search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Cadres"

    தமிழகத்தில் தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயலாற்றும்படி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளனர். #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் அறிவித்துவிட்ட அந்த வினாடியில் தொடங்கி வெற்றிச் சான்றிதழை பெற்று கழகத்தின் தலைமையகத்தில் கொண்டுவந்து காணிக்கையாக்குவது வரை அயராது சுழன்று உழைக்கும் அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்களால் நிறைந்து வழியும் ஒரே நிகரற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அம்மா வழியிலான நல்லாட்சி தொடர்வதற்கும், தேசத்தின் பிரதமராக பாரத தேசத்தின் கறைபடாத காவலரான நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர்வதற்கும் வாய்ப்பு தாருங்கள் என்று மக்களையெல்லாம் சந்தித்து தேசத்திற்கான நன்மையை எடுத்துரைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் நமக்கு ஆதரவு பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோப்புப்படம்

    ஏழை, எளிய நடுத்தர மக்களை இமையாகக் காக்கும் பொறுப்புணர்வு என நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்த வண்ணம் நாட்டின் பிற மாநிலங்களும் நம்மையே பின்பற்றும் அளவுக்கு, கழக அரசு கொண்டு வரும் சாதனைகளை தமிழக மக்கள் உளமாற போற்றுகிறார்கள்.

    அதே வேளையில் சூழ்ச்சியையே பிழைப்பாகக் கொண்டு தகிடுதத்தங்களையே பொழுதெல்லாம் செய்து, நரித்தனங்களையே அட்டவணையாக்கி, பொய்யும், புரட்டுமே பொழுதாகக்கொண்டு மக்களை திசை திருப்ப வெறிகொண்டு அலையும் எதிர்க்கட்சிகளை நாம் விழிப்போடு இருந்து தடுத்திட வேண்டும்.

    தேர்தல் ஜனநாயகத்தில் கழகத் தொண்டர்களை மிஞ்சுவதற்கு இந்த காந்தி தேசத்தில் இணையில்லை என்பதனை மெய்பிக்கும் விதமாக, நாற்பத்தாறு வயது கட்சி, முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் முடிசூடி வழிநடத்துகிறது என்றால் கழகத் தொண்டர்களின் தேர்தல் பணிகள் எத்தகையது என்பதை உணர்த்தும் விதமாக, கூட்டணி இயக்கங்களின் தொண்டர்களோடு ஒற்றுமை அரண் அமைத்து ஒட்டுமொத்த வெற்றியை கொய்வதற்கு ஒன்றரைக் கோடி சிப்பாய் படையும் சத்திய பிரமாணம் மேற்கொள்ள வேண்டும்.

    கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் வாக்குகளை எண்ணி முடிவு அறிவிக்கும் வரை அங்கேயே மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து கடமை ஆற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். நமதருமை கழகக் கண்மணிகள் அனைவரும் இப்பணியில் விழிப்போடு செயல்பட்டால், நாளைய திருநாடும் நமதாகும். நாற்பது தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் வெற்றிகள் அனைத்துமே நமக்கென ஆகும் என்பது சத்தியம்.

    பானை பொங்குகிற நேரம். நம் பாசத்திற்குரிய தொண்டர்கள் செய்யும் கடமையில் உச்சக்கட்ட விழிப்புணர்வைக்கொண்டு செயலாற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

    18.4.2019 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு,  இரட்டை இலை சின்னத்திலும்; தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முறையே, தாமரை, மாம்பழம், முரசு, ஆட்டோ ரிக்சா, ஜக்கு சின்னங்களிலும் வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மாபெரும் வெற்றிபெறச் செய்யுமாறு  வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #LokSabhaElections2019 #OPS #EPS
    மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்றது அதிமுக தொண்டர்களின் தேர்தல் யுக்தி என்பதை உணர்த்திடும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர். #ADMK #EPS #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க.தான் தமிழகத்தை ஆளும் என சட்டமன்றப் பேரவையில் நம் அம்மா ஒலித்திட்ட கடைசி சூளுரையை இதயத்தில் நிறுத்தி, நம் கருணைத் தாயின் அந்த நம்பிக்கையில் கடுகளவும் குறை நிகழ்ந்துவிடக்கூடாது எனும் குறிக்கோளோடு 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் கழகத்தின் கூட்டணிக்கே வெற்றி என்னும் லட்சியத்திற்காகவும்; இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அனைத்தும் இலைத் தேர்தலாகும் என்னும் உறுதியோடும் அயராது உழைத்துவரும் கழகத்தின் அன்பு உடன்பிறப்புகளே, கனவுமிக்க இந்த இயக்கத்தை மடியிட்டு வளர்த்து வரும் அன்பிற்குரிய தாய்மார்களே, ஆற்றல் மிக்க செயல் மறவர்களே, கழகத்தின் பல்வேறு நிலைகளில் கடமையாற்றிவரும் கழக அடலேறுகளே!

    தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் போல, முப்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக நம்மையும், நம் கழகத்தையும் வழிநடத்திய நம் அம்மா இல்லாத நிலையில், நாம் சந்திக்கும் முதல் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இது என்றாலும், நாம் அமைத்திருக்கும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மெகா கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் வென்று காட்டும் என்பது நிதர்சனமான உண்மை.

    இதனை உணர்ந்து கொண்ட எதிர்க்கட்சிகள், கருத்துக் கணிப்பு என்னும் பெயரில் தங்களது குடும்ப ஊடகங்களையும், கூலிக்கு மாறடிக்கும் சிலரையும் வைத்துக்கொண்டு, கழகக் கூட்டணிக்கு வாக்களிக்க திடமாக எண்ணி இருக்கும் வாக்காளர்களையும், பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கோடும், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் போராடி வரும் நம் கழகத் தொண்டர்களின் எழுச்சியைத் தடுத்து, அவர்களிடையே ஒரு மனச் சோர்வை உருவாக்கிடும் யுக்தியோடும் பெரும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அடித்துக் குவித்து வைத்திருக்கும் அலைக்கற்றை பணங்களை இறக்கி, விதவிதமான விளம்பரங்களால் வாய்மையை வென்றுவிடலாம் என கனவு காண்கிறார்கள்.

    ஆனால், இதற்கெல்லாம் அஞ்சுகிற பழக்கமோ, கவன சிதைவுக்கு ஆளாகிற வழக்கமோ நம் கழகத் தொண்டர்களுக்கு ஒருபோதும் இல்லை. “வெல்லப் பாயும் குதிரை, கொல்லையும் நோக்காது, புல்லையும் பார்க்காது” என்பது போல, கொண்ட குறிக்கோளை வென்றெடுப்பதில் இம்மியளவும் விலகாமல் சரித்திரம் படைப்பது தான் நம் கழகத்தின் வரலாறு.

    எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் நமது பாதை சரியாக இருக்கிறது என்பது தானே அர்த்தம். இன்று மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக்கூடிய நாமும், பாரதிய ஜனதா கட்சியும் செய்திருக்கும் மகத்தான சாதனைகளை, மக்கள் நலப் பணிகளை மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.

    எஞ்சியிருக்கும் பணிகளை விரைவில் செய்து முடித்திடுவோம் என்கிற உளமார்ந்த உறுதியையும் அவர்களிடம் தருகிறோம். இதனால், அலை அலையாய் அணிவகுக்கும் மக்கள் இலைக்கும், பூவுக்கும், கனிக்குமே எங்கள் ஓட்டு என்று முரசடித்துச் சொல்கிறார்கள்.

    ஆனால், ஐந்து முறை ஆட்சி செய்த திமுகவும் சரி, ஐம்பதாண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசும் சரி, தாங்கள் செய்த சாதனைகள் என்று சொல்வதற்கு ஏதும் இல்லாதவர்களாய்.... கச்சத்தீவை தாரை வார்த்ததும், காவிரி துரோகமும், இலங்கையில் அவர்கள் கரம் கோர்த்து நடத்திய இன அழிப்புப் படுகொலைகளும், அவர்கள் கண் முன்னே வந்து நிற்பதால், வெட்கப்பட்டுக்கொண்டு எடுத்துச் சொல்ல சாதனை எதுவும் இல்லாத காரணத்தால், எங்கள் மீதும், கழகத்தின் மீதும், பாரதப் பிரதமர் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தொடுக்கிறார்கள்.

    ஏற்கெனவே குற்றம் புரிந்தவர்களைக் கூட்டி வந்து, கொலைப் பழி சுமத்த சதித் திட்டம் தீட்டி மூக்கறுபட்டவர்கள், இனி என்ன செய்வது என்றே தெரியாத கையறு நிலையில் நின்றுகொண்டு கரன்சிகளை அள்ளிவிட்டு தி.மு.க.வின் அன்றைய திருமங்கலம் பாணியில் தேர்தல் ஜனநாயகத்தை விலைபேசத் திட்டமிடுகிறார்கள். இதற்கு சாட்சி தான்,



    தி.மு.க. பொருளாளர் துரை முருகன் வீட்டில் மலை மலையாய், கத்தை கத்தையாய் கைப்பற்றப்பட்டிருக்கும் கோடான கோடி பணம்.

