என் மலர்tooltip icon

    கத்தார்

    • கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர்.
    • முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

    நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.

    நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக கிடக்க கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்புகிறது. உலககோப்பை கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுசூழல் மாசுபடாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை உருவாக்கியிருந்தது.

    இப்போது, முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது

    • கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
    • என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.

    கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ,  ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவிற்கு அதிபர் மேக்ரான் பாராட்டு
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் தோற்றதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாக பேட்டி.

    லுசைல்:

    கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார். தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர் ஆதரவு தெரிவித்தார். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    இறுதி ஆட்டத்தில் தோற்றதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம், மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக எம்பாப்பே உள்பட தோல்வியால் துவண்டிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவின் ஆட்டம் அசாதாரணமானது என்றும், 24 வயதான அவர், ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் மேக்ரான் தெரிவித்தார். இந்நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். உலக கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார். 

    • முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2வது பாதியில் பிரான்ஸ் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமனிலை அடைந்தது.

    கத்தார்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி 2 கோல் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 3-3 என சமனிலை பெற்றன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை 3வது முறையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

    இரண்டாவது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு ரூ.244 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது.

    • அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.
    • அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

    கத்தார்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.

    அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி முதல் கோல் அடித்தார்.
    • முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    கத்தார்:

    கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. கோப்பையைக் கைப்பற்றும் இந்த போட்டியில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதின. 


    ஆட்டம் தொடங்கிய 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்சி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அந்நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் ஏஞ்சல் டிமெரியா அர்ஜென்டினாவிற்கான 2-வது கோலை அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெடினா முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்ஸ் வீரர்கள் தீவிரப்படுத்தினர். அதன்படி 80-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் அவர் தமது அணிக்கு மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையை எட்டியது.


    இதையடுத்து முதல் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவதாக கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 108வது நிமிடத்தில் மெஸ்சி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 118-வது நிமிடத்தில் எம்பாப்பே தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.

    இதையடுத்து இரு அணிகளும் 3-3 சமனிலை பெற்றன. எம்பாப்பே ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார்.

    மூன்றாவது கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.

    • இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.
    • இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

    32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது.

    லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்நிலையில், உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோத உள்ளன.

    உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும்.

    மெஸ்சியின் கடைசி உலக கோப்பை போட்டி இது என்பதால் கோப்பையை கையில் ஏந்துவாரா என அர்ஜென்டினா ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் கோல் அடித்தார்.
    • 2வது பாதி ஆட்டத்தின் முடிவில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் தமது அணிக்கான முதல் கோல் அடித்தார்.

    பதிலுக்கு 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. இதையடுத்து 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஒர்சிக் தமது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேர ஆட்ட முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இந்த உலக கோப்பை தொடரில் 3வது இடத்தை பிடித்தது.

    • ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு இறுதி ஆட்டம்.
    • இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. அல்பேத் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர்.

    எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79 வது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது. கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை  கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கோப்பை தொடரில் 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக கருதப்பட்ட மொராக்கோ, அரை இறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்தது. எனினும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் அந்த அணி வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அரையிறுதி போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    • முதல் கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார் மெஸ்சி.
    • முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு அர்ஜென்டினா வீரர்கள் தீவிரம் காட்டினார்.

    34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 39 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் ஜூலியன் அல்வொரஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


    2வது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை குரோஷியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா 6வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 

    • குரோஷியா அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
    • அர்ஜென்டினா அணி அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்ததில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.

    கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அந்த அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, அரை இறுதி ஆட்டங்களில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை.

    அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கோப்பையை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை.
    • எனது அணியினரையோ, எனது நாட்டையோ ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் போர்ச்சுக்கல் உலக கோப்பையை வெல்லும் என்ற தன்னுடைய கனவு முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். கனவு இருக்கும் வரை அழகாக இருந்தது. இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது.

    போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போதும் ஒரு (போர்த்துகீசியம்) இலக்கிற்காக போராடி வருகிறேன். எனது அணியினரையோ அல்லது எனது நாட்டையோ நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக நான் விளையாடிய 5 உலகக் கோப்பை ஆட்டங்களில், எப்போதும் மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.

    எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காக போராடும் ஒருவனாக இருக்கிறேன். இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது. நன்றி போர்ச்சுகல், நன்றி, கத்தார். இவ்வாறு ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    போர்ச்சுக்கல் அணிக்காக 5 உலக கோப்பை தொடர்களில் ரொனால்டோ விளையாடி உள்ளார். இந்நிலையில் அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. அப்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகி விடும் என்பதால் அதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ×