என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    • கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன.
    • 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது.

    தெற்கு ஜெர்மனியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைங்கள் மூடப்பட்டன. இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

    பேயர்ன் முனிசி- யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடும் பனிப்பொழிவால் 760 விமான சேவை பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான முனிச்  மூடப்பட்டது. வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை 40 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு இருந்துள்ளது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெட்பநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

    • அனைவரையும் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • அன்னாலினா மென்மையாக ராட்மேனின் அத்துமீறலை தவிர்த்தார்

    ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    65 வயதான குரோஷியா நாட்டை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர் கோர்டன் க்ரிலிக்-ராட்மேன் (Gordan Grlic-Radman) இச்சந்திப்பில் பங்கு பெற்றார். அப்போது அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து கொள்ளும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. ஜெர்மனியின் வெளியுறவு துறை அமைச்சர் அன்னாலினா பேர்பாக் (Annalena Baerbock) அந்த நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருடன் குழுவில் நின்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அன்னாலினா அருகில் நின்று கொண்டிருந்த ராட்மேன், அன்னாலினாவை கன்னத்தில் முத்தமிட முற்பட்டார். அன்னாலினா மென்மையாக ராட்மேனின் இந்த செய்கையை தவிர்த்தார்.

    பலரையும் இந்த செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பாக பேசப்பட்டது.

    குரோஷியா நாட்டின் பெண்கள் உரிமை ஆர்வலர் ராடா போரிக், "நெருக்கங்களை அனுமதிக்கும் உறவுகளுக்கு இடையேதான் இது போன்ற செய்கைகளை வெளிப்படுத்த வேண்டும். இந்த இருவருக்கும் இது போன்ற உறவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய அநாகரீகமான செயல்" என விமர்சித்துள்ளார்.

    முன்னாள் குரோஷியா நாட்டு பிரதமர் ஜட்ரன்கா கோஸோர் (Jadranka Kosor), "வலுக்கட்டாயமாக பெண்களை முத்தமிடுவதும் வன்முறைதானே?" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ராட்மேனை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆனால், இது குறித்து ராட்மேன் கருத்து தெரிவிக்கும் போது,"இதில் என்ன பிரச்சனை என எனக்கு தெரியவில்லை. ஒரு சக பணியாளரை சந்தித்த மகிழ்ச்சியை மனிதாபமான அணுகுமுறையில் வெளிப்படுத்தினேன். இந்த சந்திப்பின் போது இவ்வாறு நடந்து கொண்டது பொருத்தமற்ற தருணமாக சிலருக்கு தோன்றலாம். அவ்வாறு நினைப்பவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்" என தெரிவித்தார்.

    தற்போது வரை இது குறித்து அன்னாலினா எந்த கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹாம்பர்க் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் வானை நோக்கி 2 முறை சுட்டார்.
    • பயணிகள் அவர்களின் உறவினர்கள் என அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென காரில் வந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட அவர், வானை நோக்கி 2 முறை சுட்டார். பயணிகள் அவர்களின் உறவினர்கள் என அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

    தகவலறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாகச் சென்றனர்.

    விசாரணையில், பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு அந்த வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, விமான சேவை நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்தும்முன் அவருடைய மனைவி போலீசை தொடர்பு கொண்டு, அந்த நபர் 2 குழந்தைகளையும் கடத்திக்கொண்டு செல்கிறார் என தெரிவித்துள்ளார் . தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்
    • வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்தில் யூத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. புகழ்பெற்ற இந்த வழிப்பாட்டு தலம் சார்பில் பள்ளி- கல்லூரிகள், தங்கும் விடுதிகள் ஆகியவை அங்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் இந்த வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய வேதிப்பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். 

    • சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ. ஆகியவைதான் ஜெர்மனிக்கு பாகங்களை வழங்கி வருகிறது
    • பல்வேறு நாடுகள் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து கொள்ள முடிவு செய்திருக்கின்றன

    மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது.

    5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் (Huawei) மற்றும் இசட்.டி.ஈ. (ZTE) ஆகியவைதான் வழங்கி வருகிறது.

    தற்போது ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம், சீனாவின் தயாரிப்புகளால் தேசிய பாதுகாப்புக்கான ஆபத்துக்கள் வரக்கூடும் எனவும் அதனால் அதனை தடுக்கும் விதமாக 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ., ஆகியவற்றின் தயாரிப்புகளை முற்றிலும் தங்கள் நாட்டிலிருந்தே நீக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

    "டீ ரிஸ்கிங்" (de-risking) எனப்படும் அபாயங்களிலிருந்து விலகி இருத்தலுக்கான இந்த முடிவின்படி ஜெர்மனியின் மென்பொருள் மற்றும் இணைய கட்டமைப்பில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த தளங்களிலிருந்தும் அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை நீக்க வேண்டும் என ஜெர்மனி முடிவெடுத்திருக்கிறது. மேலும், இனியும் அவற்றை இறக்குமதி செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என உறுதியாக உள்ளது. அந்நாட்டிலேயே உள்ள சில முன்னணி அலைபேசி சேவை நிறுவனங்கள் இவற்றை எதிர்த்தாலும், அரசங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது. ஜெர்மனியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு தொழில்நுட்பங்களிலும் உயர் தொழில்நுட்பங்களிலும் சீனா எனும் ஒரே நாட்டை சார்ந்திருப்பதை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் படிப்படியாக குறைத்து கொள்ள முடிவு செய்திருப்பதை தொடர்ந்து ஜெர்மனியும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

