search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband wife death"

    • நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார்.
    • கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 27), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார். அவருடன் நண்பர் ஒருவரும் குடும்பத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்ததாக தெரிகிறது.

    பூலாம்பட்டி கதவணை பகுதியில் குடும்பத்துடன் சுற்றி பார்த்த ஜனார்த்தனன், விசைப்படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தார். மேலும் படகு சவாரியின் போது 'செல்பி'யும் எடுத்து கொண்டனர். பின்னர் அங்குள்ள மோளப்பாறை பகுதிக்கு சென்ற ஜனார்த்தனன், குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்து விட்டு மனைவியுடன் காவிரி ஆற்றில் குளிக்க இறங்கினார்.

    கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அபய குரல் கேட்டு குழந்தைகள் இருவரும் கரையில் இருந்து ஆற்றை பார்த்து அழுதனர்.

    குழந்தைகளின் அழுகுரலும், அந்த தம்பதியின் அபய குரலும் கேட்டு சிறிது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கணவன்-மனைவியை மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். அதற்குள் ஜனார்த்தனனும், அவருடைய மனைவியும் தண்ணீரில் மூழ்கினர்.

    ஆற்றுக்குள் இறங்கிய மீனவர்கள் கணவன்-மனைவி இருவரையும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்டனர். பெற்றோரின் உடல்களை பார்த்து குழந்தைகள் இருவரும் பரிதவித்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் மூழ்கிய தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருடைய மனைவி அருணா (25). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் கனிஷ்கா (1 1/2). சரவணன் மெனசியில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் கனிஷ்காவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினர். நேற்று ஏ.பள்ளிப்பட்டியில் சரவணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். 

    இதற்காக ஏ.பள்ளிப்பட்டிக்கு சரவணனின் உறவினர்கள் சென்று விட்டனர். நேற்று மாலை அவர்கள் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது உறவினர் ஒருவர் சரவணன் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. சரவணன், அருணா, கனிஷ்கா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர். உடனே அவர்களை மீட்டு அங்கிருந்து பாப்பிரெட்டிப்பபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனும், அருணாவும் பரிதாபமாக இறந்தனர். 

    கவலைக்கிடமான நிலையில் இருந்த குழந்தை கனிஷ்காவை அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    அதுமட்டும் இல்லாமல் சரவணன் சிலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் விஷம் குடித்து இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள தொண்டராயன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவரும், இவரது மனைவி மனோன்மணியும்(60) மாரநேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    தொண்டராயன்பாடி மாதா கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் பலியானார். மனோன்மணி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோன்மணியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் பூதலூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகிறார்.

    அருப்புக்கோட்டை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலான் குளத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது70). இவரது மனைவி மாரியம்மாள் (63). கணவனும், மனைவியும் இன்று காலை அருப்புக்கோட்டைக்கு மொபட்டில் புறப்பட்டனர்.

    11.30 மணி அளவில் கோவிலாங்குளம் 4 வழிச் சாலை விலக்கில் மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார் மொபட் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.

    மோதிய வேகத்தில் கணவனும்-மனைவியும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கரலிங்கத்தை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேலஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70), விவசாயி. இவரது மனைவி முனியம்மாள் (60).

    கணவன்-மனைவி இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையில் மின் விளக்கை போடுவதற்காக பெருமாள் சுவிட்சை அழுத்தினார்.

    அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி முனியம்மாளும் அங்கு ஓடிவந்து கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யலூர் அருகே ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே எரியோட்டில் இருந்து அய்யலூர் நோக்கி அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ சென்றது. வேங்கனூர் அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் பாகாநத்தம் சவுடகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 65). அவரது மனைவி சின்னத்தாய் (வயது 63) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    மேலும் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், கார்த்திகேயன், ராமுத்தாய், ஆட்டோ டிரைவர் குமாரசாமி, உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகாண்டீபனிடம் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி ஆட்டோக்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் இப்பகுதியில் டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் வருகின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×