    ஆனால், நெறிபிறழாத வழியில் எதற்கும் அஞ்சாது நாம் செய்த சாதனைகளை, நாம் மீட்டெடுத்த உரிமைகளின் பெருமைகளை மக்களிடம் வீடு வீடாய் எடுத்துச்சொல்லி ஓட்டு வேட்டையாடிவரும் எங்களின் உயிரினும் மேலான கழகக் கண்மணிகளுக்கும், கூட்டணி இயக்கங்களின் குலையா உறுதிகொண்ட தொண்டர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    நாம் தர்மத்தின் வழியில் நிற்கிறோம். பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, அகில இந்திய சூ.சு. காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றோம்.

    மேலும், தோழமைக் கட்சிகளான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய புரட்சி பார்வர்ட் பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மனித உரிமை காக்கும் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய முஸ்லீம் லீக், கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும், சங்கங்களும், கழகக் கூட்டணிக்கு ஆதரவாக தங்களின் உளமார்ந்த ஈடுபாட்டுடன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையை அனைவரும் பாராட்டுகின்றனர். இப்படி, மக்களை ஈர்க்கும் காந்தங்கள் எல்லாம் நம்முடன் இருப்பதோடு, புரட்சித்தலைவர், அம்மா ஆகியோரது மனமார்ந்த ஆசியும், வாழ்த்தும், மக்களின் ஏகோபித்த ஆதரவும் நமக்குள்ளது. அதனால், நம் கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. எனவே, வாக்களிக்கும் வைபவத் திருநாளான ஏப்ரல் 18 வரை கழக கண்மணிகள் அனைவரும் மிகுந்த விழிப்போடு கண் துஞ்சாமல் களப்பணியாற்றிட வேண்டுகிறோம்.

    நாம் வலைதளத்தில் மட்டுமே வாழும் கட்சி அல்ல. நாம் தரைதளத்தில் ஆழமாய் வேர்விட்டு ஆயிரம் ஆயிரம் கிளைகள் பரப்பி பூத்துக் குலுங்குகின்ற ஆலவிருட்ச இயக்கம்.

    நாம் ஊடகங்களால் மட்டுமே தூக்கிப் பிடிக்கிற இயக்கம் அல்ல. ஊர் சனங்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறை யாசனமிட்டு அமர்ந்திருக்கும் நிகரில்லா பேரியக்கம். இதனை கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சத்தில் நிறுத்தி, விரோதமும், குரோதமும், துரோகமும் திரை மறைவு கூட்டுவைத்து கழகத்தை வீழ்த்தலாம் என காணும் கனவை சுக்குநூறாக்கி, நாம் “கோடிச் சிங்கத்தின் தைரியம் குடியிருக்கும் வீரத்திருமகளின் வளர்ப்பு” என்பதை உறுதிசெய்யும் தருணம் இது.

    ஒருவன் சொர்க்கத்தின் வாசலில் ஆயிரம் ஆண்டு தவம் இருந்தானாம்; சொர்க்க வாசல் எப்போது திறக்கும் என்று. அப்போது ஒரு கணம் கண்மூடி திறந்திருக்கிறான்.

    அந்த இடைவெளியில் சொர்க்கவாசல் கதவு திறந்து மூடிக்கொண்டதாம். அதுபோல, சில நேரங்களில் சில வருடங்களை விட சில விநாடிகள் முக்கியமாகி விடும். ஆம், கழகத் தொண்டர்களாகிய நமக்கு இப்போதைய ஒவ்வொரு விநாடியும் உன்னதமானவை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

    ஆளுக்கு ஒரு ஓட்டு, நம் அம்மாவுக்கு ஒரு ஓட்டு, நம் இல்லத்து ஓட்டோடு மக்கள் திலகத்திற்காக இன்னொரு ஓட்டு என்பதையும் நெஞ்சத்தில் நிறுத்தி கடமையாற்றிடவும், கழகத்தை வெல்வதற்கு இவ்வுலகில் இன்னொரு இயக்கம் இல்லை என்பதை சித்திரைத் திங்களில் முத்திரைப் பதித்து உணர்த்திடவும், எங்கள் அருமை கழகத் தொண்டர்களே, நீங்கள் அனைவரும் கண் துஞ்சாமல் கடமையாற்றிட அன்போடு வேண்டுகிறோம்.

