என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • குதிரைவாலி புழுங்கல் அரிசியை வாயில் வெறுமே போட்டுமென்று சாப்பிட்டால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.
    • சிறுதானிய சோற்றில் குதிரைவாலியின் சுவைக்கு நிகராக இன்னொன்றைச் சொல்ல முடியாது.

    இதோ தென்மேற்குப் பருவமழைத் தொடங்கி விட்டது. காவிரிப் பாயும் ஆற்றுப் படுகையில் நீரோடும் வாய்க்கால்களைத் தூர்வாரித் தண்ணீரை வரவேற்கத் தயாராகி வருகிறார்கள் விவசாயிகள். தமிழகப்பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கில் ஒருபங்கு நிலத்தில் மட்டுமே (ஆற்று) நீர்ப்பாசன வசதி உள்ளது. மற்ற பெரும்பகுதி விளைநிலங்கள் மழையை நம்பி மட்டுமே உள்ளது. இந்நிலங்களில் தான் சிறுதானியங்களும், பெருந்தானியங்களும் விளைவிக்கப்படுகின்றன. அவற்றிலும் குறைவான தண்ணீரைக் கொண்டு விளையும் தானியம் குதிரைவாலி ஆகும்.

    குதிரையின் வால் போன்று நீண்டு வளைந்து தொங்கும் வடிவில் இதன் கதிர்கள் அமைந்திருப்பதால் இத்தானியத்திற்குக் குதிரைவாலி என்ற பெயரைத் தமிழ்மக்கள் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளனர். ஒரு சிற்றுயிரின் கண்ணைப் போல ஒளி மின்னிக் கொண்டிருக்கும் தானியம் குதிரைவாலி. இளம்பச்சையும், இளம் மஞ்சளும் கலந்த நிறத்தைக் கொண்டுள்ள குதிரைவாலித் தானியம் மூன்றினைச் சேர்த்தால் தான் ஒரு கடுகின் அளவிற்கு இருக்கும். அவ்வளவு சிறியது.

    ஆனால் அது தரும் சத்துக்களோ அளவிட முடியாதது. பசைத் தன்மை குறைந்த இத்தானியம் நம்முடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிதானமாக ஏற்றுகிறது. எனவே குதிரைவாலி தானியத்தில் சமைத்த உணவை உண்டு நீண்ட நேரத்திற்கு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இன்று பலருக்கும் ஒருவேளை உணவிற்கும் அடுத்தவேளை உணவிற்கும் இடையே எதையாவது கொறிக்க வேண்டும் போலத்தோன்றுகிறது. காரணம், சும்மா கொறிக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமேயல்ல. காலை உணவு உண்டு விட்டுச் செல்கிறோம். உண்டவுடன் தெம்பாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. அடுத்த ஓரிரு மணிநேரங்களில் தெம்பு குறைந்து பஞ்சரான டயரைப் போல புஷ்க்கென்று ஆகி விடுகிறோம். என்ன ஆச்சு நமக்கு.

    இன்று நாம் ஒவ்வொரு வேளை உண்ணும் உணவும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தருபவனவாக இல்லை. இட்லி, தோசை அல்லது அவற்றைப் போன்ற மாவுத்தன்மை (பசைத்தன்மை) உள்ள உணவை உண்கிறோம். அவைக் கூழாகி அதன் சாரம் ரத்தத்தில் விரைவாகக் கலந்து ஓடுகிறது. ஆனால் அந்த ஓட்டத்தில் உயிர்ச்சத்துக்கள் (விட்டமின்) ஏதும் இல்லை. போக நாம் சுவாசிக்கும் காற்றிலும் உயிர்ப்பண்பு குறைந்து நச்சுப் பண்பு மிகுந்து உள்ளது. எனவே வயிறு முழுக்க உணவு நிறைந்திருந்தாலும் சோர்வாக உணர்கிறோம்.


    உரம் போட்டு விளைவிக்கப்பட்ட நெல்லில் நம்முடைய மண்ணின் இயல்பான சத்துக்கள் ஏற்றப்பட்டிருக்காது. அதுமட்டுமில்லாமல் அரிசியின் மேலோடான உமி மட்டுமே நீக்கப்படுவதில்லை. உமிக்கும் கீழான இரண்டு அடுக்குகள் நீக்கப்பட்டு அரிசியின் நார்ச்சத்துக்கள் அதன் உயிர்ச்சத்துக்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கும். ஆகையால் சத்தற்ற அரிசி மாவில் சமைத்த இட்லி, தோசை அல்லது சாத வகைகளில் உள்ள அதன் முதன்மைச் சத்தான கார்போஹைடிரேட் எனப்படும் எரிசத்து மட்டுமே ரத்தத்தில் ஏறி அதுவும் உடனே எரிக்கப்பட்டு சிறுநீராக வெளியேறி விடும்.

    நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்துக்கள் பொருத்தமான அளவில் இருந்தால் தான் வாயில் அசைபோட்டுமென்று உண்ண, அதன் சாரம் வயிற்றில் நின்று சன்னஞ்சன்னமாக சிறுகுடலில் இறங்கி அங்குள்ள சத்துறிஞ்சிகளால் எடுத்து ரத்தத்தில் ஏற்றப்படும். நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் உள்ளதால் அச்சத்துகள் நமக்குத் தொடர்ந்து ஆற்றலை வழங்கிக் கொண்டே இருக்கும். ஆகையால் நம்மால் சோர்வின்றி இயங்கிக் கொண்டே இருக்க முடியும்.

    இங்கு பார்க்கும் சிறுதானியங்கள் அனைத்திலும் நார்ச்சத்துக்களும், உயிர்ச்சத்துக்களும் மிகுதியாக உள்ளன. அதுபோலவே குதிரைவாலியிலும் பொட்டாசியம், கால்சியம், பிட்டா கரோட்டின், இரும்பு, சுண்ணாம்புச் சத்து போன்ற பல சத்துக்களும் மிகுதியாக உள்ளன. அதேநேரத்தில் ரத்தத்தில் மெதுவாகக் கரையும் மாவுச்சத்தும் உண்டு. எனவே தொடர்ந்து அரிசிச்சோறு உண்பவர்கள் வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது குதிரைவாலித் தானிய உணவு உண்பது நல்லது.

    குதிரைவாலியை நெல்லைப் புழுங்க வைப்பது போல அவித்து குதிரைவாலிப் புழுங்கல் அரிசியைப் பயன்படுத்துவார்கள் நம் மக்கள். குதிரைவாலி புழுங்கல் அரிசியை வாயில் வெறுமே போட்டுமென்று சாப்பிட்டால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.

    குதிரைவாலிப் புழுங்கலரிசியை வெறுமே கஞ்சியாகக் காய்ச்சினாலே அவ்வளவு கமகமவென்று வாசனைக் கிளம்பும். ஒருவீட்டில் சமைத்தால் அத்தெருவெங்கும் குதிரைவாலிக் கஞ்சியின் வாசம் நின்று நிதானித்துப் பரவும். எந்த உணவுப்பொருள் சமைக்கும் பொழுது மனதிற்கு இதமான வாசத்தைக் கிளப்புகிறதோ அந்த உணவு உடலுக்கு மிகுந்த சத்துக்களை அளிக்கும் என்ற எளிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். வெறும் குதிரைவாலியைக் கஞ்சியாகக் காய்ச்சி பருப்புத் துவையல், பச்சை வெங்காயம் போன்றவற்றைத் துணைவுணவாக வைத்துக் கொண்டு சாப்பிட்டாலே போதும், அது ஐந்து நட்சத்திர அந்தஸ்த்திற்கும் மேலான உணவாக இருக்கும்.

    போப்பு

    ஏனென்றால் பருப்புத் துவையல், வெங்காயம் பலவிதமான சத்துக்கூறுகள் அடங்கியுள்ளன. இவை செரிமானத்திற்கும் இலகுவாக இருக்கும், உடலுக்குத் தேவையான குறிப்பாக உழைப்பிற்குத் தேவையான சத்துக்களைக் கொஞ்சக் கொஞ்சமாக நீண்ட நேரத்திற்கு வழங்கிக் கொண்டே இருக்கும். அதனால் தான் காட்டுவேலைகளைச் செய்யும் நம்மக்கள் கலையத்தில் குதிரைவாலிக் கஞ்சியை ஊற்றிக் கொண்டுபோய்க் குடித்துக் கொண்டே மாட்டிற்கு நிகரான உழைப்பைச் செய்து நிலத்தை உழுது போட்டார்கள்.

    காலையில் குதிரைவாலிச் சோற்று நீரையும், பகலில் மீந்த சோற்றையும் வெங்காயத்தைக் கடித்துக் கொண்டே உண்டு விட்டு பொழுதுசாய வீட்டிற்கு வருவார்கள். மாலையில் குடிக்க டீ, காபி, வடை, பஜ்ஜி போன்ற இடை உணவுகளை நினைத்தும் கூடப் பார்க்க முடியாது எளிய கிராமத்து மக்களால். சில்லறை வேலைகளை முடித்து விட்டு மீண்டும் விளக்கு வைக்கும் நேரத்தில் அதே குதிரைவாலிச் சோறு ரசம் அல்லது ஏதேனும் ஒருகாய் போட்டு காய்ச்சிய நீர்த்த தண்ணிக் குழம்பு அவ்வளவு தான் அவர்களது ஒருநாட்பொழுது உணவு.

    நிலத்தில் உழ, மாடு கன்றுகளைப் பராமரிக்க, சமைக்கத் தேவையான எரிபொருள் சேமிக்க அடுத்தநாளைக்குத் தேவையான உழுபடைக் கருவிகளைத் தயாரித்து வைக்க என காலையில் எழுந்தது தொடங்கி அடுக்கடுக்கான வேலைகளைச் செய்வதற்கு மக்களுக்குத் தேவையான ஆற்றலைத் தொடர்ந்து வழங்கி வந்தது குதிரைவாலி மற்றும் அது போன்ற சிறுதானிய உணவுகளே ஆகும். மிகச்சரியான ஆய்வு மேற்கொண்டால் எப்பொழுது பசுமைப்புரட்சி முழுவீச்சில் நடந்து நம் மக்கள் பணப்பயிர்களை விளைவிப்பதில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார்களோ அப்போதிருந்து தான் நீண்ட கால (cronic disease) நோய்கள் தலைகாட்டிப் பெருகத் தொடங்கின என்பது தெரியவரும்.

    நம்முடைய உணவு முறை மாற்றத்திற்கும், நோய்களின் பெருக்கத்திற்கும் நேரடியான தொடர்பு உள்ளதை ஆய்வு செய்துதான் உறுதிப்படுத்த வேண்டும் என்பதில்லை. சத்தற்ற, இரசாயனப் பண்பு மிகுந்த உணவைத் தொடர்ந்து எடுத்துவந்தால் அவை உள்ளுறுப்புகளைப் பாதிக்கும் என்பது எளிய உண்மையாகும். அதுதான் பசுமைப்புரட்சிக்குப் பின்பு நடந்துள்ளது. பசுமைப்புரட்சியில் வேளாண் கலாச்சாரத்தில் மிகப்பெரிய மாற்றம் நடந்தது. அதாவது அதுவரை தமக்குள்ள நிலத்தையும் நீராதாரத்தையும் கொண்டு தம் குடும்பத்திற்குத் தேவையான தானியங்களையும், பயிறு வகைகளையும், எண்ணை வித்துக்களையும் விளைவித்து அதற்கேற்ற தமது வாழ்வியல் முறையை, வாழ்வியற் கலாச்சாரத்தை வகுத்து வைத்திருந்தனர் நமது விவசாயப் பெருங்குடி மக்கள்.

    பெருங்குடி என்றால் தாய், தந்தை ஒன்றிரண்டு குழந்தைகள் அல்ல. ஏழெட்டு அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள், அத்தை - மாமா, சித்தப்பா - சித்தி, பெரியப்பா - பெரியம்மா என ஒரு குடும்பத்தில் நாற்பதைம்பது பேர் இணைந்து ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததைத் தான் நாம் பெருங்குடி என்கிறோம். அதாவது குடும்பமே சமூகம். மொத்தக் குடும்பமும் அவரவர் சக்திக்கு ஏற்ப குடும்பத்தின் வாழ்க்கைத் தேவைக்காக உழைப்பைச் செலுத்தி சண்டை சச்சரவுகளோடு என்றாலும் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்ந்து வந்தனர். அத்தகைய இணக்கமான கலாச்சாரத்திற்கு அடிப்படையாக இருந்தது நம்முடைய வேளாண் கலாச்சாரமே ஆகும். வேளாண் கலாச்சாரமும், நம்முடைய உணவுக் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகும்.

    பணப்பயிர்களை விளைவிக்கும் வேளாண் கலாச்சாரத்திற்குள் வேளாண்குடிகள் தம்மை புகுத்திக் கொண்டபின்னர் நமது உடல் ஆரோக்கியத்தில் இருந்து அடுத்தடுத்த சரிவுகள் சமூகத்தில் மிக வேகமாக நிகழத் தொடங்கி விட்டன. இன்று அது நம்முடைய உயிருக்கு ஆதாரமான உடலையே சிதைக்கத் தொடங்கி விட்டது. இன்று நாம் நமது உணவில் கவனம் செலுத்தத் தொடங்கினாலே போதும் குறைந்தபட்சம் நம்முடைய உடலையாவது தற்காத்துக் கொள்ள முடியும். சிறுதானியங்களை நமது உணவின் ஒருபகுதியாக மாற்றிக் கொள்வது அவசியம்.

    சிறுதானியங்களில் குதிரைவாலியை பச்சை என்றால் பொங்கல், உப்புமா, புலாவ் போன்ற உணவு வகைகளே சிறந்தது. குதிரைவாலிப் புழுங்கல் என்றால் கஞ்சியாகவோ, சோறு ரசம், குழம்பு என்று துணை உணவு வைத்துக் கொண்டு உண்ணலாம். மிகவும் சிறிய வடிவிலான தானியம் என்பதால் வேகவைத்து வடித்தல் சற்றுக் கடினம். எனவே ஒன்றிற்கு இரண்டு என்று உலைக்குத் தண்ணீர் வைத்து அப்படியே தம் கட்டி இறக்கி உண்பதே ஏற்றது.

    சிறுதானிய சோற்றில் குதிரைவாலியின் சுவைக்கு நிகராக இன்னொன்றைச் சொல்ல முடியாது. குதிரைவாலியில் புழுங்கலரிசிச் சோற்றில் இரவில் நீர் ஊற்றி வைத்துக் காலையில் சாப்பிடுவது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கும். முன்னரே சொன்னது போல நம்முடைய குடலுக்கு இதந்தரும் குதிரைவாலிப் பழங்கஞ்சி.

    நம்முடைய பாரம்பரிய உணவுகள் குறித்து மேலும் சிலவற்றைத் தொடர்ந்து பார்ப்போம்.

    செல்:  96293 45938

    • பெண் குழந்தைகளை புரிதலோடு நடத்துங்கள், அவர்களுக்கு மரியாதை கொடுங்கள்.
    • உங்கள் குழந்தைகளின் தோழிகள் யார் என்று உங்களுக்கு தெரிய வேண்டும்.

    பருவ வயதில் பெண் குழந்தைகள் உடல் ரீதியாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு பிரச்சினைகளையும், சவால்களையும் சந்திக்கிறார்கள். சில பெண் குழந்தைகள் தடம்மாறி செல்வதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் பருவ வயது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் என்ன என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

    பருவ வயதில் பெண் குழந்தைகளின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். எனவே அவர்களுக்கு முதலில் நல்லது எது, கெட்டது எது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். அதற்காக நாம் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பதுடன் அவர்களை சிறந்த பொழுதுபோக்கு விஷயங்களிலும் ஈடுபடுத்த வேண்டும். விளையாட்டுதுறை உள்ளிட்ட அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் ஈடுபடுத்தலாம். அதன் மூலம் அவர்களை பருவ வயதில் ஏற்படும் தவறுகளில் இருந்து திசை திருப்புவது மிகமிக முக்கியம். அவர்களுக்கு தேவையில்லாத ஓய்வு நேரம் கொடுத்தாலே பிரச்சினைதான்.

    விருப்பமான துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்:

    இப்போதைய காலகட்டத்தில் அனைத்து குடும்பங்களிலும் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுகிறார்கள். பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்ததும் பெண் குழந்தைகள் தனிமையாக இருப்பார்கள். தனிமையாக இருக்கும் போது அவர்கள் வீடியோ பார்ப்பார்கள், டி.வி. பார்ப்பார்கள், யூடியூப் பார்ப்பார்கள். அதில் வருகிற எல்லா விஷயங்களையும் பார்க்கும்போது அவர்களுடைய எண்ணங்கள் மாறுபடும்.

    எனவே இந்த வயதில் அவர்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு துறையில் ஈடுபடுத்துங்கள். அதற்காக எல்லோரும் குழந்தைகளை இசை, பாட்டு, நடனம், கராத்தே வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுடைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குழந்தைகளுக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்யுங்கள்.

    மற்றவர்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்கள், தங்கள் குழந்தைகள் தனியாக இருக்கும் என்று நினைத்தால், அந்த குழந்தையை தான் வேலை செய்யும் இடத்துக்கு அழைத்து செல்லலாம். தான் படும் கஷ்டத்தை அந்த குழந்தைகளுக்கு புரிய வைக்கலாம். அதன் மூலம் அந்த குழந்தைகளும் தாயின் கஷ்டத்தை புரிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்வார்கள்.

    மேலும் சின்னச் சின்ன வேலைகளில் அவர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கான வழிமுறைகளை கொடுங்கள். படங்கள் வரைவது, நல்ல புத்தகங்கள் படிப்பது போன்ற விஷயங்களை செய்ய உங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள். அவர்கள் தானாக வளர மாட்டார்கள். அவர்களை தானாக வளர விட்டால் தேவையில்லாத விஷயங்களை தேடி செல்வார்கள்.

    தவறான வழிமுறைகளில் அவர்கள் போவது போல் இருந்தால் அதை குறை சொல்லாதீர்கள். அவர்களுடைய உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் உனக்கு இப்படித்தான் இருக்கும். பயப்படாதே, நாங்கள் உனக்கு துணை நிற்கிறோம் என்கிற நம்பிக்கையை முதலில் அந்த குழந்தைகளுக்கு கொடுங்கள்.

    பெண் குழந்தைகளை மரியாதையோடு நடத்துங்கள்:

    பெண் குழந்தைகள் தங்களின் அறியாத வயதில் யாரையாவது காதலிக்கிறார்கள் என்றால், அந்த விஷயங்களை பெரிதாக்கி, பிரச்சினையாக்கி, திட்டி காயப்படுத்தி அவர்களை குற்றவாளி ஆக்காதீர்கள். அவர்களுக்கு அதனுடைய பின் விளைவுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுவும் சொல்கிற விதமாக சொல்ல வேண்டும்.

    அவர்களை காயப்படுத்தாமல், இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக்கூறி, இதை எப்படி கடந்து வருவது என்பதற்கான வழிமுறைகளையும் நீங்கள் சொல்ல வேண்டும். நீங்கள் குறை சொன்னால் திரும்ப அந்த குழந்தைகள் உங்களிடம் பேசவே மாட்டார்கள்.

