என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது.
    • சுதந்திர தினத்தை யொட்டி அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களை தாண்டிவிட்டது. ஆனால் இன்னும் இந்த போர் முடிவுக்கு வந்த பாடில்லை.

    இந்தநிலையில் நேற்று உக்ரைன் தனது 33-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. ஆனால் தற்போது சண்டை நடந்து வருவதால் பொது இடங்களில் சுதந்திரதின விழா எதுவும் கொண்டாடப்படவில்லை. தலைநகரில் பொதுமக்கள் ஒன்றாக கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த தினத்தில் ரஷியா தனது தாக்குதலை தீவிரபடுத்தும் என்றும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    அவர் சொன்னது போல் ரஷியா நேற்று இரவு உக்ரைன் மீது தனது தாக்குதலை நடத்தியது.

    மத்திய உக்ரைன் டினிப்ரோ பெட்ரோவஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ ரெயில் நிலையத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதில் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது. இந்த தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    கிடுனஸ்கிகோலே மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 வயது குழந்தை உள்பட சிலர் இறந்தனர். இதேபோல் மேலும் சில இடங்களிலும் ரஷியா தாக்குதலை நடத்தியது.

    சுதந்திர தினத்தை யொட்டி அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நீங்கள் ( ரஷியா) எந்த ராணுவத்தை வைத்து இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் நிலத்தை மட்டுமே நாங்கள் கவனிக்கிறோம்.

    பயங்கரவாதிகளுடன் புரிந்துணர்வு செய்ய உக்ரைன் முயற்சிக்கவில்லை. உக்ரைன் இறுதி வரை போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் தயாராகி வருகிறது.
    • உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.

    ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் போரிட்டு வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைனில் சுதந்திர தின விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்தநிலையில் சுதந்திர தினத்தில் உக்ரைனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "இந்த வாரம் ரஷிய படைகள் தீய செயல்களை செய்ய முயற்சிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.

    சுதந்திர தினத்திற்கு முன்பாக ரஷியா மிகப்பெரிய கொடூரமான தாக்குதலை நடத்தலாம் என்று நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ஆயுதப்படைகளின் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் (ரஷியாவின் ஆதரவு நாடு) தயாராகி வருகிறது.

    பெலாரசில் இருந்து மட்டுமல்ல, கருங்கடல் மற்றும் ரஷியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் இருந்து தாக்குதல் நடத்தலாம் என்றார்.

    இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.

    • உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் தீவிர முயற்சி.
    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐ.நா.பொதுச்செயலாளர் பேச்சுவார்த்தை.

    உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார். அவருடன் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

    போர்க் கைதிகளின் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது பற்றியும், உக்ரைன் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பிற்கு, ஐ.நா.வின் அணுசக்தி நிபுணர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

    இந்த விவகாரத்தில் துருக்கி மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக எர்டோகன் மீண்டும் தெரிவித்தார். ரஷிய அதிபர் புதினுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மேசையில் போர் முடிவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் நேற்ற ஒரே இரவில் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • உக்ரைன் மீது ரஷியா 5 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
    • கார்கிவ் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

    இரு தரப்பிலும் மிகப்பெரிய் அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷிய ராணுவம், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது.

    இதற்கிடையே, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள கார்கிவ் நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், நேற்று மீண்டும் கார்கிவ் நகரின் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய படைகளின் தாக்குதல்களுக்கு உக்ரைனிய படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.

    • தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன.
    • கடலில் நீந்திக்கொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததில் உயிரிழந்தனர்

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் மரியுபோல், மெலிடோபோல் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. அங்கு தங்களது ராணுவ நிலைகளை அமைத்துள்ளனர். தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்த நிலையில் ரஷியாவின் ராணுவ தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷியா கைப்பற்றிய மெலிடோபோல் நகரில் தனது துணை ராணுவ தளத்தை அமைத்துள்ளது. இங்கிருந்து உக்ரைனின் மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த ராணுவ தளத்தை குறிவைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ரஷிய ராணுவம் தளம் மீது குண்டுகள் வீசி தாக்கப்பட்டது. ராணுவ தளத்துக்கு செல்லும் பாலம் தகர்க்கப்பட்டது.

    இதுகுறித்து கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஜி கெய்டே கூறும்போது, "ரஷியாவின் ராணுவ தளம், துல்லியமான தாக்குதல் மூலம் அழிக்கப் பட்டது என்று தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய கூட்டாளியான பிரிகோஜினுடன் தொடர்புடையதாக கூறப்படும் வாக்னர் ராணுவ குழுவினர், மெலிடோபோல் நகரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஒடேசா நகரில் கடலில் நீந்திக்கொண்டிருந்த 3 பேர் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்ததில் உயிரிழந்தனர் என்றும் வெடிக்காத கண்ணி வெடிகள் இருப்பதால் கடற்கரைக்கு செல்வோர் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்தது.
    • 4 கப்பல்கள் உக்ரைன் துறை முகங்களில் இருந்து இன்று லெபனானுக்கு செல்கிறது.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் துறை முகங்களில் இருந்து மேலும் 4 தானிய கப்பல்கள் இன்று லெபனானுக்கு செல்கிறது.

    ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்தது.

    இதையடுத்து உக்ரைனில் இருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம் ரஷியா-உக்ரைன் இடையே ஐ.நா. சபை மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையெழுத்தானது.

    அதன் கீழ் உக்ரைனில் இருந்து முதல்முறையாக உணவு தானிய கப்பல் லெபனானை நோக்கி கடந்த 1-ந்தேதி புறப்பட்டது. இந்த நிலையில் மேலும் 4 கப்பல்கள் உக்ரைன் துறை முகங்களில் இருந்து இன்று லெபனானுக்கு செல்கிறது.

