என் மலர்tooltip icon

    தமிழக பட்ஜெட் - 2021

    பெட்ரோல் வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

    ஏழை, எளிய உழைக்கும் வர்க்க மக்கள் பெட்ரோல் விலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். 

    பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும். பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து வரி குறைப்பு செய்யப்படுகிறது. பெட்ரோல் வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

    போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி, மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீ.க்கு 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும். சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
    1921ஆம் ஆண்டு முதலான தமிழக சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

    அரசின் கடன்சுமையை சரிசெய்து நிதிநிலைமை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள 'வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும்.

    1921ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும். வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும். ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.

    அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

    * பாசனத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 6,607.17  கோடி ஒதுக்கீடு
    * 200 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி நிதி ஒதுக்கீடு
    * ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்
    * 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்
    * ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு
    *  ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம்  ரூ.150 கோடி ஒதுக்கீடு

    குளம்

    * அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும்
    * கிராமப்புறங்களில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு ரூ.400 கோடி
    * சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3 கோடி அளிக்கப்படும்
    * நமக்கு நாமே திட்டத்திற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
    *  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்
    * ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
    தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்து துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துதல் வலுப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

    சென்னை:

    பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

    சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும். 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ந்தேதி ரூ.10 லட்சம் ரொக்க தொகையுடன் வழங்கப்படும்.

    நிர்வாகம் மக்களை சென்றடைய வேண்டுமென்றால் அரசு தனது பணிகளை மக்களின் மொழியில் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துதுறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துதல் வலுப்படுத்தப்படும்.

    தமிழ் இணைய கல்வி கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு பாண்ட் அனைத்து அரசு துறையிலும் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.

    பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றும் நிதியமைச்சர்

    தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலித்து எடுத்து சரி பார்த்து 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்...மதுரை ஆதீனம் அறைக்கு சீல் வைப்பு

    குக்கிராமங்களில் அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
    * பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437.57 கோடியாக உயர்வு
    * மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை
    * அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்
    * பொது விநியோக திட்டத்தின்கீழ் தேவையான இடங்களில் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும்

    பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர்

    * குக்கிராமங்களில் அடிப்படை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்படும்
    * 2021 - 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111.24 கொடி ஒதுக்கீடு
    * தமிழ்நாட்டில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
    * நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடியில் மீண்டும் செயல்படுத்தப்படும்
    * மாநகராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்
    * பேரூராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 90 லிட்டர் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
    சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

    * தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு
    * காவல் துறையிலுள்ள 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
    * தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு
    * தமிழக காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு
    * உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்வு

    காசிமேடு மீன்பிடி துறைமுகம்

    * மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி நிதி ஒதுக்கீடு
    * மீனவர்கள் நலனுக்கு 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    * புதிதாக 6 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்
    * சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
    *  2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள 'செம்மொழி தமிழ் விருது' இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்.
    *  ரூ.400 கோடி ஒதுக்கீட்டில் தூய்மை பாரதம் இயக்கம் செயல்படுத்தப்படும்
    *  100 நாள் வேலைவாய்ப்பை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
    அ.தி.மு.க.வினர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு. ‘இந்த தடவை தமிழக சட்டசபையில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

    அதன்பிறகு அவர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

    அப்போது எதிர்கட்சி தலைவர்
    எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசத் தொடங்கினார். ஆனால் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் கேட்கவில்லை.

    இதற்கிடையே சபாநாயகர் குறுக்கிட்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு,க. உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக தங்கள் இருக்கையில் அமர வேண்டும். இன்று முதன் முதலாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை விவாதம் நடைபெறும்.

    அன்றைய தினம் உங்களது கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம் திங்கட்கிழமை நீங்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்பு தருகிறேன்.

    சபாநாயகர்

    இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

    ஆனால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அவர் பேசினார். அவர் கையில் இருந்த குறிப்புகளை பார்த்து வாசித்தார்.

