என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- கர்ப்பப்பை புற்றுநோய் குறிப்பாக 40 மற்றும் 50 வயதை கடந்த பெண்களுக்கு அதிகமாக வருகிறது.
- உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் வரும்.
பெண்களை பாதிக்கின்ற முக்கியமான புற்றுநோய்களில் ஒன்று கர்ப்பப்பை புற்றுநோய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சுமார் 2 லட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கொடுமை.
கர்ப்பப்பை புற்றுநோயில் 2 விதங்கள் இருக்கின்றன. ஒன்று கர்ப்பவாய் புற்றுநோய், இன்னொன்று கர்ப்பப்பை புற்றுநோய். இந்தியாவில் உள்ள பெண்களை அதிக அளவில் பாதிக்கின்ற புற்றுநோய் இந்த 2 புற்றுநோய்கள் தான். இதில் கர்ப்பவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பூசி உள்ளது. அந்த தடுப்பூசியை போட்டால் கர்ப்பவாய் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என்கிற விழிப்புணர்வு தற்போது நிறைய பேரிடம் இருக்கிறது.
ஆனால் எண்டோமெட்ரியம் என்று சொல்கின்ற கர்ப்பப்பையின் உள் லைனிங் லேயரில் வரக்கூடிய புற்றுநோயை எண்டோமெட்ரியல் புற்றுநோய், அதாவது கர்ப்பப்பை புற்றுநோய் என்று சொல்கிறோம்.
கர்ப்பப்பை புற்றுநோய் எதனால் வருகிறது?
கர்ப்பப்பை புற்றுநோய் குறிப்பாக 40 மற்றும் 50 வயதை கடந்த பெண்களுக்கு அதிகமாக வருகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நிறைய இளம் பெண்களுக்கும் இந்த கர்ப்பப்பை புற்றுநோய் வருகிறது. இந்த கர்ப்பப்பை புற்றுநோய் எதனால் வருகிறது என்பதை பார்ப்போம். கர்ப்பப்பையின் உள்ளே லைனிங் லேயரில் உள்ள செல்களில் டி.என்.ஏ. மாற்றங்கள் ஏற்படும்போது அந்த செல்கள் வழக்கத்துக்கு மாறாக மாறுபடுகிறது.
இது எதனால் இப்படி ஆகிறது என்று பார்த்தால் இதற்கு முக்கியமான ஒரு காரணம், ஹார்மோன்கள் தான். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நீண்ட காலம் அதிகமாக சுரந்து எண்டமெட்ரியம் லைனிங் லேயரில் பாதிப்பை உருவாக்கினால் அந்த செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை உள் லைனிங் லேயரில் புற்றுநோய் வரும்.
இந்தியாவில் உள்ள பெண்களை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 5 சதவீதமான பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பே கர்ப்பப்பை புற்றுநோய் வருகிறது என்பது ஒரு அதிர்ச்சிகரமான தகவல். குறிப்பாக கருமுட்டைகளுக்கான அறைகளில் சிறு நீர்க்கட்டிகளை உருவாக்கும் நோயான பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் (பி.சி.ஓ.டி.) இருக்கின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையை எண்டோமெட்ரியல் ஹைப்பர்பிளேசியா என்று சொல்கிறோம். இந்த ஹைப்பர்பிளேசியா என்பது புற்றுநோய்க்கு முந்தைய நிலை ஆகும். இந்த பெண்களுக்கு அதிகமாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன், கர்ப்பப்பையில் உள் லைனிங் லேயரை பாதிக்கும் போது ஹைப்பர்பிளேசியா தன்மையானது அதிகமாகி, கர்ப்ப்பப்பை லைனிங் லேயரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்:
பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு செல்லானது 7 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே ஹைப்பர்பிளேசியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு, கர்ப்பப்பையில் உள்ள செல்லானது 27 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாக இருக்கும். அவ்வளவு தடிமன் இருக்கும் நிலையில், அதில் உள்ள செல்களின் பெருக்கம் காரணமாக டி.என்.ஏ. மாறுபாடு ஏற்பட்டு, பிறழ்வை உருவாக்கி புற்றுநோய் செல்களாக மாறும்.
இந்த சூழ்நிலையில் தான் பெண்களுக்கு எண்டோமெட்ரியல் ஹைப்பர்பிளேசியா வரும்போது அதில் புற்றுநோய்க்கான மாற்றங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான முக்கியமான காரணங்களை பார்ப்போம்.
கர்ப்பப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதற்கு முதல் முக்கியமான காரணம் உடல் பருமன். பெண்களுக்கு உடல் எடை கூடும்போது ஈஸ்ட்ரோஜனின் தாக்கம் அதிகமாகும். அதனால் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, கர்ப்பப்பை புற்றுநோய் அதிகம் வருவது என்பது பொதுவான காரணமாக பார்க்கப்படுகிறது.
உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் வரும். பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் இருந்தால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் போது ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும். கருமுட்டைகள் வளர்ச்சி சீராக இல்லாததால், புரோஜெஸ்டிரோன் எனப்படும் இனப்பெருக்க ஹார்மோனின் பாதுகாப்பானது கருப்பைக்கு கிடைக்காத நிலையில் அதுபோன்ற பாதிப்பு கொண்ட பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. திருமணம் ஆகி குழந்தையே பெறாத பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் இருக்கின்ற இனப்பெருக்க ஹார்மோன்தான் புரோஜெஸ்டிரோன். இது சீராக இல்லாத நிலையில் 40 வயதை கடந்த பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதனால்தான் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள், நீண்ட காலம் கழித்து குழந்தைபேறு பெறும் பெண்கள் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பானது மிகவும் அதிகமாக இருக்கும்.
சானிட்டரி நாப்கின் வேதிப்பொருளால் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு:
கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான அடுத்த முக்கியமான காரணம், தற்காலத்தில் அதிகரித்து வருகிற ஒரு பிரச்சினை கர்ப்பப்பை ஹார்மோன்கள் சுரக்கின்ற நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைப்பதாகும். இந்த நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைப்பானது பலநேரங்களில் பெண்கள் பயன்படுத்துகின்ற சில ரசாயன பொருட்களால் ஏற்படுகிறது.
இன்றைக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், நிறைய பெண்கள் தங்களின் கூந்தலை நேராக மாற்றுவதற்கு பலவித ரசாயனம் கலந்த வண்ணங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த ரசாயனம் கலந்த வண்ணங்களை நீண்ட காலமாக பயன்படுத்தினால் கர்ப்பப்பை புற்றுநோய் வருகிறது என்று கண்டு பிடித்து உள்ளார்கள்.
மேலும் டயாக்சின் என்கிற ரசாயன பொருளும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இந்த டயாக்சின் என்கிற வேதிப்பொருள், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினில் உள்ள பிளாஸ்டிக்கில் இருக்கிறது. இந்த டயாக்சினும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் ஒரு வேதிப்பொருள் ஆகும். இது ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், இதனால் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் பெண்கள் பயன்படுத்துகிற நகப்பூச்சுக்கள் மற்றும் தினமும் பயன்படுத்துகின்ற பெரும்பாலான ரசாயன பொருட்கள் ஆகிய அனைத்துமே புற்றுநோய் வருவதற்கான மாற்றங்களை உருவாக்கக் கூடியதற்கான அடிப்படையாக அமைகிறது. கண்டிப்பாக இதுபோன்ற ரசாயன பொருட்களும் புற்றுநோய் வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
மேலும் நீண்டகாலம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் ஏற்படுகிறது. சில பெண்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை ஏதாவது ஒரு காரணத்துக்காக நீண்ட காலம் பயன்படுத்துகிறார்கள். அதனுடைய பின்விளைவுகள் தெரியாமல் பயன்படுத்தும்போது கர்ப்பப்பை புற்றுநோய் பிரச்சினைகள் உருவாகிறது.
பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய் பாதித்த பெண்கள் பலருக்கும் கருமுட்டைகள் வளர்ச்சி சீராக இல்லாததால், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் தாக்கம் குறைவாகி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாவதால் எண்டோமெட்ரியல் லைனிங் லேயரில் தூண்டுதல் ஏற்பட்டு கர்ப்பப்பை புற்றுநோய் வரலாம்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரலாம்:
இந்த காலத்தில் பல பெண் குழந்தைகள் 9 வயது, 10 வயது நிரம்பும்போதே பருவம் அடைந்து விடுகிறார்கள். அதேபோல் சில பெண்களுக்கு ரொம்ப தாமதமாக மெனோபாஸ் வருகிறது. இந்த நீண்ட காலகட்டங்களில் ஈஸ்ட்ரோஜனின் பாதிப்பு மற்றும் கர்ப்பப்பையில் அதன் தாக்கம் இருந்தால் புற்றுநோய் வரலாம். அதாவது நீண்டநாள் ஈஸ்ட்ரோஜனின் தாக்கம் இருக்கும் பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இதுதவிர உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி ஆகியவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை அதிகரித்து, அதனாலும் கர்ப்பப்பை புற்றுநோய் வரலாம்.
இன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பாக்கெட் உணவுகளை அதிகமாக உட்கொள்கிறவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் ரெட் மீட் அதாவது மட்டன், மாட்டிறைச்சி ஆகியவற்றை நிறைய உட்கொள்கிறவர்கள் மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

இதுதவிர யாருக்காவது மார்பக புற்றுநோய் இருந்தாலோ அல்லது குடல் புற்றுநோய் இருந்தாலோ அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுதவிர குடும்பத்தில் மரபு ரீதியாக யாருக்காவது கர்ப்பப்பை புற்றுநோய் இருந்தால், கண்டிப்பாக அவர்களுடைய சகோதரிகள், அவர்களின் குழந்தைகள், அவர்களை சார்ந்த பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியோருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
எனவே கர்ப்பப்பை புற்றுநோய் வருவது பல காரணங்களை பொருத்து இருக்கிறது. டி.என்.ஏ. மாறுபாடு, உடல் பருமன், கருமுட்டைகள் வளர்ச்சி இல்லாத நிலை, ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பது, தேவையில்லாத ஈஸ்ட்ரோஜன் நிறைய எடுப்பது, நாம் பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் ஆகியவற்றால் கர்ப்பப்பை புற்றுநோய் வரும்.
இந்த கர்ப்பப்பை புற்றுநோய் என்னென்ன அறிகுறிகளை உருவாக்கும்? இதனை வராமல் தடுப்பது எப்படி? ஒருவேளை வந்தால் இதனை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது எப்படி? இதனை முழுமையாக குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
- ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் பாதிப்பு ஜாதகரின் உயிர் அல்லது பொருள் காரகத்தையும் பாதிக்கும்.
- தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான பரிகார முறைகளை பார்ப்போம்.
ஜாதகருக்கு சுப பலன்களை உரிய காலத்தில் தராமல் சர்ப்பம் எனும் ராகு, கேதுக்களால் காலம் தாழ்த்தி தரப்படுவதே காலசர்ப்ப தோஷம் எனப்படுகிறது. கடந்த வாரம் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் ராசிகாரர்களுக்கு கோட்ச்சார கால சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார வழிபாட்டு முைறகளை பார்த்தோம். இன்று கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான பரிகார முறைகளை பார்ப்போம்.
