கண்டிப்பு காட்டிய சுங்க இலாகா - அபராதம் செலுத்திய "டெர்மினேட்டர்"

தொழில்முறை பாடிபில்டரான அர்னால்ட் திரைத்துறையில் நுழைந்தார்பாதி தொகையை கரன்சியில் செலுத்த, அர்னால்ட் வங்கிக்கு சென்று வந்தார்
கண்டிப்பு காட்டிய சுங்க இலாகா - அபராதம் செலுத்திய "டெர்மினேட்டர்"
Published on

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட்டின் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).

ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன.

தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர்.

ஆஸ்திரியாவில் நடைபெற உள்ள ஒரு சுற்றுச்சூழல் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை சுற்றுச்சூழல் மற்றும் பருவகால சிக்கல்களை எதிர்கொள்ள நன்கொடையாக அளிக்க சென்றார், அர்னால்ட்.

நேற்று, பயண திட்டப்படி லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து ஜெர்மனியின் மியூனிச் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கினார்.

தென் கிழக்கு ஜெர்மனியில் உள்ள முக்கிய நகரம் மியூனிச் (Munich).

அர்னால்டின் உடைமைகளை பரிசோதித்த சுங்க இலாகா அதிகாரிகள், உடைமைகள் குறித்த பட்டியலில் இல்லாத கைக்கடிகாரம் ஒன்று அவரிடம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

ஆடிமார்ஸ் பிக்கெட் (Audemars Piguet) எனும் சுவிட்சர்லாந்து நாட்டின் உயர்ரக கைக்கடிகார நிறுவனத்தால் அர்னால்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த கைக்கடிகாரம் சுமார் ரூ.23 லட்சம் (26,000 யூரோ) மதிப்புடையது.

"ஐரோப்பாவிற்கு உள்ளே கொண்டு வரப்படும் எந்த வெளிநாட்டு பொருள் குறித்தும் பயணிகள் முதலிலேயே கூற வேண்டும் என்பது விதிமுறை. யாராக இருந்தாலும் இந்த விதிமுறையில் மாற்றம் இல்லை" என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏலத்திற்கு கொண்டு செல்வதாக அர்னால்ட் கூறிய விளக்கங்களை ஏற்று கொள்ள மறுத்த சுங்கத்துறை அதிகாரிகள், அவருக்கு 35,000 யூரோ அபராதம் விதித்தனர். கிரெடிட் கார்டு மூலம் செலுத்த முன்வந்த அர்னால்டிடம் பாதி தொகையை கட்டாயமாக கரன்சியில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியதால் அர்னால்ட், வங்கிக்கு சென்று பணம் எடுத்து வந்தார்.

சுங்க விதிப்படி, வங்கி அதிகாரிகளும் அவருடன் சென்று வந்தனர்.

அபராதத்தை செலுத்திய பிறகு அர்னால்ட் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.

இதனால் மியூனிச் விமான நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் அவர் பயணம் தடைபட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com