    பெண் குழந்தைகளை புரிதலோடு நடத்துங்கள், அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். ஏனென்றால் அவர்கள் மரியாதையை விரும்பக்கூடியவர்கள். தேவையில்லாமல் அவர்களை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு அவள் நல்ல பெண். நீ தவறு செய்து விட்டாய் என்று சொல்லாதீர்கள். அவர்களுக்கு தைரியம் கொடுங்கள். அதில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையை கொடுங்கள்.

    உங்களால் முடியவில்லை என்றால் அவர்களை உங்களுக்கு நம்பிக்கை யானவர்களிடம் அழைத்து செல்லுங்கள். அல்லது ஆசிரியரிடம் அழைத்து செல்லுங்கள். அவர்களிடம் உங்கள் மகளை நல்வழிப்படுத்துமாறு சொல்லுங்கள். ஒருவேளை அவர்களிடம் நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தைகள் தவறாக எடுப்பார்கள் என்று நினைத்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள பெரிய வர்களிடம் சொல்லுங்கள். உங்கள் சமுதாயத்தில் உள்ள பெரி யவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் அந்த குழந்தையை சரியாக வழி நடத்துவார்கள். இந்த விஷயத்தை உணர்வு பூர்வமாக அணுகுவது மிக முக்கியம்.

    அதே நேரத்தில் அந்த காலகட்டத்தில் அவர்களின் மன உணர்வுகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை கொடுங்கள். இன்று குழந்தைகள் தவறான விஷயங்களில் இருந்து விடுபட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளின் எண்ணங்களை திசை திருப்ப நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

    உங்கள் குழந்தைகளின் தோழிகள் யார் என்று உங்களுக்கு தெரிய வேண்டும்:

    சிலர் கேட்கலாம் நாங்கள் பருவ வயதில் நன்றாக தானே வளர்ந்தோம். எங்களுக்கு யாரும் எதுவும் சொல்லித் தரவில்லையே என்று கேட்கலாம். இந்த காலகட்டத்தில் பருவ வயது பெண்களுக்கு நிறைய மன அழுத்தம் இருக்கிறது. உங்கள் காலகட்டத்தில் டி.வி. இருந்திருக்காது. சமூக வலைதளங்கள் இருந்திருக்காது. ஆன்ட்ராய்டு போன் இருந்திருக்காது.

    ஆனால் இன்று உங்களின் குழந்தைகளை பாதிக்கின்ற விஷயங்கள் நிறைய இருக்கிறது. இன்று எல்லாவற்றிலும் முதலில் வர வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், சமூக வலைதளத்தில் நன்றாக பதிவு போட வேண்டும் என்று நினைக்கின்ற குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள். அதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

    இவர்களுக்கு நடுவில் நீங்கள் உங்கள் குழந்தைகளை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு ஏற்ப அவர்களை ஊக்கப்படுத்தி பருவ வயதை நல்ல முறையில் கடந்து வருவதற்கான வழிமுறை களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இதற்கு குடும்பம், தாய், தகப்பன், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்பு மிக முக்கியம்.

    உங்கள் குழந்தைகளின் தோழிகள் யார் என்று உங்களுக்கு தெரிய வேண்டும். உங்கள் மகளின் தோழிகள் எப்படி இருப்பார்களோ, உங்கள் மகளும் அப்படித்தான் இருப்பார்கள். எனவே உங்கள் மகளின் தோழிகளை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் அவர்கள் மட்டத்திலேயே பழகுங்கள். உங்கள் குழந்தைகள், உங்களை மீறி வேறு யாரிடமும் போய் அறிவுரை கேட்க முடியாத நிலையை உருவாக்குங்கள். குழந்தைகளுடன் பேச பெற்றோர் நேரம் ஒதுக்குவது இப்போது குறைவாகி விட்டது. உங்களின் நேரத்தை ஒதுக்கி உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள். அவர்களுடன் நன்றாக பழகுங்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கொடுங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல முறைகளில் ஆதரவுக்கான வழிமுறைகளை கொடுங்கள். இது பெற்றோரின் கடமை.

    தவறான விஷயத்தை தவறு என்று அழுத்தமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்:

    உங்கள் குழந்தைகள் இந்த காலகட்டத்தை கடந்து வந்துவிட்டால் அவர்களின் இலக்கை அடைவது மிகவும் எளிது. நீங்கள் விட்டு விட்டால் அதில் இருந்து அந்த குழந்தைகள் எழுந்து வருவது கஷ்டம். அவர்கள் இளம் பருவத்தை நல்ல முறையில் கடப்பதற்கு முக்கிய தேவை குடும்பத்தினுடைய தாக்கம். இரண்டாவது தாய், தகப்பன். மூன்றாவது குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள். நான்காவது சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை பார்த்தால் அது தவறு என்றால், தவறு என்று உறுதியாக சொல்ல வேண்டும்.

    உதாரணத்துக்கு ஆண் குழந்தைகளுக்கு புகைபிடித்தல் தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 10 பேர் வெளியே செல்லும் இடத்தில் 2 பேர் மது குடிப்பார்கள். மீதமுள்ளவர்களை குடிக்க வைப்பார்கள். அது வேண்டாம் என்று சொல்வதில் உறுதியாக இருக்க வேண்டும். அதுபோல் தான் பெண் குழந்தைகளிடமும் தவறான விஷயங்களை தவறு என்று அழுத்தமாக சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    இதை கற்றுக்கொண்டு வளரும் குழந்தைகள், தவறான விஷயங்களை எளிதாக கடந்து செல்ல முடியும். எந்த சூழ்நிலைகள் வந்தாலும் அதை எதிர் நோக்குவதற்கான மன தைரியம் அவர்களுக்கு இருக்கும். அந்த தைரியத்தை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வரவழைக்க வேண்டும். அந்த தைரியம் மற்றும் உங்களின் முழுமையான ஆதரவை அவர்களுக்கு கொடுத்தால் உங்கள் குழந்தைகள் எந்தவித பிரச்சினைகள் மற்றும் கெட்ட பழக்க வழக்கங்களில் சிக்காமல் பருவ வயதை எளிதாக கடந்து வருவார்கள்.

    இன்று முன்னேறிய நிலையில் இருக்கும் பெண்கள் பலர், தங்களின் பருவ வயதில் பாலியல் பிரச்சினைகளை எப்படி கடந்து வந்துள்ளார்கள் என்பதை எடுத்துக்கூறியும் புரிய வைக்கலாம். அவர்கள் இன்று உயர்ந்த இடத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டலாம்.

    இதை நீங்கள் சரியான முறையில் செய்து, உங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்தால், உங்கள் குழந்தைகளின் பருவ வயது பிரச்சி னைகளுக்கு முழுமையான தீர்வுகள் கிடைக்கும். அவர்கள் நல்ல முறையில் பருவ வயதை கடந்து தங்களின் இலக்கை அடைவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் ஒரு நல்ல நிலையில் இருப்பார்கள்.

    • பருவ நிலை மாறுபட்டு மழை பொழிவதற்கு பல்வேறு விதமான காரணிகள் உள்ளன.
    • தோஷம் ஒரு விதமான நெருடலை உலகிற்கு தந்து கொண்டு தான் இருக்கிறது.

    உலக இயக்கம் பருவநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. தற்போது சுட்டெரிக்கும் கோடை காலம் ஆனால் மழை பொழிந்து வெப்பநிலை தணிந்து உள்ளது. அதாவது அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு மழைப் பொழிவால் குளிர்ந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இவ்வாறு பருவநிலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? கோடைகாலத்தில் இயல்புக்கு மாறாக தட்பவெப்ப நிலையில் மாறுபாடு ஏற்பட காரணம் என்ன?

    பொதுவாக இந்தியாவில் 4 விதமான பருவங்கள் உள்ளது.கோடை காலமான மார்ச் முதல் ஜூன் வரை அதிக வெப்பநிலை நிலவும்.

    மழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலம். இலையுதிர் காலமான அக்டோபர் முதல் நவம்பர் வரை வெப்ப நிலை மெதுவாகக் குறைந்து குளிர் காலம் துவங்கும்.குளிர்காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அதிகமான பனி பொழியும்.

    ஆனால் தற்போது பருவ நிலை மாறுபட்டு மழை பொழிவதற்கு பல்வேறு விதமான காரணிகள் உள்ளன. எனினும் மிகக் குறிப்பாக கூறினால் மனிதர்கள் செயல்பாடுகளால் இயற்கையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இயற்கையான காரணமான புவியின் சுற்றுப்பாதை மற்றும் அதன் அச்சின் சாய்வு ஆகியவற்றின் மாற்றங்களால் பருவ நிலை மாறலாம்.

    அறிவியல் ரீதியான காரணத்தை உற்று நோக்கினால் நவகிரகங்களின் இயக்கமே உலகத்தையும் உலக மக்களையும் வழிநடத்துகிறது. தற்போது கோட்ச்சாரத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களின் பிடியில் அகப்பட்டு கால சர்ப்ப தோஷமாக வேலை செய்கிறது. இதில் 15 நாட்கள் நாள் கிரகமான சந்திரன் முழுமையாக ராகு கேதுவின் பிடியிலிருப்பார். அடுத்த 15 நாட்கள் ராகு கேதுக்களை விட்டு வெளியில் பயணிக்கும் காலத்தில் விடுபட்ட கால சர்ப்ப தோஷமான கிரக நிலவரம் உண்டாகும்.

    பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளி 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றுவதால், அதன் பரப்பில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் எல்லா ராசிகளையும் கடந்து செல்கின்றது. அதாவது இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது. இதை ஜோதிட பாணியில் லக்னம் என்று கூறுவார்கள். ஒருலக்னம் என்பது இரண்டு மணி நேரம். சூரியனின் நகர்வுக்கு ஏற்ப சூரிய ஒளியின் பயணமான லக்ன புள்ளி ராகு கேது அச்சிற்கு வெளியே பயணிக்கும்.

    அதாவது கன்னி ராசி முதல் மகர ராசி வரை ராசி மண்டலம் பூமியை சுற்றி வரும் போது லக்ன புள்ளி ராகு கேதுக்கு அச்சிற்கு வெளியில் சஞ்சரிக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு லக்ன புள்ளி வெளியில் இருக்கும். அது விடுபட்ட கால சர்ப்பதோஷமாக பலன் தரும். கோட்சாரமும் கால சர்ப்ப தோஷமும் கால சர்ப்ப தோஷத்திற்கும் உலக இயக்கத்தையே கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இந்த தோஷம் ஒரு விதமான நெருடலை உலகிற்கு தந்து கொண்டு தான் இருக்கிறது.

    2020-ம் ஆண்டில் அனைத்து கிரகங்களும் ராகு/கேதுவின் பிடியில் நின்ற காலங்களில் கொரோனா தாக்கத்தால் உலக இயக்கமே தடுமாறியதை நாம் அனைவரும் அறிந்ததே. இன்று வரை இயல்பு நிலை திரும்பிய பாடு இல்லை. உலக நாடுகளிடையே ஒற்றுமையின்மை, ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி, பொருளாதார மந்தம், இயற்கை சீற்றம், நோய் தாக்கம் என உலகமே அசாதாரண சூழ்நிலையில் தான் இயங்கி வருகிறது. மேலும் 6.6.2025 வரை கடக ராசியில் நீச்ச நிலையில் இருக்கும் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைந்து தனது எட்டாம் பார்வையால் சனி பகவானை பார்ப்பார்.

    ஐ.ஆனந்தி

    28.7.2025 அன்று சிம்ம ராசியில் இருந்து செவ்வாய் அகன்று கன்னி ராசிக்குள் நுழையும் பொழுது உலகம் கால சர்ப்ப தோஷப் பிடியிலிருந்து முழுமையாக விடுபடும். ஆனால் செவ்வாய் கன்னியை கடக்கும் வரை தனது ஏழாம் பார்வையால் மீன ராசியில் உள்ள சனிபகவானை பார்ப்பார். சனி, செவ்வாய் சம்பந்தம் கால சர்ப்ப தோஷ பாதிப்பு போன்ற காரணங்களால் 13.9.2025 வரை இயற்கையினால் கோச்சார கிரகங்களினால் மனிதர்களுக்கும் பூமிக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாம்.ஜோதிட சாஸ்த்திரத்தில் பல்வேறு விதமான தோஷங்கள் கூறப்பட்டு இருந்தாலும் சர்ப்ப தோஷம் அனைத்து தரப்பினருக்கும் ஒருவிதமான மன நெருடலை தந்து கொண்டு தான் இருக்கிறது.

    அதிலும் கால சர்ப்ப தோஷம் என்ற பெயரை கேட்டாலே பீதி கிளம்புகிறது. நவகிரகங்களில் வலிமையானவர்கள் ராகு/கேதுக்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு. ராகு/கேதுக்கள் ஒரு முறை ராசிக் கட்டத்தை வலம் வர 18 ஆண்டுகளாகும். ஜனனம் முதல் இரண்டு முறை ராசிக் கட்டத்தை வலம் வந்த பிறகே தோஷம் நிவர்த்தியாகும். (18 x 2=36) 36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை தருகிறது.

    கல்வி, திருமண தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிர்ஷ்டமின்மை, குடும்பத்தில் குழப்பம், உறவினர்களுடன் ஒற்றுமையின்மை என சில இடையூறுகளையும், தடை தாமதங்களையும் கால சர்ப்ப தோஷம் ஏற்படுத்தி மன நிமைதியை இழக்கச் செய்யும். 18 முதல் 36 ஆண்டு வரையான காலத்தில்தான் மனிதனுக்கு உயர்கல்வி, உத்தியோகம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும். ஜாதகருக்கு சுப பலன்களை உரிய காலத்தில் தராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரப்படுவதால் கால சர்ப்ப தோஷம் எனப்படுகிறது.

    பன்னிரண்டு ராசியினருக்கும் கோட்ச்சார கால சர்ப்ப தோஷ நிவர்த்திப் பரிகார வழிபாட்டு முறைகளை பார்க்கலாம்.

    மேஷம்:

    ராசிக்கு பதினொன்றில் ராகுவும் ஐந்தில் கேதுவும் உள்ளார்கள். பணபர ஸ்தானமான 5, 11-ல் கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் போது அதிர்ஷ்டம், கவுரவப் பதவிகள் தேடி வரும். மேன்மையான பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மறைமுக வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும் வராக்கடன்கள் வசூல் ஆகும். இழந்த இன்பங்களை மீட்டெடுக்கக்கூடிய காலமாகும். வழக்குகள் சாதகமாகும்.

    பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். காதல் வெற்றி தரும். மறு திருமணம் முயற்சி வெற்றி தரும். குழந்தைகளால் சில பிரச்சினைகள் தலைதூக்கும். அரச மரத்தடியில் இருக்கும் எறும்பு புற்றுக்கு நாட்டுச் சர்க்கரை கலந்த நொய்யரிசியிட வெகு விரைவில் மாற்றம் தெரியும்.

    ரிஷபம்:

    ராசிக்கு பத்தில் ராகு நான்கில் கேது இருக்கிறார்கள். பத்தில் ஒரு பாவியாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. இப்போது பத்தாம் இடத்தில் ராகு இருப்பதால் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரலாம். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். அதற்குத் தேவையான நிதியும் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். ஆனால் நான்காம் இடத்தில் கேது இருப்பதால் சிறு சிறு அசவுகரியங்கள் உருவாகும். குறிப்பாக தாய்க்கு ஆரோக்கிய குறைபாடு, வீடு, வாகன பழுது போன்ற இடர்கள் வரலாம். இன்னல்களை தவிர்க்க நதிக்கரை அல்லது, குளக்கரையில் உள்ள சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் உள்ள லிங்கத்தை வழிபடவும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்கு ஒன்பதில் ராகுவும் மூன்றில் கேதுவும் நிற்கிறார்கள். தந்தையைப் பற்றி கூறும் ஒன்பதாம் இடமான பித்ரு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் கம்பீரமும் கொள்கை பிடிப்பு பிறருக்கு உதவும் குணமும் அதிகமாகும். எதற்கும் கையேந்தி நிற்க மாட்டீர்கள். தந்தை வழி உறவு முறைகளை அனுசரித்து செல்ல வேண்டும். கடவுள் நம்பிக்கை, ஆன்மீக நாட்டம் அதிகமாகும். பூர்வீகத்தில் சென்று வாழும் விருப்பம் கூடும். இந்த அமைப்பு வெளியூர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரலாம். தந்தைக்கு ஆரோக்கிய குறைபாடு, இடப்பெயர்ச்சி, வேலையாட்களால் பயனற்ற நிலை, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை போன்ற மன சஞ்சலத்தை தவிர்க்க பிரதோஷ வழிபாடு அவசியம்.

    கடகம்:

    ராசிக்கு எட்டில் ராகு இரண்டில் கேது இருக்கிறார்கள். 2, 8-ம் மிடங்கள் பண பர ஸ்தானம். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். விபரீத ராஜயோகம் ஏற்படலாம். திடீர் அதிர்ஷ்ட பணம் பொருள் உயில் சொத்து, காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கலாம். வரா கடன்கள் வசூலாகும். பணவரவில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். இது கோட்ச்சார ரீதியான சர்ப தோஷ அமைப்பு என்பதால் திருமணத்தடை உருவாகும். பேச்சால் சம்பந்தம் இல்லாத வம்பு, வழக்கு வரலாம். முறையான சர்ப்ப தோஷ சாந்தி பரிகார வழிபாடு திருமண தடையை அகற்றும். அரசமரத்தின் அடியில் இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு இருக்கும் சர்ப்ப சிலையை வழிபட வேண்டும்.

    சிம்மம்

    ராசியில் கேது ஏழில் ராகு இருக்கிறார்கள். ஜென்ம ராசியில் கேது வரும் போது மனக்குழப்பம் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். ஏழாம் இடத்தில் ராகு இருப்பது காதல் திருமண நாட்டத்தை ஏற்படுத்தும். லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். விலகியவர்கள் சேர்ந்து வாழ விரும்புவார்கள். சிலர் மிகுதியான ஆன்மீக நாட்டத்தால் கோவில் குளம் என்று சுற்றுவார்கள். கணவன் மனைவி கருத்து வேறுபாடு, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வீண் விரோதம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எதிர் பாலினத்தவரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணம் முயற்சியில் கவனம் தேவை. சிவன் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடவும்.

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிகாரர்களுக்கு கோட்ச்சார கால சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார வழிபாட்டு முைறகளை இன்று பார்தோம். அடுத்த வாரம் கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான பரிகார முறைகளை பார்க்கலாம்.

    -தொடரும்

    செல்: 98652 20406

    • காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவும் இருந்தது.
    • டச்சுக்காரர்கள் குழப்பமும், நடுக்கமும் அடைந்தனர்.

    17-ம் நூற்றாண்டின் மத்தியில் நிகழ்ந்த ஒரு வியப்பூட்டும் நிகழ்ச்சி செந்திலாண்டவனின் பேராற்றல் பெருமையை விளக்குவதாக உள்ளது. அந்தச் சமயத்தில் மதுரையில் இருந்து நாயக்க மன்னர்கள் ஆட்சி நடத்தி வந்தனர். டச்சுக்காரர்கள் வணிகர்களாக நமது நாட்டுக்கு வந்திருந்த காலம் அது.

    திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்] அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். திருமலை நாயக்கருக்கு கப்பல் படை இல்லாததால் தலைநகரமான மதுரையில் இருந்து தென்கோடியை அவரது ராணுவக் கட்டுப் பாட்டுக்குள் வைக்க இயலாமல் போனது.

    இதன் காரணமாக தமிழக தென்கோடி கடலோரப் பகுதிகளில் அந்நியரின் வருகையும் மதமும் வேறூன்ற ஆரம்பித்தது. கப்பல் வலிமையுடன் இருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களும் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக் கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.

    கொற்கை பகுதியான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும், சங்குகளும், கடற்கரை ஓரத்தில் இருந்த கோவில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் வெளிநாட்டுக் கொள்ளையர்களின் இலக்குகளாக இருந்தன.

    கி.பி.1635-ல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலை நாயக்கருடன் நட்புடன் இருந்ததால் தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலை நாயக்க மன்னர் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் திருமலைக்கும் ராமநாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத உதவியாலும், படை உதவியாலும் திருமலை நாயக்கர் வெற்றி பெற்றார். இந்த உதவியின் எதிரொலியே திருமலை நாயக்க மன்னன் கொள்ளையைக் கண்டு கொள்ளாமல் இருக்கச் செய்தது.

    எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்களும் பிற மக்களும் பல இன்னல்களை அனுபவித்தனர். காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவும் இருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது. டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர். கி.பி.1648-ல் போர்ச்சுக்கீசியர்களுக்கு ஆதரவான திருமலை நாயக்கர் டச்சுக்காரர்களை காயல்பட்டினத்தில் இருந்து வெளியேறச் செய்தார்.

    இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்ததாக நினைத்த டச்சுக்காரர்கள் திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றினார்கள். அத்துடன் அங்கிருந்த அப்பாவி இந்துக்களின் வீடுகளை கொள்ளையடித்தனர். வீடுகளுக்குத் தீயிட்டனர். தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர். கடற்கரைக் கோவிலின் பாறைக் குகை வரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து எறிந்தனர். கற்சிற்பங்களை உடைத்தனர்.

    அங்கிருந்த எழில் மிகு ஐம்ெபான் சிலைகளையும் சண்முகரின் சிற்பத்தையும் நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோவில், வெயிலுகந்தம்மன் கோவில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர்.

    தங்களுடைய தெய்வத்தை களவாடிச் செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர். வேதங்கள் ஓதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர். திரிசுதந்திரர்கள் உட்பட உள்ளூர் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

    இதனால் திருச்செந்தூர் பகுதி மக்களிடம் பீதி ஏற்பட்டது. அதைப் பயன்படுத்தி டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம் களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கி சென்றனர்.


    நாயக்க மன்னர்களிடமோ கப்பற்படை கிடையாது. ஆகவே டச்சுக்காரர்களைத் துரத்திச் சென்று சிலையை மீட்க அவர்களால் முடியவில்லை. "கார்த்திகேயா, கந்தா, கடம்பா, சூரனை வென்றழித்த வெற்றி வேலா, எங்கள் உள்ளத் தவிப்பினை உணர்ந்து அநியாயக்காரர்களைத் தண்டித்தருளக் கூடாதா?" எனப் பக்த கோடிகள் கண்ணீர் மல்கக் கசிந்துருகி வேண்டிக் கொண்டார்கள்.

    டச்சுக்காரர்களின் கப்பல், கடலில் திருச்செந்தூர் எல்லையைக் கடந்து செல்லுவதற்கு முன்னால் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடல் அலைகள் வானுயர எழுந்து சுழன்று கப்பலைத் தாக்கி நிலை குலையச் செய்தன. கப்பல் நிச்சயமாக மூழ்கி விடும் என்ற நிலை ஏற்பட்டது. டச்சுக்காரர்கள் குழப்பமும், நடுக்கமும் அடைந்தனர்.

    திருச்செந்தூர் வேலவனின் திருஉருவச் சிலையைத் திருடிச் செல்வதற்காகச் செந்தி லாண்டவன் தரும் தண்டனைதான் அந்தக் கடல் கொந்தளிப்பு என்பதை உணர்ந்து கொண்ட டச்சுக்காரர்கள் செந்தில் வேலனின் தெய்வச் சிலையைக் கடல் நீரில் வீசியெறிந்து விட்டனர். அடுத்த கணமே கடல் கொந்தளிப்பு அடங்கிக் கடல் நீர் அமைதிப்பட்டு விட்டது. (இந்தத் தகவல் கதையோ, கற்பனையோ அல்ல.

    பிரெஞ்சு நாட்டு நூலாசிரியரான எம்: ரென்னல் என்பார் எழுதி 1785-ம் ஆண்டில் ஜெர்மனியின் தலைநகரமாக இருந்த பெர்லினில் இருந்து வெளியிடப் பெற்ற 'வரலாற்று இந்தியா' என்ற நூலில் இந்தத் தகவல் இருப்பதாக இன்றைய வரலாற்று ஆய்வாளர் பலர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    டச்சு மாலுமி ஒருவரிடமிருந்து அந்தத் தகவலைப் பெற்றதாக அந்த நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறாராம்.)

    கடல் கொந்தளிப்பு அடங்கியதும் டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகனின் கோவிலைக் கையெடுத்துக் கும்பிட்டு எஞ்சிய கோடிக் கணக்கான நகைகளுடன் இலங்கை சென்றனர்.

    கடலாழத்தில் கிடக்கும் முருகப் பெருமானின் திருவுருவச் சிலையை எவ்வாறு வெளிக் கொணருவது என்று விளங்காமல் நாயக்க மன்னர் திகைத்தார்.

    ஐந்தாண்டுக் காலம் வரை ஆலயத்தில் ஐயனின் திரு உருவச் சிலை இல்லாமலே இருந்தது.

    மன்னரின் செயலாளராக இருந்த வடமலையப்ப பிள்ளை என்பவர் ஆறுமுகக் கடவுளின் திருஉருவமில்லாது வெறுமையாகக் கிடந்த ஆலயத்தின் நிலையினைக் காணப் பொறுக்காது தமது சொந்த முயற்சியினால் திருமுருகன் உருவச் சிலை ஒன்றை உருவாக்க முயன்றார். அப்போது ஒருநாள் இரவு கந்த வேலர் வடமலையப்ப பிள்ளையின் கனவிலே தோன்றினார்.

    அவர் திருச்செந்தூர் அருகே கடலில் தாமிருக்கும் இடத்தின் மீது ஒரு எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கும் என்றும் வானத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்றும் கூறி மறைந்தார்.

    இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த வடமலைப் பிள்ளை மறுநாள் காலை தம்முடைய பணியாளர்கள், நண்பர்கள், கடலில் முத்துக் குளிக்கும் மீனவர்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு கடலுக்குள் படகில் சென்றார். சிறிது தூரம் சென்றவுடன் முருகன் கனவில் கூறியது போல வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மெய் சிலிர்த்த அவர்கள் முருகா முருகா என்று மெய்மறந்து முழக்கமிட்டு தலை மீது கைகூப்பி வணங்கினர். அங்கே எலுமிச்சம் பழம் ஒன்று மிதந்தது.

    அந்த இடத்தில் கடலில் குதித்தனர், என்னே அற்புதம் சண்முகர்சிலையும், நடராஜர் சிலையும் கிடைத்தது. நடராஜர் சிலையின் பீடத்தில் திருநள்ளாறு என்று எழுதப்பட்டிருந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடைந்த மூலவர் சிலை புதிதாகச் செய்யப்பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. குடமுழுக்கு நடைபெற்றது. டச்சுக்காரர்களின் கொள்ளையால் மனம் வருந்திய திருமலை நாயக்கர் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட எஞ்சியப் பொருட்களை மீட்டால்தான் மக்கள் மதிப்பார்கள் எனக் கருதி டச்சுக்காரர்கள் கோரிய பொன்னை தமது காயல்பட்டினம் கணக்குப் பிள்ளை மூலமாக இலங்கைக்குக் கொடுத்தனுப்பி மீட்டார்.

    ஆறுமுகரின் சிலை மீட்கப்பட்ட நாள் கொல்லம் 892-ம் ஆண்டு தை மாதம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை. ஆங்கில ஆண்டு கணக்குப்படி கி.பி.

    1653-ம் ஆண்டு என்று திருச்செந்தூர் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டச்சு நாட்டு கொள்ளையர்களால் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட, வள்ளி-தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகர் சிலையில், முகத்தில் சில தழும்புகளை இன்றும் நாம் பார்க்கலாம். கொள்ளையர்கள் சிலையை கடலில் வீசிய போது கடல் மீன்கள் கடித்ததில் இந்த தழும்பு ஏற்பட்டது என்று ஒரு கருத்து கூறப்படுகிறது.

    மூலவர் சிலையை டச்சுக்காரர்கள் கடத்தி சென்றதால் திருச்செந்தூர் கோவிலில் கி.பி.1649-ம் ஆண்டில் இருந்து கி.பி.1651-ம் ஆண்டு வரை நாள் வழிபாடும் திருவிழாக்களும் இல்லாமல் போயின. இக்காலத்தைப் பற்றி தலபுராணம் பாடிய வென்றி மாலைக் கவிராயர் பாடியுள்ள பாடலின் அடிகள் வருமாறு:-

    "சந்திரனில்லாத வானம் போலவும், சைவ நெறியில்லா வையகம் போலவும், ஐந்தறிவுடைய இந்திரனில்லாத அண்டர்பதி போலவு..."

    மேற்கண்ட பாடலில் கோவிலில் திருவுருவங்கள் இல்லாமல் இருந்த நிலையைக் குறிப்பிடுகிறார்.

    உலாந்தர் எனப்படும் டச்சுக்காரர்கள் இக்கோவிலின் சிலைகளை கி.பி.1649-ம் ஆண்டு கவர்ந்து சென்றனர். கி.பி.1651-ம் ஆண்டு சிலைகளை மீண்டும் பெற்றதால் வழிபாடு மீண்டும் தொடங்கியது.

    அந்நிகழ்ச்சி பற்றிப் பல நூல்கள் குறிப்பிட்டாலும் 1. திருநெல்வேலிக் கெசட்டு, 2. திருச்செந்தூர் (தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்),

    3. திருச்செந்தூர் வள்ளி மணவாளன் கோவில் வரலாறு (ச.முத்துக்குமாரசாமி), 4. செந்தி லாண்டவன் மகிமை (டி.எச்.விவேகானந்தம்),

    5. திருச்செந்தூர் கோவிலில் செந்திக்காத்தான் செட்டி குடும்ப வரலாறு (குலசேகரப்பட்டின ஏடு) 6. க.அ.நீலகண்ட சாத்திரியின் கட்டுரை (கலைமகள் தொகுதி 16) ஆகிய 6 பதிவுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    அ.க.நீலகண்ட சாஸ்திரி திருமலை நாயக்கரும் ஐரோப்பியரும்" என்ற தலைப்பில் கலை மகளில் எழுதிய கட்டுரையில் கூறுவதாவது:-

    கி.பி. 1645-ல் உலாந்தர் காயல்பட்டினத்தில் தங்கினர். பரங்கியர் (போர்ச்சு கீசியர்) உலாந்தர் தோணிகளைப் பிடித்துச் சரக்குகளை அபகரித்தனர். நாயக்கரும் உலாந்தர்களைக் காயல்பட்டினத்தினின்றும் ஒழித்து விடும்படி கட்டளையிட்டார். கி.பி. 1648-ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு ஓடினர்.

    கி.பி. 1649 பிப்ரவரியில் 436 ஐரோப்பியர் 180 சிங்களவரோடு 6-ந்தேதி மணப்பாரின் (மணப்பாடு ஊரிலிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ளது) எதிரில் வந்தனர். 8-ந்தேதி புறப்பட்டு வீராம்பட்டினத்திற்கும் (இக்கோவிலில் இருந்து கடற்கரையில் ஒரு கல் தொலைவில் உள்ளது) திருச்செந்தூருக்கும் இடையே இறங்கினர். 20-ந்தேதி திருச்செந்தூர்க் கோவிலில் தங்கினர். 22-ந்தேதி நாயக்கர் சார்பாகக் காயல்பட்டினத்து மனிதர் வந்து கோயிலை விட்டுக் காலி செய்ய வேண்டினர். ஊரில் உள்ள ஜனங்கள் 4 யானை, 50, 60 குதிரை 500 ஆட்களோடு 25-ந்தேதி சண்டையிட்டனர்.

    நாயக்கர் பட்டாளத்தில் சுமார் 300 பேர் மாய்ந்தனர். உலாந்தர் படைகளில் 3 பேர் (சிங்களவர்) கொல்லப்பட்டனர். 28-ந்தேதி இலங்கை திரும்ப எண்ணினர். மார்ச் 1-ல் நாயக்கர் நஷ்ட ஈடு செய்தவுடன் கோவிலை ஒரு பங்கமுமின்றித் திரும்பக் கொடுப்பதாகவும் எழுதினார். டச்சுக் கவர்னர். புறப்படும் போது கற்சிலையான மூலவிக்கிரக உள்படக் கோவிலில் உள்ள விக்கிர கங்கள் எல்லாவற்றையும் தமக்குச் சேர வேண்டிய பணத்திற்குப் பணயமாகத் தம்முடன் கப்பலில் எடுத்துச் சென்றார். சிலைகளை மீட்ட தகவல்கள் திருச்செந்தூர் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது.

    கடலினுள் டச்சுக்காரர்களைச் சிலையைப் போட வைத்ததும், சிலை இருந்த இடத்தைக் காட்டியதும் திருச்செந்திலாண்டவனின் அற்புதங்களுள் சிறப்பாகும்.

    இதே போன்று இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • கடின உழைப்பு வீண் போகாது என்பார்கள்.
    • குழந்தை பருவத்திலேயே சினிமாவுக்குள் வந்ததால் உனது சின்ன சின்ன ஆசைகளை கூட தியாகம் செய்து இருப்பாய்.

    கீழே விழுந்து விட்டால் எழுந்துதானே ஆக வேண்டும். அதே நிலமையில் தான் அப்போது நான் இருந்தேன். எதிர்பாராத பேரிழப்பு.

    மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்து என்னை மீண்டும் பழைய மீனாவாக பார்க்க ஆசைப்பட்டவர்கள் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த நட்பு வட்டாரங்கள்தான்.

    அவர்கள்தான் அடிக்கடி சொன்னார்கள் "நீங்கள் மீண்டும் கலைத்துறைக்குள் வாருங்கள். அப்போதுதான் கவலைகளில் இருந்து விலகி மனம் இயல்பு நிலைக்கு வரும்" என்று.

    அப்படித்தான் மெல்ல மெல்ல மீண்டும் நடிக்க புறப்பட்டேன். 'சூப்பர் அம்மையும் மகளும்' என்ற மலையாள தொலைக் காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினேன். அதே போல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த சூப்பர் ஜோடி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தேன்.

    அந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் போட்டியாளர்களின் ஆடல் மற்றும் நடிப்பு திறன்களை பார்த்த ேபாது மனம் லேசாகியது. நிகழ்ச்சிகளை ரசிக்க தொடங்கியது.

    அந்த நேரத்தில்தான் 'மீனா-40' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதாக கலா மாஸ்டர் என்னிடம் கூறினார். கலைத்துறையில் 40 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் ஹீரோயின் என்பதை பாராட்டும் வகையில் அந்த நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்வதாக கூறினார்கள். அதை ஒத்துக் கொள்ள ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது.

    அதற்கு முக்கிய காரணம் என்னை விட சீனியர்கள் பலர் இருக்கும் போது எனக்கு பாராட்டு விழா என்றால் சரியாக இருக்குமா? என்று யோசித்தேன்.


    எனது தயக்கத்தையும் கலா மாஸ்டரிடம் சொன்னேன். அதற்கு அவர் தந்த விளக்கம், நீ யோசிப்பது சரிதான். ஆனால் அவர்கள் எல்லாம் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகி இருப்பார்கள். அதிலும் சிலர் திருமணத்துக்கு பிறகு வாய்ப்புகளை இழந்து இருப்பார்கள் அல்லது அம்மா, அத்தை என்று வெவ்வேறு ரோல்களுக்கு மாறியிருப்பார்கள். ஆனால் நீ அப்படி இல்லை. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் வந்தாய். அதன் பிறகு கதாநாயகி ஆகி இன்று வரை தொடர்ந்து கதாநாயகியாகவே இருந்து கொண்டிருக்கிறாய். இது சாதாரண விசயமல்ல.

    அது மட்டுமல்ல நடிகை என்றால் பேரு... புகழ்... பணம்.. என்ற பார்வை மட்டுமே இருக்கும். ஆனால் நீ குழந்தை பருவத்திலேயே சினிமாவுக்குள் வந்ததால் உனது சின்ன சின்ன ஆசைகளை கூட தியாகம் செய்து இருப்பாய். சாதாரண பெண்களை போல் ஒரு கடைத்தெருவுக்கு அல்லது ஏதாவது விரும்பிய பொருட்களை வாங்க கடைகளுக்கு இதுவரை உன்னால் போக முடிந்ததா?

    தெருவில் வர முடியாது. ஆசையாய் சைக்கிள் கூட ஓட்ட முடியாது. இப்படி எவ்வளவோ விசயங்களை சினிமாவுக்காக விட்டுக் கொடுத்து இருப்பாய்.

    இதையெல்லாம் வெளியே சொன்னால்தான் 'ஓ... சினிமாவில் இவ்வளவு இருக்கா....? என்று மற்றவர்களும் யோசிப்பார்கள். எத்தனையோ பேர் 'இன்ஸ்பயர்' ஆவார்கள். இதை வெறும் பாராட்டு விழாவாக மட்டும் நினைக்காதே. திரைப்படங்களை போல் இதுவும் சமூகத்துக்கு நீ சொல்லப்போகும் பாடம் என்பதை புரிந்து கொள் என்றார். இது அவர் கொடுத்த விளக்கமாக இருந்தாலும் அதையும் தாண்டி கவலைகளின் பிடியில் இருந்து என்னை மீட்க வேண்டும் என்பதற்காகவே அந்த நிகழ்ச்சியை நடத்துவதில் கூடுதல் அக்கறை எடுத்தார்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு தான் சம்மதித்தேன்.

    மீனா-40 நிகழ்ச்சி வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது. கடின உழைப்பு வீண் போகாது என்பார்கள். அதே போல் எனது கடின உழைப்புக்கு திரைத்துறை கொடுத்த அங்கீகாரமாகவே அந்த நிகழ்ச்சியை இன்றும் நினைக்கிறேன்.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மண்டபத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்து இருந்தார்கள். நிகழ்ச்சிக்கு ரஜினி சார் உள்பட என்னோடு பணியாற்றிய கலைஞர்கள் வந்திருந்தார்கள். சுகாசினி மேடம், ராதிகா மேடம், குஷ்பு மேடம், ரோஜா என்று என்னை விட சீனியர்களும் வந்திருந்தார்கள். 3 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ச்சி களை கட்டியது.

