என் மலர்
நீங்கள் தேடியது "Cauvery Kookural"
- தமிழ்நாட்டில் மட்டும் ‘ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)’ மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
- மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் 'ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)' மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் துவக்க விழா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று (05-06-2025) ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதனுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் நடப்பட்டன.
இது தொடர்பாக சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முறையான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் வளம் இழந்த நிலத்தை மீண்டும் வளமாக்க முடியும் என்பதை காவேரி கூக்குரல் இயக்கம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இவ்வியக்கம் மூலம், கடந்த நிதி ஆண்டில் (2024 – 25) 34,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் 1.36 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஆண்டு இந்த சுற்றுச்சூழல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் (2025 - 2026) தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் எத்திராஜலு கூறுகையில், "UNFCCC இன் COP29 மற்றும் UNCCD இன் COP16 உச்சி மாநாடுகளில் நாங்கள் முன்நிறுத்திய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, உலகளாவிய காலநிலை நிதியில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே விவசாயம் மற்றும் உணவு அமைப்புகளை அடைகிறது என்பதாகும்.
காலநிலை மாற்றத்தை வளிமண்டலத்தில் சரிசெய்ய முடியாது. அதை மண்ணில் மட்டுமே சரிசெய்ய முடியும். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண் புத்துயிர் பெறுவதற்கு அதிக கவனமும் முதலீடும் அவசியம், இது தான் உடனடியாக செய்யப்பட வேண்டியது. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்" எனக் கூறினார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. அதனுடன் கூடுதலாக பேரூர் ஆதீனத்துடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரச மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" என்ற திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரம் நடும் விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" திட்டத்தின் மூலம் நடவு செய்த அரச மரக்கன்றுகள், அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த தன்னார்வலர் குழுக்களால் பராமரிக்கப்பட உள்ளன.
காவேரி கூக்குரல் இயக்கம் 2024 ஆம் ஆண்டில், மரம் சார்ந்த விவசாயம் குறித்த மாநில அளவில் 2 பெரிய பயிற்சி நிகழ்ச்சிகளையும், மண்டல அளவில் 6 நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இதில் 8,721 விவசாயிகள் பங்கேற்றனர்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM), மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் மரம் சார்ந்த விவசாயம் குறித்து நுட்பங்களை விவசாயிகளுடன் பகிர்ந்தனர்.
இவ்வியக்கம் மூலம் 2024 ஆம் ஆண்டில், உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5), வன மகோற்சவ வாரம் (ஜூலை 1-7), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மற்றும் உலக மண் தினம் (டிசம்பர் 5) போன்ற முக்கிய நாட்களில், 506 மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மொத்தம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஈஷா நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. இதற்காக கடலூரில் 85 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும், திருவண்ணாமலையில் 15 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும் இவ்வியக்கம் மூலம் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் தமிழ்நாட்டில் 40 விநியோக நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
- மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- காவேரி கூக்குரல் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தமிழகத்தின் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் 'கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!' என்ற கருத்தரங்கை வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள சந்தன மரப் பண்ணையில் நடத்த உள்ளது. இக்கருத்தரங்கு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பெரிய அளவில் நடக்க உள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி நிலத்தல் 50 சதவீத நிலம் மானாவாரி நிலமாகவே உள்ளது. இந்நிலங்களில் டிம்பர் மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானம் பெற முடியும். சந்தனம், செம்மரம், கொடுக்காபுளி, இலுப்பை, வேம்பு, நாட்டு வாகை, நாவல் போன்றவை மானாவாரி வளர்ப்புக்கு உகந்த மரங்களாகும். குறிப்பாக வறட்சியான நிலங்களில் சந்தனம் மற்றும் செம்மரம் நன்றாக வளர்கிறது, இம்மரங்களுக்கு அதிக நீர் தேவையில்லை. இம்மரங்கள் அதிக விலை மதிப்புடையவை என்பதால் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானம் நிச்சயம்.
கருத்தரங்கில் சந்தன மர சாகுபடி தொழில் நுட்பங்கள், விற்பனை வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வனவியல் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் விளக்க உள்ளார்கள். பெங்களூரு மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுந்தர்ராஜ் (ஓய்வு), விஞ்ஞானி சௌந்தரராஜன், மானாவாரி நிலத்தில் செம்மரம் சாகுபடி செய்துள்ள ஆசிரியர் ராமன், செம்மரச் செம்மல் கணேசன் போன்றோர் பங்கேற்க உள்ளார்கள். மேலும், மரம் சார்ந்த விவசாயம் குறித்து காவேரி கூக்குரல் வல்லுநர்கள் விளக்குவார்கள்.
விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழல், நதிகளின் நீர் ஆதாரம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு மரம் சார்ந்த விவசாயம் ஒரு தீர்வாக உள்ளதால் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நட விவசாயிகளை ஊக்குவிக்கிறது. இதுவரை ஈஷா ஏறக்குறைய 9 கோடி மரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. இந்த ஆண்டு காவேரி கூக்குரல் மூலம் தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 46 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் பலா சாகுபடி நுட்பங்கள், சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி போன்ற பயிற்சிகளையும் நடத்தியது.
சந்தன சாகுபடி பயிற்சி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள துரைசாமி அவர்களின் சந்தனமரப் பண்ணையில் நடைபெற உள்ளது. மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90079, 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.
காவேரி கூக்குரல் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம்.
- விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர்.
ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். அப்போது காவேரி கூக்குரல் சார்பில் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, பொள்ளாச்சி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், "தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார். அத்துடன் பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் " என உறுதியளித்தார்.
இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் எனப் பலர் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசியது மற்ற மூன்று மாவட்டங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அந்தவகையில் பொள்ளாச்சியில் நடந்த கருத்தரங்கில் 'மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி' என்பதை குறித்து, ஈரோடு - இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் தலைவர் கனக திலீபன் விரிவாக பேசினார்.
அதை போலவே புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் சிமந்தா சைக்கியா, 'மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி' என்பது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதுமட்டுமின்றி, 'பெப்பர் தெக்கன் ஒரு திரியில் 800-1000 மிளகு மணிகள் கண்ட' கேரளாவை சேர்ந்த டி.டி. தாமஸ், மிளகில் 'அஸ்வினி, ஸ்வர்னா ப்ரீத்தி' மூன்று புதிய ரகங்களை கண்டுபிடித்த முன்னோடி விவசாயி ஏ. பாலகிருஷ்ணன், அகளி மிளகு காப்புரிமை பெற்ற விவசாயி கே.வி. ஜார்ஜ், இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர். கண்டிஅண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் ஆகியோர் மிளகு சாகுபடி குறித்தும் அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் பேசினர். இவர்களோடு இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் ந. சிமந்தா சைக்கியா மிளகு ஏற்றுமதி குறித்து பேசினார்.
மேலும், சமவெளியில் மிளகு சாகுபடி மூலம் வெற்றி கண்டிருக்கும் முன்னோடி விவசாயிகளான பாலுசாமி, ராஜாகண்ணு, செந்தமிழ் செல்வன், பாக்கியராஜ், வளர்மதி, காமராசு, பூமாலை மற்றும் நாகரத்தினம் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை விளக்கி கூறினர்.
இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.
இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் இன்று (மே 26) காலை நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களும் கலந்து கொண்டார்.

