என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10-ந்தேதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.
    • சமூக வலைதளங்களில் 'கேத் மிடில்டன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது.

    இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இதனால் கடந்த 10-ந்தேதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.

    ஆனால் அந்த படம் டிஜிட்டல் முறையில் 'எடிட்' செய்யப்பட்டிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 'கேத் மிடில்டன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது. பலர் கேத் மிடில்டனுக்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

    • மலை நீரை சேகரிக்கும் அறிவியல் ஊடக ஆராய்ச்சி விஷயமாக இருக்கலாம்.
    • வைரலான மோனோலித்தின் படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கலாம் எனவும் பதிவிட்டனர்.

    லண்டனின் வேல்ஸ் நகரில் உள்ள ஹே-ஆன்-வே பகுதியில் உள்ள ஒரு மலையில் சமீபத்தில் ஒரு பிரமாண்டமான உலோக மோனோலித் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த உலோகம் மாபெரும் டோப்லெரோன் (ஒரு வகை சாக்லேட்) போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன என்பது குறித்து கேள்விகளை கேட்டதால் இணையத்தில் விவாதமாகவே மாறியது. ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் ஹெய்ன்ஸ் என்பவர் கூறுகையில், இது சற்று வினோதமானது. மலை நீரை சேகரிக்கும் அறிவியல் ஊடக ஆராய்ச்சி விஷயமாக இருக்கலாம். ஆனால் இது மிகவும் உயரமானது மற்றும் விசித்திரமானது.

    குறைந்த பட்சம் 10 அடி உயரமாகவும், முக்கோண வடிவமாக இருப்பதையும் பார்த்தேன். கண்டிப்பாக இது துரு பிடிக்காத உலோகம் ஆகும் என்றார். அதேநேரத்தில் வைரலான மோனோலித்தின் படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கலாம் எனவும் பதிவிட்டனர்.

    • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜெர்மனியின் யுவான் லீயுடன் மோதினார்.

    முதல் செட்டில் பிவி சிந்து 21-10 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது காயம் காரணமாக யுவான் லீ போட்டியில் இருந்து விலகினார். இதனால் பிவி சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், 2வது சுற்றுக்கும் முன்னேறினார்.

    • 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது.
    • காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    லண்டன்:

    பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலை உள்ளது. 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது. சோதனையின்போது சிறை வளாகத்தில் ரேடான் என்னும் கதிரியக்க தனிமத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இதனால் காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலையில் இருந்து 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறுசிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைவளாகத்தில் பரவி இருக்கும் ரேடான் அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது.

    • முதியவர்கள், தங்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்களை காண வர வேண்டும் என விரும்புவார்கள்
    • 5 லட்சம் பவுண்டு மதிப்புள்ள சொத்தில் 50 பவுண்டுகள் மட்டுமே எழுதி வைத்தார்

    இந்திய வாழ்க்கை முறையில் குடும்ப உறவுகளின் மேன்மை மிகவும் போற்றப்படுகிறது.

    பணி, தொழில், திருமணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தாத்தா பாட்டி போன்றவர்களை விட்டு விட்டு தொலைதூரம் வருபவர்கள், இந்தியாவில் பண்டிகைக்கால விடுமுறைகளில் உறவினர்களை காண சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை.

    உலகெங்கும் வயதானவர்களுக்கு தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்களை பார்க்க அடிக்கடி வர வேண்டும் என்பது விருப்பம்.

    இங்கிலாந்தில் ராணுவத்தில் பணியாற்றியவர் ஃபிரெடரிக் வார்டு (Frederick Ward). இவரது மகன் ஃபிரெடரிக் ஜூனியர் 2015ல் காலமானார்.

    மகனின் மரணத்திற்கு பிறகு ஃபிரெடரிக்கின் பேரக்குழந்தைகள் ஃபிரெடரிக்கை பார்க்க வரவில்லை.

    நுரையீரல் சிக்கலால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    தன்னை பார்க்க பேரக்குழந்தைகள் வருவதில்லை என்பதால் அவர்களுக்கு வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்தார்.

    5 லட்சம் பவுண்டு மதிப்புள்ள சொத்தில் 50 பவுண்டுகள் மட்டுமே தங்களுக்கு எழுதி வைத்ததற்காக அந்த உயிலுக்கு எதிராக அவரது பேரக்குழந்தைகள் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பார்க்க வராத பேரன்களுக்கு சொத்தில் பங்கில்லை என ஃபிரெடரிக் எடுத்த முடிவு சரியானது என்றும் அவரது பார்வையில் அது நியாயமானதுதான் என்றும் தீர்ப்பளித்தது.

