search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thai amavasai"

    • விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது.
    • பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!

    பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது. எப்படி என்கிறீர்களா?

    கீழ்கண்ட கதையை படியுங்கள்

    பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் ஆடி அமாவாசை

    பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!

    அந்த ஊரில் மிகப் பெரிய கருமி ஒருவன் இருந்தானாம். தர்மம் என்ற சொல்லையே அறியாதவன் அவன். பிச்சைக்காரர்களுக்கு மறந்தும் கூட தர்மம் செய்யாதவன். அவன் வீட்டிற்கு தெரியாத்தனமாக எவராவது வந்து பிச்சைக் கேட்டால், நாயைவிட்டு ஏவாத குறையாக விரட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான். ஏனெனில் அவன் வீட்டு முற்றத்தில் உள்ள தோட்டத்தில் அழகான பூச்செடிகள் உண்டு. பிச்சை கேட்டு வருகிறவர்கள் போகும்போது ஏதாவது பூவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டால்? அந்த அச்சத்தில் யாசகம் கேட்போர் வாயிலில் நிற்கக் கூட அனுமதிப்பதில்லை அவன்.

    அன்று ஆடி அமாவாசை. உள்ளே அமர்ந்து இவன் மதிய உணவை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான். வாசலில் சத்தம். "ஐயா சாமி ஏதாவது தர்மம் போடுங்கஞ் சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி." உட்கார்ந்தவாரே வாயிலை நோக்கி எட்டிப் பார்த்தான். ஒரு வயதான பரதேசி கையில் திருவோட்டுடன் நின்றுகொண்டிருந்தார்.

    இவன் தான் பிச்சைக்காரர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க விரும்பாதவனாயிற்றே எதுவுமே அறியாதவன் போல அவன் சாப்பிடும் சாப்பாட்டில் குறியாக இருந்தான்.

    பிச்சைக்காரனோ இவனை பற்றி கேள்விப்பட்டிருப்பான் போல. இவனிடம் இன்று யாசகம் பெறாமல் போவதில்லை. என்கிற உறுதியுடன் நின்றுகொண்டிருந்தான். இவனோ "இல்லை போய்வா" என்று சொல்லகூட விரும்பாமல் உணவில் லயித்திருந்தான்.

    ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பிச்சைக்காரன் இவன் வீட்டு முற்றத்தில் வந்து நிற்க, அதை பார்த்த இவனுக்கு கோபம் தலைக்கேறியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து ஓடிவந்தான்.

    யோவ் அறிவில்லை உனக்கு. நீ பாட்டுக்கு உள்ளே வர்றியே, போ முதல்ல இங்கேயிருந்து, தர்மமும் இல்லை கிர்மமும் இல்லை"

    "ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சி ஏதாவது பழையது இருந்தா கூட கொடுங்க போதும்"

    "அதெல்லாம் ஒன்னும் இல்லை. முதல்ல இடத்தை காலி பண்ணு"

    அந்த பரதேசியோ இவனிடம் ஏதாவது பெறாமல் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்று உறுதி பூண்டுவிட்டான்.

    அவன் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் அல்லவா...?

    பாதி சாப்பாட்டில் இருந்து வேறு எழுந்து வந்திருந்தபடியால் இவன் கோபம் தலைக்கேறியது. தனது எச்சில் கையை பிச்சைக்காரனை நோக்கி ஓங்கி அவனை அடிக்கப்போனான்.

    பிச்சைக்காரன் இதை எதிர்பாராது மிரண்டு போய்விட்டான். அவன் சற்று பின்வாங்க, இந்த அரிபரியில் இவனது எச்சில் கையில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது.

    பிச்சைக்காரன் முனகியபடியே செல்ல... இவன் மீண்டும் வீட்டிற்கு வந்து உணவை தொடர்ந்து சாப்பிடலானான்.

    ஆண்டுகள் உருண்டன. ஒரு நாள் இவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து இறந்துவிடுகிறான்.

    எமதூதர்கள் இவனை சங்கலியால் பிணைத்து இழுத்து சென்று எமதர்மன் முன்னர் நிறுத்துகின்றனர்.