    இதன் மூலம் பசியால் வாடும் 4.7 கோடி பேரின் துயரை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள நகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
    • பிரிவினைவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் நகரிலும் தாக்குதல்

    கீவ்:

    உக்ரைனின் தெற்கு பகுதியில் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், இன்று மைகொலெய்வ் நகரம் மற்றும் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள நகரிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்கி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    பிரிவினைவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் நகரிலும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் 6 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய ஆதரவு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    கடந்த சில வாரங்களாக மைகோலெய்வின் இரண்டு மாவட்டங்களை குறிவைத்து இடைவிடாமல் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் உக்ரைன் அரசு கூறி உள்ளது.

    • உக்ரைன்-ரஷியா போர் 5 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
    • சீனா ரஷியாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

    கான்பெர்ரா :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 5 மாதங்களுக்கும் மேலாக படையெடுப்பை நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் ரஷியாவுக்கு எதிராக நிற்கின்றன. போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    அதே சமயம் சீனா, போர் தொடங்கிய நாள் முதல் ரஷியாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. மாறாக ரஷியா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு சீனா, உதவக்கூடாது என உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றியபோது ஜெலன்ஸ்கி இதை தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "இப்போதைக்கு, சீனா உண்மையில் நடுநிலையாக உள்ளது, நான் நேர்மையாகச் சொல்வேன், சீனா ரஷியாவுடன் இணைவதை விட இந்த நடுநிலை சிறந்தது, ரஷியாவுக்கு சீனா உதவாது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம்" என கூறினார்.

    • வோக் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல மாதாந்திர இதழாகும்.
    • இந்த இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர்.

    கீவ்:

    உக்ரைனின் மீதான ரஷியாவின் போர் 150 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் பிரபல மாத இதழான வோக் இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர். அக்டோபர் மாதம் வெளியாகும் வோக் இதழில் இந்த நேர்காணல் இடம்பெறுகிறது.

    இந்நிலையில், அதற்கான முன்னோட்ட படங்களை வோக் இதழ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    வோக் இதழ் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் படங்களும், ஜெலன்ஸ்கியும், ஒலனாவும் ஜோடியாக இருக்கும் படங்களும் உள்ளன.

    இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு ஒருபக்கம் இருந்தாலும், போர் நடக்கும் நேரத்தில் இப்படி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவசியமா என்ற எதிர் கேள்விகளும் எழுந்துள்ளன.

    • ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.
    • ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது.

    கீவ்:

    உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.

    இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷியா உறுதியளித்திருந்தது.

    ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்திலேயே ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

    துறைமுகத்தின் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. எனினும் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உக்ரைன் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது.

    இந்த நிலையில் ஒடேசா துறைமுகத்தில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் போர் கப்பல் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

    அதுமட்டும் இன்றி ஒடேசா துறைமுகத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கும் நிர்மூலமாக்கப்பட்டதாக ரஷியா ராணுவம் கூறியது. எனினும் இது குறித்து உக்ரைன் தரப்பு உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    இதனிடையே ஒப்பந்தத்தை மீறி ஒடேசா துறைமுகம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம் என சாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த தாக்குதல் ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை அழித்துவிட்டதாக கூறினார்.

    அதே சமயம் ஒப்பந்தத்தில் வெளிப்படையான மீறல் இருந்தபோதிலும் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன் மீது ரஷியா பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது.
    • போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    கீவ் :

    தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது.

    மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    அந்த வகையில் உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நேற்று 150-வது நாளை எட்டியது. நேற்றைய நாளில் இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன.

    அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரெயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. விமானப்படை தளத்தின் மீது 13 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் விமானப்படை வீரர் ஒருவர் உள்பட 3 பேர் பலியானதாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் பிராந்திய கவர்னர் ஆண்ட்ரி ரைகோவிச் தெரிவித்தார்.

    இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. ரஷிய படைகளின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக தெற்கு கெர்சான் பிராந்தியத்தில் உள்ள டினீப்பர் ஆற்றுபாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தனர்.

    இந்த நிலையில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்ட சில மணி நேரத்துக்குள்ளாக ரஷிய படைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தின.

    கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகமான ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் துறைமுகத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க வௌியுறவு அமைச்சகம் பலியான அமெரிக்கர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், தேவையான அனைத்து தூதரக சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    • ஒடேசா துறைமுகம் மீதான ரஷிய தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐ.நா.சபை கண்டனம்
    • ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் அமைதியாக செயல்பட துருக்கி அறிவுறுத்தல்

    உக்ரைன் ரஷியா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தானியங்கள் ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே மேற்கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஐ.நா.பொதுச்செயலாளர் முன்னிலையில் துருக்கி நாட்டில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த நிலையில், தெற்கு உக்ரைன் துறைமுகமான ஒடேசா மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஒடேசா துறைமுக உள்கட்டமைப்பை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாகவும், மேலும் இரண்டு ஏவுகணைகள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் சேர்கி ப்ராட்சுக் தெரிவித்துள்ளார்.

    ரஷியா வழக்கம் போல் ஒப்பந்தங்களை மீறுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்க்ஸி குற்றம் சாட்டி உள்ளார். ரஷியா என்ன சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும், அதை செயல்படுத்தாமல் இருக்க வழிகளைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, ஒடேசா துறைமுகம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். துருக்கியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவது அவசியம் என்று ரஷியாவை ஐ.நா.சபை வலியுறுத்தி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் ரஷியா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டும் என்று துருக்கி அறிவுறுத்தி உள்ளது.

    ×