    உறவுகளுக்கு மதிப்பளிக்காமல் சொத்திற்கு மட்டுமே மதிப்பளிக்கும் தற்கால சந்ததியினருக்கு இது நல்ல பாடம் என சமூக வலைதளங்களில் இந்த தீர்ப்பு குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார்.
    • ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார்.

    இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள ரோண்டா சைனான் டாப்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு 72 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார். இதை கவனிக்காமல் அந்த மூதாட்டி ஷட்டரை ஒட்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஆடை மின்சார ஷட்டரில் சிக்கிக்கொண்டது.

    இதனால் ஷட்டர் மேலே திறந்த போது, ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார். இதை அங்கு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஷட்டரில் ஆடை சிக்கி தலைகீழாக தொங்கிய மூதாட்டியை மீட்டு பத்திரமாக தரையில் இறக்கி விட்டார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. 12 வினாடிகள் கொண்ட அந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சுமார் 50 சதவீதம் UPF பயன்பாட்டில் உள்ளன
    • சுவை, திடம், நிறம் கெடாமல் இருக்கும் வகையில் செயற்கை முறையில் இவை தயாரிக்கப்படுகின்றன

    அவசர உணவு தேவைக்கு வீடுகளிலும் உணவகங்களிலும் பதப்படுத்தப்பட்ட உணவு (Processed Foods) வகைகளை பயன்படுத்துதல் தவிர்க்க இயலாத நடைமுறையாக மாறி வருகிறது.

    இயற்கை உணவு வகைகளில் பலவிதமான ரசாயன கூட்டுகளை சேர்த்து, தொழில் ரீதியாக தயாரிக்கப்பட்டு, நீண்ட நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், "தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்" அல்லது "அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகள்" (Ultra-processed Foods) எனப்படும்.

    அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குடிமக்களின் உணவு வகைகளில் சுமார் 50 சதவீதம் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் பயன்பாட்டில் உள்ளன.


    இத்தகைய உணவு வகைகளினால் உடல்நலனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பல லட்சம் மக்களை உள்ளடக்கி செய்யப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள், கட்டுரையாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (British Medical Journal) எனும் மருத்துவ பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது:

    அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், 32 வகையான தீவிர உடல்நல கேடுகள் உருவாக வாய்ப்புள்ளது.

    புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள், மனநல பாதிப்பு, சுவாச மண்டல குறைபாடுகள், இருதய மற்றும் ரத்தக் குழாய் குறைபாடுகள், நாளமில்லா சுரப்பி கோளாறுகள், குடல் மற்றும் இரைப்பை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவை வழிவகுக்கின்றன.

    உடலாரோக்கிய மேம்பாட்டிற்கு இத்தகைய அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

    இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    பேக்கரி உணவு வகைகள், குளிர்பானங்கள் மற்றும் சோடாக்கள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்படு தயாரிக்கப்படும் உணவுகள், வறுவல் வகைகள், புரதச் சத்து "பார்" மற்றும் பவுடர்கள், உடனடியாக சாப்பிடும் (ready-to-eat) உணவுகள், ஐஸ்கிரீம்கள் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் அடங்கும்.

    இத்தகைய உணவு பொருட்களை தயாரிக்கும் பொழுதோ அல்லது இவற்றில் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருள்களை தயாரிக்கும் பொழுதோ, அவற்றில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டு, அடர்தன்மைக்காகவும், சுவைக்காகவும், அழகான தோற்றத்திற்காகவும் பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்டு, கெட்டு போகாமல் இருக்க "பிரிசர்வெட்டிவ்" (preservative) எனும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு, அத்துடன் அளவிற்கு அதிகமாக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளிட்டவை சேர்த்து செயற்கையான முறையில் சிறு மற்றும் பெரும் உற்பத்திசாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.


    இத்தகைய தயாரிப்புகள் உற்பத்திக்கூடங்களிலிருந்து கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் காலம், மக்களிடம் விற்பனை செய்யப்படும் வரையில் கடைகளில் உள்ள நாட்கள், பயன்படுத்தும் வரை வீடுகளில் ரெஃப்ரிஜிரேட்டர்களில் வைத்திருக்கும் காலம் ஆகியவை கடந்தும் சுவை, திடம், நிறம் கெடாமல் இருக்கும் வகையில் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன.