    இவனது கணக்குகளை ஆராய்ந்த சித்திரகுப்தன் எமதர்மனிடம் "வாழ்வில் மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்யாதவன் இவன். நரகத்தில் உள்ள அத்தனை தண்டனைகளும் இவனுக்கு பொருந்தும்" என்று கூற.

    "என்ன சொல்கிறாய் சித்திரகுப்தா. மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்ததில்லையா?"

    "ஆம் பிரபோ!" என்கிறான் சித்திர குப்தன்.

    "இல்லை சித்திரகுப்தா மனிதர்களாக பிறந்தவர் எவரும் 100% பாபம் அல்லது 100% புண்ணியம் என்று செய்திருக்க முடியாது. நன்றாக மீண்டும் இவன் கணக்கை பார்"

    மறுபடியும் இவன் ஜனன மரண வாழ்வியல் கணக்கை பார்த்த சித்திரகுப்தன் "இல்லை. இவன் புண்ணியச் செயலையே செய்ததில்லை" என்று அறுதியிட்டு கூறிவிடுகிறான்.

    இருப்பினும் எமனுக்கு திருப்தியில்லை.

    "இவன் முகத்தை பார்த்தால் தன்னை மறந்து இவன் ஏதோ புண்ணியச் செயலை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எதற்கும் அஷ்ட திக்பாலகர்களில் மற்றவர்களை கேட்டுவிடுகிறேன்" என்றவன் அஷ்டதிக்பாலகர்களில் மற்றவர்களை அங்கு வருமாறு பணிக்க, அடுத்த நொடி இந்திரன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்பாலகர்கள் அங்கு தோன்றுகின்றனர்.

    (நம்மை 24 மணிநேரமும் கண்காணிப்பவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்கள். இவர்களிடமிருந்து நாம் செய்யும் எந்த பாவ/புண்ணிய காரியங்களும் தப்பாது! அஷ்டதிக்பாலகர்களில் எமனும் ஒருவன்!!)

    "தர்மராஜா எங்களை அழைத்ததன் காரணம் என்னவோ?" என்று அவர்கள் வினவ, இந்த மானிடனின் வழக்கை கூறுகிறான் எமதர்மன்.

    "இவன் இவனையாரியாமல் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று என் உள்மனம் கூறுகிறது. சித்திரகுப்தனால் அதை கணிக்க முடியவில்லை. நீங்கள் தானே மக்களின் பாப புண்ணிய செயல்களை எப்போது கண்காணித்து வருபவர்கள்ஞ் இவனை அறியாமல் இவன் ஏதாவது புண்ணியச் செயலை செய்திருக்கிறானா?"

    அனைவரும் உதட்டை பிதுக்குகின்றனர்.

    ஆனால் வாயுதேவன் மட்டும் "நீதிதேவா. இவன் இவனை அறியாமல் ஒரு புண்ணியச் செயலை செய்திருக்கிறான். மகத்துவம் மிக்க ஆடி அமாவாசை தினத்தன்று தன்னிடம் யாசகம் கேட்டு வந்த பிச்சைக்காரனை இவன் அடித்து விரட்ட எத்தனித்தபோது இவனது கைகளில் ஒட்டியிருந்த சோற்று பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது. அந்த பருக்கையை சுமந்து சென்றது நான்தான்!" என்றான்.

    அதை கேட்ட எமன், "நான் கணித்தது சரியாகிவிட்டது. இவன் செயல் தீய நோக்கோடு அமைந்திருந்தாலும் அவனையுமறியாமல் பித்ருக்களுக்குரிய ஆடி அமாவாசையன்று இவன் ஒரு சோற்று பருக்கை தானம் செய்த படியால் இவனது தவறுகள் மன்னிக்கப்படுகின்றன. மீண்டும் பூலோகத்தில் நல்ல குலத்தில் பிறந்து உத்தமமான செயல்களை செய்து சுவர்க்கத்தை அடைவானாக. அதே சமயம் யாசகம் கேட்டவரை அடிக்க பாய்ந்த காரணத்தால் அதற்குரிய தண்டனையையும் பூலோகத்தில் அனுபவிக்கவேண்டும்" என்று அருளாசி வழங்கி அவனை அனுப்பிவிடுகிறான்.