    "ஜெர்மனி உண்மையிலேயே எங்கள் நாட்டு தயாரிப்புகளால் அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதை நிரூபிக்காமல் இத்தகைய முடிவை எடுத்தால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்" என இத்தகவல் வெளியானதும் சீனா காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    இந்தியாவில் கோவிட்-19 காலகட்டத்திலிருந்து உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் முடிவுகள், தற்போது சீனாவை சார்ந்திருப்பதை உலகம் குறைத்து கொள்ள முன்வரும் வேளையில், இந்திய பொருளாதாரத்திற்கு பலனளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • சுமார் 70 விமானங்களின் பயணம் ரத்தானது
    • 25,000 மின்னல்களை வானிலை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்

    மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி.

    அந்நாட்டின் மாநிலமான ஹெஸ்ஸில் உள்ள ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) நகரில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையம் உள்ளது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கு முக்கியமான ஒரு போக்குவரத்து மையமாக செயல்படுவதால் இந்த விமான நிலையம், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும், ஓடுதளங்களிலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் நிரம்பியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக அங்கு வந்து தரையிறங்கிய விமானங்களிலிருந்து பயணிகள் இறங்கி, நிலையத்தை அடைந்து, தங்களின் அடுத்த பயண இலக்குகளை அடைய முடியாமல் தவித்தனர்.

    கிட்டத்தட்ட 2 மணி நேரம் விமான நிலைய தரை கட்டுப்பாட்டு சேவைகள் முடக்கப்பட்டது. சுமார் 70 விமானங்களின் பயணம் ரத்தானது. வழக்கமாக இரவு 11:00 மணியளவில் நிறுத்தப்படும் அன்றாட சேவை பணிகள், விமானங்கள் ரத்தானதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாக நீண்டு கொண்டே சென்றது.

    இதனால் தரையிறங்க வேண்டிய 23 விமானங்களின் வருகை மாற்றியமைக்கப்பட்டது. நிலையத்தை நெருங்கும் முன்பே பல விமானங்களுக்கு வானிலேயே இது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

    சுமார் 1000 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை ஹெஸ் மாநிலம் முழுவதும் ஜெர்மன் வானிலை அமைப்பால் விடுக்கப்பட்டுள்தால், இயல்பு நிலை திரும்புவதற்கு சில நாட்களாகும் என தெரிகிறது.

    வானிலை அதிகாரிகள் ஒரு மணி நேர இடைவெளியில் அம்மாநிலம் முழுவதும் 25,000 மின்னல்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் போர் முடியும் தறுவாயில் தரைமட்டமானது
    • வெளியெறிய மக்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர்

    19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது.

    இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசின. அதில் பெரும்பகுதி ஜெர்மனி மீது வீசப்பட்டது. இவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன.

    போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது. பல தசாப்தங்கள் ஆன பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.

    ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கருகே சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர். வெளியெறியவர்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.

    தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் தற்போது வரை தகவல்கள் இல்லை.

    • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
    • நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதி வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    பெர்லின்:

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிச்சுற்றில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளிக்கணக்கில் மெக்சிகோவின் ஆன்ட்ரியா பிசெர்ராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    இதன் மூலம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அதிதி உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அத்துடன் சீனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையையும் சொந்தமாக்கினார்.

    நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதி வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். காம்பவுண்ட் அணிகள் பிரிவிலும் அவருக்கு தங்கம் கிடைத்து இருந்தது.

    இதுதொடர்பாக அதிதி கூறுகையில், நமது நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். மற்றவை எல்லாம் எனது வழியில் அமைந்தது. இது தொடக்கம்தான். அடுத்து ஆசிய விளையாட்டு போட்டி வருகிறது. அதிலும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    • ஜூலை மாத வெப்பநிலை இம்முறை கணிசமாக உயர்ந்துள்ளது
    • 1,20,000 ஆண்டுகளில் பூமி இவ்வளவு சூடாக இருந்ததில்லை

    நிறைவடைய போகும் ஜூலை மாதம் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாதமாக அமையப்போகிறது.

    உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வருகின்றது.

    இந்நிலையில் ஜெர்மனியின் லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதில், "இதுவரை உலகில் பதிவான வெப்பநிலைகளிலேயே ஜூலை 2023 மாத வெப்பம்தான் அதிகமானதாக இருக்கும்" என தெரிகிறது.

    தொழில்துறை புரட்சி காலகட்டங்களுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த சராசரியை விட இம்மாத சராசரி உலக வெப்பநிலை, சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய யூனியனில் 174 ஆண்டுகளுக்கான வெப்ப பதிவுகளில் அதிகமானதாக ஜூலை 2019-ஐ பதிவாகியிருந்தது. 2023 ஜூலை மாத வெப்பநிலை அதையும் விட 0.2 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு இக்கருத்துக்களை அமோதிக்கிறது.