    இவற்றில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மிக குறைவு என்பதால் மனிதர்களின் சிந்திக்கும் மற்றும் செயலாற்றும் திறனை இவை படிப்படியாக குறைத்து விடும் என ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

    • இங்கிலாந்திலிருந்து 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி
    • நலிவடைந்த நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் அதிகம் உள்ளனர் என்றார் டாக்டர். ரெயின்

    இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் (West Yorkshire) பகுதியில் உள்ளது, பிராட்ஃபோர்டு (Bradford) நகரம்.

    இந்நகரின் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" (Bradford Royal Infirmary) மருத்துவமனையை சேர்ந்த "ஈஎன்டி" (ENT) எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், செவித்திறன் பரிசோதனை நிபுணர்களும் (audiologists), தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி (Malawi) நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.

    இங்கிலாந்திலிருந்து சுமார் 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சேவையில், பேராசிரியர். கிரிஸ் ரெயின் (Prof. Chris Raine) தலைமையிலான பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அது மட்டுமின்றி மலாவி பகுதியில் உள்ள ஈஎன்டி மருத்துவர்களுக்கும் ஈஎன்டி சிகிச்சையளிப்பதில் உள்ள நிபுணத்துவம் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.


    இது குறித்து பேராசிரியர். டாக்டர் ரெயின் கூறியதாவது:

    செவித்திறன் குறைபாடு கண்ணுக்கு புலப்படாத நோய்.

    இது குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் சிரமத்தை உண்டாக்கி, ஈடுபாட்டை குறைக்க கூடிய குறைபாடு. பிறருடன் பழகுவதையும், வேலை வாய்ப்புகளையும் இந்த குறைபாடு தடை செய்து விடலாம்.

    பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள பல நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் அதிகம் உள்ளனர்.

    ஆனால், பெரும்பாலான நோயாளிகளுக்கு இது குணப்படுத்தக் கூடியதுதான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    செவித்திறன் குறைபாட்டை சரி செய்வதில் முக்கிய சிகிச்சை முறையான "காக்லியர் இம்ப்லேன்ட்" (cochlear implant) எனும் சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகளை "மெட்எல்" (MedEl) எனும் நிறுவனம் இவர்களுக்கு இலவசமாக தருவது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், மலாவியில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு செவித்திறன் குறைபாட்டை நீக்கியுள்ளனர்.

    வளர்ச்சியடைந்த நாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நாட்டிற்கு சென்று பெரும் மருத்துவத்தொண்டில் 10 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் பிராட்ஃபோர்டு மருத்துவ குழுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


    • இங்கிலாந்தின் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார் சுனக்
    • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களின் இல்லங்களுக்கு எதிரில் போராட்டங்கள் நடந்தன

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது மாதத்தை நெருங்கி வரும் நிலையில் உலகெங்கும் இரு தரப்பினருக்கும் ஆதரவாக மக்கள் ஆங்காங்கே கருத்து கூறி வருகின்றனர்.

    இங்கிலாந்தில், இரு தரப்பினரில் ஒருவரை ஆதரிப்பவர்களால் மற்றொரு தரப்பினர் விமர்சிக்கப்படுவது தீவிரமாகி வருகிறது.

    ஒரு சில இடங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், சில பாராளுமன்ற உறுப்பினர்களின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த கருத்துகளுக்கு எதிராக அவர்களின் இல்லங்களுக்கு எதிரில் போராட்டங்கள் நடந்தன.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், லண்டன் நகரின் 10, டவுனிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்ல வாசலில் நாட்டு மக்களுக்கு இது குறித்து உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது:

    நாட்டின் முதல் வெள்ளையரல்லாத பிரதமராக உங்கள் முன் நான் நிற்கிறேன்.

    பயங்கரவாத சித்தாந்தங்களில் நம்பிக்கை உடையவர்களால் இங்கிலாந்தின் ஜனநாயகமே அழியும் நிலையில் உள்ளது.


    நம் நாட்டிற்குள் நெடுங்காலமாக தங்கியுள்ள அயல்நாட்டினர், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கை முழுமையாக அளித்துள்ளனர்.

