என் மலர்
விளையாட்டு

துபாய்:
20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ‘சூப்பர் 12’ சுற்றில் நேரடியாக விளையாடுகிறது.
குரூப்-2 பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் முதல் சுற்றில் இருந்து 2 அணிகள் ஆகியவை அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 24-ந் தேதியும், நியூசிலாந்துடன் 31-ந் தேதி நவம்பர் 3-ந் தேதி ஆப்கானிஸ்தானுடனும் மோதுகிறது. தகுதி சுற்று அணிகளுடன் 5 மற்றும் 8-ந் தேதிகளில் மோதுகிறது.
இந்த போட்டிகளுக்கு முன்பு இந்திய அணி விளையாடிய 2 பயிற்சி ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
இந்த பயிற்சி ஆட்டங்கள் மூலம் இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களம் இறங்குவார்கள். அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
பந்துவீச்சாளர்கள் சூழலுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள். இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருக்கும் அணிகளுக்கு எதிராக அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மற்ற போட்டிகளில் ராகுல் சாகருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வருண் சக்கரவர்த்தியும் போட்டி களத்தில் இருக்கிறார்.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது ஷமி இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் புவனேஸ்வர் குமாரும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
விளையாடும் எதிரணி மற்றும் ஆடுகள தன்மையை பொறுத்து இந்திய பந்து வீச்சாளர்கள் தேர்வு இருக்கும்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.
வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.
ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.
இந்த நிலையில் ஐ.பி.எல். அணியை வாங்க பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்த கிளப் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது.
மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் கிரிக்கெட் அணியை வாங்கும்பட்சத்தில் ஐ.பி.எல். புகழ் மேலும் விரிவடையும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஐ.பி.எல். அணிகளுக்கான டெண்டர் தேதியை கிரிக்கெட் வாரியம் நீட்டித்து இருந்தது.
புதிய ஐ.பி.எல். அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5-ந் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கான காலக்கெடு 20-ந் தேதி வரை நீட்டித்தது.
இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ந் தேதி துபாயில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு புதிய அணிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானத்தை கொண்டிருக்கும் அகமதாபாத் நகரின் பெயரில் ஒரு அணி உருவாகும்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். 20 ஓவர் உலக கோப்பையுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை.
முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.
ராகுல் டிராவிட்டுக்கு இதுவரை யாரும் பெறாத வகையில் பயிற்சியாளர் பதவிக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இதேபோல பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருணுக்கு பதிலாக மாம்ரே புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார்.
இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரவேற்று இருந்தது. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பித்து உள்ளார். அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் இருந்தார். அவரது பதவிக்கு அபய் சர்மா விருப்பம் தெரிவித்து உள்ளார்.
52 வயதான அபய் இந்திய ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பொறுப்பு வகித்து உள்ளார். தேசிய பெண்கள் அணிக்கும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது.
பயிற்சியாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 3-ந்தேதி ஆகும்.






