என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
    • இருதரப்பிலும் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    பாரிஸ்:

    இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் 35-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. காசாமீது இஸ்ரேல், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    காசாமீது வான் தாக்குதல் தீவிரமாக நடந்து வரும் நிலைமையில், இஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்து வருகிறது. காசா சிட்டியில் உள்ள பள்ளி மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள அல்-புராக் பள்ளியைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

    இதில் அந்த பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

    இப்பள்ளியில், வீடுகளை இழந்த மக்கள் தஞ்சமடைந்து இருந்தனர் என்று கூறப்படுகிறது. காசாவில் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த வாரம் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா. நடத்தும் பள்ளிமீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசாவில் உள்ள மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சண்டை தீவிரமாக நடந்து வருவதால் நோயாளிகள், ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா, அல்-குத்ஸ், அல்-ரான்டிசி ஆகிய 3 மருத்துவமனைகள் அருகில் வான் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் அல்-ஷிபா மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு கடும் துப்பாக்கி சண்டை நடந்துவருகிறது. மருத்துவமனைகளை இஸ்ரேல் டாங்கிகள் சூழ்ந்துள்ளன. இதனால் மருத்துவமனைக்குள்ளேயே மக்கள் சிக்கித்தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், காசாவில் குழந்தைகள், பெண்களை கொல்வதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும். பொதுமக்கள் மீது குண்டு வீசுவதற்கு எந்த நியாயமும் இல்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த மரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    • ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.
    • பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். தரைப்படையினர் காசாவின் மையப் பகுதிக்குள் நுழைந்து உள்ளனர்.

    காசா நகர் மீது இஸ்ரேல் படையினர் மும்முனை தாக்குதல் நடத்தி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறி வைத்து சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதில் ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருவதால் போர் ஒரு மாதத்தையும் கடந்து தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் மனிதாபிமான உதவிகள் அளிக்கும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியது. ஆனாலும் இஸ்ரேல் அதனை நிராகரித்தது. ஹமாஸ் பிடியில் இருக்கும் 239 பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என தெரிவித்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தம் கொண்டு வருதற்கான முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.


    அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜோபைடன் காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த பகுதியில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று தினமும் 4 மணி நேரம் காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்து உள்ளது.

    அதன்படி காசாவில் 4 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து போர் நடந்து வரும் வடக்கு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தெற்கு பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். நடந்தும், கழுதை வண்டிகள் மூலமாகவும் அவர்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் சில மணி நேரங்களில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல நாங்கள் விரும்புகிறோம். மனிதாபிமான உதவிகளை நாங்கள் ஊக்குவித்து அதை செயல்படுத்தி வருகிறோம். இஸ்ரேல் ராணுவம் சிறப்பாக செயல்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் காசவை ஆள முயலவில்லை. பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை. சிறந்த எதிர்காலத்தை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் காசாவில் உள்ள 3 பெரிய ஆஸ்பத்திரிகள் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    • செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து புலனாய்வு செய்யும் அமைப்பு, ஹானஸ்ட்ரிபோர்டிங்
    • பத்திரிகை தர்மத்தை மீறிய செயல் இது என இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தி 1400க்கும் மேல் இஸ்ரேலியர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

    இத்தாக்குதலின் போது நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்து வீடியோக்களும், புகைப்படங்களும் வலைதளங்களில் வெளிவந்தன.

    இந்நிலையில், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேல் நாட்டின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) அமைப்பு, காசா பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகின்றனர் என்றும் அவர்களுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தது.

    ராய்டர்ஸ், தி அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஹசன் எஸ்லையா, யூசுப் மசோட், அலி மஹ்முத், ஹதேம் அலி, மொஹம்மத் ஃபய்க் அபு மொஸ்டஃபா மற்றும் யாசர் குடிஹ் எனும் காசாவை சேர்ந்த 6 பத்திரிக்கையாளர்களையும் ஹானஸ்ட்ரிபோர்டிங் அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய ராணுவ டாங்க் ஒன்றை ஹமாஸ் எரிக்கும் போதும், இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பலரை ஹமாஸ் கொண்டு செல்லும் போதும் அருகிலேயே இருந்து அவர்கள் படம் பிடித்துள்ளதை இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

    இது குறித்து இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்திருப்பதாவது:

    அக்டோபர் 7 அன்று காசா முனை பகுதி வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் சில புகைப்பட பத்திரிகையாளர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த பத்திரிக்கையாளர்களுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா? மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் துணை நின்றிருக்கிறார்களா? பத்திரிகை தர்மத்தையும், தொழில் தர்மத்தையும் மீறிய செயல் இது என்பதால், இதனை இஸ்ரேல் தீவிரமாக பார்க்கிறது.

    இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சில சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்களுக்கு இஸ்ரேல் தகவல் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

    இதுவரை ராய்டர்ஸ் நிறுவனம் மட்டுமே இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது.
    • கான்யூனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

    காசா:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது.

    2-வது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படை முன்னேறி சென்றது.