    அந்த நிகழ்ச்சியை பார்த்து நாம் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகி விட்டதா...? என்று நினைக்கும் போதே பிரமிப்பாக இருந்தது.

    ராஜ்கிரண் சார், நாசர் சார், சேரன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு சம்பவங்களை நினைவு படுத்தி பாராட்டிய போதுதான் நாம் இப்படியெல்லாம் செய்திருக்கிறேமோ என்று ஆச்சரியப் பட்டேன்.

    அதை விட ஆச்சரியம் எல்லோரும் எந்த அளவு உன்னிப்பாக என்னை பார்த்து இருக்கிறார்கள் என்பதை நினைத்த போது மிகவும் பெருமையாக இருந்தது. ஒவ்வொரு வரும் மனம் திறந்து பாராட்டிய போது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

    ரஜினி சாரோடு குழந்தை நட்சத்திரமாக நடித்தவள் நான். பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்தேன். அந்த நேரம் அவர் எப்படி நினைத்து இருப்பார்? அதையும் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது தெரிந்து கொண்டேன்.

    எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் படங்களில் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்தவர். என்னை தூக்கி கொஞ்சியவர். எஜமான் படத்தில் நான்தான் ஹீரோயின் என்றதும் அவருக்கு மீனாவா? அந்த அமுல் பேபியா? ேஜாடி சரிப்பட்டு வருமா? என்று தயங்கி இருக்கிறார். அதன் பிறகு நான் ஏற்கனவே ஹீரோயினாக நடித்திருந்த ஒரு தெலுங்கு பட காட்சிகளை போட்டு காட்டி இருக்கிறார்கள். அதை பார்த்து ஆச்சரியப்பட்டு அதன் பிறகுதான் சம்மதித்து இருக்கிறார்.

    இப்படி தனது நினைவுகளை பகிர்ந்தது மட்டுமல்ல தனக்கு பிடித்த ஹீரோயின்களில் நானும் ஒருத்தி என்று அவர் கூறியது பெருமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் இப்படி ஹீரோயினுக்கு விழா எடுத்தது கிடையாது. அந்த பெருமையும் எனக்கே வாய்த்தது.

    எல்லா பெருமையும் வாய்த்தாலும் நடப்பதை யார்தான் அறிவார்? அதைத்தான் ரஜினி சார் தனது பேச்சில் குறிப்பிட்டார். மீனா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமான நிகழ்வு நடந்து இருக்க கூடாது.

    ஆனால் விதியாரைத் தான் விடும். விதியில் என்ன எழுதப்பட்டதோ அதுதான் நடக்கும் என்று கூறி விட்டு மீனா மீண்டும் பல படங்கள் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

    மேடையில் வாழ்த்திய அத்தனை பேரின் வாழ்த்தும், ஆசீர்வாதமும் தான் என்னை மீண்டும் மீண்டு எழ வைத்துள்ளது என்பேன் பெருமையோடு.....

    அடுத்த வாரம் இன்னொரு நிகழ்வை பற்றி கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள்....

    (தொடரும்)

    • காலையில் பல் சுத்தம் செய்த பிறகு 2 கிளாஸ் நீர் அருந்துங்கள்.
    • நமக்குள் உருவாகும் கட்டுப்பாடு வலிவானது, அமைதியானது.

    சில விஷயங்களை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா?

    * ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் சீக்கிரம் எழுந்திரு, சீக்கிரம் எழுந்திரு என ஓயாது காலையில் சுப்ரபாதம் போல் பாடுவார்கள். எதற்காக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்? சுறு, சுறுப்பு எனலாம். நன்கு படிக்க முடியும் எனலாம். இப்படி எண்ணற்ற நன்மைகளைச் சொல்லலாம். ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் இதுவே தவிர்க்க முடியாத பழக்கம் ஆகிவிடும். தாமதமாக எழுந்தால் ஆரோக்கியம் மிக இளம் வயதிலேயே அவுட் ஆகிவிடும். டென்ஷன் கூடிக் கொண்டே போகும், எழுந்தவுடன் பல் தேய்த்து உடனே 10 நிமிடம் ஷவர் எடுத்துத்தான் பாருங்களேன்.

    * முன்பெல்லாம் தூங்கி எழுந்தவுடன் பாயை சுருட்டி, போர்வை மடித்து வைப்பார்கள். ஆனால் இன்று எல்லாமே கட்டில், மெத்தை என்றாகி விட்டது. தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பலருக்கு அந்த கட்டில் தான் ஆபீஸ், படிப்பு, உணவருந்தும் மேஜை. எல்லாம் ஆரோக்யரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் மிக தவறானது. ஒருவரை விரைவில் படுத்த படுக்கையாக்கி விடும். கட்டில், மெத்தை என்றாலும் தூங்கி எழுந்தவுடன் நன்கு தட்டி மடித்து சுத்தமாக வையுங்கள், இது ஒரு நல்ல உணர்வினைத்தரும்.

    கமலி ஸ்ரீபால்


    * காலையில் பல் சுத்தம் செய்த பிறகு 2 கிளாஸ் நீர் அருந்துங்கள். இதனை வீட்டில் பெரியவர்கள் தினமும் சொல்வார்கள், ேயாகா வகுப்பு மருத்துவர்கள் அனைவரும் அறிவுறுத்துவர். இதில் சிலர் வெது வெதுப்பான நீர் குடிப்பர். சிலர் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பர். சிலர் 1 லிட்டர் நீர் கூடகுடிக்கின்றனர். சுத்தமான நீர் 2 கிளாஸ் அருந்தினாலே போதும். உடலில் சத்துகூடும். கழிவுகள் வெளியேறும். உடலில் சக்தி கூடும்.

    * சின்ன வேலைகளை ரொம்ப நேரம் தள்ளிப்ேபாடாதீங்க, அதுேவ டென்ஷன் ஆயிடும். உடனே செய்து விடுங்கள். எளிதாய் இருக்கும்.

    * முதல் நான் இரவே மறுநாள் வேலைகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். அது படிப்போ. அலுவலக பணிேயா, சமையலோ எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

    * சில முறை ஆழ் மூச்சினை எடுங்கள். மனம் அமைதியாப் இருக்கும்.

    * முடியும் பொழுது என்றில்லாமல் கவனமாக ஒரு மணி நேரத்திற்கொரு முைற சில நிமிடங்கள் சுறு சுறுப்பாய் நடந்து பாருங்களேன்.

    * நல்ல தீர்வுகள் வரவில்லையா? மேலும் உழைப்போம். கெட்ட தீர்வுகளா? இதை மாற்ற மேலும் உழைப்போம். உழைப்ேப தீர்வு. நல்ல தீர்வா? அது தொடர மேலும் உழைப்போம்.

    செல்போன்: யாரும் இந்த காலத்தில் அதிகம் தலை நிமிர்ந்து இருப்பதில்லை. அப்படியொரு தன்னடக்கம் என்று நினைத்து விடாதீர்கள். கையை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியாத செல்போன் தான் காரணம். தலை குனிந்து, தோள்கள் முன் வந்து தொய்ந்து, காலப் போக்கில் முதுகும் சற்று வளைந்து இளம் வயதில் அதிக முதுமைத் தோற்றத்துடன் காணப்படுகின்றனர். இதனால் பல உள் உறுப்புகளுக்கு அழுத்தம் ஏற்படுகின்றது. பின்னர் பாதிப்பும் ஏற்படுகின்றது.


    * பின் மண்டை, கழுத்தில் வலி ஏற்படுகின்றது.

    * இக்கருவிகளில் இருந்து வரும் நீல ஒளி செல்போனை அன்றாடம் நீண்ட நேரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு கண்ணுக்கு அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றது. பார்வை கோளாறுகளை உருவாக்கலாம். முறையான தூக்கமின்மையை ஏற்படுத்துகின்றது.

    * உடல் முன் பக்கமாக எப்போதும் குனிவதால் நுரையீரலில் அழுத்தம் ஏற்பட்டு அதன் செயல் திறன் 30 சதவீதம் குறைகின்றதாம்.

    * தண்டுவடத்தில் முறையற்ற வளைவு (கூன்), தண்டு வட பாதிப்பு, பின் முதுகு வலி ஏற்படுகின்றது.

    * தோளும் முன்பக்கம் வளைந்து, முட்டியும் வளைவதால் நரம்பு பாதிப்பு ஏற்படுகின்றது.

    * கழுத்து 60 டிகிரி வளைவதால் 60 பவுண்ட் அழுத்தம் கழுத்தில் ஏற்பட்டு கடுமையான கழுத்து வலி பிரச்சினை உருவாகின்றது.

    * கட்டை விரல் வலி, மணிகட்டு இறுக்கம் உண்டாகின்றது.

    * அதிக முதுகு வலி செல்போன், கம்ப்யூட்டர் இவைகளில் மிக அதிக நேரம் செலவழிப்பதால் ஏற்பட்டு ெதாய்ந்த தோற்றம், நடை முறையற்று இருத்தல் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பேச்சு, தோற்றம் இவை அனத்துமே பாதிக்கப்படுகின்றது.

    * மேலும் நினைத்ததையெல்லாம் அனைவரிடமும் பகிரும் குணம் கட்டுப்படும். நமக்குள் உருவாகும் கட்டுப்பாடு வலிவானது, அமைதியானது.

    * பகிரும் போது நல்லவை இருந்தால் யாரும் உங்களை பாராட்டப் போவதில்லை. தவறு இருந்தால் உங்களை மறக்கப் போவதும் இல்லை.

    * செல்போன் பொய் நண்பர்களை கொடுக்கலாம். இவர்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்.

    மனித மனதுக்கு கொஞ்சம் இருட்டான பகுதியும் இருக்கு-

    * உண்மையை விட அது அழகான பொய்களை விரும்புகின்றது.

    * உங்கள் மனமே சதா உங்களை குத்தி குடைந்து கொண்டே இருக்கலாம்.

    * ரொம்ப அதிகமாக யோசிப்பது தனக்கு தானே கொடுமை செய்து கொள்வது போல்தான். இதனை நிறைய பேர் செய்து கொள்கின்றனர்.

    * மகிழ்ச்சி என்ற ஒன்றினை பிடித்து அதன் பின்னாடியே ஓடு என்கிறோம். கிடைத்தவுடன் பாதுகாக்காது அழித்து விடுகின்றோம்.

    * நமக்கு இருக்கும் இதயத்தினை வேறொரு இதயத்தினை நம்பி நொறுக்கி விடுகின்றோம்.

    * வலி நமக்கு பழகி விட்டது. அதில் வாழ்வதும் பழகி விட்டது. வலியின்றி வாழ்வதும், வலி ஆற்றி வாழ்வதும் நமக்கு பழக்கம் இல்லாத ஒன்றாகி விட்டது.

    * நம் மனம் பாராட்டுதல்களை விட காயங்களை மிக துல்லியமாக ஞாபகம் வைத்து கதறுகின்றது.

    * நம் மீது பிறர் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.

    * நம்மை சுற்றியுள்ள அநேகர் பொய்யான துணையாக நிற்பர். உள்ளே நாம் வீழ வேண்டும் என்று நினைப்பர். இது காலத்தின் சூழல்.

    * ஆழ் மனதில் வளர்ந்த மனிதன் கூட பயந்த குழந்தைதான்.

    * பல காயங்கள் நமக்கு ஆறுவதே இல்லை. அதோடு நாம் விந்தி விந்தி நடக்க கற்றுக் கொண்டு விடுகின்றோம்.

    * எல்லோருக்கும் அன்பும், கருணையும் தேவையில்லை என்பதனை உணருங்கள்.

    ஆரோக்கியம் என்பதற்கும் நாம் உட்கொள்ளும் உணவிற்கும் நேரடி தொடர்பு உண்டு என்று அறிவோம். கீழ்க்கண்ட உணவுப் பொருட்கள் நம் பழக்கத்தில் உள்ளதா? என்று பார்த்துக் கொள்வோம்.

    *அத்திப்பழம் *ஆளி விதை *தயிர்-மோர் *சியாவிதை *பசலை கீரை *மீன் *தேங்காய் *தேங்காய் நீர் *ஓட்ஸ் *நாவல் பழம் *தக்காளி *வெள்ளரி *பூசணி விதை *வெண் பூசணி *சுரைக்காய் *ஆரஞ்சு *பச்சைமிளகாய் *பாதாம் *கொய்யா *பேரிச்சை *முள்ளங்கி *மாதுளை *சன்னா

    குறைந்தபட்சம் இவையெல்லாம் உங்கள் உணவில் சேர்க்கப்படுகின்றதா? கொஞ்சம் கவனிப்போம்.

    அமிலத்தன்மை உள்ள உணவுகளைத் தவிர்த்து காரத்தன்மை உணவை உண்ணும்போது தன்னால் ஆரோக்கியம் கூடும் தானே.

    * இப்படி கூட 2 அல்லது 3 மாதங்கள் முயற்சி செய்யலாமே?

    இளம் வயதினர், வாலிப வயதில் இருப்பவர்கள் இத்தகு உடற்பயிற்சிகளையும் செய்யலாமே?

    * மலை ஏறுதல் *7000 அடிகள் அன்றாடம் நடத்தல் *ஸ்கொயட்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம்.

    * தேவையான புரதம், ஆரோக்கிய கொழுப்பு, தாது உப்புகள் இவற்றினை ஊட்ட சத்து நிபுணர் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளுதல்.

    * காய்கறிகள், பழங்கள், முட்டை, மோர், தயிர் இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.

    மேலும் பிறர் மீது சதா குற்றம், குறை கூறாது இருத்தல் இவை நிச்சமயாய் 2 மாதத்தில் உங்களை முன்னேற வைக்கும்.

    * தேவைக்கு மீறி பேசாது இருத்தல்.

    * எதற்கெடுத்தாலும் அடுத்தவர் மீது சார்ந்து இருத்தல் என்பது நமக்கும் பிறருக்கும் பாரம். இந்த சவுக்கிய வளையத்தில் இருந்து வெளிவர வேண்டும்.

    * பிறர் நம்மை அறிவாளி, புத்திசாலி, ஆற்றல் மிக்கவர் என்று கூறும் முன்பு நம்மைச் சுற்றி எத்தகைய மனிதர்கள் உள்ளனர் அல்லது எத்தகைய மனிதர்களைச் சுற்றி நாம் உள்ளோம் என்பதனை கவனியுங்கள். ஆக இந்த இரண்டு இடத்திலும் அறிவும், உறுதியும், நல்ல எண்ணங்களை கொண்டவர்களும் இருக்க வேண்டும்.

    * வாழ்க்கையில் பாதுகாப்பு என்ற ஒரு நிகழ்வு வேண்டி எப்போதும் ஒரு பொந்துக்குள் மறைந்து வாழ முடியாது. சில சவாலான, துணிச்சலான செயல்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இது தலைவர்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் மிக அவசியம்.

    * நல்ல நிகழ்வுகளில் இருந்தும், வெற்றி நிகழ்வுகளில் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்.

    * உங்கள் நண்பர்கள், நீங்கள் நம்புபவர்கள் அசைக்க முடியாத நம்பும் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் ஆளுமை நம்மை சிந்திக்க விடாது, விழுங்கி விடும்.

    * நிறைய படியுங்கள். அன்றாட செய்திகள், நிகழ்வுகள், கண்டுபிடிபபுகள் என நன்கு படியுங்கள். அறிவுதான் ஒருவரின் மிகப்பெரிய சொத்து.

    * படுக்காத தலை முடி, உடல் மூடிய ஆடை, சுத்தமான ஆடை, இவை யெல்லாமே ஆரோக் கியத்தின் வெளிப்பாடுதான்.

    மேற்கூறியவைகள் கூட ஆரோக்கியம் என்ற தலைப்பின் கீழ் வருமா? என்று நினைக்கின்றீர்களா? இது வாழ்வின் ஆரோக்கியம். நமக்கு நாமேதான் தேவையான அக்கறையினை கொடுக்க வேண்டும். உங்கள் முயற்சிகளை, மாற்றங்களை எழுதுங்கள். படியுங்கள். உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள்.

    • வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கே நாம் அன்றாடம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
    • ஆழ்ந்த அக்கறையோடு பாடுபட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    மனிதர்கள் குடும்பமாகக் கூடி வாழும் வாழ்வியலில் அவர்களுக்கு உற்ற நேரத்தில் உதவியாக இருக்கப் போவது சொத்து சுகமா? சொந்த பந்தமா? என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெரு மக்களே! வணக்கம்.

    ஆணும் பெண்ணுமாகப் பிறவியெடுக்கிற ஒவ்வொரு தனிமனிதரும், திருமண பந்தத்திற்குள் இணைந்து, குடும்பம் என்கிற அமைப்பிற்குள் அடியெடுத்து வைக்கும் போதுதான், அவர்கள் முழுமையான மனிதர்களாகத், தம்முடைய வாழ்க்கையைத் தாமே தீர்மானிக்கிற மனிதர்களாக, உருப்பெருக்கம் அடைகிறார்கள். ஆணும் பெண்ணுமாக இணைந்து தொடங்குகிற புது வாழ்வியல், தமக்கு வளம் நல்குவதாகவும், நலம் சேர்ப்பதாகவும், நிலைத்த மகிழ்ச்சியையும், அமைதியையும் வழங்குவதாகவும் அமைய வேண்டும் என்பதிலும், அதற்கு ஆழ்ந்த அக்கறையோடு பாடுபட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கே நாம் அன்றாடம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத் தேவைகளைப் பார்த்துக் கொள்வதற்கே கடின உழைப்பைச் செலுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம். தன் மனைவி, தன் பிள்ளைகள் இவர்களின் தட்டுப்பாடற்ற உணவுத் தேவைகள், அன்றாடம் பாதுகாப்பாக உறங்குவதற்கு உறைவிடத் தேவைகள், பிறகு பிள்ளைகளின் கல்வி, குடும்பத்தாரின் நாகரிகமான வாழ்வியல் வசதிகள், சொத்து மற்றும் காசு பணச் சேமிப்பு என்று இவற்றிலெல்லாம் இடைவிடாது கண்கொத்திப் பாம்பாய்க் கவனம் செலுத்தினான்தான், கஷ்டமில்லாத வாழ்க்கை உத்தரவாதமானதாக இருக்கும்.

    பணம் சம்பாதித்தலே முக்கியம் என்று இருப்பவர்களுக்கு மளமளவென்று சொத்து சுகங்கள் பெருகலாம். ஆனால் சுற்றியுள்ள சொந்த பந்தங்கள் அவர்களுக்கு அரணாகச் சூழ்ந்து நிற்பார்களா? என்பது கேள்விக்குறியாகி விடும். பணம் தேடும் உலகிலே மனம் தேடுவது குறைந்து போகும் என்பது இயல்புதான் என்றாலும் மனம் தருகிற ஆறுதலைப் பணம் தந்து விடுமா?. தனித்துப் பிறந்தாலும் சமுதாயமாகக் கூடிப் பொது வாழ்க்கை வாழத்தான் மனிதன் அமைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் ஒவ்வொரு மனிதனிடத்திலும் சுயநலம் என்பது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அவனை அறியாமலேயே அவனுள் கரைந்துதான் காணப்படுகிறது. எல்லோர் பொதுநலத்திலும் கொஞ்சம் சுயநலம் கலந்திருக்கவே செய்யும். ஊர்ப் பாசனத்திற்காக வெட்டப்படுகிற குளத்தால், தனது வயலும் பயன்படும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், வெட்டப்படுகிற குளத்தால், தன் வயல் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று நினைப்பது சுயநலம்.