    ஜூலை மாதத்திற்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை வழக்கமாக 16 டிகிரி செல்சியஸ் எனும் அளவில்தான் இருக்கும். ஆனால் இந்த ஜூலையில் அது 17 டிகிரி செல்சியஸிற்கு அளவிற்கு உயர்ந்துள்ளது.

    "நமது புவியில் இதே போன்ற அதிக வெப்ப பதிவுகளை ஆராய்ந்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அல்லது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும் " என்று லெய்ப்சிக் பல்கலைகழகத்தின் வானிலையியல் ஆய்வாளர் கூறினார்.

    பனிக்கட்டிகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கிடைக்கும் பதிவுகளில் இருந்து 1,20,000 ஆண்டுகளில் பூமி இவ்வளவு சூடாக இருந்ததில்லை என்று தெரிகிறது.

    கிரேக்கத் தீவான ரோட்ஸ், அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகள், வடமேற்கு சீனா, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் அதிக வெப்பம் சமீப காலங்களில் மிகவும் பேசுபொருளானது.

    கடல் நீர் மட்டுமல்லாது உலகின் குளிர்ச்சியான அண்டார்டிகா பனி பிரதேசத்திலேயே வெப்பநிலை உயர்ந்துள்ளது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

    • முதல் செட்டை 3-6 என ஸ்வெரேவ் இழந்தார்
    • 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 5-7 என இழந்து தோல்வி

    ஜெர்மனியின் ஹாலே நகரில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 9-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- தரநிலை பெறாத கஜகஜஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்-ஐ எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்வெரேவ் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    முதல் செட்டை கஜகஜஸ்தானின் 26 வயதான பப்லிக் 6-3 என எளிதில் வென்றார். 220 கி.மீட்டர் வேகத்தில் பப்லிக் சர்வீஸ் செய்ய ஸ்வெரேவ் மிரண்டு போனார். இதனால் தொடக்கத்தில் 4-1 என பின்தங்கினார். இது முதல் செட்டை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.

    2-வது செட்டில் இருவரும் 5-5 என சமநிலையில் இருக்கும்போது, அடுத்த இரண்டு கேம்களையும் கைப்பற்றி 7-5 என வெற்றி பெற்றார்.

    அலெக்சாண்டர் பப்லிக் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீரரான ருப்லேவ்-ஐ எதிர்கொள்கிறார்.

    • குடியேற்ற சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
    • 53 சதவீத நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

    ஜெர்மனி நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆளும் மைய-இடது கூட்டணியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக, நேற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 234 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்; 31 பேர் வாக்களிக்கவில்லை.

    கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் மற்றும் அதன் பவேரிய சகோதரக் கட்சியான கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் இணைந்த பழமைவாத பாராளுமன்ற குழு இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. இந்த சட்டத்தால், திறமையற்ற தொழிலாளர்கள் ஜெர்மனியில் நுழைவது எளிதாகி விடும் என அவர்கள் குறிப்பிட்டனர். தீவிர வலதுசாரி கட்சியும் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது.

    வேலைக்கான விசா விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தொழில்முறை தகுதிகள், வயது மற்றும் மொழித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் நுழைவதில் இருந்த தடைகளை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையிலான (points-basis) அமைப்பு இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

    இந்த ஆண்டு திறமையான தொழிலாளர்கள் இல்லாததால் காலியிடங்களை நிரப்புவதில் உள்ள சிக்கல்களால் ஜெர்மனியில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அல்லாடி வருவதாக ஜெர்மன் தொழில் வர்த்தக சபை கூறியிருக்கிறது.

    ஜெர்மன் தொழில் வர்த்தக சபையானது நாடு முழுவதிலும் 22000 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், பணியமர்த்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களின் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. 53 சதவீத நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

    அமெரிக்காவில் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த வருட இறுதியிலிருந்தே ஆட்குறைப்பு செய்து வருகின்ற நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு, ஜெர்மனியிலிருந்து வரும் இச்செய்தி மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • நேர்மறை அணுகுமுறையை பாராட்டி இப்பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • அக்டோபர் 22-ந் தேதி அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

    பெர்லின் :

    பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கவுரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகிறது. அவரது இலக்கிய பணிக்காகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து எழுதி வரும் அவரது உறுதிப்பாடு மற்றும் நேர்மறை அணுகுமுறையை பாராட்டியும் இப்பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சல்மான் ருஷ்டி, இலக்கிய புதுமை, நகைச்சுவை, அறிவுக்கூர்மை ஆகியவற்றுடன் எழுதி வருவதாக விருது நடுவர் குழு கூறியுள்ளது.

    அக்டோபர் 22-ந் தேதி, பிராங்க்பர்ட் நகரில் நடக்கும் விழாவில் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. 1950-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இப்பரிசு, 25 ஆயிரம் யூரோ (ரூ.22 லட்சத்து 25 ஆயிரம்) பரிசுத்தொகை கொண்டது.

    ×