என் மலர்
உக்ரைன்
- உக்ரைனை ஆக்கிரமித்த குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க வேண்டும்.
- ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொலி மூலம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
உக்ரைனில் நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு இடம் பெயர்ந்தனர். போர் மூலம் உக்ரைன் நகரங்களை ரஷிய படைகள் அழித்தன. உக்ரைனுக்கு எதிராக குற்றம் நடந்துள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை கோருகிறோம்.
எங்கள் பிரதேசத்தை திருட ரஷியா முயற்சித்ததற்காக உக்ரைன் தண்டனையை கோருகிறது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதற்காகவும், உக்ரைன் பெண்களை சித்திரவதை செய்தது மற்றும் அவமான படுத்தியதற்காகவும் தண்டனை வழங்க வேண்டும். எங்கள் நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றத்திற்காக ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ரஷியாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்.
- அங்கு புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
கீவ்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷியா கைப்பற்றிய பல இடங்களை உக்ரைன் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் உக்ரைன் அதிபர் பார்வையிட்டார்.
அப்போது உக்ரைனின் இசியம் நகரில், 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடக்கிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
ரஷியா நடத்திய இந்தப் படுகொலைகளை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.
மீட்கப்பட்ட நகரங்களை ஆய்வு செய்தேன். ரஷியப் படையினர் கோர தாண்டவம் ஆடியுள்ளனர். பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
இசியம் நகரில் மிகப்பெரிய குழியில், 400க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளன. போர் விதிமுறைகளை மீறி ஏராளமான பொதுமக்களை ரஷியப் படையினர் கொன்று குவித்துள்ளனர்.
ரஷியாவின் போர்க்குற்றங்களை ஆதாரத்துடன் விரைவில் அம்பலப்படுத்துவோம். கொலை செய்யப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என தெரிவித்தார்.
- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது கடினம் என்று கருதினால், ஒரே நேரத்தில் கூடுதல் இடங்களை உருவாக்கி தனியார் கல்லூரிகளில் சேர அனுமதிக்கலாம்.
உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கி கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கல்வி பயில இடம் ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இதை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிலைப்பாடு மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், "உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை நாட்டிற்குள்ளேயே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் ஒதுக்கலாம் என வெளிவிவகார மக்களவைக் குழு பரிந்துரைத்தது மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், மத்திய அரசு எடுத்துள்ள இதற்கு மாறான நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதுபோன்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது கடினம் என்று கருதினால், ஒரே நேரத்தில் கூடுதல் இடங்களை உருவாக்கி தனியார் கல்லூரிகளில் சேர அனுமதிக்கலாம். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதே அளவிலான கட்டணத்தைச் செலுத்தி கல்வியைத் தொடர முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
- 24 மணி நேரமும் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
- 19-ந்தேதி இறுதிச்சடங்கு நடக்கிறது.
லண்டன் :
இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ராணியின் உடல், அங்கிருந்து வான் வழியாகவும், சாலை வழியாகவும் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையில் அதிகாரிகள், பணியாளர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் நேற்றுமுன்தினம் மதியம், ராணியின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றி, குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதையடுத்து ராணியின் உடல், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் ராணியின் மகனான மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் நடந்து சென்றனர்.
அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டது. அதுவும் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். . பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் பகல் இரவு பாராமல், மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். சிலர் ஓரிரு வினாடிகள் நின்று பிரார்த்தனையும் செய்கிறார்கள்.
இருப்பினும் 16 கி.மீ. தொலைவுக்கு மேல் வரிசை கட்டி நிற்க மக்களுக்கு அனுமதி இல்லை.
24 மணி நேரமும் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, 19-ந் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியுடன் முடிவுக்கு வரும். இந்த அஞ்சலி நிகழ்வு தொடர்ந்து பி.பி.சி. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
19-ந் தேதி நடைபெறுகிற அரசு இறுதிச்சடங்கு நிகழ்வு மற்றும் விண்ட்சார் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்கிற நிகழ்வுகளின் விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று வெளியிட்டது.