    மனிதன் பொதுநலவாதியாகச் சிறக்கும்போது அவனது உழைப்பு மற்றும் சம்பாத்தியங்கள் எல்லாம் தமக்கும் பயன்பட்டு, மற்றவர்க்கும் பயன்படும். ஆனால் தன்வீடு, தன் வசதி, தன் பிள்ளைகள், தன் வாழ்க்கை என்று சுருங்கிப்போகும்போது தனிமைச் சிறைக்குள் அடைபட்டு, சொந்த பந்தங்கள் ஏதுமற்ற வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கத் தொடங்கி விடுகிறான். நமது பெரும்பாலான எல்லா உழைப்புகளும் ஊதியம் கருதியதாகவே இருக்கின்றன. பெறுகின்ற ஊதியம், சம்பாதிக்கின்ற சம்பாத்தியம் அனைத்தையும் தமக்காக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அதில் ஒரு பகுதியைச் சமுதாயத்திற்காகவும் செலவு செய்கிற பரோபகாரம் இருந்தால் அதுவே சமூக நலம். சமுதாயம் என்பது நமது குடும்பம், நமது உறவினர்கள், நமது நண்பர்கள், நமது குடியினர், நமது இனத்தினர், நமது ஊரினர், நமது நாட்டினர், மனித குலத்தினர்... என எல்லைகள் விரிவடைந்து, உலகமெங்கும் உயிர்த்திருக்கும் உயிரினங்கள் வரை செல்லும் நீட்சியை உடையது. 'சொத்து பத்து இருந்தால்தான் சொந்தங்களும் சுற்றி வரும்' என்கிற சொல்வழக்குக்கு ஏற்ப நாமும் கொஞ்சம் செல்வச் சேமிப்பு உடையவர்களாக இருந்தால்தான் உறவினர்கள் மத்தியில் கொஞ்சம் மரியாதையும் இருக்கும்.

    பழைய காலத்து அனுபவ மொழி ஒன்று இப்படியாக வருகிறது: 'கொண்டு வந்தால் தந்தை!, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்!, சீர் கொண்டு வந்தால் தங்கை!, உயிர்காப்பான் தோழன்!, கொலையும் செய்வாள் பத்தினி!. இந்த வாசகம் உறவுகள் குறித்த பல்வேறு மனப்போக்குகளைத் தெளிவாகத் தோலுரித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு சொற்றொடருக்கும் விரிவுரை பொழிப்புரை காண்பதைவிட, ஒட்டுமொத்தமாக உறவென்று இருந்தால், ஏதாவது செல்வம் சார்ந்த எதிர்பார்ப்புடன்தான் இருக்கும் என்கிற முடிவுக்குச் சட்டென்று வந்துவிடலாம். எவ்வளவுதான் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், சொந்தங்கள் சூழாத வாழ்க்கை, கரையற்ற குளத்தில் நீர் தேக்கி வைப்பது போல என்கிறார் திருவள்ளுவர்.

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

    கோடின்றி நீர் நிறைந் தற்று.

    இந்த உலகத்தையே வளைத்துப் போட்டது போன்ற நிலபுலன்களும், செல்வச் செழிப்பும், காசுபணங்களும் நிரம்பி வழிந்தாலும் அவை அடிப்படையில் உயிரற்றவை. நாம் மன நிம்மதி இழந்து சில வேளைகளில் அல்லாடும்போது, காசுபணம், நகைநட்டுகள் போன்றவை உயிர்பெற்று வந்து நம்மோடு உரையாடல் செய்யாது. உயிர்ப்போடு உலவிக் கொண்டிருக்கிற ஐந்தாறு சொந்தங்கள் வந்து சுற்றி நின்றுகொண்டு, 'ஏன் கலங்குகிறீர்கள்!, எது வந்தாலும் வருந்தாதீர்கள்! நாங்கள் இருக்கிறோம்! கடைசிவரை உங்களுக்குப் பாதுகாவலாக இருப்போம்!" என்று உணர்வோடு வந்து உறவாக நின்று அவர்கள் சொல்லுகின்ற ஆறுதல் வார்த்தைகளுக்கு எத்தனை கோடிப் பணங்களும் இணையாகாது.

    சுந்தர ஆவுடையப்பன்

    ஒரு மனிதனுக்கு சொத்து எவ்வளவு? என்பதை அசையும் சொத்துக்கள்!, அசையாச் சொத்துக்கள்! என்று வகைப்படுத்தி மதிப்பீடு செய்வார்கள். சொத்து மதிப்பு என்பது நில புலன்கள், வீடுகள், கட்டிடங்கள், மனைகள், நகைகள், காசு பணங்கள், வங்கியில் உள்ள சேமிப்புகள், வேளாண் நிலங்களில் இருந்து வரும் வருமானங்கள், தொழில்கள் மற்றும் தொழில் நிறுவன வருமானங்கள் என இவற்றின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அன்றாடம் வேலைக்குப்போய் அன்றாடம் சம்பாதிப்பவராக இருந்தாலும், மாத ஊதியம் பெறுகிற அலுவலர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் வருமானம் உண்டு; சேமித்துச் சொத்துச் சேர்க்கும் வாய்ப்புகளும் உண்டு; எவராக இருந்தாலும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்க்காமல் இருந்தால் அதுவே மதிப்புமிக்க சொத்து ஆகும்.

    அன்றாடம் உழைத்து, அன்றாடச் சம்பளத்தில், அன்றாடம் உண்டு, அன்றாடம் வாழ்க்கையை நடத்தினாலே போதுமே பிறகு எதற்கு சொத்துச் சேர்க்க வேண்டும்? சேமிப்பைப் பெருக்க வேண்டும்? ஒரு வீடு போதாதா? ஒரு வாகனம் பத்தாதா? ஒன்றிரண்டு நகையணிந்தால் அழகு குறைந்து விடுமா? எல்லாவற்றையும் தாண்டி, அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்க்கப் போகிறேன் என்று ஏன் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும்?.

    மனித வாழ்க்கையில் எத்தனை படிப்பு இருந்தாலும், எத்தனை அறிவு இருந்தாலும், எத்தனை நம்பிக்கை இருந்தாலும் மனிதனுக்குப் பொருளாதாரம் தொடர்பான பாதுகாப்பு உணர்வு சற்று அதிகமாகவே உண்டு. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் உண்டு; திடீரென தளர்ச்சி நிலை வந்து விட்டால், யார் உதவுகிறார்களோ இல்லையோ நாம் சேர்த்து சேமித்து வைத்திருக்கிற சொத்தும், பணமும் நிச்சயம் நம்மைக் கைதூக்கி விட்டுவிடும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு எப்போதும் உண்டு. நாம் சேர்த்து வைக்கிற செல்வம் நம்மைப் பொருளாதாரத் தற்சார்பு உடையவர்களாக வைத்திருக்கிறது. பொருள் ஒன்றே வாழ்வியலுக்குப் போது மானது; உறவுகளும், நட்புகளும் புறந்தள்ளப்பட வேண்டியவை என்கிற மமதை உணர்வைக் கூட நமது செல்வங்கள் நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன.

    ஒரு கிராமத்தில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். இறந்த மனிதரின் இறுதிச் சடங்கு வேலைகள் அவரது வீட்டில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அவரது நண்பர் என்று கூறிக்கொண்டு, வெளியூரில் இருந்து ஒருவர் வந்து அங்கே நின்றார். ஊர்மக்கள் கேட்கும் படியாக உரக்க ஒரு செய்தியை அங்கே சொன்னார். " நான் இங்கே இறந்து கிடக்கும் இந்த மனிதரின் பத்தாண்டுக்கும் மேற்பட்ட நண்பன்; என்னுடைய இந்த நண்பன் ஐந்தாண்டுகளுக்குமுன் என்னிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதுவரை அசலும் வரவில்லை; வட்டியும் வரவில்லை. அவர் இறந்துவிட்ட செய்தி அறிந்து வந்திருக்கிறேன். இவர் எனக்குத் தரவேண்டிய பதினைந்து லட்சம் ரூபாயை அவரது பிள்ளைகள் எனக்கு இப்போதே கொடுத்தால்தான் அவரது உடலை எடுத்து அடக்கம் செய்ய அனுமதிப்பேன்; இல்லையென்றால் நடப்பதே வேறு!" என்று மிரட்டும் தோரணையில் சொன்னார். அவரது மூன்று மகன்களும் தனியே சென்று கூடிப் பேசினார்கள். பிறகு கூட்டத்திற்குள் வந்து, தனது தந்தையின் நண்பரைப் பார்த்து, 'ஐயா! எங்களது தந்தையார் தங்களிடம் பணம் வாங்கியிருந்த விவகாரம் இதுவரையும் எங்களுக்குத் தெரியாது; இப்போது தெரிந்தும் இனிமேல் பெரிதாய் ஆகப்போவது ஒன்று மில்லை; எங்களிடம் நீங்கள் கேட்கும் பணம் இருக்கிறது. என்றாலும் அனாமத்தாய் அதை உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இஷ்டமில்லை; எங்களால் உங்களுக்கு எங்கள் தந்தை வாங்கிய கடன்தொகையைத் திருப்பித் தரமுடியாது; இவர் எங்கள் தந்தையே இல்லை!; உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!' என்று கூறிவிட்டு மகன்கள் மூவரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர்.

    அப்போது அங்கே நின்றிருந்த ஒரே மகள் கண்ணீரும் கம்பலையுமாக ஓடிவந்து தனது தந்தையின் நண்பரிடம் பேசினார், "ஐயா நீங்கள் சொல்லும் 15 லட்சம் ரூபாய் இப்போதைக்கு என் கைவசம் இல்லை!; இதோ என் காதில், கழுத்தில் போட்டிருக்கிற நகைகளைக் கழற்றித் தருகிறேன். எனது தந்தையின் இறுதிச் சடங்குகள் தடையின்றி நடக்க அனுமதியுங்கள்; மீதித்தொகையைக் கூடிய விரைவில் உங்களிடம் திருப்பிச் செலுத்தி விடுகிறேன்" என்று கதறினார். தான் கொண்டு வந்திருந்த கைப்பைக்குள்ளிருந்து ஒரு மஞ்சள் பையை வெளியே எடுத்த இறந்தவரின் நண்பர், "ஊர்ப் பெரியவர்களே! இறந்து கிடக்கும் இவரிடம் உண்மையில் கடன் வாங்கியிருந்தது நான் தான்; 'பணத்தை, நான் இறந்த பிறகு என் ஊருக்கு வந்து இப்படியொரு நாடகத்தை நடத்தி, யார் எனக்காகப் பணம் தரச் சம்மதிக்கிறார்களோ அவரிடம் தந்து விடுங்கள்! என்று சொன்னவரும் இவர்தான். இதோ அந்தப் பணம் அவரது மகளுக்கு!" என்று தந்து விட்டு நண்பருக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்.

    செல்வம் உறவுகளை இணைக்கவும் செய்யும்; பிரிக்கவும் செய்யும். மனிதர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்று பார்க்கும் அற்ப நிலையைத் தாண்டி, அவர் பணக்காரரோ, ஏழையோ அவரிடம் இருக்கும் மனிதநேய மதிப்பு எவ்வளவு? என்று பார்க்கும் நிலை உருவானால் எல்லோரும் அவர்களுக்குச் சொந்த பந்தங்களே!.

    தொடர்புக்கு - 9443190098

    • கொல்கத்தா என்றவுடனேயே கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுக்கு வருவது ஈடன் கார்டன்ஸ் மைதானம் தான்.
    • ஜாய் நகர் என்ற மகிழ்ச்சி நகரம் இங்கு அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.

    இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய மாநிலம் மேற்கு வங்கமாகும். இம்மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா இந்தியாவின் ஏழாவது பெரிய நகரமாகும்.

    மகிழ்ச்சி நகரம் (ஜாய் சிட்டி) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் கொல்கத்தாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் பார்ப்பதற்கு உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

    தக்ஷிணேஸ்வரம் காளி கோவில்

    கொல்கத்தாவின் தாயாக வழிபடப்படும் காளி குடிகொண்டு அருளாட்சி நடத்தும் இடம் தக்ஷிணேஸ்வரம் காளி கோவில் ஆகும். ஹூக்ளி ஆற்றில் கிழக்குக் கரையில் அமைந்துள்ள கோவில் இது. காளியின் ஒரு அம்சமான பவதாரிணி அருளாட்சி செய்யும் இடம் இது. கொல்கத்தாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.


    9 விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்கும் இந்தக் கோவிலைச் சுற்றி வெளியிடமும், அதைச் சுற்றியுள்ள மதிலின் உட்புறத்தில் பல அறைகளும் உள்ளன.

    ஆற்றங்கரையில் 12 சிறு கோவில்கள் உள்ளன.

    கடைசியில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகே வடமேற்கு மூலையில் உள்ள ஒரு கூடத்தில் தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார்.

    இந்தக் கோவில் எழுந்ததைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

    1847-ம் ஆண்டில் இப்பகுதியின் ஜமீந்தாரிணியாக விளங்கிய ராணி ராசமணி தேவியார் புனிதத்தலமான காசிக்கு யாத்திரை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். தேவையான பொருள்கள் சேகரிக்கப்பட்டு உறவினர்கள், வேலையாட்களுடனும் 24 படகுகளில் அங்கு செல்ல ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.

    கிளம்புவதற்கு முதல் நாள் ராணியார் கனவு ஒன்றைக் கண்டார். அதில் தோன்றிய காளி, காசிக்கு வந்து தரிசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் தனக்கென அழகிய கோவில் ஒன்றை நிர்மாணித்து அங்கேயே வழிபட்டால் போதும் என்றும் அருளுரை கூறினாள்.

    ச.நாகராஜன்

    உடனடியாக ராணியார் பெரும் நிலப்பகுதியை வாங்கிக் கோவிலை அழகுறக் கட்டி முடித்தார்.

    1855ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

    கோவில் திறக்கப்பட்ட போது நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் அந்தணர்கள் விழாவைச் சிறப்பிக்க அழைக்கப்பட்டனர்.

    கோவிலின் குருக்களாக ராமகிருஷ்ண பரமஹம்சரின் தமையனாரான ராம்குமார் நியமிக்கப்பட்டார்.

    அவர் அடுத்த ஆண்டே காலமாகவே அந்த குருக்கள் பணியை ராமகிருஷ்ண பரமகம்சர் மேற்கொண்டார். பரமஹம்ஸரின் தேவியார் அன்னை சாரதாமணி தேவியாரும் இங்கேயே வந்து குடியேறினார்.

    அதிலிருந்து பரமஹம்சர் 1886-ம் ஆண்டு மறையும் வரையில் சுமார் 30 ஆண்டுகள் காளி கோவிலுக்கு குருக்களாக இருந்து கோவிலின் பெருமையையும் புகழையும் பெருமளவு உயர்த்தினார்.

    இறைவன்: சிவன் மற்றும் கிருஷ்ணர்

    இறைவி: பவதாரிணி அல்லது காளி மற்றும் ராதா

    கோவிலின் கர்பக்கிரகத்தில் காளி தேவியின் சிலை உள்ளது.

    இங்குள்ள பஞ்சவடி பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். ஆல், அரசு, வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய 5 மரங்கள் சூழ்ந்த இந்த பஞ்சவடி பகுதியில் தான் பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர் மற்றும் பரமஹம்சரின் இதர சீடர்கள் ஆன்மீக சாதனையை மேற்கொண்டனர். பரமஹம்ஸர் அருளால் விவேகானந்தர் காளியை தரிசனம் செய்து உத்வேகம் பெற்று பாரதத்தை எழுச்சி பெறச் செய்தார். அப்படிப்பட்ட புண்ணியமான திருத்தலம் இதுவே என்பதை யாராலும் மறக்க முடியாது.

    ஹவுரா பிரிட்ஜ்

    ஹூக்ளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான தொங்கு பாலம் ஹவுரா பிரிட்ஜ் ஆகும். ஹூக்ளி நதியின் எதிரெதிர் கரைகளில் இருந்த ஹவுராவையும் கொல்கத்தாவையும் இணைக்கும் வண்ணம் இந்தப் பாலம் 1943ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் தினம்தோறும் ஒரு லட்சம் வாகனங்கள் செல்கின்றன. ஒருலட்சத்து 50 ஆயிரம் பேர் இதில் நடந்து செல்கின்றனர். இது உலகின் 6-வது நீளமான பாலமாகும்,

    டிராம்


    கொல்கத்தா என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது டிராம் தான். பஸ், ரெயில், கார் என பயணப்படும் பயணிகள் டிராமில் பயணப்பட ஒரு சிறந்த இடம் கொல்கத்தா நகரம் தான்!

    ஈடன் கார்டன்ஸ்

    கொல்கத்தா என்றவுடனேயே கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுக்கு வருவது ஈடன் கார்டன்ஸ் மைதானம் தான்.


    இங்கு நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகள் என்றும் நினைவு கூரத் தக்கவையாகும். 68000 பேர் அமரக்கூடிய இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் உலக அரங்கங்களில் சிறந்த ஒன்றாகும்.

    நியூமார்க்கெட்

    பேரம் பேசி பொருள்களை வாங்க விரும்புபவர்களுக்கே உரித்தான மார்க்கெட் நியூமார்க்கெட். இங்கு 2000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஈடன் கார்டன்சுக்கு அருகில் உள்ளது இது.

    விக்டோரியா மெமோரியல் ஹால்

    விக்டோரியா மகாராணியின் நினைவாக மக்ரனா என்ற உயர் வகை சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அதில் புகழ் பெற்ற ஓவியங்கள், சிற்பங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை காட்சிப் பொருள்களாக உள்ளன.


    அந்தக் காலத்தில் மன்னர்கள் குதிரை சவாரி செய்ததை நினைவு கூரும் வகையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்த உணர்வைப் பெறுவதற்காக இங்குள்ள குதிரை வண்டி பயணத்தை மேற்கொள்வது வழக்கம், அலங்கரிக்கப்பட்ட ரதம் போல உள்ள ஏராளமான குதிரை வண்டிகள் இங்கு சவாரிக்காக தயாராக இருக்கும். இது ஒரு உல்லாசப் பொழுது போக்கு அம்சமாக இங்கு திகழ்கிறது.

    காலேஜ் ஸ்ட்ரீட்

    பழைய புத்தகங்களை விரும்பி வாங்கும் புத்தகப் பிரியர்களின் சொர்க்கம் காலேஜ் ஸ்ட்ரீட் பகுதியாகும். இது கொல்கத்தா ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. பல்லாயிரக்கணக்கில் புத்தகங்கள் இப்பகுதியில் உள்ளன.

