என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீனாவைச் சேர்ந்த பெய்வென் ஷாங்கை எதிர்கொண்டார்.

    இதில் பிவி சிந்து 21-14, 21-17 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில் பெய்வென்னிடம் பிவி சிந்து தோற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய பேட்ஸ்மேன் கேஎல் ராகுலின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக அறிமுகம் ஆனவர் கேஎல் ராகுல். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து தொடருக்குப்பின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பிடித்துள்ளார். இரண்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    விக்கெட் கீப்பர் பணியையும் சேர்ந்து கவனிப்பதால் அவரை மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கி விளையாட அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    விரைவில் டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம் பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேஎல் ராகுலின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

    கேஎல் ராகுல் குறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவருடைய ஆட்ட நுணுக்கம், அவர் பேட்டிங் செய்வதை நான் பார்த்த வகையில் எந்த அணிக்கு எதிராகவும் அவருக்கு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.

    அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கான திறனை பெற்றுள்ளார். அவரது இடத்தை தற்காத்துக் கொள்ளும் திறனையும் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்குப் பிறகு முதல் நபராக அவரது பெயரை என்னால் தெரிவிக்க முடியும். எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் கேஎல் ராகுல்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் பீதியால் ஆர்சிபி போட்டிகளை குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டுள்ளது கர்நாடகா அரசு.
    ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதியில் இருந்து மே மாதம் 24-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது.

    இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிகள் தள்ளிப் போகலாம் என அம்மாநில மந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஆர்சிபி அணிகள் விளையாட இருக்கும் போட்டிகள் குறித்து மத்திய அரசிடம் ஆலோசனைக் கேட்டுள்ளது கர்நாடக அரசு.

    இதுகுறித்து கர்நாடக மாநில மருத்துவக் கல்வி மந்திரி டாக்டர் கே. சுதாகர் கூறுகையில் ‘‘நான் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், கர்நாடக மாநிலத்தில் போட்டிகள் நடைபெறும் வகையில் ஐபிஎல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மும்பையில் போட்டிகள் நடைபெறுவது குறித்து மகாராஷ்டிரா அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வழிகாட்டுதல் அறிவுரைக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளேன்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    இந்திய ஓபன் பேட்மிண்டன் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் 29-ந்தேதி வரை நடைபெறும் வகையில் ஏற்கனவே போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் போன்ற ஆட்டங்களை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்தியா ஒபன் பேட்மிண்டன் தொடர் நடைபெறும் என இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ‘‘திட்டமிட்டபடி மார்ச் 24-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை நடைபெறும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் துாிதமான வகையில் மேற்கொள்ளப்படும். போட்டியை ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் (Closed Doors) நடத்தும் வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அடங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெங்காலுக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் வசவாதா சதமும், புஜாரா உள்பட மூன்று பேர் அரைசதமும் அடிக்க சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தது.
    ரஞ்சி கோப்பை இறுதி போட்டி ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெங்கால் அணிக்கெதிராக டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தேசாய், விக்கெட் கீப்பர் பேரோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேசாய் 38 ரன்னிலும், பேரோட் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வி.எம். ஜடேஜா 54 ரன்னில் வெளியேறினார்.

    6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வசவாதா மற்றும் புஜாரா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய வசவாதா சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் அரையிறுதியில் குஜராத் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புஜாரா 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.

    சவுராஷ்டிரா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய குஜராத் 425 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டும், சர்பாஸ் அகமது 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    கொரோனா பீதியால் பந்தை ஷைனிங் செய்வது எப்படி என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்கிறது.

    இரண்டு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பீதியால் இரு அணி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டாக்டர்கள் ஆலோசனைப்படி கடைபிடிக்க இருக்கிறார்கள்.

    போட்டியின்போது புதுப்பந்தை பளபளப்பாக வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவார்கள். உமிழ்நீரை தொட்டு பந்தை நன்றாக தேய்ப்பார்கள். இதனால் பந்து ஷைனிங் ஆகி ஸ்விங் ஆகும்.

    இப்படி வீரர்கள் செய்தால் நோய் பரவ வாய்ப்புள்ளது. டாக்டர் ஆலோசனைக்கு பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த விஷயம் குறித்து சிந்தித்துள்ளோம். ஆனால், உமிழ்நீரை பயன்படுத்தமாட்டோம் என்பதை தற்போது என்னால் கூற இயலாது. ஏனென்றால், உமிழ்நீரை பயன்படுத்தாவிடில், பந்தை ஷைனிங் செய்வது எப்படி?.

    அப்புறம் எங்களது பந்தை துவம்சம் செய்தால், நாங்கள் சரியாக பந்து வீசவில்லை என்று ரசிகர்கள் கூறுவார்கள். இன்று மாலை அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்பட்டும். மேலும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படும்’’ என்றார்.
    ஜோர்டானில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
    ஜோர்டான் அம்மான் நகரில் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்தியாவை சேர்ந்த விகாஸ் கிருஷ்ணன் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    ஆனால் காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனால் வெள்ளி பதக்கம் பெற்றார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளது நிலையில் ஐபிஎல் போட்டிக்கு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பலரை தாக்கியுள்ளது.

    தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவிலும் பலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. உலகத்தையே இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

    இந்த போட்டிக்கு தடைவிதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதில் 3 ஆயிரத்து 497 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் வேகமாக பரவி, மனித இனத்துக்கு மிகப்பெரிய சவாலாக திகழும் இந்த வைரஸ் நோய்க்கு மருந்து இல்லை.

    மிகப்பெரிய அளவில் அழிவை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஐ.எப்.எல். என்ற கால்பந்து விளையாட்டு போட்டி  தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்தி வருகிறது. நடப்பாண்டில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டியை சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஒரே மைதானத்தில் பார்வையிடுவார்கள்.

    இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் இருந்தால், இந்த வைரஸ் வேகமாக பிறருக்கு பரவ தொடங்கிவிடும். இதனால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.

    எனவே, இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடத்த உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க வேண்டும். இந்த போட்டியை நடத்த அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
    கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா? என்பது குறித்து ஒரிரு நாட்களில் பி.சி.சி.ஐ. தனது முடிவை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந்தேதிவரை 9 நகரங்களில் நடக்கிறது.

    கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐ.பி.எல். போட்டிகளில் வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் வருவதால் இந்தப் போட்டிக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. ஐ.பி.எல். ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்தில் பெரும் அளவில் திரள்வார்கள். இதனால் கொரோனா பரவுவதை தடுக்க ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.

    கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். இந்தப் போட்டியை தள்ளி வைத்து மாற்று தேதியில் நடத்தலாம் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. பொறுத்து இருந்து பார்ப்பது என்று முடிவு செய்துள்ளது.

    ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் படேல் இது குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார். பி.சி.சி.ஐ. இது குறித்து விரைவில் முடிவு செய்ய மத்திய அரசின் முடிவை பொறுத்துதான் கிரிக்கெட் வாரியம் இதில் தனது நிலையை தெரிவிக்கும்.

    ஐ.பி.எல். போட்டியை டெலிவி‌ஷனில், மொபைலில் பார்ப்பவர்களின் எண் ணிக்கை மிகவும் அதிகம். இதனால் ரசிகர்களே இல்லாமல் போட்டியை நடத்தலாமா? என்ற ஆலோ சனையும் நடத்தப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் போட் டியை நடத்துவது உகந்தது இல்லை என்று சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பணம் கொழிக்கும் இந்தப் போட்டியை தள்ளி வைப்பதால் பி.சி.சி.ஐ.க்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்படும்.

    இதனால் கூடுமானவரை திட்டமிட்ட தேதியில் நடத்த விரும்பும். ஆனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒத்துழைக்க மறுத்தால் போட்டியை தள்ளிவைக்க வேண்டிய நிலையே ஏற்படும். 

    எப்படி இருந்தாலும் இது குறித்து ஒருரிரு நாட்களில் பி.சி.சி.ஐ. தனது முடிவை தெரிவிக்கும்.
    2020-ம் ஆண்டுக்கான ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஈட்டி எறியும் வீரர் ஷிவபால்சிங் தகுதி பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடந்தது.

    2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதிவரை நடக்கிறது.

    ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஈட்டி எறியும் வீரர் ஷிவபால்சிங் தகுதி பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் அவர் 85.47 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தனது 5-வது முயற்சியில் இதை தொட்டு ஒலிம்பிக்குக்கு முன்னேறினார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது ஈட்டி எறியும் வீரர் ஷிவபால் ஆவார். ஏற்கனவே நீரஜ் சோப்ரா தகுதி பெற்று இருந்தார். நீரஜ் கடந்த ஜனவரி மாதம் 87.86 மீட்டர் தூரம் எறிந்து இருந்தார்.

    தடகளத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 6 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவினாஷ் சாப்ளே (3 ஆயிரம் மீட்டர்), ஸ்டீபிள் சேஸ், இர்பான், (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), பாவ்னா ஜாட் (பெண்கள் 20 கிலோ மீட்டர் நடை பந்தயம்), ஆகியோர் முன்னேறி இருந்தனர். இதேபோல 4ஜ்400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா தகுதி பெற்று இருந்தது.

    வில்வித்தையில் இருந்து 4 பேரும், குத்துச்சண்டையில் 8 பேரும், துப்பாக்கி சுடுதலில் 15 பேரும், மல்யுத்தத்தில் 4 பேரும், குதிரையேற்றத்தில் ஒருவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இதே போல ஆக்கி ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தகுதி பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலிய அணிக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பெவன் மற்றும் இந்தியாவின் எம்எஸ் டோனி ஆகியோர் தலைசிறந்த பினிஷர் என்றால் அது மிகையாகாது. இவர்களை போன்ற ஒரு பினிஷர் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் நாங்கள் மைக் ஹசி அல்லது மைக்கேல் பெவன் ஆகியோரை தலைசிறந்த வீரர்களாக இருந்தனர். அதேபோல் எம்எஸ் டோனி பினிஷர் பணியில் மாஸ்டர். இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.
    ஜோர்டானில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
    ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் ஒலிம்பிக் ஆசிய தகுதி குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 69 கிலோ எடைபிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் சீனாவைச் சேர்ந்த ஜியான்குயன் ஹுவை எதிர்கொண்டார். இதில் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    52 கிலோ எடைபிரிவு அரையிறுதி போட்டியில் அமித் பங்கல் தோல்வியடைந்தார். இதனால் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் 69 கிலோ எடைபிரிவில் லோவ்லினா போர்கோகைன் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார். மூன்று பேரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    ×