கன்னி
ராசிக்கு பனிரெண்டில் கேதுவும், ஆறில் ராகுவும் இருக்கிறார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும். பாஸ்போர்ட் விசா சார்ந்த பிரச்சினைகள் தீரும். சுப விரயங்கள் மிகுதியாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகமாகும். அரசின் மானியம் அரசு ஆதரவு கிடைக்கும்.
தனித்திறமையுடன் செயல்படுவீர்கள். நிம்மதியான தூக்கம் வரும். கடன், சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வங்கியில் விண்ணப்பித்த வீடு, வாகன கடன், தொழில் கடன், பிள்ளைகளின் கல்வி கடன், போன்றவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும்.
ராகு பகவானுக்கு உளுந்து வடை படைத்து தானம் செய்யலாம்.
துலாம்
ராசிக்கு ஐந்தில் ராகு பதினொன்றில் கேது சஞ்சரிக்கிறார்கள். சகல சவுபாக்கியம் புகழ் அந்தஸ்துடன் வாழ்வீர்கள். விரும்பிய அனைத்து மாற்றங்களும் வந்து சேரும். காதல் முயற்சி வெற்றி தரும். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். பங்கு சந்தை ஆர்வம் கூடும். புத்திர பிராப்தம் உண்டாகும் திடீர் அதிர்ஷ்டம், உயில் சொத்து, குல தெய்வ அனுகிரகம், வெளிநாட்டு பயணம் போன்ற பாக்கிய பலன் கிடைக்கும்.
இதுவரை ஒரு தொழில் செய்தவர்களுக்கு புதிய இணை தொழில் அமையும். மூத்த சகோதரன் சித்தப்பா இவர்கள் மூலமாக இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீக சொத்து தொடர்பான முடிவுகள் சாதகமாகும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சுந்தர காண்டம் படிக்க வேண்டும்.
விருச்சிகம்
சுகஸ்தானமான நான்காம் இடத்தில் ராகு. தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் கேது. புதிய ஆடம்பரமான அசையும் அசையா சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அழகு, ஆடம்பர வீட்டு உபயோக பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். தாய்க்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கும்.
குடும்ப உறவுகளை பகைக்க கூடாது. இதுவரை உழைத்த உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்யும் நேரம். விற்க முடியாத சொத்துக்களை விற்க உகந்த நேரம்.
இனிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் புதிய தொழில் முயற்சிகளில் கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். சிரமங்களை தவிர்க்க தெருவோரம் வசிப்பவர்களுக்கு உணவு, உடை தானம் செய்ய வேண்டும்.
தனுசு
ராசிக்கு மூன்றில் ராகு ஒன்பதில் கேது சஞ்சாரம் செய்வதால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தபடுத்தும் ஆன்மீக வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். சுய ஜாதக ரீதியாக பித்ரு தோஷம் உள்ளவர்கள் முறையான தில ஹோமம் செய்வதால் பித்ருக்கள் சாந்தி அடைவார்கள். பிறருக்கு ஜாமீன் போடுவதையும் பெறுவதையும் தவிர்க்க வேண்டும் சொத்துக்கள் வாங்கும் போதும் விற்கும் ேபாதும் முறையாக ஆவணங்களை சரிபார்க்கவும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்லுவது நல்லது. தந்தை வழி முன்னோர்களால் ஏற்பட்ட இன்னல்கள் சீராகும். உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். முன்னோர்களின் ஆன்மாவை சாந்திப்படுத்தும் பித்ருக்கள் வழிபாடு அவசியம்.

ஐ.ஆனந்தி
மகரம்
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டமஸ்தானத்தில் கேது இருப்பதால் தன வரவில் நிலவிய தடைகள் அகலும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் கூடும். இது திருமண தடையை அதிகரிக்கும் அமைப்பாகும். கணவன்-மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்.
வேற்று மொழி கற்கும் ஆர்வம் கூடும். சிலருக்கு வழக்கின் தீர்ப்பு தள்ளிப் போகும் அல்லது புதிய வழக்குகள் உருவாகும். ஆரோக்கிய குறைபாடு, துன்பம், துயரம், அழுகை, அவமானம், வாக்கால் பிரச்சினை போன்றவற்றில் இருந்து விடுபட அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது.
கும்பம்
ராசியில் ராகு ஏழில் கேது இருப்பதால் இது சர்ப்ப தோஷ அமைப்பாகும். அந்நிய மொழி கற்பதில் ஆர்வம் கூடும். கடினமான முயற்சியும் உழைப்பும் நல்ல பலன் தரும். சிறு சிறு மன சஞ்சலம், பய உணர்வு. உணவு ஒவ்வாமை போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் இருக்கும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் ஜனன கால ரீதியான திருமணத் தடை அகலும். செயற்கை கருத்தரிப்பு முறையே அணுக உகந்த காலமாகும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம். மதிக்க வேண்டியவர்களே உதாசீனம் செய்வார்கள். போலி உறவுகள் அதிகரிக்கும். மேலும் சுப பலனை அதிகரிக்க வீட்டின் அருகில் உள்ள அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யவும்.
மீனம்
ராசிக்கு ஆறில் கேது பனிரெண்டில் ராகு இருப்பதால் வெளிநாட்டு பயணத்தில் நிலவிய தடை அகலும் எதிர்பார்த்த பண உதவி அல்லது கடன் தொகை கிடைக்கும். தீராத பல பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கணக்கிட முடியாத வீண் விரயங்கள் வரும். வீடு, மனை, வாகனம் என சுப விரயச் செலவுகள் ஏற்படும். சேமிப்பு கரையும். விரயத்தை முதலீடாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். கண் தொடர்பான நோய்க்கு, அறுவை சிகச்சை செய்ய நேரும். கண்ணாடி அணிய வேண்டி வரும். உறவிற்காக சூழ்நிலை கைதியாக இருக்க நேரும். காரிய சித்திக்கு சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட வேண்டும்.
ஜாதகத்தில் ராகு கேது செயல்படும் விதம்
நவகிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளது வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது. இதில் உருவம் உள்ள ஏழு கிரகங்களைக் காட்டிலும் உருவமற்ற இரண்டு நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவுமே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன. கர்ம காரகன் நீதி மான் சனி என்றால் சனி பகவானின் பிரதிநிதிகள் ராகு கேதுக்கள். ஒரு ஆன்மா பல்வேறு பிறவிகளில் செய்த பிறப்புகளில் செய்த வினைப் பதிவுகள் அனைத்தும் சேமித்து வைக்கும் பெட்டகமாக விளங்குவதும், ஒவ்வொரு பிறப்பிலும் வெவ்வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக்கு ஏற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அனுபவிக்க செய்வதும் இவர்கள் தான். ஆகையால் இவர்களின் தன்மையை கொண்டு ஒரு ஜாதகத்தில் தோஷ பலன்கள் வீரியமானதா இல்லையா? என்பதை நிர்ணயிக்கிறோம்.
பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சுகளையும் தடுக்கும் ஆற்றலை பெற்றவர்கள் இவர்கள். மேலும் ஒரு ஜாதகரின் மரபு வழி செய்திகளை செல்களின் மூலம் கொண்டுவருவதும் செயலாக்கம் செய்வதும் இவர்களே. ராகு மற்றும் கேது என்பது நம் முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள்செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.
அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாவிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம். இதை அறிவியல் ரீதியாக கூறினால் மனிதர்களின் மரபணுவில் இருக்கும் 46 குரோமோசோம்கள் ராகு கேது கலவைகளாகும்.
குரோமோ சோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி போன்ற அனைத்து குணங்களும் பதிவாகி இருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தை வழியை குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழியை குறிப்பவை (கேது). மரபுவழி பாவங்களை குறிப்பிடும் ராகு கேது என்னும் இரு சர்பங்கள் மத்தியில் நிற்கும் அனைத்து கிரகங்களும் பலம் இழக்கிறது. அதனால், எவ்வளவு பெரிய யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த யோகம் தரும் கிரகங்களின் திசை புத்திகள் ஜாதகரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுப்பதில்லை.
முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு என்னும் பாம்பின் வாயின் பிடியில் சிக்கி அனுபவித்து 36 ஆண்டுகள் கழித்து பல அனுபவங்கள் பெற்று கேதுவின் வால் பகுதியில் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் பாதிப்பு ஜாதகரின் உயிர் அல்லது பொருள் காரகத்தையும் பாதிக்கும். வீரியமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரகம் எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவக ரீதியான உயிர் காரகத்துவம் மற்றும் பொருள் காரகத்துவத்தையும் சிதைக்கும் வல்லமை உண்டு.
அதே நேரத்தில் அஷ்டம பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாத தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அஷ்டமபாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும் தோஷம் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். சாதாரண மனிதன் ஒருவன் சாதனையாளராக மாறுகிறான் என்றால் அங்கு ராகுவே முன்னணியில் நிற்பார். வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளவன் ஆணவத்தால் ஆடினால் அவனை அடக்க ராகு தயங்க மாட்டார். முடி சார்ந்த மன்னனும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே என்பதை உணர்த்துபவர் கேது. ராகு லவுகீகம் என்றால் கேது மோட்சம் ஆன்மீகம். ராகு அழிவு கிரகம், கேது தடை கிரகம். கண் இமைக்கும் நேரத்தில் நன்மையை தீமையாகவும் தீமையை நன்மையாகவும் மாற்றக்கூடிய சக்தி படைத்த கிரகம் ராகு. அதேபோல் ஒருவரின் விருப்பத்தை கேதுவும் நிறைவு செய்வார். ஆனால் விருப்பத்திற்கான தகுநிலையை வழங்கி தடை தாமதத்தை தந்து காலதாமதமாக பலன் தருபவர்கள். எனவே அனைத்து விதமான ஆசைகளையும் அடக்கி, பந்த பாசங்களை அறுத்து, மனசாட்சிக்கு பயந்து முழுமையாக தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்கள் எளிதாக பிறவிப் பிணியிலிருந்து மீள முடியும்.
செல்: 98652 20406
- திருச்செந்தூர் ஆலயத்தில் வைகாசி மாதத்தில் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
- பராசர முனிவர் அந்த குளத்தில் நீராடுவதற்காக வந்து கொண்டு இருந்தார்.
திருச்செந்தூர் முருகன் திருத்தலம் 4 யுகங்களிலும் நடந்த பல்வேறு சிறப்பான நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டதாகும். தமிழகத்தில் வேறு எந்த முருகன் திருத்தலத்துக்கும் இந்த சிறப்பும் பெருமையும் இல்லை.
நான்கு யுகங்களில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்துள்ளன. அதிலும் முனிவர்கள் கொடுத்த சாபங்களும் அதில் இருந்து விமோசனம் பெற்ற புராண வரலாறுகளும் இன்றும் பதிவுகளாக உள்ளன. அதில் துவாபர யுகத்தில் நடந்த ஒரு புராண நிகழ்ச்சி இன்றும் திருச்செந்தூர் ஆலயத்தில் வைகாசி மாதத்தில் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
வசிஷ்ட முனிவர் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். மிகப்பெரிய சக்தி வாய்ந்த முனிவர். இவரது பேரன் பராசர முனிவர். இவரும் தாத்தாவுக்கு நிகரான ஆற்றல்கள் கொண்டவர். மகரிஷி என்று போற்றப்பட்ட இவர் ஏராளமான இந்து புராண நூல்களின் தொடக்கத்துக்கு வித்திட்டவர்.