    நீங்கள் இந்துவாக இருந்தும் என்னை போல் ஒரு பெருமைக்குரிய இங்கிலாந்து நாட்டினராக இருக்கலாம்; ஒரு இறை நம்பிக்கைமிக்க முஸ்லீமாக இருந்து தேசபக்தி மிகுந்த பிரிட்டன் குடிமகனாகவும் இருக்கலாம்; யூத அல்லது கிறித்துவ மதத்தை சேர்ந்தவராகவும் இருந்து நாட்டுபற்று மிக்கவராக இருக்கலாம். அது நம் நாட்டில் சாத்தியமே.

    இனத்தால், கலாச்சாரத்தால் மாறுபட்டாலும் ஒன்றுபட்ட பிரிட்டனாக நாம் இருப்பதுதான் நமது சாதனையே.

    பிரிட்டனின் தெருக்களில் ஜனநாயகத்தை சூறையாடும் குரல்கள் ஒலிக்கு தொடங்கி உள்ளது.

    வன்முறையை ஏதோவொரு வகையில் நியாயப்படுத்தும் அணிகள் உருவாகி வருகின்றன.

    நம்மை பிரித்து நமது மனங்களில் விஷத்தை விதைக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்து விட்டது.

    இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.

    • ஆன்-மேரி கப்பலை அதில் உள்ள சரக்குகளுடன் இங்கிலாந்து கைப்பற்றியது
    • லேட்சன் என்பவருக்கு நீல் வின்தர் எனும் கார்பென்டர் இப்பார்சலை அனுப்பியுள்ளார்

    1807 காலகட்டத்தில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கிலிருந்து, ஃபேரோ தீவுகள் (Faroe Islands) ஜலசந்திக்கு ஆன்-மேரி (Anne-Marie) எனும் கப்பல் புறப்பட்டது. அப்போதைய டென்மார்க் மன்னருக்கு சொந்தமான 2 கப்பல்களில் ஆன்-மேரி கப்பலும் ஒன்று.

    பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்த நெப்போலியனுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளின் கூட்டணிக்கும் போர் (Napoleonic wars) நடந்த அந்த காலத்தில் ஆன்-மேரி கப்பல், தனது பயணத்தின் போது, செப்டம்பர் 2 அன்று ஹெச்எம்எஸ் டிஃபென்ஸ் (HMS Defence) எனும் இங்கிலாந்து கடற்படை கப்பலால் தாக்கப்பட்டது.

    அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஆன்-மேரி கப்பலை அப்போதைய போர் மரப்புப்படி, தாக்குதலில் வென்ற இங்கிலாந்து கடற்படை, அதில் இருந்த சரக்குகள் மற்றும் தபால்களுடன் கைப்பற்றியது.

     அந்த பொருட்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    அவையனைத்தும் தற்போது வரை இங்கிலாந்தின் தேசிய காப்பகத்தில் (National Archives) பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.

    சுமார் 200 வருடங்கள் கடந்த நிலையில், அக்கப்பலின் பொருட்கள் தற்போது முதல்முறையாக ஃபேரோ தீவுகளை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் இங்கிலாந்தில் திறக்கப்பட்டன.

    49 ஆயிரம் ஜோடி கம்பளியினால் பின்னப்பட்ட "ஸாக்ஸ்"கள், பல பறவைகளின் இறகுகள், மற்றும் ஒரு பார்சலும் அந்த பொருட்களில் இருந்தன.

    அந்த பார்சலை பிரித்த போது, அதில் இயந்திர உதவியின்றி, கைகளாலேயே பின்னப்பட்ட ஒரு அழகிய ஸ்வெட்டர், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அக்கால ஃபேரோ தீவுகளின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், ஒளிரும் வண்ணத்தில் காண்போர் கண்களை அந்த ஸ்வெட்டர் கவர்கிறது.


    200 வருடங்கள் கடந்தும் அதன் தரம், வடிவம், வண்ணம், மற்றும் வேலைப்பாடு சிறிதும் குறையாமல் அப்படியே இருப்பது காண்போரை வியக்க வைத்தது.

    1807 ஆகஸ்ட் 20 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனை சேர்ந்த லேட்சன் (Ladsen) என்பவருக்கு நீல்ஸ் வின்தர் (Niels Winter) எனும் கார்பென்டர் அனுப்பியுள்ள இந்த பார்சலுடன் டேனிஷ் மொழியில் வின்தர் அனுப்பியுள்ள கடிதமும் இருந்தது.

