என் மலர்
விளையாட்டு
அபுதாபி:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று தொடங்கியது. அபுதாபியில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. சவுரப் திவாரி 31 பந்தில் 42 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), குயின்டன் டி காக் 20 பந்தில் 33 ரன்னும் ( 5 பவுண்டரி) எடுத்தனர்.
நிகிடி 3 விக்கெட்டும், ஜடேஜா, தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா, சாம் கரண் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பந்து எஞ்சியிருந்த நிலையில் 163 ரன் இலக்கை எடுத்தது. சி.எஸ்.கே. அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி 3 சிக்சர்), டுபெலிசிஸ் 44 பந்தில் 58 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 84 பந்தில் 115 ரன் எடுத்தது முக்கிய அம்சமாகும்.
போல்ட், பேட்டின்சன், பும்ரா, குணால் பாண்ட்யா, ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் 4 முறை மும்பை இந்தியன்சிடம் தோற்றதற்கு சரியான பதிலடி கொடுத்தது.
இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
எங்களது ஆட்டத்தில் பல இடங்களில் முன்னேற்றம் தேவை. முதல் போட்டி இதை உணர்த்தியது. இந்த போட்டி மூலம் வீரர்கள் பல விஷயங்களை உணர்ந்து இருப்பார்கள். ஆடுகளத்தின் தன்மை உள்பட பல்வேறு விஷயங்களை முதல் போட்டியிலேயே அறிந்து கொள்ள முடியாது.
பேட்டிங்கில் தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்தது. நாம் முன்னேற்ற பாதையில் இருக்க வேண்டும் என்றால் இது மாதிரியான நிகழ்வு இருக்கக்கூடாது. இதை வீரர்கள் கற்றுக்கொண்டிருப்பார்கள்.
அம்பதி ராயுடு, டுபெலிசிசுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இருவரையும் பாராட்டுகிறேன். எங்கள் அணியில் சர்வதேச போட்டியில் ஓய்வுபெற்ற வீரர்கள் அதிகமாக உள்ளனர். நல்ல வேளையாக அவர்களுக்கு காயம் ஏற்பட வில்லை.
அனுபவம் பலன் அளிக்கக்கூடியது. ஒவ்வொருவரும் அதைப்பற்றிதான் பேசுகிறார்கள். 300 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். 11 பேர் கொண்ட அணி அனுபவமும், இளமையும் இணைந்ததாக இருக்க வேண்டும். இந்த கலவையால் தான் சிறப்பாக ஆட முடியும்.
இளம் வீரர்களுக்கு களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அனுபவ வீரர்களின் ஆலோசனை தேவை. ஐ.பி.எல். போட்டியில் 60 முதல் 70 நாட்கள் சீனியர் வீரர்களுடன் இளம் வீரர்கள் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, ‘‘நாங்கள் போதுமான அளவுக்கு ரன்களை எடுக்கவில்லை. சி.எஸ்.கே. வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்’’ என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 22-ந்தேதி சார்ஜா வில் சந்திக்கிறது.
மும்பை அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 23-ந்தேதி அபுதாபியுல் எதிர் கொள்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இறுதி சுற்றை எட்டாத ஒரே அணியான டெல்லி அணி இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன் தயாராகியுள்ளது. ஷிகர் தவான், பிரித்வி ஷா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் என்று டெல்லி அணி மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அஸ்வின், ரஹானேயின் வருகை கூடுதல் பலம் சேர்க்கும்.
ஆனால் ரஹானேவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘அணி மிகவும் சரியான கலவையில் அமைந்துள்ளது. பேட்டிங்கில் மிடில் வரிசைக்கு தான் நிறைய போட்டி நிலவுகிறது. ரஹானே மூலம் எங்களது பேட்டிங் மேலும் வலுவடைந்துள்ளது. ரிஷாப் பண்ட் கடந்த ஆண்டை போல் இந்த சீசனிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கிறேன். துபாய் ஆடுகளம் அனேகமாக வேகம் குறைந்து தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் அதிகமாக பவுன்ஸ் ஆகும் என்று நினைக்கிறேன். ஆட்டங்கள் பல நடக்கும் போது ஆடுகளத்தன்மை மாறும். அப்போது சுழற்பந்து வீச்சுக்கு இன்னும் அதிகமாக ஒத்துழைக்கலாம்’ என்றார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கும்பிளேயின் பயிற்சியில், புதிய கேப்டன் லோகேஷ் ராகுல் தலைமையில் களம் காணுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியில் கிளைன் மேக்ஸ்வெல் 7 சிக்சருடன் அதிரடியாக சதம் அடித்தார். அவர் பார்முக்கு திரும்பியிருப்பது பஞ்சாப் அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும். சரியான அணி கலவைக்காக முதல் ஆட்டத்தில் ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் வெளியே உட்கார வைக்கப்படலாம். கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஓவருக்கு சராசரி 5.29 ரன் வீதமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டிய பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் ஐ.பி.எல்.-லிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், சர்ப்ராஸ் கான், முகமது ஷமி, காட்ரெல் என்று தரமான வீரர்கள் அணியில் உள்ளனர்.
பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘இளமையும், அனுபவமும் கலந்த அருமையான அணியாக உள்ளோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சீசனை மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் முனைப்புடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்றார்.
மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 14-ல் பஞ்சாப்பும், 10-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