    காசா சிட்டியை இஸ்ரேல் ராணுவத்துடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து முன்னேறியது. இதற்கிடையே காசா சிட்டியின் மையப்பகுதிக்குள் ராணுவம் நுழைந்ததாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது.

    அங்கு ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தகர்க்க தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

    இதனால் காசா சிட்டியில் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது. அக்குழு ஹமாஸ் அமைப்பின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சுரங்கங்களின் இருப்பிடங்களை கண்டறிந்து அதனை வெடிவைத்து தகர்த்தனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    வடக்கு காசா மற்றும் காசா சிட்டியில் கடும் சண்டை நடந்து வருவதை அடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து நடந்தபடியே தெற்கு காசா நோக்கி செல்கிறார்கள்.

    இதற்கிடையே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கான்யூனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

    அதே போல் மேற்கு காசாவில் உள்-அல்-நாஸ்ர் ஆஸ்பத்திரி அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் விமான தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். மேலும் அல்-ஷிபா மருத்துவ வளாகம் அருகே தாக்குதல் நடந்தது.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,500யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் போரில் கடுமையாக சண்டையிட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கூறும்போது இஸ்ரேல் ராணுவத்தினரை வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அதன் டாங்கிகள் மற்றும் வாகனங்களை அழித்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது.
    • ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்- ஹமாஸ் படை இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதால் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேறும் படி அந்நாடு உத்தரவிட்டது.

    இஸ்ரேலில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பணியாற்றி வருகின்றனர். போர் தொடங்கியதும் இவர்களின் பணி உரிமத்தை இஸ்ரேல் ரத்து செய்து விட்டது. உடனடியாக அங்கு வேலை பார்த்து வந்த பாலஸ்தீனர்கள் வெளியேறிவிட்டனர்.

    இதையடுத்து வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கட்டுமான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இஸ்ரேல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இஸ்ரேலிடம் இருந்து ராணுவ படைகளுக்கான ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இப்படி இந்தியாவுடன் நட்புணர்வோடு திகழ்ந்து வரும் இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனர்களுக்கு பதில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதால் இருதரப்புக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

    • இடைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் நேதன்யாகு
    • மத்திய காசா பகுதியை அடைந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதியில் தரைவழியாகவும் மற்றும் வான்வழியாகவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் பரீசிலிக்க வேண்டும் என பல உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    "போர்நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. போர் முடிந்த பிறகும் கூட காசாவின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கும்", என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    "உலகிலேயே பெரிய பயங்கரவாத முகாம் காசா. அதை அழித்தாக வேண்டும்" என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காசாவின் மத்திய பகுதியை அடைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.

    வான்வழியாகவோ, தரைவழியாகவோ இஸ்ரேல் அறியாமல் ஆயுத கடத்தலில் ஈடுபட முடியாததால் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் அமைத்து அதன் மூலம் தனது ஆதரவு நாடுகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் பெற்று வந்தனர். இதை அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்ரேல் தாமதமாக கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அங்கு அமைத்துள்ள சுரங்கங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றது. அதில் ஒரு சில சுரங்கங்கள் நூறு கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

    போர் விரைவில் முடிவடைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது
    • உயிரிழந்தோர் எண்ணிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், சுமார் 1400 அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்று, பல பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தி, பச்சிளம் குழந்தைகளையும் மிருகத்தனமாக கொன்று, 242 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

    உலகையே அதிர்ச்சியடைய வைத்த இந்த தாக்குதலில் கடும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்தது. தொடர்ந்து, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன காசா முனை பகுதி மீது வான்வழி மற்றும் தரைவழி தொடர் தாக்குதல்களை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பகுதிகளில் எல்லாம் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.

    இன்றுடன் போர் துவங்கி ஒரு மாதமாகி விட்டது.

    நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் தாக்குதலில் 4 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.

    ஆனால், இந்த எண்ணிக்கையை மறுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.

    போருக்கு பின்னர் காசாவின் நிலை குறித்து அவர் கூறியதாவது:

    எந்த உயிரிழப்பும் துரதிர்ஷ்டவசமானதுதான். பாலஸ்தீனம் கூறும் எண்ணிக்கையில் 10 ஆயிரம் பேரில் பலர் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள். மேலும் காசா பொதுமக்களை மனித கவசங்களாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் அதிகமாகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும். போர் நிறைவடைந்ததும் காசா முனை பகுதியின் பாதுகாப்பு பொறுப்பை முழுமையாக இஸ்ரேல் எடுத்து கொள்ளும். எத்தனை நாள் வரை எனும் கால அளவை தற்போது கூற முடியாது. இந்த பொறுப்பை நாங்கள் தவிர்த்தால் மீண்டும் ஹமாஸ் பயங்கரவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலைதூக்கி விடும். அதை விட மாட்டோம்.

    தற்போது போர் நடைபெற்று வரும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், பணய கைதிகள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறவும் போருக்கு இடையில், ஒரு மணி நேர அல்லது அரை மணி நேர சிறு சிறு இடைநிறுத்தங்களை கொடுக்கலாம். அது கூட சூழ்நிலையை நாங்கள் முற்றிலும் ஆய்வு செய்த பிறகுதான் வழங்கப்படும்.