    அடுத்த பிறவியில் நல்ல குலத்தில் பிறக்கும் அவன், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்ந்து வருகிறான். தான தருமங்களும் செய்து வருகிறான். இருப்பினும் முன்ஜென்மத்தில் யாசகம் கேட்டோரை அடிக்க பாய்ந்ததால் ஏற்பட்ட பாவத்தின் காரணமாக முதுமைக் காலத்தில் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை செயலிழந்துவிடுகிறது. இருப்பினும் தனது முன்வினையால் இது நமக்கு ஏற்பட்டுள்ளது போலும் என்று தன்னை தேற்றிக்கொண்டு இறுதி வரையில் தர்மம் தவறாது வாழ்ந்து மறைந்தான்.

    இதை படித்தவுடன் இதிலிருக்கும் நீதியை தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர ஆடி அமாவாசையன்று ஒரு சோற்று பருக்கை தானம் செய்தால் கூட சொர்க்கம் தான் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

    தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலுக்கே இத்தனை மகிமை என்றால் விஷேட நாள் கிழமை ஆகியவற்றின் மகத்துவத்தை அறிந்து மனமுவந்து செய்யும் தான தர்மங்களின் பலன் எத்தகையாதாக இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். (இந்த கணக்கு பார்ப்பதெல்லாம் ஆரம்பத்தில் தான். நற்செயல்கள் மற்றும் புண்ணிய காரியங்களின் மேல் உங்களுக்கு ஈடுபாடு வந்துவிட்டால் ஒரு கட்டத்தில் அதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்!!)

    பாவச் செயல்களை செய்பவர்கள் தங்களையுமறியாமல் நல்ல செயல்களை செய்யும்போது இறைவன் அவர்களின் தவறுகளை மன்னித்து, அவர்கள் செய்த நல்ல செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தடுத்தாட்கொள்கிறான். இறைவனது இந்த குணம் தான் இன்று பலரது வாழ்க்கையை தடம் மாற்றியிருக்கிறது.

    எனவே உங்கள் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்த்து வாருங்கள். பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்.

    • ராமேஸ்வரம் கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.
    • தை அமாவாசையன்று இந்த ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    * தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

    * தை அமாவாசை என்றாலே, திருக்கடையூர் அபிராமி அம்மனும், அந்த அன்னையை தன்னுடைய 100 பாடல்களால் அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார்கள். ஏனெனில் தன் பக்தனான அபிராமி பட்டருக்காக, தை அமாவாசை அன்று, வானில் பவுர்ணமி நிலவை தெரியச் செய்து அருளியவர், அபிராமி அன்னை. அந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருக்கடையூர் திருக்கோவிலில் வெகு விமரிசையாகநடத்திக் காண்பிக்கப்படும்.

    * ராமேஸ்வரம் கடல் தீர்த்தம், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஆகிய தீர்த்தங்களில் நீராடினாலும், பாவம் நீங்கி வாழ்வில் ஒளிபரவும் என்பது நம்பிக்கை.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று லட்ச தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபங்களால், அன்றைய தினம் நெல்லையப்பர் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும்.

    * திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை `அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். தை அமாவாசை அன்று, பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும்.

    * கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை என்ற இடத்தில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அம்மன், சயன கோலத்தில் இருப்பதை தரிசிக்கலாம். இங்கு தை அமாவாசை அன்று, பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த பிரசாதம் வயிற்றுப் பிரச்சினைக்கு அருமருந்தாகும்.

    * மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. தை அமாவாசை அன்று, இத்தல இறைவனான பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.

    * திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் வீற்றிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் இணைந்து அருள்பாலிக்கிறார்கள். தைப்பட்டம் சாகுபடியை தொடங்குவதற்கு முன்பு, இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தை அமாவாசை அன்று இங்கு வந்து இறைவனை தாிசித்து விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனா்.

    * ராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று ராமநாதசுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தத்திற்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு புனித நீராடல் நடைபெறும். அப்போது ஆலயத்திற்கு வரும் பக்தர்களும் கடலில் நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.

    • வீரராகவர் பெருமாளை 2 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.
    • திங்கட்கிழமை தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூர் வைத்திய வீரராகவப்பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த நாள் என்பதால் தை அமாவாசையன்று பக்தர்கள் இங்கு வந்து கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், நோய்கள் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நேற்று மாலை முதலே திருவள்ளூர் வந்தனர்.

    இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் மூலவர் வீரராகவர் பெருமாளை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    தை அமாவாசையையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவர் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. 10- வது நாளான 26-ந் தேதி இரவு 8 மணிக்கு வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளாா்.

    • முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கூடுதுறையில் குவிந்தனர்.

    தை அமாவாசையையொட்டி இன்று (சனிக்கிழமை) ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கூடுதுறையில் குவிந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதையொட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர்.

    மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி போலீசார் கோவில் பகுதியில் தற்காலிக் போலீஸ் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதே போல் தை அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதே போல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதனால் கொடுமுடி பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    தை அமாவாசையையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டு மின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலலுக்கு வந்து அம்ம னை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கோவில் படித்துறைகள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை வந்தாலும் ஆடி, தை அமாவாசை நாட்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.

    இந்த நாளில் புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள்ளும், தண்ணீரும் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்த்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசி நமக்கு கிடைக்கும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதீகம்.

    அதன்படி இன்று தை அமாவாசையையொட்டி ஆறுகள், கடற்கரைகள், கோவில் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் நீர்நிலைகளில் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் படித்துறைகள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படித்துறையில் வழக்கமாக பொதுமக்கள் ஆடி, தை அமாவாசை நாட்களில் குடும்பத்துடன் வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி காலை 5 மணி முதல் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களும் அங்கு வந்து படித்துறையில் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் எள்ளும், நீரும் இறைத்து நீராடினர்.

    இன்று காலை முதலே பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடை மருதூர், வீரவநல்லூர், நடுக்கல்லூர் வழியாக மாநகர பகுதிக்குள் தாமிரபரணி ஆறு செல்லும் வழித்தடங்களில் உள்ள கல் மண்டபங்களில் மக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில், தைப்பூச மண்டபம், மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து ஏரல், புன்னக்காயல் வரை மொத்தம் உள்ள 64 தீர்த்த கட்டங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் அரிசி மாவு, எள், தேன் கலந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடி பொதுமக்கள் வழிபட்டனர். இன்று அதிகாலை முதலே அவர்கள் மோட்டார் சைக்கிள்கள், கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதன் காரணமாக குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், பேராட்சி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவில் பொதுமக்கள் திரண்ட தால் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர். அப்போது சிவனடியார்கள் திரண்டு சங்கொலி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி பகுதிகளில் வழக்கமாக தை அமாவாசை நாட்களில் பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்த முறை அருவிகளில் மிக குறைவாகவே தண்ணீர் விழுந்து வருகிறது.

    ஆனாலும் மெயினருவி கரையில் பொதுமக்கள் திரண்டு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். பின்னர் குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர். இதேபோல் பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட பிற நீர்நிலைகளிலும் பொதுமக்கள் இன்று தர்ப்பணம் செய்தனர்.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • காவிரி ஆற்றில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர்.

    மாதந்தோறும் அமாவாசை எனும் புண்ணிய தினம் வரும். மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு ஆண்டில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று தை அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள், கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதில் தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். முன்னதாக காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    தை அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் ஐயாறப்பர் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு புஷ்யமண்டப படித்துறையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சூலபாணிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சாமி வீதி உலா 4 வீதிகள் வழியாக நடந்தது.

    இதை போல் கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவிய தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். இதனால் கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. பல தற்காலிக கடைகள் முளைத்தன.

    மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்களிடம் தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தை அமாவாசையில் கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்ட கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து கடலில் புனித நீராடினர். இதைப்போல் வேதாரண்யம் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோவிலின் திருக்குளத்தில் புனித நீராடி கோவிலில் படிக்கட்டில் அமர்ந்து தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    காலை முதல் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருவதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
    • இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள்.

    இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி யில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலிலும், தை அமாவாசையையொட்டி இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். இக்கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மறுநாள் வரை திருவிழா நடக்கிறது. 9-ந் திருவிழா வரை காலை, மாலை சுவாமி பல்வேறு திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று தை அமாவாசை திருவிழாவையொட்டி பிற்பகல் 1 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இலாமிட்ச வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனியும், 10 மணிக்கு 1-ம் கால கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தரும் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான நாளை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், 1 மணிக்கு 2-ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல், சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தகாட்சியும், கற்பூர தீப தரிசனமும் நடைபெறுகிறது.

    • பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    இந்துக்களின் முக்கிய விசேஷநாட்களில் தை அமாவாசையும் ஒன்று.

    இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துஉள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு தை அமாவாசை இன்று கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலை 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள்மற்றும் வேதமந்திரம்ஓதுவார்களி டம்தங்களதுமுன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநா தீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    தை அமாவாசையையொட்டிஇன்று அதிகாலை முதல்மாலைவரை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.

    அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

    • அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது.
    • வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.

    முன்னோர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசை தினங்களில், ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு படையல் போட்டு, காகத்திற்கு படைத்து சாப்பிடுவர். இது நடைமுறையில் இருந்தாலும் அவற்றில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் நம்முடைய முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, நாம் படைக்கும் உணவுகளையும், நாம் கொடுக்கும் தர்ப்பணத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக சொல்லப்படுகிறது.

    தை அமாவாசை அன்று பித்ரு லோகம் புறப்படும் நம் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே அன்றைய தினமும் நீர்நிலைகளில், நம்முடைய முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள். மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. 'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

    சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.

    இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து, நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால்தான், வனவாச காலத்தில் இருந்த போது தன் தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தாா். அதே போல் தனக்காக உயிர்நீர்த்த ஜடாயு என்ற கழுகு அரசனுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்து தர்ப்பணம் கொடுத்தார் என்கிறது புராணங்கள்.

    செய்யக்கூடியவை

    தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.

    செய்யக்கூடாதவை

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.

    • நாளை தை அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது.
    • தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும்.

    ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுத்து அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம், புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலமான 15 நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும்.

    மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்யவேண்டும்.

    இந்தநாளில், தர்ப்பணம் முதலான சடங்குகள் செய்து, நம் முன்னோரை ஆராதித்து வணங்கவேண்டும். எள்ளும்தண்ணீரும் முன்னோருக்கு விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்யவேண்டும்.

    தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம் பித்ருக்கள். எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்வோம்.

    இந்த ஆண்டு தை அமாவாசை 21-ம் தேதி (நாளை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இந்தநாளில், முன்னோரை ஆராதித்து, பூஜைகள் செய்து, நம் வேண்டுதலை அவர்களிடம் வைத்து முறையிடுவோம். அவர்களை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். முக்கியமாக, தயிர்சாதப் பொட்டலம் தருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.

    இதனால் மகிழ்ந்த முன்னோர்கள் கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் தரித்திரங்களெல்லாம் விலகிவிடும். இல்லத்தில் இருந்த தீயசக்திகள் தெறித்து ஓடிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். கவலையும் பயமும் காணாமல் போகும் என்பது உறுதி!

    தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.

    அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

    சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல ஏழைகளுக்கு தானம் அளிப்பதும் சிறப்பானது. கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் சிறப்பானது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.

    நமது மூததையர்கள், முன்னோர்களை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் தரவேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும். நம்முடைய முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

    • நாளை அக்னிதீர்த்த கடலில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அமாவாசை அன்று, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகின்றது. இந்த நிலையில் தை அமாவாசையான நாளை (சனிக்கிழமை) ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோவிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் எளிதாக புனித நீராட செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.

    தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன.. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தை அமாவாசையையொட்டி நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×