    டயமண்ட் ஹார்பர்

    2000 ஆண்டு பழமையான வரலாற்றைக் கொண்டுள்ள இந்த துறைமுகம் கொல்கத்தாவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வங்காள விரிகுடா பகுதியில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் இது தான். இங்கு தான் ஹூக்ளி நதி கடலுடன் கலக்கிறது. இங்குள்ள கடற்கரையில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறுவதற்காக உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

    இப்போது 'எப்' போர்ட் என்று அழைக்கப்படும் ராய்சக் கோட்டை, மற்றும் டயமண்ட் ஹார்பரில் உள்ள லைட் ஹவுஸ் உள்ளிட்டவை பார்க்கத் தகுந்த இடங்களாகும். லைட் ஹவுஸ் 25 மீட்டர் உயரம் உள்ளது.


    ராமகிருஷ்ண ஆசிரமும் இங்கு தான் அமைந்துள்ளது. ஆன்மீக அதிர்வலைகளை ஏற்றிக் கொள்ள விரும்புவோர் தவறாது செல்ல வேண்டிய இடம் இதுவே.

    ஜாய் நகர் என்ற மகிழ்ச்சி நகரம் இங்கு அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.

    இங்குள்ள கதியாரா என்ற இடத்தில் தான் ஹூக்ளி நதி, ரூப்நாராயண், தாமோதர் ஆகிய நதிகள் சந்திக்கின்றன. போட் சவாரி, சூரிய உதயம், அஸ்தமனக் காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் பயணிகளைக் கவர்ந்து இழுக்கும்.

    சுந்தரவனக் காடு

    சுந்தர்பன் காடுகள் என அழைக்கப்படும் இந்த காட்டில் சுந்தரி மரங்கள் இருப்பதால் இது அந்தப் பெயரைப் பெற்றது. உலகில் உள்ள ஈரநிலங்களிலேயே பெரிய நிலப்பரப்பு கொண்டது இதுவே. 3968 சதுரமைல் பரப்பளவைக் கொண்டது இது. வங்காளப் புலி, பறவை இனங்கள் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்ற இடம் இது. இங்குள்ள நீர்நிலைகளில் பெரிய அலைகள் ஆறிலிருந்து 10 அடி உயரத்திற்கு எழுவதையும் சிறிய அலைகள் எழும் போது சேற்று நிலம் சமதளமாக இருப்பதையும் கண்டு ரசிக்கலாம். இங்கு மொத்தம் 102 தீவுகள் உள்ளன.


    இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ராயல் பெங்கால் டைகர் எனப்படும் வங்கப் புலிகள் இருக்கின்றன. பிரம்மாண்டமான இந்தப் புலிகள் ஒரே சமயத்தில் 65 பவுண்ட் இறைச்சியை உண்ண முடியும். இங்கு வாழும் புலிகள் உப்பு நீரில் நீந்தவும் வேட்டையாடவும் நன்கு பழகிக் கொண்டன. இது யுனெஸ்கோவின் மிகச் சிறந்த பாரம்பரிய தளமாக அமைகிறது. புலிகளைப் பார்க்க டைகர் சபாரி என ஒரு நாள் பயணம் இரு நாள் பயணம் என திட்டங்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டு வாழ்க்கையை அனுபவிக்க விரும்புபவர்கள் இங்குள்ள போட் ஹவுசில் தங்கி அதை அனுபவிக்கலாம்.

    இங்குள்ள மீன்வளமும் இந்தியாவிலேயே மிகப் பெரிய மீன்வள இடமாகும்

    சால்ட் லேக் சிட்டி

    கொல்கத்தாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது சால்ட் லேக் சிட்டி எனப்படும் பிதான் நகர். பழைய காலத்தில் உப்பு நிறைந்த சதுப்பு நிலமாக இருந்ததால் சால்ட் லேக் சிடி என்ற பெயரைப் பெற்றது இது. இப்போதோ திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட அழகிய நகராக ஆகி விட்டது இது.

    இதைச் சுற்றி நிறைய ஏரிகள் உள்ளதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இது அமைந்திருப்பதில் வியப்பில்லை.


    சுத்தமான நகருக்குப் போக வேண்டும் என்றால் டெல்லிக்குச் செல்லுங்கள். பணக்கார இடத்திற்குப் போக வேண்டும் என்றால் மும்பைக்குச் செல்லுங்கள். ஹை-டெக் சிடிக்குப் போக விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டியது பெங்களூருக்கு. ஆனால் ஆத்ம துடிப்புடன் பாரம்பரியம் கொண்ட நகரத்திற்குச் செல்ல விரும்பினால் உங்களுக்கான இடம் கொல்கத்தா தான் என்பது புகழ் பெற்ற மேற்கோளாகும்!

    காளிகா தேவியின் பெயரில் இருந்து உருவான கொல்கத்தா பண்பாட்டின் தலைநகரம் என்று புகழப்படுகிறது.

    கொல்கத்தா போகலாம்; காளிதேவியின் அருளைப் பெறலாம்!

    • நமக்கு அருளாற்றல் இருந்தால், தொடர்ந்து வரும் பிறவியை வெல்லலாம்.
    • நம்மால் செய்யக்கூடியதை நம்முடைய சக்தியை அறிந்து செய்தால் அந்த செயல் நல்லபடியாக நடக்கும்.

    அதிகாரம்: வலியறிதல்

    இந்த அதிகாரத்தில் ,

    வினைவலியும் தன்வலியும் மாற்றான்

    வலியும்

    துணைவலியும் தூக்கிச் செயல்.

    என்ற குறளில் தொடங்கி

    உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

    வளவரை வல்லைக் கெடும்.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    வலி என்பது வல்லமை, ஆற்றல், பலம். இதனையே வலிஅறிதல் என்பர். சிலர் திடமாகவும், அறிவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். அருளால் அறிவாற்றலும், உடல் வலிமையும், மனவலிமையும், கருணையும், பொருள் பலமும் உண்டானது.

    சிலருக்கு மனவலிமை இருக்கும், பொருள் வலிமை இருக்கும், அவர்களுக்கு உடல்வலிமை இருக்கும்வரை மனவலிமை இருக்கும். பணபலமும் ஆள்பலமும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இருக்கும்.

    அறிவுபலம் ஆயுள் உள்ளவரை இருக்கும். அருள்பலம் மட்டுமே தொடர்ந்து துணையாக இருக்கும். அருள்பலம் ஜென்மத்தை கடைத்தேற்றும், காமதேகத்தையே உடைத்தெறியும்.

    நமக்கு அருளாற்றல் இருந்தால், தொடர்ந்து வரும் பிறவியை வெல்லலாம். ஒரு தனிப்பட்ட மனிதனுடைய ஆற்றல் சிறப்பாக அமைய அருள்பலமும் நல்வினையும் காரணமாக அமையும். தளர்ச்சியடையாத மனவலிமை இருக்க வேண்டும்.

    யானையைவிட புலி உருவத்தில் சிறியதாக இருக்கும். யானை உருவத்தில் பெரியதாக இருக்கும்.

    புலி சீற்றத்துடன் பாய்ந்தால் யானை அஞ்சும். உடல் வலிமையைவிட மனவலிமைதான் உயர்ந்தது. வீரஉணர்ச்சி ஆசான் ஞானபண்டிதனால் கொடுக்கப்பட்டது.

    வீரதீர பராக்கிரம செயல்களை இளமையில் செய்யலாம். ஆனால் முதுமையில் உதவாது. அது ஓர் எல்லைக்குட்பட்டது.

    மனிதவர்க்கம் எல்லையில்லாத ஓர் பெரிய ஆற்றலை பெற்றிருக்கிறது. அதனை இளமை இருக்கும்பொழுதே பெற்றுக்கொள்ள வேண்டும்.

    எல்லாம் அநித்தியமானது, நாளாகநாளாக நலிவடையும். ஞானிகள் மட்டும் என்றும் ஒரே தன்மையுடையவர்களாக இருப்பார்கள்.

    தலைவனை உருகி பூஜை செய்து, அருள்பலம் பெற்றவர்களுக்கு உடல்வலிமை குறையாது.

    ஞாபக சக்தி இருக்கும். பொருளாதாரம் குறையாமல் இருக்கும். எல்லைக்குட்பட்ட நாம் எல்லையில்லாத சக்தியை பெறவேண்டும்.

    உடம்பின் துணைகொண்டு, உயிர் ஆக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும். அன்னதானம் செய்வதாலும் பூஜை செய்வதாலும் திருவருள் துணை கிட்டும்.

    திருவருள் துணையிருந்தால் சிறப்பறிவும், சிறப்பான வாழ்வும் கிடைக்கும். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் எமனை வெல்லுகின்ற வலிமையை பெறலாம்.

    நம்மை நாம் மிகுதியாக உயர்த்தி நினைத்தல் கூடாது. நம்மால் செய்யக்கூடியதை நம்முடைய சக்தியை அறிந்து செய்தால் அந்த செயல் நல்லபடியாக நடக்கும்.

    பூஜை செய்பவர்கள் தம்மிடம் பெரிய அருள்பலம் இருப்பதாக நினைப்பார்கள். இது ஓர் மனப்பிரம்மை. எது நடந்தாலும் முன்செய்த வினைப்பயனால் வந்தது என்பதை உணர வேண்டும்.

    முற்றுப்பெற்ற முனிவர்களின் திருவடியைப் பற்றினால், அவர்கள் தம்முடைய அருள் கடாட்சத்தால் நம் பாவங்களைக் கழுவி நம்மை தூய்மைப்படுத்துவார்கள். ஆக இளமை இருக்கும் போதே பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஒருவருக்கு வல்லமை, ஆற்றல், திறமை, யூகம் இதுபோன்ற சிறப்புகள் பிறவியை வென்ற ஞானிகளின் திருவடியைப் பற்றினால் கிடைக்கும்.

    பிறவிப் பிணியை வெல்லுகின்ற வல்லமையும் மரணத்தை வெல்லுகின்ற வலிமையையும் ஞானிகளின் திருவடியைப் பூஜை செய்தால் பெறலாம்.

    அதிகாரம்: காலம் அறிதல்

    இந்த அதிகாரத்தில்,

    பகல்வெல்லும் கூகையைக் காக்கை

    இகல்வெல்லும்

    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

    என்ற குறளில் தொடங்கி

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

    குத்தொக்க சீர்த்த இடத்து.

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    காலம் அறிதல் என்பது அரசியலுக்குரியது. எதிரியை எப்போது எந்த காலத்தில் வெல்லலாம் என்பதைப் பற்றி கூறுவது ஆகும்.

    கோட்டானுக்கு பகலில் கண்கள் தெரியாது. கோட்டான் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியது காக்கையைத்தான்.

    கோட்டான் பகல் நேரத்தில் வெளியில் வந்துவிட்டால் எல்லா காக்கையும் சேர்ந்து கொத்தி அதைக் கொன்றுவிடும்.

    கோட்டான், காக்கையை இரவு நேரத்தில் தூக்கிக் கொண்டு போய் தின்றுவிடும். அதுபோல் சமயம் பார்த்து எதிரியை வெல்லக்கூடிய உபாயத்தை கூறுவது இந்த அதிகாரம்.

    காலம் மூன்று வகைப்படும்.

    காலை, மதியம், மாலை இது உலக நடை. சிலர் இளமையில் வறுமையில் இருப்பார்கள். முதுமையில் செல்வம் குவியும்.

    பராக்கிரமம் உள்ளவனுக்கென்று ஒரு காலமுண்டு. ஏழைக்கும் ஒரு காலமுண்டு. எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட காலமே. தக்க நேரத்தில், வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    நிலையில்லாத ஒன்றை பெற்றிருக்கின்றோம். எல்லா சிறப்புகளும், படைகள், சேனைகள் இருந்தாலும் அந்தந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்து, மறைந்துவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அவர்களைப் பற்றி தெரியாது.

    காலத்தில் அழியாதவர்கள் ஞானிகளே. ஞானிகளின் புகழும், அவர்கள் அருளியவைகள் எதுவுமே அழியாது. ஏனெனில் அவர்கள் காலத்தை வென்றவர்கள்.

    தாய்க்கும் தந்தைக்கும் மூச்சுக்காற்று ஒடுகிறது. தாய் தந்தை இல்லறம் நடத்துகிறார்கள்.

    அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது இருவருக்கும் உருவாகின்ற காற்றின் இயக்கத்தால் குழந்தை உருவாகிறது.

    தாயின் மூச்சுக்காற்று அசைந்தால் உள்ளே குழந்தை உயிரோடு இருக்கும். தாயின் மூச்சுக்காற்று நின்று விட்டால் உள்ளே உள்ள குழந்தையும் இறந்துவிடும்.

    தாயின் மூச்சுக்காற்றின் இயக்கம்தான் குழந்தை. தாயின் மூச்சுக்காற்றின் இயக்கத்தால் கருவும் வளர்கிறது.

    மூச்சுக்காற்றே ஆன்மா. உயிர் தாயாக உள்ளது. பத்துமாத மூச்சுக் காற்றின் இயக்கத்தினால் நாம் இருக்கிறோம்.

    தாயினுடைய மூச்சுக் காற்றுதான் இப்போது நமக்கெல்லாம் ஓடிக்கொண்டுள்ளது.

    காலத்தின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கம். இதுவே நமக்கு காலத்தை உண்டாக்குவது. அதாவது முடிவை உண்டாக்குவது மூச்சுக் காற்றே.

    மூச்சுக்காற்று நின்றால் காலம் முடிந்துவிடும் என்பதை அறிந்தவர்கள் ஞானிகள். அவர்கள் அந்த உண்மையை அறிந்து மூச்சுக் காற்றை புருவமத்தியில் செலுத்துவார்கள்.

    புருவமத்தியில் மூச்சுக்காற்றை செலுத்திவிட்டால் அது திரும்ப வராது. அங்கு காலம் இல்லை. அவர்கள் காலமாக மாட்டார்கள். இத்தகைய வாய்ப்பை பெற வேண்டும்.

    மூச்சுக்காற்றை மையமாகக் கொண்டதுதான் அயன் கையெழுத்து என்று கூறுவார்கள்.

    முருகனுடைய கால்பட்டு, அதாவது திருவடிபட்டு தனக்கு பிரம்மா எழுதிய தலையெழுத்து அழிந்தது என்று மகான் அருணகிரிநாதர் பாடுகின்றார்.

    ஆசான் சுப்பிரமணியர் ஆசியினால்தான் இடகலையும் பிங்கலையும் புருவமத்தியில் தங்கும். அப்படி தங்கிவிட்டால் பிரம்மாவின் கையெழுத்து அழியும் என்று கூறுகின்றார் ஆசான் அருணகிரிநாதர்.

    தலைவனை உருகி தியானம் செய்தால் இந்நிலை கை கூடும். இதனை சொற்குரு, தன்னை சார்ந்த தொண்டர்களுக்கு சொல்ல வேண்டும்.

    இடதுபக்கம் வருகின்ற காற்று இரவு. வலது பக்கம் வருகின்ற காற்று பகல். இரவும் பகலும் அற்ற இடம் புருவ மத்தி.

    அங்கு காற்று செல்ல முடியாது. அப்படி சென்றுவிட்டால் திரும்ப வராது. திருவருள் துணை இருந்தால் தேவர்களும் போற்றுகின்ற அந்த வாய்ப்பு கிடைக்கும்.

    இளமையில் காமவிகாரத்தால் மனம் ஒருநிலைப்படாது. பின்பு திருமணம் முடிந்த பின் மனைவி மக்கள் மீது கொண்ட பாசத்தால் பக்தி தடைபட்டுப் போகும். நாற்பது வயதுக்குமேல் பந்தபாசத்தை விட்டுவிலக மனம் வராது. முதுமை வந்தபின் சிந்தித்துப் பயனில்லை.

    உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் ஞானிகளிடம் பக்தி செலுத்த வேண்டும். நாம் காலம் ஆகாமல் இருக்க, காலம் ஆகாத ஞானிகள் நமக்கு அருள்செய்ய வேண்டும்.

    உடம்பில் மூச்சுக்காற்று இருக்கும்போதே தீவினையை போக்கிக்கொள்ள வேண்டும்.

    இந்த உண்மையை புரிந்துகொண்டு, இந்த உண்மையை அறிந்த சான்றோர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    எல்லா மனிதர்களுக்கும் காலத்தை வெல்லுகின்ற வாய்ப்பு உண்டு.

    ஞானிகளின் திருவடிகளை பூஜை செய்தும், புண்ணியம் செய்தும் மூச்சுக்காற்றின் இயல்பை அறிந்து, மூச்சுக்காற்றை புருவமத்தியில் செலுத்திவைப்பதை சமாதி என்று கூறுவார்கள்.

    அந்த வாய்ப்பை பெற்றவர்கள்தான் காலத்தை வென்றவர்கள். அவர்களுடைய திருவடியைப் பற்றினால் நாமும் காலத்தை வெல்லலாம். இதனை இளமை இருக்கும்போதே அடைய முற்பட வேண்டும்.

    மூச்சுக்காற்று புருவமத்தியில் ஒடுங்கினால் தெய்வம் நம்மை விட்டு நீங்காது. மூச்சுக்காற்றை கட்டுவது என்பது தெய்வத்தைப் பற்றிக்கொள்வதாகும்.

    தெய்வம் என்பதே மூச்சுக்காற்றுதான். ஒருவனை கரை சேர்ப்பதும், அவனை காலில் போட்டு மிதிப்பதும் மூச்சுக்காற்றுதான்.

    காலனை வெல்லக்கூடியது மூச்சுக்காற்று. காலன் என்பவன் நமக்கு காமமாகவும் கபமாகவும் இருப்பான். அதனை அறுத்து எறிவது மூச்சுக் காற்று.

    சான்றோர்களிடம் தொடர்புகொண்டு அதனை அறிந்துகொள்ள வேண்டும். ஞானிகளின் திருவடியைப் பற்றினாலன்றி மூச்சுக்காற்றைப் பற்றி அறிய முடியாது.

    ஞானிகளின் திருவடியைப் பற்றி பூஜை செய்தும், புண்ணியம் செய்தும் காலத்தை வெல்லும் மார்க்கத்தைக் கற்கலாம்.

    • கிருஷ்ணரும் உத்தங்கரின் சிறப்புகளை எடுத்துக் கூறி இந்திரனை சம்மதிக்க வைத்தார்.
    • கோட்டைப் போடு, கோட்டைச் சுவர் வேண்டாம் என்று கூறுகிறோம்.

    மகரிஷி உத்தங்கருக்கு ஒரு பாலை வனத்தின் வழியாக நடக்கவேண்டியது ஏற்பட்டது.

    அவருக்கு சரியான தாகம். எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போதுதான் கிருஷ்ணர் அவருக்குக் கொடுத்த வரம் நினைவுக்கு வந்தது.

    அவர் நினைத்தது கிருஷ்ணருக்கும் தெரிந்தது.

    "வரம் கிடைப்பதாக இருந்தால், ஒரு சராசரி மனிதன் உலகத்தையே கேட்டு விடுவான். ஆனால் இவரோ வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். இவருக்கு தண்ணீருக்குப் பதிலாக தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தையே கொடுத்துவிட வேண்டும்" என்று கிருஷ்ணர் விரும்பினார்.

    அவர் உடனடியாக இந்திரனைத் தொடர்பு கொண்டு உத்தங்கருக்கு அமிர்தத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

    ஆனால் இந்திரன் சம்மதிக்கவில்லை.

    "அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே உரியது. உத்தங்கர் ஒரு மனிதர். அதனால் அவர் அமிர்தத்தை எடுத்துக் கொள்ள முடியாது" என்று கூறி இந்திரன் ஆட்சேபித்தார்.