    ஆனால் அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அவர் பேச்சு கேட்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க எம்.எல். ஏ.க்கள் அனைவரும் எழுந்து கோ‌ஷமிட்டனர்.

    இதனால் சபையில் கூச்சல் நிலவியது. அமளிகாரணமாக அ.தி.மு.கவினர் பேசியது கேட்கவில்லை.

    அ.தி.மு.க.வினர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டார்.

    அதன்படி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூச்சல், அமளிக்கு மத்தியில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    வரி அதிகரிப்பின் மூலம் ஒன்றிய அரசுக்கு வரிவருவாய் அதிகரித்தாலும் மாநில அரசின் வருவாய் கடுமையாக சரிந்துள்ளது என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    * ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்; பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் 

    * 20-21ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது. மாநிலங்களின் பங்கு கடுமையாகச் சரிந்துள்ளது. ஆகவே எரிபொருள் மீதான விலையைக் குறைக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே இருக்கிறது.

    * வரி அதிகரிப்பின் மூலம் ஒன்றிய அரசுக்கு வரிவருவாய் அதிகரித்தாலும் மாநில அரசின் வருவாய் கடுமையாக சரிந்துள்ளது.

    * தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்

    * சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ.4,807 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * நீதித்துறை நிர்வாகத்திற்கு 1,713.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு. கடந்த ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். இந்த கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாள் அன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார்.

    அதன்பிறகு பட்ஜெட் தாக்கலுக்கான பணிகளை அரசு தொடங்கியது. தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். அனைத்து துறைகளின் ஆய்வுக்கூட்டம் முடிந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் 13-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்ட் 14-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 

    சட்டசபை கூட்டம் நடைபெறும் அரங்கை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

    அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். 

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

    தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் பட்ஜெட் (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    இ-பட்ஜெட் என்பதால் அமைச்சர்  பட்ஜெட்டை வாசிக்கும்போது, அந்த வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் ஓடுகிறது. இதன்மூலம் பட்ஜெட் தொகுப்பை எம்எல்ஏக்கள் கவனித்தனர்.

    தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், துறை வாரியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன. 

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெளியேறினர்.

    பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்தும், சபை அலுவல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். 

    சித்தவைத்தியர் சிவராஜ் மறைவுக்கு 25ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள், உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 

    25 மற்றும் 26 ஆகிய நாட்களில் பட்ஜெட் மீதான விவாதமும், 27ம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரையும் இடம்பெறும் என சபாநாயகர் கூறினார்.
    ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் 2 ஆயிரம் பஸ்கள் மின்சார பஸ்களாக இருக்கும். முதல் கட்டத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ. 1,580 கோடியில் 2,200 பி.எஸ்-6 பஸ்களும், 500 மின்சார பஸ்களும் கொள்முதல் செய்யப்படும்.

    இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2021- 22-ம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான நிதியில், மத்திய அரசு தனது பங்கை வழங்கும் என்று மத்திய நிதி மந்திரி தனது வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.

    இத்துடன் இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஆதாரம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையும், தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமை ஆகும். எனவே பள்ளி கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடபுத்தகங்களை அரசு வழங்கியது. 12-ம் வகுப்புக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912 வீடியோ பாடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் 4,20,624 மாணவர்கள் பயன் அடைந்தனர்.

    5,522 வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அரசின் சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. மாணவர்களுக்கான பாடங்கள் பல்வேறு இணையதளங்களில் மின்னணு தொகுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன.

    இதுவரையில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.

    விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்வதாக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    இதனால் 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய 12,110.75 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு காப்பீட்டுக் கட்டண மானியத்தை கூடுதல் சுமையாக ஏற்றுக் கொண்டு, 80:20 எனும் பகிர்மான அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய இணைக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு போதுமான இடர்க்காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    2020-21 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 747.15 கோடி ரூபாயை உயர்த்தி, 2020-21-ம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில் 812.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை மேலும் உயர்த்தி, 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு -செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,738.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புதிய அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் தொடங்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும் என கூறப்பட்டுள்ளது. 

    இதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    ×