விஷ்ணு புராணத்தை முதல் முதலில் தொகுத்து எழுதியவர் இவர்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. இவரது மகன் வியாசர். இவர் பராசர முனிவருக்கும் சத்தியாவதி என்ற பெண்ணுக்கும் மகனாக பிறந்தவர் ஆவார். பிற்காலத்தில் தந்தை பராசர முனிவரின் குறிப்புகளை வைத்து வியாசர் வேதங்களில் சிறப்பு பெற்றார் என்பார்கள். இதன் காரணமாகவே வேத வியாசர் என்ற சிறப்பு பெயர் அவருக்கு ஏற்பட்டது.

துவாபர யுகத்தில் வாழ்ந்த முனிவர்களில் முதன்மை முனிவராக திகழ்ந்த பராசர முனிவர் ஜோதிட நூல்கள் எழுதுவதிலும் புகழ் பெற்று இருந்தார். இவரது ஜோதிட குறிப்புகளைத்தான் இன்றும் ஜோதிடர்கள் பின்பற்றுகிறார்கள். இத்தகைய சிறப்புடைய பராசர முனிவருக்கு தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என்று மேலும் 6 மகன்கள் இருந்தனர். இந்த 6 மகன்களும் மிக மிக சுட்டித்தனம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் குறும்பு செய்வது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது.
ஒருதடவை அவர்கள் 6 பேரும் குளம் ஒன்றில் இறங்கி நீராடினார்கள். அந்த குளத்தில் குளிப்பது அவர்களுக்கு சுகமாக இருந்ததால் பல்வேறு வடிவம் எடுத்து விளையாடினார்கள். இதன் காரணமாக அந்த குளத்தின் தண்ணீர் கடுமையாக மாசுப்பட்டது.
அந்த குளத்தில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் உள்பட நீர்வாழ் உயிரினங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின. சில மீன்கள் அசுத்தமான தண்ணீர் காரணமாக செத்தும் விழுந்தன. என்றாலும் பராசர முனிவரின் 6 மகன்களும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் பராசர முனிவர் அந்த குளத்தில் நீராடுவதற்காக வந்து கொண்டு இருந்தார். தனது 6 மகன்களும் அந்த குளத்தை பாழ்ப்படுத்தி விட்டதை நேரில் பார்த்து கடும் கோபம் அடைந்தார். உடனே தனது 6 மகன்களையும் எச்சரித்தார்.
"இந்த குளத்தின் நீரானது கங்கை நீருக்கு சமமாகும். சிவபெருமானின் தலையில் இருந்து உற்பத்தியாகி நாட்டு மக்களுக்கு பாவங்களை போக்கும் சக்தி கொண்ட அந்த புனித நீரை கெட்டுப்போகும் வகையில் செயல்படுவது மிகப்பெரிய பாவம் ஆகும். எனவே இனி இந்த குளத்தை அசுத்தப்படுத்தாதீர்கள். குளித்தது போதும். வெளியே வாருங்கள் என்று மகன்களிடம் பராசர முனிவர் கூறினார்.
ஆனால் பராசர முனிவரின் 6 மகன்களும் குளிப்பதில் இருந்த சுகம் காரணமாக தந்தையின் சொல்லை செவி கொடுத்து கேட்கவில்லை. தந்தை சொல்லை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குளத்தில் ஆட்டம் போட்டபடி இருந்தனர். அவர்கள் போட்ட ஆட்டத்தில் மேலும் பல மீன்கள் செத்து மிதந்தன.

இதை கண்டதும் பராசர முனிவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். மீன்கள் அழிவுக்கு காரணமான தனது 6 மகன்களுக்கும் அவர் சாபம் கொடுத்தார். இந்த குளத்தில் உள்ள மீன்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு வேதனை அடைந்ததோ அதை உணரும் வகையில் 6 பேரும் மீனாக மாறுங்கள் என்று கோபத்தில் அவர் சாபமிட்டார்.
அடுத்த நிமிடம் அவரது 6 மகன்களும் மீன்களாக மாறினார்கள். திடீரென தங்களது உருவம் மாறிப் போனதை உணர்ந்த 6 பேரும் மிகவும் வருந்தினார்கள். தந்தையின் சொல்லை கேட்காமல் விளையாடியதால் ஏற்பட்ட விபரீதத்தை அறிந்து தங்கள் தவறை உணர்ந்தனர்.
தங்கள் தந்தையிடம் அவர்கள் 6 பேரும் மன்றாடினார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அதோடு தாங்கள் மீனாக மாறியதற்கு காரணமான சாபத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழியையும் சொல்லுமாறு கெஞ்சி கேட்டனர்.
இதனால் அவர்கள் 6 பேர் மீதும் பராசர முனிவருக்கு இரக்கம் ஏற்பட்டது. அவர் மனம் உருகி தனது மகன்களிடம், "நீங்கள் தொடர்ந்து இந்த குளத்திலேயே வாழ்ந்து வாருங்கள். பார்வதிதேவியின் அருளால் குறிப்பிட்ட காலத்தில் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து 6 பேரும் அந்த நீர்நிலையிலேயே வாழ்ந்து வந்தனர். எப்படியும் தங்களுக்கு பார்வதி தேவியின் கருணை பார்வை கிடைக்கும் என்று நம்பிக்ைகயோடு காத்திருந்தனர். இந்த நிலையில் சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட 6 தீப்பொறிகள் மூலம் உருவான கந்தபெருமானை பார்வதிதேவி வளர்த்து வந்து கொண்டிருந்தாள்.
ஒருநாள் பார்வதிதேவி சிவலோகத்தில் முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஞானப்பாலில் இருந்து ஒரு துளி சிதறியது. அந்த துளி அளவு பால் பூலோகத்தில் பராசர முனிவரின் 6 மகன்களும் 6 மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது.
அந்த துளி அளவு பாலை 6 மீன்களும் அருந்தின. அடுத்த வினாடி 6 மீன்களும் சாப விேமாசனம் பெற்றன. அந்த மீன்கள் மீண்டும் பராசர முனிவரின் மகன்களாக மாறினார்கள். அதோடு பார்வதிதேவியின் ஞானப்பாலை அருந்திய காரணத்தால் அந்த 6 பேருக்கும் முனிவர்களுக்குரிய ஆற்றல் கிடைத்தது.
6 பேரும் முனிவர்களாக வெளியில் வந்தனர். தங்களுக்கு சாப விேமாசனம் வழங்கிய சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் நன்றி செலுத்த முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சிறப்பு ஹோமங்கள் வளர்த்து சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் பூஜைகள் செய்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. "நீங்கள் 6 பேரும் திருச்செந்தூர் தலத்துக்கு சென்று உரியமுறையில் வழிபாடுகள் செய்து தவம் செய்யுங்கள். உங்கள் தவத்தை மேம்படுத்தும் வகையில் திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு அருள்புரிவார்" என்று அசரீரி கேட்டது.
இதையடுத்து 6 ேபரும் திருச்செந்தூர் முருகன் தலத்துக்கு சென்றனர். அங்கு முருகனை தியானித்து நீண்ட தவம் இருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்த முருகப்பெருமான் வைகாசி விசாகம் தினத்தன்று அந்த 6 பேருக்கும் நேரில் காட்சி கொடுத்தார்.
அதோடு திருச்செந்தூர் தலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு உதவும்படி அருளாசி புரிந்தார். அதை ஏற்று அந்த 6 பேரும் திருச்செந்தூரில் சேவை செய்து வருகிறார்கள். இதை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் திருவிழா திருச்செந்தூரில் 10 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் 10-வது நாள் அதாவது வைகாசி விசாகம் தினத்தன்று முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது. துவாபர யுகம் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று பல ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் திருச்செந்தூரில் நடத்திக் காட்டப்படுவது தனித்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி திருச்செந்தூர் தலத்தில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடத்திக் காட்டப்பட உள்ளது. அன்று திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் நீர்த்தொட்டி அமைக்கப்படும். அந்த நீர்த் தொட்டியில் 6 மீன் பொம்மைகளை மிதக்க விடுவார்கள்.
அங்கு ஜெயந்திநாதர் எழுந்தருள்வார். திருச்செந்தூர் முருகனின் உற்சவர்களில் ஒருவரான ஜெயந்திநாதர் பார்வதிதேவி வழங்கிய ஞானப்பாலை குடிக்கும்போது ஒரு துளி சிந்துவது போல காட்சி அமைக்கப்படும். அந்த ஒருதுளி பாலை 6 மீன்களும் குடிப்பது போன்றும் பக்தர்களுக்கு காண்பிக்கப்படும்.
ஞானப்பாலை அருந்தும் மீன்கள் 6 முனிவர்களாக மாறுவதும் நடத்திக் காட்டப்படும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த புராண நிகழ்வை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். பராசர முனிவர் மகன்கள் சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் தலத்தில் நேரில் கண்டுகளித்து முருகனை வழிபட்டால் நம் வாழ்வில் ஏற்பட்ட முன்வினை பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி முன்வினை பாவங்களால் உருவாகும் துன்பங்களை முருகன் நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
சாபங்கள் காரணமாக எத்தனையோ பேர் தங்களையும் அறியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு சாபம் இருக்கிறது என்பதை கூட உணராதவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். எனவே நம்பிக்கையோடு திருச்செந்தூர் தலத்துக்கு சென்று இந்த புராண நிகழ்வை நேரில் கண்டால் நிச்சயம் நமது ஆத்மா சுத்தப்படும் என்பது உறுதியானதாகும்.
இந்த நிகழ்ச்சியை பார்க்க செல்பவர்கள் அன்றைய தினம் முருகனை மனதில் நிறுத்தி விரதம் இருப்பது மிக மிக நல்லது. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான திருச்செந்தூர் முருகனை நம்பி விரதம் இருந்து வைகாசி விசாக நிகழ்ச்சிகளை கண்டு களித்தால் நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். வைகாசி விசாகம் விரதம் இருக்கும் நாளில் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் மற்றும் திருச்செந்தூர் தலம் மீது பாடப்பட்டு இருக்கும் பாடல்களை மன முருகி பாடினால் சாபங்கள் விலகி குலம் தழைக்கும். சகல செல்வங்களும் தேடி வரும்.
வாய்ப்பு இருப்பவர்கள் அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு சிவப்பு அரளி அல்லது செம்பருத்தி மலர்களை வழங்கி வழிபடலாம். வீட்டில் முருகன் படத்தின் முன்பு பச்சை பருப்பு பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.
இதே போன்று இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.
- தென்கொரியா இதுவரை நான் பார்க்காத நாடுகளில் ஒன்று.
- எனது சந்தோசத்தை விட என் மகளின் சந்தோசமே எனக்கு முக்கியமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்ற வெளிநாட்டு பயணம். மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து கொஞ்சம் ெகாஞ்சமாக மீண்டேன். என்னைப் பற்றி நான் நினைப்பதை விட என் மகள் நைனிகா மீதான நினைப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
முன்பெல்லாம் ஆண்டு தோறும் கோடை காலம் வந்தால் எங்களுக்கு வசந்த காலம் மாதிரி தான். ஏனெனில் கோடை காலத்தில் ஏதாவது வெளிநாடு சுற்றுலா சென்று விடுவோம்.