    ஆனால், போர் நிறுத்தம் அல்லது தற்காலிக இடைநிறுத்தம் போன்ற பேச்சுக்களுக்கே இடமில்லை.

    இவ்வாறு நேதன்யாகு கூறினார்.

    • காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.
    • போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக மும்முனை தாக்குதலை இஸ்ரேல் படை தீவிரப்படுத்தி உள்ளது.

    காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு மட்டுமல்லாது அப்பாவி பொது மக்களும் உயிர் இழந்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது.

    இந்த சண்டையில் காசாவில் 4,104 குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்து 22 பேர் இறந்து விட்டதாக ஹமாஸ் சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத் தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவும் போரை உடனே நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு பிடி கொடுக்காமல் இஸ்ரேல் பேசி வருகிறது.

    அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனும் 2 முறை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். ஆனாலும் இஸ்ரேல் போரை வைவிட மறுப்பு தெரிவித்து தொடர்ந்து முப்படைகளின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

    மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்தனர். பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.

    ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்க இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது உள்ளூர் போர் அல்ல, உலக அளவிலான போர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    போர் காரணமாக படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    காசாவில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காசா எல்லைப்பகுதிகளில் உடமைகளுடன் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    போரில் உயிர் இழந்தவர்களுக்காக ஜெருசேலத்தில் இஸ்ரேலியர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • போர் நிறுத்தத்தை பல உலக நாடுகள் கோரி வருகின்றன
    • உலகம் அக்டோபர் 7 தாக்குதலை மறக்க விட மாட்டோம் என்றார் ஹகரி

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதி மீது கடந்த அக்டோபர் 7 முதல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சுமார் 9770 பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

    பல உலக நாடுகளின் தலைவர்கள் போர் நிறுத்த கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால், இதனை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    "போர் நிறுத்தமா? அந்த வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். அக்டோபர் 7 அன்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை ஹமாஸ் விடுவிக்காத வரை போர் நிறுத்தம் எனும் பேச்சிற்கே இடமில்லை. நாங்கள் வெற்றி பெறும் வரை போரை தொடர்ந்து நடத்தியாக வேண்டும்; வேறு வழியில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்திருந்தார்.

    இப்பின்னணியில் இஸ்ரேலிய ராணுவ படைகளின் (IDF) செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி, தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காசா முனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். அதனை இரண்டாக பிரித்து விட்டோம். இப்போது காசா, வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாகி விட்டது. வட காசா மீது எந்நேரமும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம். கடற்கரையையொட்டி உள்ள பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டோம். பயங்கரவாத அமைப்பினருக்கு சொந்தமான பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்கள், மேலே உள்ள தளங்கள், தளவாடங்கள் ஆகியவை மீதான தாக்குதல் தொடர்கிறது. அக்டோபர் 7 அன்று எங்களுக்கு நடந்ததை உலகம் மறக்க விட மாட்டோம்.

    இவ்வாறு ஹகரி தெரிவித்தார்.

    • இருவரில் ஒருவர் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார்.
    • தெற்கே 22 வயதான பாலஸ்தீனியர் ஒருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் வன்முறை வெடித்ததால், மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேற்குக் கரையைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய சுவரால் பிரிக்கப்பட்ட இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியான அபு டிஸ் மீது "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் நடத்திய தாக்குதலில்" 22 மற்றும் 20 வயதுடைய இருவர் கொல்லப்பட்டதாக ரமல்லாவை தளமாகக் கொண்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இருவரில் ஒருவர் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்".

    மேலும், தெற்கே 22 வயதான பாலஸ்தீனியர் ஒருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

    • இஸ்ரேல் படைகள் காசாவில் ஹமாஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு வருகின்றன.
    • ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட், கடந்த இரு நாட்களில் வடக்கு எல்லை மற்றும் தெற்கில் சுற்றுப்பயணம் செய்தார்.

    அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    எவ்வளவு காலம் எடுத்தாலும் வெற்றி பெறும் வரை போராட படைகள் தயாராக உள்ளோம் என ரிசர்வ் படை வீரர்கள் என்னிடம் கூறினர்.

    ஒரு வருடம் எடுத்துக் கொண்டாலும், இஸ்ரேல் தன் பணியை கண்டிப்பாக முடித்துவிடும்.

    எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருக்கும் போராளிகள் இங்கு உள்ளனர். இந்த உறுதியானது இஸ்ரேலின் முழு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது.

    தெற்கு மற்றும் வடக்கில் இருந்து காசா நகரைத் தாக்கி நகர்ப்புறங்களுக்குள் நுழைந்துள்ளனர்.

    இஸ்ரேலியப் படைகள் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. ஹமாஸ் காசா தலைவரை கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவோம்.

    இஸ்ரேல் ராணுவம் சுரங்கப் பாதைகளில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வருகிறது. மேலும் பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் பலவற்றை அழித்து வருகிறது என்று தெரிவித்தார்.

    • காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மற்றும் ராணுவ மந்திரி ஆகியோர் கடந்த மாதம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார்.

    ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை அமெரிக்கா தொடர்ந்து அளிக்கும் என தெரிவித்தார்.

    ×