    கிருஷ்ணரும் உத்தங்கரின் சிறப்புகளை எடுத்துக் கூறி இந்திரனை சம்மதிக்க வைத்தார்.

    இந்திரனும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டார்.

    "நான் அவருக்கு அமிர்தத்தை வழங்குகிறேன். ஆனால் அமிர்தம் என்று கூறி வழங்க மாட்டேன். அவர் தனது சாமர்த்தியத்தைக் காட்டி அமிர்தத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று இந்திரன் கூறினார்.

    கிருஷ்ணரும் அதற்கு சம்மதித்தார்.

    இந்திரன் ஒரு காட்டுப் புலையனாக வேடமிட்டு, ஒரு தோற் பையில் அமிர்தத்தை எடுத்துச்சென்றார்.அந்த தோற்பை சில இடங்களில் கிழிந்து இருந்தது. அவற்றில் ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்தன.

    ஸ்ரீ பகவத்


    அந்தத் தோற்பையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, கைகளில் நான்கைந்து

    வேட்டை நாய்களைப் பிடித்த வாறே இந்திரன் உத்தங்கருக்கு எதிராக வந்தார்.

    அவர் உத்தங்கரைப் பார்த்து,

    "என்னா சாமி, தாகமாக தெரியுது. தண்ணீர் வைத்துள்ளேன் சாப்பிடறியா?" என்று கேட்டார்.

    உத்தங்கருக்கு ஒரே அருவருப்பு. இப்படி ஒரு தண்ணீரை வாங்கிக் குடிப்பதை விட தாகத்தில் செத்துவிடுவதே சிறந்தது.

    - இப்படி எண்ணிய அவர், அதனை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

    இந்திரனும் அங்கிருந்து சென்று மறைந்து விட்டார்.

    உத்தங்கர் கிருஷ்ணரை நினைத்து வருத்தம் கொண்டார்.

    "உன்னிடம் வரம் வாங்கிய குற்றத்துக்காக இப்படி ஓர் ஆபாசமாகவா தண்ணீரை எனக்குத் தருவது?"

    கிருஷ்ணரும் அவர் முன் தோன்றி நடந்ததை விளக்கிக் கூறினார்.

    பிறகு அவருக்கு இன்னும் ஒரு வரத்தையும் வழங்கினார்.

    "இனிமேல் நீங்கள் எங்கு சென்றாலும் உத்தங்க மேகம் என்றொரு மேகம், உங்களைப் பின்தொடர்ந்தே வந்து கொண்டிருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நேரடியாகவே சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.

    அது முதல் பாலைவனத்தில் மழை பெய்திடும் மேகங்கள் அனைத்தும் உத்தங்க மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    அடுத்து வருவது எட்டாவது விதிமுறை.

    அந்த எட்டாவது விதிமுறை என்ன கூறுகின்றது?

    ஒரு செயலை நாம் செய்வது என்று முடிவு செய்து விட்டோம்.

    அந்த செயலை நாம் என்ன விதமான அணுகுமுறையில் செய்து முடிக்க வேண்டும்?

    "நாம் செய்ய வேண்டிய செயல்களை, தியானமாக செய்து முடிக்க வேண்டும்".

    - இதுதான் எட்டாவது விதிமுறை.

    நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும், அவற்றில் ஈடுபாடு எதுவுமே இல்லாமல், ஏனோ தானோ என்று செய்தால் அந்தச் செயல் வெற்றி பெறுமா?

    எந்த அளவுக்கு அக்கறையோடும், ஈடுபாட்டோடும் செய்கிறோமோ அந்த அளவுக்கு அந்தச் செயல் வெற்றி பெறும்.

    ஒரு செயலை அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செய்வது என்பது, அந்த செயலை தியானத்துடன் செய்வது என்பதே ஆகும்.

    ஆகவே நாம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ள ஒரு செயலை, தியானம் செய்யும் மனப்பான்மையுடன் செய்து முடிக்க வேண்டும்.

    தியானம் செய்யும் மனப்பான்மையுடன் ஒரு செயலைச் செய்வது என்பது என்ன?

    எந்தவொரு செயலானாலும் அந்தச் செயல் இரண்டு பகுதிகளாக உள்ளது.

    செயல்பட வேண்டிய பகுதி மற்றும் அப்படி செயல்படுவதால் அடையப்படும் பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளன.

    அதாவது செயல் என்பது முதற்பகுதி.

    அதன் விளைவாக-பயன்பாடாக வருவது இரண்டாவது பகுதி.

    இரண்டாவது பகுதியின் முக்கியத்துவத்தை முடிந்த வரைக்கும் குறைந்த அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் முற்பகுதியின் மீதுள்ள ஈடுபாட்டை மட்டும் முடிந்த அளவுக்கு கூட்டிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நாம் ஒரு செயலின் மீது ஈடுபாடு காட்டுவதே அந்தச் செயலில் தியானத்தோடு இணைந்து கொள்வதாகும்.

    அடுத்ததாக வருவது ஒன்பதாவது விதிமுறை.

    இந்த விதிமுறை என்ன கூறுகின்றது?

    இது ஒரு தனிப்பட்ட விதிமுறை அல்ல. மற்றைய விதிமுறைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே கூறுகின்றது.

    "கோட்டைப் போடு; கோட்டைச் சுவர் வேண்டாம்."

    - இதுதான் அந்த ஒன்பதாவது விதிமுறை.

    கோடு என்பது என்ன?

    கோட்டைச் சுவர் என்பது என்ன?

    தேசிய நெடுஞ்சாலை என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

    ஒரு சாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும்.

    சென்னையில் இருந்து மும்பை செல்பவர்கள் இடது பக்கத்தில் செல்ல வேண்டும். அதேபோல் மும்பையில் இருந்து சென்னை வருபவர்கள் நமக்கு வலது பக்கமாக உள்ள ரோட்டில் வரவேண்டும்.

    இடது பக்கத்தையும், வலது பக்கத்தையும் பிரிக்கும் வகையில் சென்டர் மீடியன் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மீது அரளி போன்ற செடிகள் கூட வளர்க்கப்பட்டிருக்கும்.

    அதனால் இடது பக்கமாகச் செல்பவர்கள் இடது பக்கமாக மட்டுமே செல்ல முடியும். அதுபோல் வலது பக்கமாகச் செல்பவர்கள் வலது பக்கமாக மட்டுமே செல்ல முடியும்.

    இடது பக்கமாக செல்பவர்கள் வலது பக்கத்துக்கு மாறிக் கொள்ள முடியாது. அது போல் வலது பக்கமாக செல்பவர்களும் இடது பக்கத்துக்கு மாறிக் கொள்ள முடியாது.

    ஆனால் சில நெடுஞ்சாலைகளில் இப்படி ரோட்டைப் பிரித்து சென்டர் மீடியன் அமைக்கப்பட்டிருக்காது.

    ஆனாலும் கூட இடது பக்கத்தையும் வலது பக்கத்தையும் பிரிக்கும் வகையில் ரோட்டின் நெடுக கோடு ஒன்று மட்டும் போட்டிருக்கும். இங்கிருந்து முன்னோக்கிச் செல்பவர்கள் அனைவரும் கோட்டுக்கு இடது பக்கமாகவே செல்ல வேண்டும். அது போல் எதிர்த்திசையில் இருந்து இந்த பக்கமாக வருபவர்கள் கோட்டுக்கு வலது பக்கமாக மட்டுமே வரவேண்டும்.

    சென்டர் மீடியன் உள்ள சாலைக்கும் சென்டர் மீடியன் இல்லாத சாலைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால்,

    ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் போக முடியுமா, முடியாதா என்பதுதான்.

    கோடு மட்டுமே போடப்பட்ட சாலையாக இருந்தாலும்கூட, நமது கடமை நமது வாகனத்தை அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் ஓட்டுவது மட்டுமே ஆகும்.

    (சில நாடுகளில் ரோட்டின் வலது பக்கமாக மட்டுமே வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற விதிமுறை தான் உள்ளது)

    (இந்த சந்தர்ப்பத்தில், இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு பொதுவான கேள்வி. இந்தியாவைப் பொறுத்தவரை வாகனங்கள் அனைத்தும் ரோட்டின் இடது பக்கமாக மட்டுமே செல்ல வேண்டும்.

    நாம் வாகனம் எதுவும் எடுத்துச் செல்லவில்லை. ரோட்டில்தான் நாம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. நாம் ரோட்டில் இடது பக்கமாக நடந்து செல்ல வேண்டுமா? அல்லது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டுமா? பலரிடமும் கேட்டுப்பாருங்கள், ரோட்டில் இடது பக்கத்தில்தான் நடந்து செல்ல வேண்டும் என்று கூறி விடுவார்கள் .

    இந்தியாவைப் பொறுத்தவரை பாதசாரிகள் அனைவரும் வலது பக்கமாக மட்டுமே நடந்து சென்று போக்குவரத்தை எதிர்கொள்ள வேண்டும். இதுதான் சாலைவிதி.)

    இப்போது நாம் நமது கட்டுரைக்கு வருவோம்.

    கோட்டைப் போடு, கோட்டைச் சுவர் வேண்டாம் என்று கூறுகிறோம். எதற்காக அவ்வாறு கூறுகிறோம்?

    8 விதமான விதிமுறைகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். அந்த விதிமுறைகளை நாம் எவ்வாறு எடுத்து பயன்படுத்துவது?

    அவற்றை ஒரு கோட்டைச் சுவராக மாற்றி மாற்றி அதற்குள் நாம் சிறைப் பட்டுவிடக் கூடாது.

    அதற்காக அவற்றை நாம் புறக்கணித்து விடவும் கூடாது.

    சென்டர் மீடியன் இல்லாத சாலையில் நாம் வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறோம்.

    ஒரு சமயம் நாம் நமக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டியுள்ளது. வலது

    பக்கத்தில் எதிர்த்திசையில் இருந்து எந்தவொரு வாகனமும் வந்து கொண்டிருக்கவில்லை.

    அந்நிலையில் நாம் கோட்டையும் தாண்டி வலது பக்கமாகச் சென்று, முன்பக்கமாகச் செல்லும் வாகனத்தை முந்திச் சென்று விடலாம்.

    அதற்காக வலது பக்கமாக வாகனமே வராது என்று எண்ணி வலது பக்கமாகவே ஓட்டிச் சென்றுவிடக் கூடாது.

    ஏதோவொரு அவசியத்தை முன்னிட்டும் கூட, நாம் நம்முடைய விதிமுறைகளில் இருந்து நழுவி விடலாம். அதற்காக நாம் அந்த

    விதிமுறைகளை நிரந்தரமாக புறக்கணித்து விடக் கூடாது. நழுவிச் சென்றதை மறந்து விட்டு விரைவில் நாம் நமது நேர்மறை வாழ்வுக்குத் திரும்பிவிட வேண்டும்.

    அடுத்ததாக நாம் பார்க்க வேண்டுவது தான் நமது பத்தாவது கட்டளை. "காம்பவுண்டுச் சுவரை ஒப்படைத்துவிடு"

    - இதுதான் அந்த பத்தாவது கட்டளை.

    இந்தக் கட்டளை தனிநபர் சம்பந்தமான ஒன்று அல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயத்தி னரோடு சம்பந்தமான ஒன்று.

    அந்த சமுதாயத்தில் நாமும் ஓர் அங்கத்தினர் என்ற முறையில் அதனை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கடமையும் நம் அனைவருக்கும் உள்ளது.

    அகில உலக அளவில் அப்படி என்ன ஒரு கடமை நமக்கு உள்ளது?

    தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532

    • ஒரு செலவை அதிகம் செய்திருந்தாலும் அதை உணர்ந்து, வரும் மாதங்களில் திருத்திக் கொள்ள முடியும்.
    • வெளிநாட்டினர் விரும்பி மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கை இது.

    மாலை மலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் சேமிப்பு முக்கியம் என்றும், அதற்கு முக்கியத் தடையாக இருப்பது நமது செலவுப் பழக்கம் என்றும் பார்த்து வருகிறோம். இந்தப் பழக்கமானது, நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், ஒவ்வொருவரின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த ஜல்லிக்கட்டுக் காளை விளைவிக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதை அடக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் தொடர்ந்து பேசலாம்.

    "தேவையில்லாத செலவா? நானா? என்னிடம் காசே இல்லையே? எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை. கடனுக்கும், கிெரடிட் கார்டுக்கும் சரியான நேரத்தில் இ.எம்.ஐ. கட்டமுடியாமல் போவதால், வட்டி, பெனால்ட்டி என்று கட்டி நொந்து போயிருக்கிறோம். இந்த அழகில் எப்படி அதிகப்படியான செலவு செய்ய முடியும்?" என்று கேட்கிறீர்களா? வாருங்கள், உங்களின் செலவுகளைக் கொஞ்சம் பட்டியலிடுவோம். தினமும் இரண்டு முறை டீ, காபி நியாயம்தான். அதற்கு மேல் டீ, காபிக்கு செலவழித்தது எவ்வளவு? ஓட்டல் உணவுக்கு செலவழித்தது எவ்வளவு? இதை வீட்டில் தயாரித்திருந்தால் எவ்வளவு மிச்சமாகும்?



    பீடி, சிகரெட், பாக்கு, புகையிலை, பீடா, சோடா, லாட்டரி டிக்கெட், மது, அழகுப் பொருட்கள் என்று நாம் ஒவ்வொருவரும் ஒரு வேண்டாத பழக்கம் வைத்திருக்கிறோம். போகாத ஜிம்முக்கு, பார்க்காத ஓ.டி.டி.க்கு சப்ஸ்க்ரிப்ஷனை நிறுத்துகிறோமா? குடும்பத்தார் அனைவரும் உட்கார்ந்து பேசி செயல்பட்டால் கரண்ட் பில், வாட்டர் பில் குறையும் அல்லவா? நீங்கள் கவனித்திருப்பீர்கள், செல்போனில் போஸ்ட் பெய்ட் பிளானை விட பிரீபெய்ட் பிளானில் செலவு மிகவும் குறைவு. வீட்டில் ஒருவர் மட்டும் போஸ்ட் பெய்டும், மற்றவர்கள் பிரீபெய்ட் பிளானுமாக உபயோகப்படுத்துவது போன் செலவை வெகுவாகக் குறைக்கும்.

    இரண்டு கார்களுக்கு பதில் ஒரே கார் வைத்துக் கொள்வது, காரில் செல்வதற்கு பதில் பைக்கில் செல்வது, பைக்கில் செல்வதற்கு பதில் மெட்ரோவில் செல்வது எல்லாமும் செலவை குறைக்கும் வழிகளாகும். (உங்களுக்கு வசதி இருந்தால் இரண்டென்ன, மூன்று கார் கூட வைத்து, காரிலேயே ஊரைச் சுற்றலாம். தவறில்லை. ஆனால் நாம் பேசுவது பணம் சேமிக்க முடியாமல் தத்தளிக்கும் குடும்பங்களைப் பற்றித்தான்.)

    இப்படியான அதீத செலவுகளைக் குறைத்து ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேர்க்க முடிந்தால் கூட, மாதக் கடைசியில் உங்களிடம் 3 ஆயிரம் ரூபாய் இருக்கும். உங்களுக்கு வயது 30 என்றால், உங்கள் ஓய்வுக்காலத்துக்கு இன்னும் 30 வருடங்கள் உள்ளன. அது வரை மாதம் மூவாயிரம் ஒரு வங்கியில் போட்டால், 6 சதவீதம் வட்டியில், ரூ. 64,24,526 (சுமார் 64 லட்சம் ரூபாய்) சேர்ந்திருக்கும். இல்லை, மியூச்சுவல் பண்டில் போட்டால், 10 சதவீதம் வட்டியில், ரூ. 2,06,75,937 (சுமார் ரூ.2 கோடியே 6 லட்சம்) சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. 30 வருடங்கள் கழித்து இரண்டு கோடிக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது என்று எண்ணவேண்டாம். அதுவும் இல்லாவிட்டால் நமக்கு என்ன மதிப்பு என்று எண்ணிப் பாருங்கள்.

    30 வயதுக்காரர்களுக்கு இது வழி என்றால், 40, 50 வயதுக்காரர்கள் இன்னும் சற்று இறுக்கிப் பிடித்து, அநாவசிய செலவுகளைக் குறைத்து, சேமிப்பை அதிகரிக்கவேண்டும். ஏனெனில் அவர்களுக்கு இருக்கும் காலம் குறைவு அல்லவா? என்னது, செலவைக் குறைக்க வேண்டுமா என்று மலைக்காதீர்கள். வலி இல்லாத வெற்றி இல்லை.

    மேலும் செலவைக் குறைத்து அதனை சேமிப்பாக மாற்ற, அவர்கள் கடைப்பிடிக்கக் கூடிய இன்னொரு வழியும் உள்ளது. சற்று அதிக வயதில் உள்ள பலர் தங்கள் பணப் பிரச்சினைகள் குறித்து வீட்டில் உள்ளோரிடம் மனம் விட்டுப் பேசுவதில்லை. "ஏதோ அவர்களாவது ஜாலியாக இருக்கட்டும்; என் பிரச்சினையைக் கூறி அவர்கள் மூடைக் கெடுப்பானேன்" என்ற நல்ல எண்ணமே காரணம் என்றாலும், வாழ்வில் உள்ள பணப் பிரச்சினைகளின் தீவிரம் குடும்பத்தாருக்குப் புரிவது நல்லது.

    ஷாப்பிங் நேரங்களில் பல குடும்பத் தலைவர்கள் நெருப்பை விழுங்கியது போல உம்மென்று இருப்பதையும், அவர்கள் தரப்பில் உள்ள நியாயம் புரியாமல் குடும்பத்தார் அவர்கள் உம்மணாமூஞ்சி என்று தீர்மானித்து அவர்களை ஒதுக்கிவிட்டு, இஷ்டம் போல செலவழித்துக் கொண்டாடுவதையும் பார்க்க முடிகிறது. பணம் சேமிப்பதன் நன்மை குறித்தும், உங்கள் முயற்சிகள் குறித்தும் வீட்டு உறுப்பினர்களுக்கும் எடுத்துச் சொல்லி புரியவைத்தால், அவர்கள் முயற்சியும் இதில் சேரும்போது முதலீடு பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் வலிக்கான காரணம் அவர்களுக்குப் புரியும்போது உங்கள் மீதான மரியாதையும் உயரும்.

    சுந்தரி ஜகதீசன்

    இப்போது நம் நாட்டில் வறுமை குறைந்து உள்ளது. சாதாரண மக்களிடம் கூட வீட்டு உபயோகப் பொருட்கள், வங்கிக் கணக்கு, வாகனம் போன்றவை இருக்கின்றன. ஆகவே இன்று நமக்குத் தேவை, அவசியமான பொருளைக் கூட வாங்க மறுக்கும் கஞ்சத்தனமும் அல்ல; குறைந்த விலைப் பொருட்களை மட்டுமே வாங்கும் சிக்கனமும் அல்ல; "இது என் வாழ்வுக்குத் தேவைதானா" என்று தீர்க்கமாக யோசித்து, கண்டிப்பாகத் தேவை என்னும் பொருட்களை சற்று அதிகம் செலவழித்துக்கூட வாங்கலாம் என்ற தெளிவுதான்.