ஆரம்பத்தில் அப்பா, அம்மாவோடு... அதன்பிறகு கணவர் சாகர், குழந்தை என்று எங்களின் ஒவ்வொரு உல்லாச பயணமும் ஒரு உற்சாக பயணம் போலவே அமையும். அப்பா, கணவர் மறைவுக்கு பிறகு நைனிகாவின் சந்தோசம் முக்கியம் என்பதால் முதல் முறையாக நான் தன்னந்தனியாக என் மகளோடு சுற்றுலாவுக்கு திட்டமிட்டேன்.
அதன்படி 2025 ஏப்ரலில் தென் கொரியாவுக்கு புறப்பட்டோம். இதுவரை நான் சென்ற சுற்றுலாவுக்கும் இந்த முறை சென்றதற்கும் நிறையவே வித்தியாசம் ெதரிந்தது. கடந்த கால நினைவுகள் ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் என் கண்முன்னால் நிழலாடியது.
இந்த முறை எனது சந்தோசத்தை விட என் மகளின் சந்தோசமே எனக்கு முக்கியமாக இருந்தது. எனவே எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் கவனமாக இருந்தேன்.
தென்கொரியா இதுவரை நான் பார்க்காத நாடுகளில் ஒன்று. எனவே அந்த நாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சுமார் 8 மணி நேர விமான பயணத்துக்கு பிறகு தென் கொரியாவின் சியோல் நகரை அடைந்தோம்.

நாங்கள் ஏற்பாடு செய்து இருந்த வழிகாட்டி எங்கள் வருகையை எதிர்பார்த்து காத்து இருந்தார். அவரை பார்த்ததும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அங்குள்ள மக்கள் ஆங்கிலம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. எங்களுக்கு கொரிய மொழி தெரியாது. எனவே அவர்களோடு பேசி பழக மட்டும் சிரமமாக இருந்தது. தென் கொரியாவின் பாய்ஸ் மியூசிக் குழு உலகம் முழுவதும் இன்றைய தலை முறையிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தனித்துவமான இசை பாணியை உருவாக்கி உள்ளது. அத்துடன் அந்த நாட்டு கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்த குழுவினர் தங்கி இருந்த வீட்டை பார்த்தோம். அந்த வீட்டினுள் தனியாக ஒரு ஹாலில் அந்த நாட்டின் பாரம்பரிய நடனத்தை அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருக்கும் சுமார் ஒரு மணி நேரம் கற்று தருகிறார்கள். நமக்கு தான் டான்ஸ் என்றால் சொல்லித்த ரவும் வேண்டுமா? அவர்கள் ெசால்லித் தந்ததை அப்படியே அச்சு பிசராமல் நான் ஆடியதை பார்த்ததும் பயிற்சியாளருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இவ்வளவு அழகாக ஆடுகிறீர்களே எப்படி? நீங்கள் டான்சரா? என்றார். நான் ஒரு நடிகை என்றோ.. நன்றாக டான்ஸ் ஆடுேவன் என்றோ காட்டிக் கொள்ளவில்லை.
சிரித்துக்கொண்டே ெகாஞ்சம் டான்ஸ் தெரியும் என்று மட்டும் கூறினேன். அடுத்ததாக புசான் நகர கடற்கரை உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அழகிய கடற்கரை. கடலுக்கு அடியில் அழகிய கண்ணாடி பாலம்... அதனுள் நடக்கும் போது நம்மை சுற்றி கடல் தண்ணீர் புரண்டு ஓடும் அழகே அழகுதான். அந்த நகரம் உணவுக்கும், ஸ்பாவுக்கும் பிரபலம். நம்மைப் போலவே அங்குள்ள மக்களும் அரிசி சோற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் சோறு கொஞ்சம் இருக்கும். காய்கறியில் பலவகையான உணவுகளை தயாரித்து சோற்றுடன் சாப்பிடுகிறார்கள். அதாவது ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறார்கள்.

ஓட்டல் ஒன்றில் சாப்பிட அமர்ந்திருந்தோம். மேஜையில் அமர்ந்து ஆர்டர் செய்தால் போதும். பரிமாற ஆட்கள் வரமாட்டார்கள். அப்படியே குறுக்கும், நெடுக்குமாக ஓடி கொண்டிருக்கும் பெல்ட்டின் வழியாக நாம் ஆர்டர் செய்த உணவு நம் மேஜைக்கு வந்து விடும். அதை பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.
நம்மூரில் தலைக்கு மசாஜ் என்றால் தலை முடிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கும். ஆனால் அங்கு ஒரு மணி நேரம் மசாஜ் செய்கிறார்கள். தலைமுடி 'சில்கி' யாகி வாவ்... என்று பிரமிக்க செய்தது. அங்குள்ள பிரபலமான பொழுது போக்கு பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளன. நான் ஒரு காரை எடுத்து ஒட்டினேன். எனக்கு அது எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பெதல்லாம் தெரிய வில்லை. ஆனால் நைனிகா அதையெல்லாம் தெரிந்து வைத்து கொண்டு இன்னொரு காைர எடுத்து ஓட்டி என்னை முந்தி சென்று எனக்கு டாடா காட்டி சென்றாள். அவள் முகத்தில் தெரிந்த சந்தோசம் தான் எனக்கு கூடுதல் சந்தோசத்தை கொடுத்தது. ஜார்ஜூ தீவு அந்த நாட்டின் பழமையான பாரம்பரியத்தை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்தில் பொருளீட்ட பெண்களும் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டார்களாம். அதை குறிக்கும் வகையில் வின்ட்(W). ராக்(R), விமன்(W) என்று அழைக்கிறார்கள். காற்றோடு பாறைபோல் நின்று போராடிய பெண்கள் என்பது இதன் அர்த்தம்.
அந்த காலத்தில் அவர்கள் வாழ்க்கை முறையும் வித்தியாசமாக இருந்து இருக்கிறது. வீடுகளுக்கு பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் எதுவும் கிடையாதாம். வீட்டுக்கு முன்பு 3 கம்பு குச்சிகள் வைத்திருப்பார்களாம். அதில் ஒரே ஒரு குச்சியை மட்டும் ைவத்து இருந்தால் நான் வீட்டில் இல்லை. பக்கத்தில் தான் சென்று இருக்கிறேன். விரைவில் வந்து விடுவேன் என்று அர்த்தமாம். இப்படி 3 குச்சிகளுக்கும் தனித்தனி அர்த்தம் கொடுத்து வாழ்க்கையை கட்டமைத்து வாழ்ந்து இருக்கிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தான் வடகொரியா இருக்கிறது. இரு நாடுகளும் ஜென்ம பகை கொண்ட நாடுகள். எனவே யாரும் அங்கு செல்ல முடியாது. பார்வையாளர் கோபுரத்தில் ஏறி தொலைநோக்கி மூலம் வடகொரியாவையும் பார்க்க முடியும். அதற்கும் வடகொரியா எதிர்ப்பு தெரிவித்ததால் இப்போது சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை. வடகொரியா அமைத்த சுரங்கப்பாதை ஒன்று தென் கொரியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மிக பிரமாண்டமாக அமைந்துள்ள அந்த சுரங்கப்பாதைக்கு சென்று பார்க்கலாம்.
மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு நினைவுகளுடன் வருகிறேன்...
(தொடரும்)
- முதுகலை பட்டம் வரை இதன் ஆராய்ச்சி விஞ்ஞான ரீதியாகவும் சென்றுள்ளது.
- அனைத்து இடங்களிலும் தரமான முறையில் யோகா பயிற்சி நிலையங்கள் உள்ளன.
இன்றைய கால கட்டத்தில் விழிப்புணர்வு என்பது ஆரோக்கியத்தின் பல பிரிவுகளில் அறிவுறுத்தப்பட்டு அது வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் 'யோகா' பயிற்சியும் உலகெங்கிலுமே அதிக முக்கியத்துவத்தினைப் பெற்றுள்ளது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு என்றே சில சிறப்பு யோகா பயிற்சிகளையும், முத்திரைகளையும் பயிற்சியாளர்கள் அளித்து வருகின்றனர். முதுகலை பட்டம் வரை இதன் ஆராய்ச்சி விஞ்ஞான ரீதியாகவும் சென்றுள்ளது.
உடல் சீராக, மனம் அமைதிபட, ஆரோக்கியம் கூட, குறிப்பிட்ட பாதிப்புகளில் நிவர்த்தி கிடைக்க சிறுவர் முதல் முதியவர் வரை இன்று யோகா வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. இது நம் நாட்டின் சொத்து என நாம் பெருமைப்பட்டு கொள்ளலாம். 'பதஞ்சலி யோகா' என்பது யோகாவின் ஆணிவேராக பன்னெடுங் காலமாக உள்ளது.
'பேச்சில்லாமல் சாதிக்கும் சக்தி கொண்டது யோகா' யோகா பயிற்சியால் வெளிப்படும் ஆற்றல்களே பேசாமல் பேசும். இந்த யோகாவில் அவர்கள் கூறும் நிலைகள்-
* யமா- சத்யம், மூர்க்கத்தன்மை இருத்தல், தவறுகள் இல்லாது இருத்தல் என சுய ஒழுக்கத்தினை நரம்புகளில் ஏற்றுவதாக இருக்கும்.
* இவை இருந்தாலே இன்று நாட்டில் காணப்படும். அநேக அராஜக சம்பவங்கள் இருக்காது.
* நியமா-தூய்மை, புறத்தூய்மை, அகத்துய்மை.
* ஆசனி- உடல் வலிமை, வளையும் தனமை, விழிப்புணர்வு
* பிராணயாமா- மூக்கை கட்டுப்படுத்தி, மனதை கட்டுப்படுத்தி உலகையே ஒழுக்கத்தால் வெல்லக் கூடிய தன்மை.
* பிரத்யாகரா-ஐம்புலன்களை அடக்குதல்.
* சமாதி- பரமானந்த நிலை கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத நிலையினை யோகா மார்க்கம் கொண்டு சேர்த்து விடுகின்றது.
யோகா பயில்பவர்களுக்கு ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகள் அகராதியில் இருந்து நீங்கி விடுகின்றது.
இன்று அனைத்து இடங்களிலும் தரமான முறையில் யோகா பயிற்சி நிலையங்கள் உள்ளன.
முறைப்படி கற்பதுதான் சிறந்தது. ெதாடர்ந்து பயிலும் போது,
* மனச் சிதறல்கள், குழப்பம் இன்றி இருப்பார்கள்.
* மூச்சின் மீது கவனத்தோடு இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வு இருக்கும்.
* உள்ளுணர்வு மிக சிறப்பாக இயங்கும். அதனால் எதிலும் தெளிவாக இருப்பர்.
* பிறரை நாம் காயப்படுத்தாமலும், பிறரால் நாம் காயப்படாமலும் வாழ முடியும்.

* தூய்மையான வாழ்க்கை என்பதுதான் வாழ்வின் சிறப்பு.
அதனை யோகாவினால் பெற முடியும். இந்த ஒரு அணு ஆயுதம் போதும் 'யோகா எனும் ஆயுதம்' உலகமே சொர்க்கமாகும்.
இன்றே, இப்போழுதே, இந்த நொடியே இதனை ஆரம்பிப்போமே.
நம்மில் பலருக்கு கட்டுப்படாத வாய் இருக்கிறது. சுய கட்டுப்பாடு, தேவையில்லாமல் ஓட்டை வாய் போல் எதனையும், எவரிடமும் சொல்வது என்ற பழக்கங்கள் இருக்கும். நமக்கென்று இருக்க வேண்டிய வாய் கட்டுப்பாடுகள்- பிறரிடம் சொல்லக் கூடாத கட்டுப்பாடுகள்.