    அதில், "உங்களுக்கு எனது மனைவியின் வாழ்த்துக்கள். உங்கள் வருங்கால மனைவிக்கு என் மனைவி ஒரு ஸ்வெட்டரை இத்துடன் அனுப்பியுள்ளார். உங்கள் வருங்கால மனைவிக்கு இது பிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என எழுதப்பட்டுள்ளது.

    இந்த ஸ்வெட்டர் கலைப்பொருளாக இங்கிலாந்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட உள்ளது.

    • பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்
    • இதுநாள் வரை இங்கிலாந்தில் காணப்பட்ட ஜனநாயக வழிமுறையே அல்ல இது என்றார் ரிஷி சுனக்

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்றனர். மேலும், ஹமாஸ் அமைப்பினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கப் போவதாக உறுதியெடுத்து அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    4 மாதங்களை கடந்தும் தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இங்கிலாந்தில், பொதுமக்களில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக அவர்களது இல்லங்களுக்கு முன் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    இது அந்நாட்டில் இதுவரை காணாத நடைமுறையாக உள்ளது.


    இந்நிலையில், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இரு தரப்பினரில் எவருக்கு ஆதரவு குரல் அளித்தாலும், மற்றொரு தரப்பினர் அச்சுறுத்துவதாக தெரிவித்தனர்.

    ஆதரவு நிலை எடுப்பவர்களை நேரிடையாக குறிப்பிட்டு எச்சரிக்கைகள் விடப்படுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாவது:

    சமீப காலங்களாக, கும்பல் ஆட்சி (mob rule) ஜனநாயகத்தை அழிக்க முயல்வதை அனைவரும் ஏற்று கொள்கிறோம். இது சரியல்ல.

    கருத்து சுதந்திரத்தையும், ஆரோக்கியமான விவாதத்தையும் தடுக்கும் வகையில் அதிகரித்து வரும் வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தும் நடைமுறை வளர்ந்து வருகிறது.

    இது இந்நாள் வரை இங்கிலாந்தில் காணப்பட்ட ஜனநாயக வழிமுறையே அல்ல.

    நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்த சூழலை மாற்ற வேண்டும்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க ரோந்து படையினர் அதிகரிக்கப்படுவார்கள். உறுப்பினர்களின் இல்லத்திற்கு முன் போராடுவது சட்ட விரோத அச்சுறுத்தலாக கருதப்படும்.

    இவ்வாறு ரிஷி சுனக் கூறினார்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக $39 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 17 அன்று கேத்தரினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது
    • தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுநிலவுவதாகவும் வதந்திகள் உலவுகின்றன

    பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் மனைவி, கேத்தரின் மிடில்டன் (Catherine Middleton).

    சுமார் 2 மாதங்களாக, 42-வயதாகும் "கேட்" (Kate) என அழைக்கப்படும் கேத்தரின் மிடில்டன் பொதுவெளியில் காணப்படவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

    கடந்த ஜனவரி 17 அன்று, பிரிட்டிஷ் அரண்மனையின் அதிகாரபூர்வ அலுவலகம், கேத்தரினுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர் ஈஸ்டர் பண்டிகை காலகட்டத்தில் மீண்டும் பொதுவெளிக்கு திரும்புவார் என தெரிவித்தது.

    ஆனால், அவர் இதுவரை காணப்படாததால் சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. கேத்தரினின் உடல்நலம் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அரண்மனை வட்டாரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு சான்றாக, ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பாதியிலேயே "சொந்த விஷயமாக" புறப்பட்டு சென்றதை சமூக வலைதளங்களில் பயனர்கள் குறிப்பிட்டு அவரும் தனது மனைவியின் உடல்நலம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பதை பயனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


    கேத்தரினின் தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படங்கள் ஏதும் சமூக வலைதளங்களில் வெளியாகாததும் வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.

    கேத்தரினுக்கும், அவரது கணவர் சார்லசிற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் கேத்தரின் மன உளைச்சலில் இருப்பதாகவும் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் சிலர் வலைதளங்களில் பதிவு செய்தனர்.

    உடல்நலம் தேறி வந்த கேத்தரின், திடீரென "கோமா" நிலைக்கு சென்று விட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத கருத்துகள் இணையத்தில் உலவுகின்றன.

    பிரிட்டிஷ் அரண்மனைக்கு விசுவாசமிக்க பெரும்பாலான இங்கிலாந்து பொதுமக்கள் கேத்தரின் விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

    ×