சென்றார். #RajnathSingh #CRPFsoldier #PulwamaAttack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    பின்னர்,  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் ஜம்மு நகரை வந்தடைந்தார்.

    நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன.



    அங்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த வீரர்கள் ‘வீர் ஜவான் - அமர் ரஹே’ (உங்களது வீரமும் தியாகமும் அமரத்துவமாக வாழும்) என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.

    பின்னர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர். #RajnathSingh #Rajnathlendshoulder #CRPFsoldier #PulwamaAttack
    காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. #PMModi #CRPF #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார்.

    அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


    நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்தும் அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் தற்கொலை தாக்குதலுக்கு எப்படிப்பட்ட பதிலடி கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    காஷ்மீர் தாக்குதலையடுத்து பா.ஜனதா தலைவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டன. #PMModi #CRPF #PulwamaAttack 
    துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் ஆகும். #JammuKashmir #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர்.

    அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும் உடன் சென்றன.

    ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து ராணுவ வீரர்கள் வந்த ஒரு பஸ் மீது மோதினான்.

    இதில் வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தது. பஸ்சில் இருந்த 76-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அனைவரும் உடல் சிதறி விழுந்தனர். அருகில் வந்த மற்ற வாகனங்களும் சேதமடைந்தன.

    இந்த தற்கொலை தாக்குதலில் 44 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயம் அடைந்து கிடந்த வீரர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.



    இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

    தற்கொலை தாக்குதல் நடத்தியது அதில் அகமது என்பதும் புல்வாமா மாவட்டம் காக்கபோரா பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. இவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான்.

    இந்த தாக்குதலையடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்கை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    மேலும் மாநில தலைமை செயலாளர் ராஜீவ்கூபா, பாதுகாப்பு பிரிவு இயக்குனர் பத்நகர் ஆகியோரையும் தொடர்பு கொண்டு பேசினார். ராஜ்நாத்சிங் இன்று மேற்கு வங்காள சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு காஷ்மீர் செல்கிறார்.

    துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் சமீப காலங்களில் நடந்த மோசமான, மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி காஷ்மீரில் உரி ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புதான் நடத்தியது.

    2016-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி பாலமோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    அதே ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோர்ட்டு ராணுவ தளத்தில் 6 பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 ராணுவ வீரர்கள், ஒரு அதிகாரி உயிரிழந்தனர்.

    கடந்த 2002-ம் ஆண்டு மே 14-ந்தேதி ஜம்முவில் உள்ள காலுசாக் ராணுவ பாசறையில் 3 பயங்கரவாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 36 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதுவரை நடந்துள்ள தாக்குதல்களில் தற்போது நடந்த தற்கொலை தாக்குதல் மிக மோசமானதாக கருதப்படுகிறது.

    ஒரே நாளில் 44 இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    காஷ்மீர் தற்கொலை தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. #JammuKashmir #CRPF #PulwamaAttack
    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஷ்- இ -முகமது பொறுப்பேற்றுள்ளது.

    இந்த தாக்குதல் நடத்தியது ஆதில்அகமது தர் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய பரபரப்பு தகவல் வருமாறு:-

    ஆதில் அகமதுதர் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கண்டிபா பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் கண்டிபா இருக்கிறது. இவன் தந்தை பெயர் ரியாஷ் அகமது. சிறிய கடை ஒன்றை அங்கு நடத்தி வருகிறார்.

    பிளஸ்-2 வரை படித்த ஆதில் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளான். அவ்வப்போது அருகே உள்ள மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளான். இவனது உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், ஆதிலுக்கும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் மூளை சலவையில் கிறங்கிய அவன் கடந்த ஆண்டு திடீரென காணாமல் போனான். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளான். அவர்கள் ஆதிலை தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி கொடுத்து தயார் படுத்தி உள்ளனர்.



    பெரிய தாக்குதல் நடத்துவதற்கு நேரம் பார்த்து இருந்துள்ளான். இதற்காக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளான். அதன்படி இந்த தாக்குதலை நிறைவேற்றி உள்ளான்.

    இவன் அந்த அமைப்பில் ‘சி’ பிரிவை சேர்ந்த பயங்கரவாதி ஆவான்.

    தற்கொலை தாக்குதலுக்கு முன்பு ஆதில் அகமது தர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தான். அதில், என்னுடைய பெயர் ஆதில். நான் ஒரு ஆண்டுக்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்தேன். ஒரு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு நான் எதற்காக அந்த அமைப்பில் சேர்ந்தேனோ அந்த வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

    இந்த வீடியோ உங்களை சென்று அடையும் போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய கடைசி செய்தி. என்னை போல மேலும் பல இளைஞர்கள் இதே வழியில் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக” தெரிவித்துள்ளான்.

    ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி அமைப்பு காஷ்மீர் இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களை தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதை தொடர்ந்து செய்து வருகிறது.

    2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி பர்தீன் அகமதுகான் என்ற 16 வயது சிறுவன் தற்கொலை தாக்குதலுக்கு ஈடுபடுத்தப்பட்டான். இவனை போல உள்ளூரை சேர்ந்த 3 பேரை அந்த பயங்கரவாத அமைப்பு தற்கொலைக்கு பயன்படுத்தி உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #CRPF #PulwamaAttack
    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

    வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வதுதான் வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக அந்த நெடுஞ்சாலையில் மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் துணை ராணுவ வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர்.



    அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.

    தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர்.

    இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடம் ரத்தக்களறிகளாலும், வீரர்களின் உடல் உறுப்புகளாலும் போர்க்களம் போல காணப்பட்டது.

    கார் குண்டு தாக்குதல் நடைபெற்ற இடம் காஷ்மீர் மாநிலத்தின் கோடை கால தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற தகவல், காட்டுத்தீ போல பரவியது. அங்கு உடனடியாக மீட்பு படையினர் விரைந்தனர். பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தடய அறிவியல் வல்லுனர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். தாக்குதல் நடந்த இடம் பாதுகாப்பு படைவீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

    படுகாயம் அடைந்த வீரர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

    தாக்குதல் நடத்திய பயங்கரவாதி புலவாமா மாவட்டம், காக்கபோரா பகுதியை சேர்ந்த அதில் அகமது எனவும், அவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரில் நிரப்பப்பட்டிருந்தவை, ஐ.இ.டி. வகையை சேர்ந்த பயங்கர வெடிகுண்டுகள் என தெரிய வந்துள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி காஷ்மீரில் உரி ராணுவ தளத்திலும் இதே ஜெய்ஷ் இ பயங்கரவாத அமைப்பினர்தான் கொடூரமான தாக்குதல் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்தது நினைவுகூரத்தக்கது.

    அந்த தாக்குதலுக்கு பின்னர் இந்த கார் குண்டு தாக்குதல்தான் மிக மோசமான தாக்குதலாக அமைந்துள்ளது.

    தாக்குதலுக்கு ஆளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள், மத்திய ஆயுதப்படை போலீசின் 54-வது பட்டாலியனை சேர்ந்தவர்கள்.



    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்இ முகம்மது பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் வங்கதேசம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.  உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று சோனியா காந்தி  தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில் தன்னலமின்றி நாட்டுக்காக பணியாற்றிய சிஆர்பிஎப் வீரர்களின் உயிர் தியாகம் மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது எனவும்,  மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  தாக்குதலில் காயமடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா, உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #CRPF #PulwamaAttack 
    ×