என் மலர்
விளையாட்டு



32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இப்போதே ஒவ்வொரு அணிகளாக ஜப்பான் செல்ல தொடங்கி விட்டன.
ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். ஜப்பான் கிளம்புவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவே வந்துள்ளது.
தொற்றுக்குள்ளான நபரை தவிர மற்றவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை:
ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். அவரின் ஊக்கத்தினையும், விடா முயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் "விளையாட்டு அலுவலர்" பதவி வழங்கப்பட்டுள்ளது.
பவானி தேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
அவர் தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பவானி தேவியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், இன்று (20.6.2021) சென்னை, அண்ணாசாலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.