விழாவின்போது அமைச்சர் கே.என். நேரு அவர்கள் விழாவில் பேசுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா நிறுவனர் சத்குருவுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மரம் நடும் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஈஷாவின் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அந்த விழாவில் கலைஞர் பேசும் போது, 'நாம் மரத்தை வளத்தால்; மரம் நம்மை வளர்க்கும்' என்று ஒரு அற்புதமான வாசகத்தை சொன்னார்.

அந்த வாசகத்துடன் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த ஈஷாவின் மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஈஷாவின் மரம் நடும் பணிகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
விவசாயிகள் மர வேலைப்பாடுகளுக்கு தேவைகளுக்கான மரங்கள் மட்டும் இன்றி பழ வகை மரங்களை அதிகம் நட வேண்டும். அவகோடா போன்ற பழ மரங்கள் விவசாயிகள் பெரும் வருவாயை தருகிறது. பழ மரங்கள் நடுவதன் மூலம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்கும்.
தமிழ்நாடு முழுவதும் வேலை ஆட்கள் இன்றி தரிசாக மாறி வரும் விவசாய நிலங்களில் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மரங்கள் நடுவது நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது. மரம் நடும் பணியோடு மட்டுமின்றி ஏரிகளை தூர்வாரி அதை செப்பனிடும் பணியிலும் ஈஷா இயக்கம் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி" என கூறினார்.

முன்னதாக, ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பு நிதியாண்டில் (2024-25) தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரங்களை விவசாய நிலங்களில் நடும் பணியை தற்போது தொடங்கி உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு 4.5 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். கடந்தாண்டு திருச்சியில் 2,92,773 மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்" என்றார்.
2002-ம் ஆண்டு முதல் ஈஷா சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