* நம் பலவீனங்களைப் பற்றி பிறர் அறிய வேண்டுமா என்ன? (உதாரணம்) நான் சோம்பேறி, பணத்தை தண்ணீராய் செலவழிப்பேன். இதென்ன பெருமையா?
* எனக்கு பிடித்தம் போக இவ்வளவு சம்பளம் வருகின்றது.
* நான் சினிமா போல் கடுமையாய் போராடி காதலில் ஜெயித்தேன். (இது என்ன உலக மகா சாதனையா?)
* உங்கள் பணப்பற்றாக்குறை
* உங்கள் பாதுகாப்பின்மை
* பிறரைப் பற்றிய உங்களது கருத்து
* உங்கள் கோர்ட், வழக்கு பிரச்சினைகள்
* உங்கள் கடந்த கால தவறுகள்
* உங்கள் பான் கார்டு, ஆதார் போன்றவை
* உங்கள் வருங்கால திட்டம்
* உங்கள் குடும்ப பகை, உறவினர் எதிர்ப்பு
* பிறர் உங்களை நம்பி பகிறும் ரகசியம்
* உங்கள் குழந்தை கால கஷ்டங்கள்
* உங்கள் சொத்து
இவற்றினை உங்கள் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் இவர்களிடம் கூறலாம். ரெயில் சிநேகம், பஸ் நண்பர்கள் என பார்ப்பவர்களிடமெல்லாம் ஒப்புவிப்பவர்களை யோகா பயிற்சியில் சேர்க்கும் போது அமைதி, மன அடக்கம் ஏற்படலாம். தியானம் உதவலாம். யோகாவிற்கும், தியானத்திற்கும் எந்த பேதமும் இல்லை. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

கமலி ஸ்ரீபால்
யோகா பயிற்சியும் தியானமும்
* தவறான அசுர குணங்களை அழித்து விடும். தானே நீங்கும். தூய அன்ேபாடு எப்போதும் இருக்கும் நிலையினைத் தரும்.
* தனிமை வலிமை தரும்.
* புறத்தூய்மை, அகத்தூய்மை இரண்டும் இருக்கும்.
* எப்போதும் ஆரவாரமற்ற அமைதியான மகிழ்ச்சி இருக்கும்.
* பிறரது தேவையற்ற பேச்சுகள் வெறி ஏற்றாது.
* எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்க மாட்டார்கள்.
* நல்ல குறிக்கோள்களுக்காக வேலை செய்வர்.
* எதனையும் தன் முழு முயற்சியோடு செய்வர்.
* மனநிலை சீராக இருக்கும்.
* விழிப்புணர்வோடு இருப்பர்.
* நம்முன் இருக்கும் சக்தியினை நாம் உணர முடியும்.
* உடல் ஒரு கோவில் என்று தெரியும்.
* உடலுக்கு உடற்பயிற்சி, யோகா தேவை. மனதிற்கு-தியானம் அசையா நிலை தேவை. செய்வோமே.
நம் உடலில் பி.எச். அளவீடு 7-க்கு குறைந்தால் உடம்பில் ஆசிட் கூடுகின்றது. இது அதிக உடல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. உடலில் ஆசிட் அளவு மிகவும் குறைந்தாலும் அதுவும் உடல் நல பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆக இதனை சரியான அளவில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.
'அசிடிடி' பிரச்சினை இன்று நாம் சர்வ சாதாரணமாக கேட்கும் ஒரு வார்த்தை ஆகி விட்டது. இந்த 'அசிடிடி'க்கு காரணங்கள் என்ன?
* அதிக சர்க்கரை உணவு * உடல் பருமன் * புகை பிடித்தல் * சில மருந்துகள் * அதிக 'சிட்ரஸ்' உணவு * ஜீரண கோளாறுகள் * பொரித்த உணவுகள் * மது * அதிகம் சாப்பிடுதல் * மன உளைச்சல் * சாக்லேட் * வெங்காயம் * மசாலா உணவுகள்
இப்படி பல காரணங்கள் உள்ளன.
'அசிடிடி' அறிகுறிகள் என்னென்ன?
* நெஞ்செரிச்சல்- இது மிக அதிகமாக கூறப்படும் ஒன்று.
* படபடப்பு * வயிற்று பிரட்டல் * தொண்டையில் விழுங்குவதில் கடினம். * தூக்கமின்மை * ஆஸ்துமா போன்று மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் பொதுவில் வெளிப்படும். மேலும் சில அறிகுறிகளை மருத்துவர் ஆய்வு செய்வார்.
* சிப்ஸ் அளவில் உணவினை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
* அதிக எடையினை குறைக்க வேண்டும். * உணவு உண்டபின் நிமிர்த்து அமர வேண்டும். * புகை, மது இதனைத் தவிர்க்கவும. * மன உளைச்சல் தவிர்க்க வேண்டும் * இஞ்சி * எலுமிச்சை சாறு சிறிது சேர்த்த நீர், இளநீர்
* வாழைப் பழம் உணவில் சேர்க்க வேண்டும். அசிடிடி மிகவும் அதிகரிக்கும் போது * மயக்கம் * தலைவலி * பசியின்மை * மிகுந்த சோர்வு * வாந்தி * பலவீனம் என்று இருக்கும்.
நிரந்தர தீர்வு முயற்சியாக முறையான உணவு சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி, கேக், மைதா உணவுகளை தவிர்ப்பது பலனைக் கொடுக்கும்.
சுருக்கமான வரிகளில் யோகா பயிற்சியின் விரிவான பலன்களைப் பார்ப்போம்.
* இளம் வயதிலேயே தரையில் அமரவும், எழுந்திருக்கவும் படாதபாடு படுபவர்கள் ஒரு மாதத்திற்குள்ளாக சுறு சுறுப்பாய் எளிதாய் இவைகளைச் செய்வார்கள்.
* நடக்கும்போது தொய்ந்து, கோணல் மாணலாக நடக்கும் பலர் நிமிர்ந்து, கம்பீரமாய், ராஜநடை நடப்பர்.
* யோகா பயிற்சி செய்பவர்களிடம் எரிச்சல் 'சுள்' என பேசுவது, சண்டைக்கு முன் நிற்பது போன்ற செயல்களை காணவே முடியாது.
* பேச்சில் தடித்த, பண்பற்ற சொற்கள் இருக்காது. * சிறு கஷ்டங்களைக் கண்டு நடுங்கி வெடவெடக்க மாட்டார்கள். * நோயும் நீங்கும். ஆயுளும் கூடும். * நோய் எதிர்ப்பு சக்தி கூடும். * முறையான ஆழ்ந்த தூக்கம் இருக்கும். * தன்னை தாழ்த்திக் கொள்ள மாட்டார்கள். தாழ்வு மனப்பான்மை, பொறாமை இவை அறவே இருக்காது. கொஞ்சம் முயற்சித்தால் பின் வாழ்நாள் வரை தானே தொடரும். செய்வோமே.
- வாழ்க்கையில் திட்டமிடுதல் என்பது வாழும் நெறியை ஒழுங்கமைத்துக் கொள்வது ஆகும்.
- பள்ளித் தேர்வில் முழு மதிப்பெண் எடுப்பதற்காக இன்று எத்தனையோ பயிற்சி வகுப்புகள், பயிற்சி முறைகள் பெருகிவிட்டன.
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் பெருத்த எதிர்பார்ப்புகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.
"கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!" என்கிற பகவத் கீதை வாசகம் எவ்வளவுக்கு எவ்வளவு காலத்தால் பழமையானதோ, அவ்வளவுக்கு அவ்வளவு காலத்தால் புதுமையாகிப் பொருந்தி வருவதாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையைத் திட்டமிடுகிறோம். வள்ளுவர் கூறுவதுபோல 'ஒருபொழுதும் வாழ்வது அறியாதவர்கள், கோடிக்கும் மேற்பட்ட வகைகளில் திட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அடுத்த நொடி நிகழப்போகும் வாழ்வியலின் வடிவமைப்பு, நம் கண்களுக்கும், சிந்தைக்கும் புலப்படாத புதிர்தான் என்றாலும் கருதிக் கொண்டேதான் இருக்கிறோம்!; கோடிக்கணக்கில் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறோம்!. ஒன்றிரண்டு வாய்த்தால் மகிழ்கிறோம்; நிறைகிறோம்! அல்லது முயற்சி தொடர்கிறோம்!. தோல்விகளில் முடிந்தாலும் துயரப்படவும் செய்கிறோம்!; தளராமல் திட்டமிடலைத் தொடரவும் செய்கிறோம்.
''எண்ணித் துணிக கருமம்!" எனும் வள்ளுவக் கட்டளை, ஒவ்வொரு செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் நம்மைத் திட்டமிடச் சொல்கிறது. நொடிக் கணக்கில் தொடங்குகின்ற வாழ்க்கை, நாள் கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக் கணக்கில் நீண்டுகொண்டே போகிறது; செயல்களுக்கு ஏற்றாற்போல நிகழ்வுகளும் மாற மாற, நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல நாமும் நமது வாழ்வியல் திட்டமிடல்களையும் தகவமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தகவமைத்தல் என்பது, ஏற்றவாறு பொருந்தும் படி மாற்றியமைத்துக் கொள்வது ஆகும். அது சரியான திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டது.
வாழ்க்கையில் திட்டமிடுதல் என்பது வாழும் நெறியை ஒழுங்கமைத்துக் கொள்வது ஆகும். சமுதாயத்தின் சாதாரணக் குடிமகன் தொடங்கி, ஆளுகிற அரசாங்கம் வரை திட்டமிடுதல் என்பது மிக மிக அவசியமானது ஆகும். கடந்த காலத்தைக் கணக்கில் கொண்டு, நிகழ்காலத்தைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டே, எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது என்று திட்டமிட வேண்டும். நமது திட்டமிடல்கள், நமது கணிப்பை மெய்ப்பிப்பதாக இருக்க வேண்டும். திட்டமும் செயல்பாடும் கைகோர்த்து இணைந்து வெற்றியை எட்டிப்பிடிக்க வேண்டுமென்றால், அவை நடைமுறைக்கு ஏற்றவையாகவும், அறிவு பூர்வமானவையாகவும் நிச்சயம் இருக்க வேண்டும். எண்ணங்களில் நியாயமான எதிர்பார்ப்புகளே நிறைந்து பரவியிருந்தால், தேவையற்ற தோல்விகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நமக்குள் அன்றாடம் ஆயிரமாயிரம் கனவுகள்!; 'அவரைப்போல் ஆக வேண்டும்!; இவரைப்போல் ஆகவேண்டும்!; ஒரே நாளில் தொழில் தொடங்கி, அடுத்த நாளே பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாகி, அதற்கு அடுத்த நாளே வசதியாக வெளிநாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, குடியேறி வாழவேண்டும்' என்று சர்வ சாதாரணமாகக் கனவுகள் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் எப்போதும் கனவுகள் இலவசம்!; கனவுகளுக்குள் நுழைய நுழைவுக் கட்டணம் கிடையாது.