இதன் முக்கிய தகவல்கள் வருமாறு:-
* 19-ந் தேதி உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உலக நாடுகளின் தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் அரசு மரியாதை நிகழ்ச்சி நடைபெறும்.
* அரசு மரியாதை செலுத்திய உடன் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி வழியாக குதிரை பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச்செல்லப்படும். * அதன்பின்னர் உடல், விண்ட்சார் கோட்டைக்கு அருகேயுள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு அர்ப்பணிப்பு பிராத்தனைக்காக எடுத்துச்செல்லப்படும்.
* பிரார்த்தனை முடிந்த உடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, 'ராயல் வால்ட்' என்று அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும்.
* இறுதியாக அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிற அடக்க ஆராதனை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடக்கிறது. அதன்பின்னர் ராணியின் உடலானது, கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.
* ராணி இறுதிச்சடங்கின்போது ஐக்கிய ராஜ்யம் ( இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து) முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய V சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனம் V25 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், டிமென்சிட்டி 900 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 8 ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ V25 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே இந்த ஸ்மார்ட்போனிலும் நிறம் மாறும் ஏஜி கிளாஸ் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

விவோ V25 5ஜி அம்சங்கள்:
6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1
12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.1
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹைப்ரிட் டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12
64MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
50MP செல்பி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
4500 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எலிகண்ட் பிளாக் மற்றும் சர்பிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.
- ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரம் வெளியிடவில்லை.
- கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.
இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிபர் ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்து உள்ளார்.
விபத்து நடந்ததும் அவருடன் சென்ற மருத்துவர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 2 பேரும் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரமும் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
- கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை எங்களது படைகள் மீட்டெடுத்து உள்ளன.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையே ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ரஷியா, கைப்பற்றிய பகுதிகளை மீட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "வடகிழக்கில் இருந்து பகுதிகளை உக்ரைன் படைகள் மீட்டு வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை எங்களது படைகள் மீட்டெடுத்து உள்ளன. நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இதில் ரஷிய படை வீரர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். ரஷியாவுக்கு சரியான பதிலடியும் கொடுக்கப்படுகிறது" என்றார்.
- கிழக்கு உக்ரைனில் முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டது. ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்கின.
- சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் விடுவித்துள்ளது என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார்.
கீவ்:
உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது.
முதலில் உக்ரைனின் ராணுவ கட்டமைப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தாக்குதல் தொடுப்பதாகக் கூறிய ரஷியா பின்னர் மருத்துவமனைகள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள் என தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியது.
உக்ரைன் படை வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனாலும் தலைநகர் கீவை கைப்பற்ற வேண்டும் என்ற ரஷிய கனவு, உக்ரைனின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாமல் போனது.
இதற்கிடையே, ரஷியாவின் பார்வை கிழக்கு உக்ரைன் மீது படிந்தது. டான்பாஸ் பகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என துடித்தது. அந்தப் பகுதியின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு பல நகரங்கள் ரஷியாவின் வசமாகின. அந்த நகரங்களை மீட்டெடுக்க ரஷியாவுடன் உக்ரைன் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
உக்ரைனில் கிழக்கு பகுதியில் ரஷியா வசம் போன முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டன. இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் பின்வாங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேசுகையில், இந்த மாத தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிலடியை ஆரம்பித்ததில் இருந்து ரஷியாவிடம் இருந்து 3 ஆயிரம் ச.கி.மீ. பகுதியை உக்ரைன் மீட்டுள்ளது என தெரிவித்தார்.
- ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
- இரண்டு வீரர்களில் ஒருவர் ஆபத்தை உணர்ந்து சற்று தள்ளி ஓடுகிறார்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் 6 மாதங்களாக நீடித்து வருகிறது. போர் தொடங்கிய பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து இதுவரை இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்குள் ரஷிய படையினா ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
அவ்வகையில் தற்போது உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசுவதைக் காட்டும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தில் நிவிவி என்பவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இரண்டு ரஷிய வீரர்கள் வயலில் நடந்து செல்லும்போது, அவர்கள் மீது திடீரென வெடிகுண்டு வீசப்படுகிறது. அப்போது இரண்டு வீரர்களில் ஒருவர் ஆபத்தை உணர்ந்து சற்று தள்ளி ஓடுகிறார். மற்றொருவரின் அருகில் வெடிகுண்டு விழுந்து வெடித்ததால் அவர் காயமடைந்தார்.
இந்த வீடியோவைப் பார்த்த நூற்றுக்கணக்கானோர் ஆதரவை தெரிவித்துள்ளனர். சிலர் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர். சில பயனர்கள் போர் பகுதிகளில் உயிர்களைக் காப்பாற்றுவது பற்றி முக்கியமான குறிப்புகளை வழங்கினர்.
- ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது.
- சுதந்திர தினத்தை யொட்டி அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களை தாண்டிவிட்டது. ஆனால் இன்னும் இந்த போர் முடிவுக்கு வந்த பாடில்லை.
இந்தநிலையில் நேற்று உக்ரைன் தனது 33-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. ஆனால் தற்போது சண்டை நடந்து வருவதால் பொது இடங்களில் சுதந்திரதின விழா எதுவும் கொண்டாடப்படவில்லை. தலைநகரில் பொதுமக்கள் ஒன்றாக கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த தினத்தில் ரஷியா தனது தாக்குதலை தீவிரபடுத்தும் என்றும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அவர் சொன்னது போல் ரஷியா நேற்று இரவு உக்ரைன் மீது தனது தாக்குதலை நடத்தியது.
மத்திய உக்ரைன் டினிப்ரோ பெட்ரோவஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ ரெயில் நிலையத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயிலின் 5 பெட்டிகள் எரிந்து சேதமானது. இந்த தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
கிடுனஸ்கிகோலே மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 வயது குழந்தை உள்பட சிலர் இறந்தனர். இதேபோல் மேலும் சில இடங்களிலும் ரஷியா தாக்குதலை நடத்தியது.
சுதந்திர தினத்தை யொட்டி அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நீங்கள் ( ரஷியா) எந்த ராணுவத்தை வைத்து இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் நிலத்தை மட்டுமே நாங்கள் கவனிக்கிறோம்.
பயங்கரவாதிகளுடன் புரிந்துணர்வு செய்ய உக்ரைன் முயற்சிக்கவில்லை. உக்ரைன் இறுதி வரை போராடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் தயாராகி வருகிறது.
- உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் போரிட்டு வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைனில் சுதந்திர தின விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் சுதந்திர தினத்தில் உக்ரைனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "இந்த வாரம் ரஷிய படைகள் தீய செயல்களை செய்ய முயற்சிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.
சுதந்திர தினத்திற்கு முன்பாக ரஷியா மிகப்பெரிய கொடூரமான தாக்குதலை நடத்தலாம் என்று நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ஆயுதப்படைகளின் அதிகாரி ஒருவர் கூறும்போது, "சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் (ரஷியாவின் ஆதரவு நாடு) தயாராகி வருகிறது.
பெலாரசில் இருந்து மட்டுமல்ல, கருங்கடல் மற்றும் ரஷியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் இருந்து தாக்குதல் நடத்தலாம் என்றார்.
இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6194 கோடி மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.
- உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் தீவிர முயற்சி.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐ.நா.பொதுச்செயலாளர் பேச்சுவார்த்தை.
உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார். அவருடன் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
போர்க் கைதிகளின் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது பற்றியும், உக்ரைன் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பிற்கு, ஐ.நா.வின் அணுசக்தி நிபுணர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்த விவகாரத்தில் துருக்கி மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக எர்டோகன் மீண்டும் தெரிவித்தார். ரஷிய அதிபர் புதினுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மேசையில் போர் முடிவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் நேற்ற ஒரே இரவில் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