    மரம் தெரியவில்லை, கிளை தெரியவில்லை, கிளி தெரியவில்லை, கிளியின் கழுத்து மட்டுமே தெரிகிறது என்று சொல்லியடித்த மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்றது அ.தி.மு.க. தொண்டர்களின் தேர்தல் யுக்தி என்பதை உணர்த்திடும் வண்ணம் உழைத்திடுவீர்.

    கழகத்தின் ஆட்சிக் கால பெருமையையும், நாம் காவேரி உரிமையை மீட்ட பெருமிதத்தையும், நீர்நிலைகளை தூர்வாரி நீராபானம் கொண்டு வந்ததையும், மின் மிகை மாநிலமாய் மீட்டெடுத்த பெருமையையும், நிலப்பறிப்பு, அபகரிப்பு இல்லாத நிம்மதியான சட்டம்-ஒழுங்கை நிகழ்த்தி காட்டிய சிறப்பையும், மீத்தேனுக்கு முற்றுப்புள்ளி வைத்த மேன்மையையும், அரை நூற்றாண்டு கனவாகிய அத்திக்கடவுஅவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமையையும், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்த நம் மகோன்னதத்தையும் மக்களிடம் பணிவோடு எடுத்துரைத்து வாகைத் தோரணம் அமைப்போம்.

    நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளில் மகத்தான வெற்றியையும், இம்மியளவும் குறையாத வகையில் இடைத்தேர்தலில் மொத்த வெற்றியையும் ஒருசேர வென்றெடுத்து, வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் சாய்ந்துறங்கும் நம் தங்கத் தாரகையாம் அம்மா, பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது பொற்பாதக்கமலங்களில் காணிக்கையாய் சமர்ப்பிப்போம்; அ.தி.மு.க.வின் கூட்டணிக்கே மகத்தான வெற்றி என்பதை இனிப் பாக்குவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Loksabhaelections2019 #ADMK #EPS #OPS
    ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. #Jayalalithaa #EVKSElangovan
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

    அப்போது அவர் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள பங்களாவில் தங்கினார். சிங்கப்பூர் பங்களா என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் குடியேறி தினமும் ஆண்டிப்பட்டிக்கு பிரசாரம் செய்ய சென்றார்.

    இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின் 2006-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் இந்த சிங்கப்பூர் பங்களாவில் தங்கியிருந்து வாக்கு சேகரித்தார்.

    ஜெயலலிதா தங்கியதால் அந்த பங்களா மிகவும் பிரபலம் ஆனது. அதை அம்மா வீடு என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

    இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேனி என்.ஆர்.டி. நகரில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் குடியேறி உள்ளார். அங்கு தங்கியிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடத்தி வருகிறார்.



    ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து தேனி நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேனியில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் அம்மாவை தவிர யாரும் குடியிருந்ததில்லை. அம்மா வாழ்ந்த வீடு என்பதால் கோயிலாக பார்க்க வேண்டிய இவ்வீட்டினை தாரை வார்த்து விட்டனர்.

    அம்மாவை கடுமையாக விமர்சித்த இளங்கோவன் அந்த வீட்டில் குடியேறி விட்டார். அம்மாவிற்கும், அ.தி.மு.க.விற்கும் சென்டிமெண்டாக ராசியான வீடு என்று இருந்த பங்களா பறிபோய்விட்டதே என அ.தி.மு.க. தொண்டர்கள் கலைப்படுகிறார்கள்.

    அம்மாவிற்காக கம்பீரமாக காத்து கொண்டிருந்த பிரசார வாகனம் இன்று காங்கிரஸ் கொடியுடன் நின்று கொண்டிருக்கிறது. #Jayalalithaa #EVKSElangovan
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனு பெற தொண்டர்கள் குவிந்தனர். #ThiruvarurByElection #DMK #ADMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் நாளை தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

    போட்டியிட விரும்புகின்ற கட்சி தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும்படி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் அறிவித்து இருந்தன.

    இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் இரு கட்சி அலுவலகத்திலும் இன்று குவிந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சி அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் திருவாரூர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் திருவாரூர் தொகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் உள்பட 22 பேர் மனு கொடுத்தனர். நாளை 3-ந்தேதி வரை மனுக்கள் பெறப்படுகின்றன. 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் இன்று விண்ணப்ப மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்பகல் வரை யாரும் மனுக்களை சமர்ப்பிக்கவில்லை.

    ஆனால் நாளை மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெற்று ஒப்படைப்பதற்கு அவகாசம் உள்ளது. 4-ந்தேதி மாலை 5 மணி அளவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. #ThiruvarurByElection #DMK #ADMK
    ×