    ஆனால் ஜல்லிக்கட்டுக் காளையாகத் திமிறும் இந்தச் செலவினங்களை வரவுக்குள் அடக்கி, சேமிப்பிலும் வெற்றி பெற்றால்தான் இன்பம் நிலைக்கும். அதற்கான வழி என்ன?

    1. 45 வயதுக்கு மேல் வேலை நிலைக்குமா, வளர்ச்சி தொடருமா, ஓய்வு பெற்றபின் சொந்தக் காலில் நிற்க முடியுமா என்று மனதை அரிக்கும் கவலைகளோடுதானே செலவுகளை மேற்கொள்கிறோம்? அதை மாற்றி நமது செலவுகளை நாம் சந்தோஷமாகச் செய்ய வேண்டும் என்றால் நம் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். இதனை "பே யுவர் செல்ப் பர்ஸ்ட்" என்பார்கள். நமது வரவில் ஒரு தொகையை வங்கி சேமிப்புக்கு, மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கு, கடனுக்கு என்று தீர்மானிக்கிறோம் அல்லவா?அதனை மாதம் முதல் வாரத்திலேயே அந்தந்த அக்கவுன்ட்டுகளுக்கு செலுத்திவிட்டால், மீதி இருப்பதையெல்லாம் ஆனந்தமாக செலவு செய்யலாமே?

    2.'இ.டி. மனி, மின்ட்' போன்ற இலவச ஆப் ஒன்றை போனில் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டு, செலவுகளை அதில் பதிவிடுவதன் மூலம் எந்தச் செலவினம் அநாவசியம் என்று அறிய முடியும். இதனால், ஒரு செலவை அதிகம் செய்திருந்தாலும் அதை உணர்ந்து, வரும் மாதங்களில் திருத்திக் கொள்ள முடியும்.

    3. சில மாதங்களில் உணவு, வாடகை, போக்குவரத்து, மருந்துகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவழிக்கும் பழக்கத்தை மேற்கொள்வது "நோ பை" எனப்படுகிறது. வேறு சில மாதங்களில் இதனை சற்று தளர்த்தி ஆசைக்காக செய்யும் செலவுகளை குறைவாக மேற்கொள்வது "லோ பை" எனப்படுகிறது. உதாரணமாக குடும்பத்துடன் வாராவாரம் ஓட்டலில் சாப்பிட விரும்புபவர்கள் அதனை மாதம் இரு முறையாகக் குறைத்து "லோ பை" பழக்கமாக மாற்றலாம். வெளிநாட்டினர் விரும்பி மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கை இது.

    4. இவை தவிர, வீட்டில் வேண்டாது குவிந்திருக்கும் பொருட்களை குவிக்கர் போன்ற ஆப்களை பயன்படுத்தி விற்கலாம். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறி கடைக்குச் செல்வதற்கு வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து சென்று உடல் நலனை அதிகரிக்கலாம். பார்க்குகளில், பீச்சுகளில் நடைப்பயிற்சி, பாடல்களைக் கேட்டல், குழுவாக இணைந்து பாடுதல், தோட்டக் கலையில் ஈடுபடுதல், நண்பர்களுடன் அரட்டை-இது போன்ற செலவில்லாத பொழுதுபோக்குகளையும் ரசிக்கத் தெரிந்து கொள்ளலாம்.

    உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளர் வாரென் பபெட் "நீங்கள் ஆசைக்குப் பொருட்களை வாங்கினால், தேவையான பொருட்களை விற்க நேரிடும்" என்கிறார். நமது வள்ளுவரோ, "வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை; செலவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்.

    பொருளாதாரத்தைப் பொறுத்தவரை "நாளை பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்?" என்ற கவலை இன்றி வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி அல்லவா? இன்று பலரும் 40 வயதிலேயே ரிட்டயர் ஆவது பற்றியும், பொருளாதார விடுதலை பற்றியும் பேசுகிறார்கள். பணத்தேவைக்காக மட்டும் பிடிக்காத வேலையில் கைகட்டி சேவகம் செய்வதை விடுத்து, நமக்குப் பிடித்த வேலையைச் செய்து மகிழ்ச்சியாக இருப்பதே உண்மையான பொருளாதார விடுதலை. அதை அடையும் வழி "குறைவான தேவை; நிறைவான வாழ்வு" என்பதேயாகும். நாம் குறைக்க வேண்டிய செலவுகள் எவை எவை என்பதைக் கண்டறிந்து குறைத்தால் சேமிப்பு அதிகரிக்கும். சேமிப்பில் சேரும் ஒவ்வொரு ரூபாயும் நாம் செல்வத்தின் ஏணிப்படிகளில் ஏற உதவும் என்பதை ஒரு நாள் சேமிப்பு 100 ரூபாய் என்ற மேற்கண்ட கணக்கு தீர்மானமாகக் கூறுவதைப் பார்த்தோம். இதன் மூலம் நாம் விரும்பும் பொருளாதார விடுதலையை சீக்கிரமே பெற இயலும்.

    ஆகவே உங்கள் செலவினங்களில் நீங்கள் குறைக்க விரும்புகின்ற மூன்று பெரிய செலவினங்கள் எவை எவை என்று பட்டியலிடுங்கள். அவற்றை வரும் மாதத்தில் 10 சதவீதம் குறைக்க முடியுமா; அந்தப் பணத்தைக் கொண்டு சேமிப்பை எவ்வளவு தூரம் அதிகரிக்க முடிகிறது என்று பாருங்கள். (40, 50 வயதினர் குறைக்கவேண்டிய செலவு விகிதம் 15 சதவீதம் மற்றும் 20 சதவீதம்.)

    ஆல் த பெஸ்ட்!

    • நெசவுத் தொழில்தான் பாவலரின் குடும்பத் தொழில்.
    • பள்ளிக்குச் சென்று ஆசிரியருக்குப் பணம் கொடுத்துக் கல்வி கற்க அவருக்கு வசதியில்லை.

    இஸ்லாமியத் தமிழறிஞர்கள் வரிசையில் பெரிதும் குறிப்பிடத்தக்க ஓர் அறிஞர் சதாவதானி செய்குதம்பிப் பாவலர். தமிழே வாழ்வாக வாழ்ந்த பெருமகன் அவர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு என்னும் பகுதியில், இடரில் ஆயக்குடி என்னும் பெயர் படைத்த `இடலாக்குடி` அவரது சொந்த ஊர். 1874 ஜூலை 31ம் நாள் பக்கீர் மீரான் சாகிப்புக்கும் திருமதி அமீனாவுக்கும் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இவர்.

    அரபுமொழியிலும் குரானிலும் இளம் வயதிலேயே தேர்ச்சி பெற்றார். எட்டாம் வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.

    முதல் வகுப்பில் பயின்று கொண்டிருக்கும் போது வகுப்பாசிரியர் இயற்கையிலேயே இவரிடம் உள்ள அபாரமான அறிவாற்றலை உணர்ந்து வியந்தார். அடுத்தடுத்து நான்கு வகுப்புகளை ஒரே ஆண்டில் தேற வைத்தார் அவர்.

    நெசவுத் தொழில்தான் பாவலரின் குடும்பத் தொழில். வறுமை அந்தக் குடும்பத்தினரை வாட்டியது. அதனால் செய்குதம்பிப் பாவலர் தமது பத்து வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது.

    தந்தைக்கு உதவியாக நெசவுத் தொழிலில் தாமும் கூடமாட உதவி செய்யலானார். என்றாலும் ஓய்வு நேரமெல்லாம் தமிழைக் கற்பதில் ஆர்வம் காட்டினார்.

    பள்ளிக்குச் சென்று ஆசிரியருக்குப் பணம் கொடுத்துக் கல்வி கற்க அவருக்கு வசதியில்லை. எனவே முறையான படிப்பு அவருக்கு அமையவில்லை.

    அதனால் என்ன? கோவில்களில் உபன்யாசங்கள் நடைபெறும். புராணங்கள் பற்றியும், இதிகாசங்கள் பற்றியும் சொற்பொழிவாளர்கள் வந்து பேசுவார்கள். அதைச் சென்று கேட்கக் கட்டணமெதுவும் கிடையாது அல்லவா?

    பாவலர் கோவில்களுக்குச் செல்லத் தொடங்கினார். அந்தச் சொற்பொழிவுகளைக் கருத்தூன்றிக் கேட்பதன் மூலம் தம் இலக்கிய அறிவைப் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டார்.

    வீட்டில் நெய்த துணிமணிகளைக் கடை வீதிகளில் சென்று விற்பது அவர் பொறுப்புத்தான். கடைகளில் விளம்பரப் பலகைகளில் காணப்படும் தமிழ்ச் சொற்களைப் பிறர் உதவியுடன் கேட்டு அறிந்துகொள்வார். மீண்டும், மீண்டும் அவற்றை மனத்தில் இருத்தி ஞாபகப்படுத்திக் கொள்வார். இப்படியாக கடைவீதி அறிவிப்புப் பலகைகளே அவருக்குத் தமிழ் கற்பித்தன.

    தமிழ் அறிஞர்களிடம் இருந்து நூல்களைக் கடனாக வாங்கிப் படிப்பார். இவரது குன்றாத ஆர்வத்தைக் கண்டு வியந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் புத்தகங்களை அவர் படிக்க இரவல் கொடுத்தார்கள்.

    இரவல் வாங்கிய புத்தகங்களை இரவில் படித்தார் பாவலர். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், தேசிங்குராஜன் கதை, அல்லி அரசாணி மாலை போன்ற பல நூல்கள் அவருக்கு அவ்விதம் படிக்கக் கிடைத்தன.

    பாவலரிடம் ஒரு பழக்கம் உண்டு. எந்தப் புத்தகம் கைக்குக் கிடைத்தாலும் அவற்றை அன்றே முழுமையாகக் கற்று மனப்பாடம் செய்துவிடுவார். பிறகு அவருக்கு அந்த நூலைப் பற்றிய செய்திகளுக்கு நூல் தேவைப்படாது. நூல்தான் அவர் மனத்திற்குள் வந்துவிட்டதே?

    மறுநாளே தாம் கற்ற நூலைத் திருப்பிக் கொடுத்து விடுவார். அடுத்த புத்தகத்தைப் படிக்கக் கேட்பார். இப்படி ஒவ்வொரு நாளும் தாம் புதிதாக அறிந்துகொண்ட கதைகளை இரவில் தன் தாயிடம் கூறுவார் பாவலர். தாய் அமீனா தன் மகன் கூறும் கதைகளைக் கேட்டு மகிழ்வார். இது நாள்தோறும் நடக்கும் நிகழ்வாக இருந்தது.

    நெசவுத் தொழில் சார்ந்த கணக்குகளை மனதிற்குள்ளே கணக்கிட்டு உடன் விடையைச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார் பாவலர். ஒருநொடியில் கணிதத்தில் விடை சொல்லிவிடுவார். மிக நீண்ட எண்களைக் கூட ஒரு நொடியில் மனத்திலேயே கூட்டி அவர் சரியான விடையைச் சொல்வதைப் பார்த்துப் பலர் வியந்திருக்கிறார்கள்.

    மெல்ல மெல்லப் பல இலக்கண இலக்கியங்களைக் கற்கத் தொடங்கினார். நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம், நைடதம் போன்ற நூல்களைக் கற்று அவற்றில் நிபுணரானார். சிறந்த கவிஞரான அவர், சித்திரக் கவிகள் தீட்டும் ஆற்றலும் பெற்றிருந்தார்.


    திருப்பூர் கிருஷ்ணன்

    பாவலரின் ஆசிரியரான சங்கரநாராயண அண்ணாவி அவரது மொழி ஆளுமையை உணர்ந்து `நாயகத்தின் சீர்களெல்லாம் நன்கு' என்னும் ஈற்றடிக்கு வெண்பா பாடுமாறு கூறினார்.

    "பந்தம் அகல, பரியும் மனமுருக

    செந்தமிழ்ச் சீறா தெரிக்குமே - முந்திநம்

    தாயகத்தின் ஓங்கு தவமுகம்ம தென்னுநபி

    நாயகத்தின் சீர்களெல்லாம் நன்கு"

    என்று உடனே நேரிசை வெண்பா பாடி ஆசிரியரை வியப்பிலாழ்த்தினார். வெண்பா மட்டுமல்ல, அந்தாதி, சிலேடை, யமகம், திரிபு போன்ற அணிகளெல்லாம் அமையுமாறு பல கவிகளைப் பாடினார்.

    உமறுப் புலவர் எழுதிய சீறாப் புராணத்துக்கு உரையெழுதிப் பதிப்பித்தார். 'தேவலோகத்துக் கிரிமினல் கேசு, வேதாந்த கிரிமினல் கேசு, சீறா நாடகம், நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம்' என்றிப்படியான பல நூல்களை எழுதினார்.

    `இஸ்லாமிய மித்திரன், யதார்த்தவாதி` என்னும் செய்தித் தாள்கள் மூலமாகச் சமூகத் தொண்டும் ஆற்றினார்.

    அவரது பேச்சாற்றலை உணர்ந்து தமிழ் நாட்டின் பல இடங்களில் அவரைப் பேச அழைத்தார்கள். கேட்போர் வியக்கும் வண்ணம் தங்குதடை இல்லாமல் அவரால் உரையாற்ற முடிந்தது. அவர் பேச்சை ஒருமுறை கேட்டவர்கள் மறுபடி மறுபடிக் கேட்க விரும்பினார்கள்.

    இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் சுதந்திரப் போர் உருக் கொண்டது. பாவலர் மகாத்மா காந்தியாலும் அவரது கொள்கைகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார்.

    கதராடை மட்டுமே அணிந்த அவர், காந்தியடிகளின் கொள்கைகளையே வாழ்விலும் பின்பற்றினார். பற்பல இடங்களில் மேடைகளில் உரையாற்றி மக்களிடையே தேச பக்தியைத் தூண்டினார்.

    இவரது பேச்சாற்றலால் கவரப்பட்ட மக்கள் இவருக்கு 'தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், கலைக்கடல்' ஆகிய பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்கள்.

    மதுவிலக்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார் பாவலர். மதுவிலக்கை ஆதரித்துப் பல மேடைகளில் மதுவிலக்குப் பிரசாரம் செய்தார். மூளையை மழுங்கச் செய்து உடல்நலனைக் கெடுக்கும் மதுவைத் தமிழர்கள் தொடக் கூடாது என்ற கொள்கையில் அவர் தீவிரமாக இருந்தார்.

    பெண்ணுரிமையில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர் பெண்ணின் அறிவையும், பெருமையையும் விளக்கிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    தமிழில் அஷ்டாவதானிகள் என்று ஒருசிலர் உண்டு. சதாவதானிகள் மிக மிகச் சிலரே. ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்வது அஷ்டாவதானம். அதுபோல் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்வதே சதாவதானம். சதாவதானம் மிக அரியதொரு கலை.

    பாவலர் சதாவதானக் கலையிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்றே அடைமொழியோடு அவர் அழைக்கப்பட்டார்.

    பாவலர் தன் 31-வது வயதில் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அறிஞர்கள் முன்னிலையில் இச்சதாவதான நிகழ்ச்சியை 1907-மார்ச் 10-ம் நாளில் நிகழ்த்தினார்.

    ஆசுகவிபாடல், தமிழ் இலக்கிய இலக்கண வினாக்களுக்கு விடை சொல்லல், ஈற்றடிக்கு வெண்பா பாடுதல், பாத்திரங்களின் ஒலியால் அவற்றின் எடையைக் கூறுதல், மணி ஒலியின் எண்ணிக்கை கூறுதல், தம் மேல் விழும் மலர்களின் எண்ணிக்கையைக் கூறுதல், ஆயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட நாளின் கிழமை, நட்சத்திரம் போன்றவற்றைக் கூறல் என்று இப்படி நூறு வகையான நிகழ்வுகளிலும் ஒரே நேரத்தில் சதாவதானி பங்கேற்க வேண்டும்.

    நூறிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் சதாவதானக் கலையில் வென்றவராகக் கருதப்படுவார். அப்படி வென்றால் மட்டுமே சதாவதானி என்ற பட்டமும், பொற்கிழியும் அவருக்கு வழங்கப்படும்.

    தம்மிடம் கேட்கப்பட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறி ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்றார் பாவலர். ஆனால் ஒருவர் முகமதியரான அவரிடம் `துருக்கனுக்கு ராமன் துணை` என்ற ஈற்றடியில் வெண்பா பாடுமாறு வேண்டினார். அவையினர் திகைத்தார்கள். எனினும் பாவலர் அயரவில்லை.

    `பக்தர்களுக்கெல்லாம் ராமன் துணை. அவன் தம்பியரான பரதனுக்கு லட்சுமணனுக்கு, சத்-துருக்கனுக்கு ராமன் துணை' என்று பொருள் வருமாறு சமத்காரமாகப் பாடி முடித்தார். அவை கைதட்டலால் அதிர்ந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    அவதானம் நிறைவுற்ற பின்னர் சுப்பிரமணிய அய்யர், இவர் மகமதியர் அல்ல, மகாமதியர் எனக் கூறி `மகாமதி' எனப் பட்டம் வழங்கினார்.

    வித்துவான் கண்ணபிரான் முதலியார் பாவலருக்கு 'சதாவதானி' என்ற பட்டம் வழங்கிப் பெருமை சேர்த்தார். சதாவதானப் போட்டியில் வென்றமைக்காக அவருக்குப் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

    பாவலர் தம் மதத்தில் பற்றுடையவயராயினும் பிற மதம் சார்ந்தவர்களை உடன் பிறந்தவராகக் கருதியவர். பாவலரிடம் பழகியவர்களும் கற்றவர்களும் இந்து சமயத்தவராக இருந்தனர். அவரும் இந்து சமயப் பண்பாட்டைப் போற்றினார்.

    1950 பிப்ரவரி 13-ம் நாள் அவர் காலமானார். தமிழ் உலகமே இவரது மறைவை எண்ணி வருந்தியது. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

    "ஓரும் அவதான் ஒரு நூறும் செய்திந்தப்

    பாரில் புகழ்படைத்த பண்டிதனை - சீரிய

    செந்தமிழ்ச் செல்வனை, செய்குதம்பிப் பாவலனை

    எந்தநாள் காண்போம் இனி"

    எனத் தம் துயரத்தை வெளிப்படுத்தி அஞ்சலி வெண்பா எழுதினார். அவரது நினைவாக அவர் பிறந்து வாழ்ந்த வீதிக்கு பாவலர் தெரு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இடலாக்குடி அரசுப்பள்ளிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவர் பெயரால் ஒரு மணிமண்டபமும் நிறுவப்பட்டுள்ளது. இந்திய அரசு அவருக்குத் தபால்தலை வெளியிட்டு அவரை கவுரவித்துள்ளது.

    இந்திய சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தவர், அப்பழுக்கற்ற காந்தியவாதியாகத் திகழ்ந்தவர், அரிய கலையான சதாவதானத்தில் ஆற்றல் பெற்றவர். தமிழுலகில் ஒரு நட்சத்திரமாக அவர் பெயர் என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail

    ×