ஆனால், 'பட்டுச் சட்டைக் கனவில், கட்டியிருக்கும் கோவணத்தையும் களவு கொடுத்துவிடும்' அவல நிலைக்கு ஆளாகி விடக்கூடாது. 'அவர் சாதாரணமாகத்தானே வாழ்க்கையைத் தொடங்கினார்!; அவரது வாழ்க்கையில் திடீரென அதிசயம் நிகழ்ந்து அவர் பல கோடிகளுக்கு அதிபதி ஆகவில்லையா?. இவர் மட்டும் என்னவாம்! தலைநகரத்துக்கு வரும்போது சட்டைப் பையில் கசங்கிய ஐந்து ரூபாய்த் தாளோடு வந்தவர் தானே? இன்றுமட்டும் எப்படி இத்தனை தொழில்களுக்கு அதிபதி ஆனார்?. அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசயம், நமது வாழ்க்கையிலும் நடவாமலா போய்விடும்? எதிர்பார்த்துக் காத்திருப்போம்!' என்று அதிசயங்களையும், ராசிபலன்களையும், நேரம், காலங்களையும் நம்பிடும் விசித்திரப் பிறவிகளும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். நமது முன்மாதிரிகள் எல்லாம் நம்மோடு பொருந்தக் கூடியவர்களாக இருந்தால், நிச்சயம் நமது எதிர்பார்ப்புகளெல்லாம் இயல்பாகவே நடந்து நம்மை இன்பத்துள் ஆட்படுத்தும்.
வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக் கொள்பவர்கள், கடவுளைக்கூட இயற்கைத் துணையாகவே வழிபடுவார்கள்; தமது பேராசைகளுக்கும், அதிசய எதிர்பார்ப்புகளுக்கும் கடவுளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு சாதிக்க நினைக்க மாட்டார்கள். ஓர் இயல்பான பக்திக்கதை. ஒரு வனத்தில் முற்றும் துறந்த துறவி ஒருவர், தனது குடிசைக்கு வெளியே ஒரு கல்லில் அமர்ந்து தனது கிழிந்திருந்த வேட்டியை ஊசி நூல் கொண்டு தைத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், அந்த வழியாக, ஆகாய மார்க்கமாக சிவனோடு உலாப் போய்க்கொண்டிருந்த பார்வதி தேவியின் கண்களில் அந்தக் காட்சி பட்டுவிட்டது. உடனே சிவனிடம், " சுவாமி! அதோ பாருங்கள்! பழுத்த சிவப்பழமாய் ஒரு துறவி, தனது குடிசையின் வாசலில் அமர்ந்திருக்கிறார்!. வாருங்கள்! அவர் முன்னால் சென்று அவருக்கு தரிசனம் தந்து, அவர் கேட்கும் வரங்களை அவருக்கு அளித்து வருவோம்!" என்று கூறி அழைத்தார்.

சிவனோ, "தேவி! அந்தத் துறவி நாம் தரக்கூடிய வரங்களுக்கெல்லாம் மயங்குகிற ஆசாமி இல்லை!. போக வேண்டாம்!" என்று கூறினார். பார்வதியோ பிடிவாதமாக, நாம் சென்று அவர்முன் நின்று தரிசனம் தந்தே ஆக வேண்டும்; அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வரங்களை வழங்கியே ஆகவேண்டும்! என்று உறுதியாக அழைத்தார். வேறு வழியில்லாமல், சிவனும் ஒத்துக் கொண்டார். அந்தத் துறவியின் குடிசை வாசலுக்கு முன் இருவரும் போய் நின்றனர்.
ஊசி, நூல்கொண்டு கிழிந்த வேட்டியைத் தைத்துக் கொண்டிருந்த துறவி, அவற்றை அப்படியே போட்டு விட்டு, அவர்களை வரவேற்றுக் குடிசைக்குள் அழைத்துச் சென்று அமரவைத்து, இருவருக்கும் நீர்மோர் கலந்து கொடுத்து உபசரித்தார். பிறகு, வெளியே வந்து கிழிந்த வேட்டியைத் தைக்கும் பணியைத் தொடர்ந்தார்.
'என்ன இவர்? பார்வதி பரமசிவமே வந்திருக்கிறோம்! ஒரு ஆச்சரியமும் படாமல், ஒன்றுமே பேசாமல், மீண்டும் ஊசி, நூல் தைக்கப் போய் விட்டாரே!' என்பது போல் பார்வதி பரமசிவத்தைப் பார்த்தார்.
பரமசிவமோ, 'நான்தான் ஏற்கனவே இங்கு வர வேண்டாம் என்று சொல்லித்தானே தடுத்தேன்!' என்பது போலப் பார்வதியைப் பார்த்தார். பார்வதி துறவியை விடுவதாயில்லை!, "என்ன துறவியாரே! எங்களிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றை வரமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்!; வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்!" வலியப் போய்க் கேட்டார். துறவியோ, " தாயே! தங்களிருவரின் தரிசனமே போதும்!; வரம் வேண்டாம்!" என்று கூறிவிட்டார். 'இருந்தாலும் ஒரு வரமாவது கேளுங்கள்! வந்ததற்குத் தந்துவிட்டுப் போகிறோம்!' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பார்வதி தேவி.
"சரி தாயே!, இந்த ஊசியின் பின்னே தொடர்ந்து நூல் செல்ல வேண்டும்! இந்த வரத்தை மட்டும் தாருங்கள்!" என்றார் துறவி. "அது இயல்பு தானே?. ஊசியில் நூலைக் கோர்த்துவிட்டால், ஊசியின் பின்னால்தானே நூல் போகும்?" துறவியிடம் கேட்டார் தேவி. "ஆம் தாயே! வாழ்க்கையில் நியதிப்படி ஒவ்வொருவரும் ஒழுக்கமாக வாழ்ந்தால், கிடைக்க வேண்டிய பலன் கிடைத்துத்தானே ஆகும்?. பிறகு எதற்கு வரம்?" நச்சென்று சொல்லி விட்டு இடத்தைவிட்டு நகர்ந்தார் துறவி. ஆம்! அனுதினமும் கடமையை அதன் ஒழுங்கில் செய்யத் தொடங்கிவிட்டால் அதன் பலன் தாமாகவே நம்மைவந்து சேர்ந்துதானே ஆகும்?. பிறகு எதற்கு ஆச்சரியங்களுக்காகக் காத்திருக்க வேண்டும்?.
வாழ்க்கை எப்போதும் அதற்கான ஒழுங்கமைவில் அது சென்றுகொண்டே இருக்கிறது; நாமும் நமது போக்கில், ஏறுக்குமாறான எண்ணங்கள் இல்லாமல் இயங்கத் தொடங்கிவிட்டால், நமக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் நமக்குக் கட்டாயம் கிடைத்தே ஆகும்.
பள்ளித் தேர்வில் முழு மதிப்பெண் எடுப்பதற்காக இன்று எத்தனையோ பயிற்சி வகுப்புகள், பயிற்சி முறைகள் பெருகிவிட்டன; கேள்வி பதில்களைக் குறுக்கும் நெடுக்குமாக மனப்பாடம் செய்து தலைகீழ்ப் பாடமாக்கிக் கொண்டு திரியும் அதிமேதாவிக் குழந்தைகளும் உண்டு. ஆனாலும், பள்ளி மாணவர்கள் முழு மதிப்பெண்களைப் பெறுவதற்கு ஆகச்சிறந்த எளிய வழிமுறை ஒன்று உண்டு. அது என்னவென்றால் ஒரு சாதாரண மாணவனைப்போல நாள்தோறும் பள்ளிக்குத் தவறாமல் போவது; கவனத்தோடு பாடங்களைப் படிப்பது; வீட்டுக்கு வந்ததும் அன்றன்றைக்குப் பள்ளியில் படித்த பாடங்களைப் புரியும் படியாக ஒருமுறை படித்து உணர்ந்து, நெஞ்சத்தில் இறுத்தி வைப்பது!; இப்படிச் செய்தால், தேர்வு வரும் காலங்களில், அச்சமோ, மனப் பதற்றமோ எதுவுமின்றி இயல்பாகத் தேர்வை எதிர்கொண்டு முழு மதிப்பெண்களையும் இயல்பாகப் பெற்றுச் சாதனை புரியலாம்.
வாழ்க்கையும் இப்படித்தான். திட்டமிடல் எப்பொழுதும் அவசியமானதுதான்; ஆனால் அது, நமது தகுதிக்கும் திறமைக்கும் அடங்கியதாக இருக்க வேண்டும். வருகிற பலன்களை அப்படியே இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்குத் தேவையற்ற எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் நேராமல் தவிர்த்து விடுகிறது. பெரும் கனவுகளோடும், பெரும் திட்டங்களோடும் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சிலர் எதிர்பார்த்துக் காத்திருப்பர்.
எதிர்காலம் கனவுமயமாகச் சிந்தையில் ஜொலித்தாலும், அது நிகழ்காலத்தில் வரும்போது நிஜமாக மட்டுமே காட்சி தருகிறது. கனவில் பார்த்த எதிர்காலம், நிஜத்தில் காணும் நிகழ்காலமாக மாறிடும்போது, எண்ணற்ற வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, நம்மை அதிரவைக்கவும் செய்கின்றது. பெரும்பெரும் அதிசயங்களையும், பெரும்பெரும் அற்புதங்களையும் எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு, சுனாமித் தாக்குதலாய் ஏமாற்றங்களின் தாக்குதல் அணிவரிசை கட்டத் தொடங்கி விடுகின்றன.
''எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்!"
என்னும் திருக்குறள், செயல்களைத் திட்டமிடும்போதே பின் விளைவுகளையும், பக்க விளைவுகளையும் தெளிவாக எதிர்பார்த்திருக்கும் அறிவோடு செயல்படுவோர்க்கு, அதிர்ச்சி தரக்கூடிய நோய்கள் அணுகுவதில்லை என்கிறது. ஆம் ! வாழ்க்கையில் எப்படித் திட்டமிட்டாலும், பலன் எப்படியும் மாறலாம்!. உலகின் சுழற்சியில் கீழது மேலாகும்! மேலது கீழாகும் தத்துவம் புரிந்து கொண்டால் வாழ்க்கையையே புரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் ஒவ்வொன்றும் ஒரு சவால்தான். அவற்றை முறியடிக்கத் திட்டமிடுவதும் பெரும் சவால்தான். நிகழ்காலத்தில் நாம் சந்திக்கின்ற முடிவுகள், தீர்வுகள் நமது எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தலாம் அல்லது ஏமாற்றலாம். எது எப்படி இருந்தாலும் முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நிகழ்காலத்தை மகிழ்ச்சி மயமாக்கும். வாழ்க்கை வசந்த மயம்; அளவான எதிர்பார்ப்போடு, நலமான திட்டங்களோடு நமது வாழ்வியலை நகர்த்தத் தொடங்கினால், வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழாவிட்டாலும் நிச்சயம் ஆனந்தம் நிகழ்ந்திருக்கும்.
தொடர்புக்கு 9443190098
- தினமும் பயன்படுத்தும் பால் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
- குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக பசும்பால் அடுத்த இடத்தில் உள்ளது.
'உலக பால் தினம்' இன்று...
நமது வாழ்வில் மிகவும் முக்கியமான உணவுப்பொருள் 'பால்'. மனிதன் பிறப்பில் இருந்து இறப்பு வரை பால் இன்றியமையாததாகி விடுகிறது.
பாலில் புரதம், கொழுப்பு, மக்னீசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சியில் பால் முக்கியப் பங்கு வகிக்கிறது. காலையில் டீ போடுவது தொடங்கி, உணவில் தயிர், நெய், மோர், வெண்ணெய் என நாம் தினமும் பயன்படுத்தும் பால் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
பசும்பால் மட்டும் அல்லாமல் ஆட்டுப்பால், எருமைபால், கழுதைபால், குதிரைபால் ஏன் ஒட்டகப்பால் வரை விலங்குகளின் பாலை பயன்படுத்திவருகிறோம். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக எளிதில் செரிமானமாக கூடிய பாலாக மருத்துவ உலகம் சொல்வதும் பசும்பாலை தான்.
பசும்பாலில் 80 சதவீதம் அளவு தண்ணீர் இருக்கும் பாலில் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்தது. தாய்பாலுக்கு இணையான ஃபோலிக் அமிலங்களும் தயமின், பொட்டாசியம் இதில் இருப்பதால் தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக பசும்பால் அடுத்த இடத்தில் உள்ளது.

குழந்தை பருவத்தில் இருந்து தினசரி ஒரு டம்ளர் பால் குடிப்பவர்களுக்கு வளர்ந்த பிறகு எலும்பு தேய்மானம் என்னும் பிரச்சனையை சந்திப்பது என்பது சிரமம்தான். குறிப்பாக பெண்கள் மெனோபாஸ் காலங்களில் சந்திக்கும் ஆஸ்டியோபெராசிஸ் என்னும் எலும்பு மென்மை, தேய்மானம் பிரச்சனை வராமல் தடுக்கும் ஆற்றலை கொண்டது ஒரு டம்ளர் பால் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இத்தகைய இன்றியமையாத உணவுப் பொருளான பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி 'உலக பால் தினம்' கொண்டாடப்படுகிறது.
பாலின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காக கடந்த 2001ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உலகளாவிய உணவாக பாலை அங்கீகரித்து. அதைத் தொடர்ந்து ஐ.நா. உலக பால் தினத்தை அறிவித்தது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 'உலக பால் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
- உலக அளவில் தொற்று நோய்களின் வரிசையில் சிறுநீர்ப் பாதைத் தொற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
- உடல் அளவான எடையுடன் இருத்தல் வேண்டும்.
நம் உடலின் நலனுக்குச் சிறுநீரகத்தின் செயல்பாடு மிகவும் தேவையான ஒன்று. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ளன. இக்காலத்தில் உலக அளவில் சுமார் 850 மில்லியன் மக்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் சிறுநீரகத்தின் செயல்பாடுகள், சிறுநீரக நோய், அதன் அறிகுறி, நோய் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது நன்று. அதன் பொருட்டே இது தொடர்பான தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்.
சிறுநீரகத்தின் பணிகள்:
நம் உடலில் வேதியியல் மாற்றங்களால் ஏற்படும் கழிவுகளை அகற்றி, நம்மைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
உடலில் உள்ள நீர் மற்றும் தாது உப்புகளின் அளவைச் சரியான விகிதத்தில் வைத்திருப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது.
வைட்டமின் டி-யைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் சிறுநீரகத்தின் பங்கு தேவையானது.
நம் இரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்திருக்கிறது.
சிறுநீரகத்தைத் தாக்கும் நோய்கள்:
சிறுநீரகத்தைப் பாதிக்கும் பல நோய்களில் முதன்மையானவை உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் அதிக உடல் பருமன் ஆகியவை ஆகும். தேவையில்லாத கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், படபடப்பு, பயம் மற்றும் உணவில் அதிகக் காரம் , உப்பு, போன்றவற்றால் நமது உணர்வுநிறை உறுப்பான சிறுநீரகங்கள் சீர்கெடுகின்றன.
மேலும், சிறுநீரகத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கும் நோய்கள் பல உள்ளன. அதில் குறிப்பிட்ட சில நோய்கள் குறித்துக் கீழே பார்க்கலாம்.
சிறுநீரக நீர்கட்டி நோய்:
வயது முதிர்ந்தவர்களுக்குச் சிறுநீரகச் செயலிழப்பு வருவதற்கான மரபணு சார்ந்த மிக முதற்காரணம் பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய் ஆகும். இந்த மரபணு நிலையால், சிறுநீரகங்களில் இருந்து நீர்க் கட்டிகள் உருவாகின்றன. நீர்க் கட்டிகள் என்பன நீர்மம் நிறைந்த வலிய கட்டிகள் ஆகும். படிப்படியாக இயல்பான சிறுநீரகத் திசுக்களுக்கு மாறாக இந்த நீர்க் கட்டிகள் வளர்வதால், பாதிக்கப்பட்ட நபருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு படிப்படியாக ஏற்படலாம்.

சிறுநீரகக் கற்கள்:
இக்காலத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி மிகுந்த வலியோடு வரும் நோயாளிகள் பலரைப் பார்க்க முடிகிறது. இந்தச் சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் ஆண்களுக்குத்தாம் அதிகம் வருகின்றன. அதற்காகப் பெண்களுக்கு வருவது இல்லை எனச் சொல்ல முடியாது. பெண்களும் இந்தச் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஆண்களில் 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்குத்தான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது. அதாவது, சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு மற்றும் இரசாயன படிவங்கள் நாளடைவில் கற்களாக உருமாற்றம் பெறுகின்றன. இதனால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான இடுப்பு வலி மற்றும் சிறுநீர் கழிக்கும்போது தாங்கமுடியா வலியை அனுபவிக்கின்றனர்.
இந்தச் சிறுநீரகக் கல் ஏற்பட முக்கிய காரணம் உணவில் அதிகமான உப்புச் சேர்த்துக்கொள்வது, உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடல் பருமன் உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன.
சிறுநீர்ப் பாதையில் கிருமிகளின் தாக்கம்:
உலக அளவில் தொற்று நோய்களின் வரிசையில் சிறுநீர்ப் பாதைத் தொற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. பெரும்பாலான மக்கள் இந்தச் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்படுவதாக உலக நலவாழ்வு அமைப்பின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதில் குறிப்பாகப் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். காரணம் பெண்களின் சிறுநீர்ப்பையில் இருந்து வெளியாகும் குழாய் சிறிதாகவும், யோனியின் துளைக்கு மிக அருகிலேயே இருப்பதும்தான். அதேபோல, உடலுறவு கொள்ளும்போது ஒருவருக்குச் சிறுநீர்த் தொற்று இருந்தால் அது அவரது இணையையும் பாதிக்கும்.

மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.
வலி நீக்கியினால் வரும் சிறுநீரகநோய்:
இப்போதெல்லாம் நம்மில் பலர் தலைவலி, உடல்வலி என்றாலே மருந்துக் கடைகளுக்குச் சென்று வலி நீக்கி மாத்திரைகளை வாங்கி அடிக்கடி உட்கொள்வது உண்டு. வலி நீக்கி மாத்திரைகள் ஒரு மருந்துதான். அளவுக்கு அதிகமாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும்போது, அது உடலில் வேலை செய்த பிறகு சிறுநீரகத்தால்தான் வெளியேற்றப்படுகிறது.
இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், அதுவே சிறுநீரகத்தைத் தாக்கும் நஞ்சாக மாறிவிடுகிறது. இதனால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்பை "வலி நீக்கி நெப்ரோபதி" எனக்கூறுகிறோம்.
சிறுநீரகப் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்:
அடிவயிற்றின் பக்கவாட்டிலும் முதுகிலும் மெலிதான வலி, பசியின்மை, முகம் மற்றும் கால்களில் வீக்கம், அரிப்பு, குமட்டல் அல்லது வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், கழுத்து வலி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் நுரையுடன் வெளியேறுதல், அடர் அல்லது இளம் சிவப்பு நிறமுள்ள சிறுநீர், சிறுநீர் வெளியேறும் அளவு குறைவது, சிறுநீரகம் நலமாக உள்ளதா என்பதை மேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்கள் வருடம் ஒருமுறையேனும் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீர் ஆய்வு, ரத்த ஆய்வு, ரத்த அழுத்த ஆய்வு, வயிற்று ஊடுகதிர் ஆய்வு ஆகியவற்றை செய்து கொள்ளவேண்டும்.

சிறுநீரகத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
உடல் அளவான எடையுடன் இருத்தல் வேண்டும்.
இரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உப்பைக் குறைவாக உட்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வலி மாத்திரைகளை மருத்துவரின் கருத்துரை இன்றி எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.
இவற்றை முறையாகச் செய்வதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
மருத்துவரின் கருத்துரைப்படியே தான் புரதச்சத்துள்ள உணவுகள், உப்பு மற்றும் தண்ணீரின் அளவுகள் இவற்றைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
கீரை வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
உணவுக்கட்டுப்பாட்டைப்பின்பற்றவேண்டும். முடிந்தஅளவுஉடற்பயிற்சிகளை நாளும் செய்யவேண்டும்.
இப்படிச் செய்வதால் சிறுநீரக நோயாளிகள் டையாலைஸிஸ் (Dialysis) அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யும் அளவிற்குத் தள்ளப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
- நாம் அனைவரும் மனித குல நாகரிகத்தின் அடுத்த கட்டத்துக்கு வந்து விட்டோம்.
- ஒவ்வொரு நாடும் தனது எல்லைக் கோட்டை பாதுகாத்து வருகின்றது.
முந்தைய காலத்தில் இந்தியா என்ற பெயரில் முழுவதுமாக எந்தவொரு நாடும் கிடையாது.
பாரத கண்டம் என்ற பெயரில் பல்வேறு குட்டி நாடுகள் இருந்து வந்தன. அந்தக் குட்டி நாடுகள் எவையும் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மண்டையை உடைப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்தனர்.
ஒருவரையொருவர் வெற்றிகொண்டு அதனை வீரப்பிரதாபமாகக் கொண்டாடி வந்தார்கள்.
தங்கள் வெற்றியை, கடாரம் கொண்டான், கலிங்கம் வென்றான் என்று பரணி பாடிக் கொண்டாடினர்.
ஆனால் நாம் இப்போது வாழ்ந்துவரும் சூழ்நிலை வேறு.
அடுத்த நாட்டினைக் கைப்பற்றி அவர்களை அடிமை கொள்வதை இன்றைய காலகட்டத்தில் எவருமே அங்கீகரிப்பதில்லை.
இலங்கை, பாகிஸ்தான் போன்றவை நம்மை ஒட்டியுள்ள குட்டி நாடுகள்.
நாம் நினைத்தால், ஒரே நாளில் போரிட்டு அவைகளை நம் நாட்டோடு இணைத்துக் கொள்ள முடியும்.
அப்படி இணைத்துக் கொண்டால் உலகிலுள்ளோர் என்ன கூறுவர்?
இலங்கை வென்றான், பாகிஸ்தான் கொண்டான் என்று நம்மீது பரணி பாடி நம்மைப் போற்றுவார்களா?
"அவர்கள் நாட்டை அவர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அதில் உனக்கு என்ன வந்தது? உன்னுடைய நாட்டை ஆட்சி செய்யும் உன்னுடைய வேலையை மட்டும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால் போதாதா?"
- என்றுதான் கேட்பார்கள்.
அந்த வகையில் பார்க்கும் போது, நாம் அனைவரும் மனித குல நாகரிகத்தின் அடுத்த கட்டத்துக்கு வந்து விட்டோம்.
நாம் முன்னேறிச் செல்ல இன்னும் ஓர் இலக்கு பாக்கியாக உள்ளது.
அது என்ன?
பக்கம் பக்கமாக பல்வேறு நாடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பக்கத்து பக்கத்து நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடுகளும் இருக்கும்.
ஒவ்வொரு நாடும் தனது எல்லைக் கோட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் தனது ஆட்சியையும் செயல்பாடுகளையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த எல்லைகள் அனைத்தும் எவ்வாறு உள்ளன?
ஒவ்வொரு நாடும் தனது எல்லைக் கோட்டை பாதுகாத்து வருகின்றது.
திடீரென நாம் ஒரு நாள் நமது எல்லைக் கோட்டிற்கு அருகில் நமது ராணுவத்தைக் குவித்திடுவதாக வைத்துக் கொள்வோம்.
என்ன ஆகும்?
பக்கத்து நாட்டினரும் தங்கள் எல்லைக் கோட்டினருகில் போட்டி போட்டு ராணுவத்தைக் குவித்து விடுவார்கள்.
இவ்வாறுதான் ஒவ்வொரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைகளிலும் நடந்து வருகிறது. ஆயுதம் தாங்கிய ராணுவம் சோம்பேறித் தனமாக ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருக்குமா?
ஒரு காரணமும் இல்லாமல் ராணுவத்தினரிடையே துப்பாக்கிச் சூடுகள் கூட ஏற்படலாம்.
விளைவாக, நாடுகளுக்கிடையே தேவையற்ற போர்கள் கூட ஏற்பட்டுவிடலாம்.

ஸ்ரீ பகவத்
நீங்கள் ஏதாவது ஒரு நாட்டின் அதிபராக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
உங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக நீங்கள் ஒரு பெரிய ராணுவத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
"இவ்வளவு பெரிய ராணுவத்தை எதற்காக வைத்துக் கொண்டுள்ளீர்கள்?" என்று உங்களிடம் எவராவது கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள் ?
"பக்கத்து நாடுகளைத் தாக்கி வெற்றி கொள்ள வைத்திருக்கிறோம்" என்று கூறுவீர்களா?
"பிற நாடுகளிடமிருந்து எங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே இந்த ராணுவத்தை வைத்துக் கொண்டுள்ளோம்"
என்றுதான் கூறுவீர்கள்.
இப்படி நம்மை அறியாமலேயே நாம் ராணுவத்தை வைத்துப் பழகிவிட்டோம். உண்மையில் நம் எவருக்குமே ராணுவம் தேவைப்படவில்லை.
ஆனால் ஒவ்வொரு நாட்டின் எல்லைக் கோடுகளை ஒட்டி இருநாடுகளும் தற்காலிகமாக துப்பாக்கிச் சூடுகள் நடத்திக் கொள்வதும் வாடிக்கையாகவே உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சபை என ஒன்றை நாம் அனைத்து நாடுகளுமாகச் சேர்ந்து அமைத்துக் கொண்டுள்ளோம். அதுவும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு, இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?
அதனை அந்த சர்வதேச அமைப்பிடம் விட்டு விட்டால் அவர்கள் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். அதன்பிறகு எல்லைகளின் பக்கமாக நமக்கு என்ன வேலை உள்ளது?
எந்த வேலையுமே கிடையாது. அதனால் நமது முழு கவனத்தையும் உள்நாட்டினுள் திருப்பிக் கொள்ளலாம். சண்டை போடுவதற்காக உருவாக்கி வைத்துள்ள ராணுவத்தை நாம் என்ன செய்வது?
ராணுவத்தைக் கலைத்துவிட வேண்டுமா?
ராணுவத்தைக் கலைத்திடவே தேவை இல்லை. அழிக்கும் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள ராணுவத்தை அப்படியே ஆக்கப் பணிகளுக்கு திருப்பி விட்டால் மட்டும் போதும்.
புயல், மழை, பூகம்பம் என இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது நாம் என்ன செய்கிறோம்?
ராணுவத்தினரின் உதவியோடு தான் மீட்புப் பணிகளில் ஈடுபடுகிறோம்.
ராணுவம் முழுவதையும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே நாம் பயன்படுத்துவோமேயானால் என்ன ஆகும்?
ஒரு ராணுவ வீரர், ஐந்து சராசரி மனிதர்களுக்கு சமமான பலம் உள்ளவர்.
நாட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் ராணுவத்தினர் மட்டுமே பார்த்துக் கொண்டால் போதாதா?
மற்றவர்கள் செய்ய எந்தவொரு வேலையுமே பாக்கி கிடையாது.
சில நாடுகளில் ஆண்,பெண் என இருபாலரும் குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
அதனை எல்லா நாடுகளிலும் பின்பற்றலாம்.
அந்த காலத்தில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் கூறுவார்கள்.
சென்னை ரெயில் நிலையத்தில் திருநெல்வேலி செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று தயார் நிலையில் இருந்து கொண்டிருந்தது.
சென்ட் வியாபாரி ஒருவர் ஜன்னல் பக்கமாக நின்று கொண்டு சென்ட் பாட்டிலைக் காட்டி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
பெட்டியினுள் உட்கார்ந்திருந்த பயணி ஒருவர் சென்ட் பாட்டிலைக் வாங்க முன் வந்தார்.
"வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சென்ட்" - என்று கூறிய வியாபாரி அந்த சென்ட் பாட்டிலின் விலையை நூறு ரூபாய் என நிர்ணயம் செய்தார்.
வாங்க நினைத்தவர் விலையை குறைத்துக் கேட்டு பேரம் பேசினார்.
கடைசியில் கம்பெனி விளம்பரத்துக்காக கொடுப்பதாகக் கூறி, சென்ட் பாட்டிலின் விலையை ஒரு ரூபாய் என முடிவு செய்தார்கள்.
முதலில் சொன்னபடி பாட்டிலின் விலை நூறு ரூபாய். பேரம் பேசி முடித்த பிறகு பாட்டிலின் விலை ஒரு ரூபாய்.
அதாவது ஒரு ரூபாய் விலையுள்ள பொருளுக்கு நூறு மடங்காக அந்த வியாபாரி விலை வைத்திருந்திருக்கிறார்.
அவர்கள் பேரம் பேசி முடித்து சென்ட் பாட்டிலைக் கொடுத்த நிலையில் ரெயிலும் மெதுவாக நகர ஆரம்பித்துள்ளது.
"ஒரு ரூபாய் நாணயத்தை ஜன்னல் வழியாக வீசிப் போடுங்கள். நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று வியாபாரி கேட்டுக் கொண்டார்.
சென்ட் பாட்டிலை வாங்கியவரும் அவசரமாக தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஜன்னலுக்கு வெளியே போட்டார்.
வெளியே வந்து விழுந்த நாணயத்தை எடுத்துப் பார்த்தார் வியாபாரி.
அது ஒரு காலணா நாணயம். அதன் அளவும் கிட்டத்தட்ட ஒரு ரூபாய் நாணயத்தைப் போலவே இருக்கும்.
நான்கு காலணா சேர்ந்தால் ஒரு அணா. பதினாறு ஒரு அணாக்கள் சேர்ந்ததுதான் ஒரு ரூபாய். அதாவது 64 காலணாக்கள் சேர்ந்தால் மட்டுமே ஒரு ரூபாய் ஆகும்.
வியாபாரி அந்த காலணாவை எடுத்தபோதே ரெயிலும் ஓடிச்சென்று விட்டது.
ஆனாலும் அந்த வியாபாரி, "கொண்ட
முதலுக்கு நட்டமில்லை!" என்று கூறி அந்த நாணயத்தை தனது சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டார்.
ஓர் உதாரணத்துக்காக ஒரு சென்ட் வியாபாரியைக் காட்டினோம்.
இப்படி ஒரு சென்ட் வியாபாரி நம் எல்லோருக்குள்ளேயும் ஒளிந்து கொண்டு இருக்கின்றார்.
"அடுத்தவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டாலும் தவறில்லை. எப்படி வேண்டுமானாலும் நாம் அவர்களை ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் நம்மை மட்டும் எவரும் ஏமாற்றக் கூடாது .
நாம் நமது பதவியை பயன்படுத்தி எந்தவகையான ஊழல்களையும் செய்திடலாம். ஆனால் மற்றவர்கள் மட்டும் நம்மிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்". - இப்படிப்பட்ட மனநிலை இன்றளவும் பலரிடமும் சர்வ சாதாரணமாக உள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே போராட வேண்டியதுள்ளது.
இத்தகைய ஒரு போராட்டகரமான வாழ்வியல் முறை இந்த சமுதாயத்திற்கு தேவைதானா?
இவற்றையெல்லாம் மாற்றியமைக்கும் முயற்சியாகவே ராணுவத்தை மாற்றி அமைக்கும் அணுகுமுறையைப் பரிந்துரை செய்துள்ளோம்.
இந்தப் பரிந்துரையை நாம் தான் முதன்முதலாக கூறியுள்ளோமா?
பைபிள் வசனங்கள் நம்மையும் முந்திக்கொண்டு விட்டன.
ஏசையா அத். 2
1. -----
2. -----
3. -----
4. அவர்கள் தங்களுடைய வாட்களையெல்லாம் உழவுக் கருவிகளாகவும், ஈட்டிகளை எல்லாம் அறுவடைக் கருவிகளாகவும் மாற்றிக் கொள்வார்கள். எந்தவொரு நாடும் பிற நாட்டுக்கு எதிராக வாளை உயர்த்தாது. இனி அவர்கள் ஒரு போதும் போர் செய்வதைக் கற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு நாடும் பக்கத்து நாடுகளை, பகை நாடாகக் கருதாத நிலையில், தங்கள் நாட்டின் தன்னிறைவை மட்டுமே முன்னிறுத்தி செயல்படுமேயானால்,
நமது மண்ணுலகமே விண்ணுலகமாக உயர்ந்துவிடும். எல்லா விதமான ஆக்கபூர்வமான பணிகள் அனைத்தையும் ராணுவமே பார்த்துக் கொண்ட நிலையில், நெருக்கடி எதுவுமே இல்லாமல் ஆனந்த வாழ்வை மட்டும் வாழ்வதைத் தவிர வேறு எந்த வேலையுமே நமக்குக் கிடையாது. நாம் நமது மனதளவிலும் சுதந்திரமாக வாழ்ந்திட வேண்டும்; செயல் அளவிலும் நெருக்கடி இல்லாமல் வாழ்ந்திட வேண்டும்.
நாம் அனைவரும் மனதாலும் செயலாலும் நல்வாழ்க்கை வாழ்ந்திட நல்ல கருத்துகள் அனைத்தையும் நமக்குள் பகிர்ந்திடும் வகையில் சேலத்தை மையமாகக் கொண்டு ஸ்ரீபகவத்மிஷன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறோம். ஆர்வம் உள்ளவர்களை அன்புடன் வரவேற்கிறோம். யூடியூபில், பகவத் பாதை என்பது எங்களது முகவரி. நல்லதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் நாம் சந்திப்போம்.
அனைவருக்கும் நன்றி; அனைவருக்கும் வணக்கம்.
தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532
- நமது செல்வச்செழிப்பின் அடையாளங்கள் என்று நாம் நம்புவதுதான் வேடிக்கை.
- கடனைக் கட்டத் தவறியவர்கள், ‘வாராக் கடனாளி’ என்று அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்! செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் செலவுப் பழக்கம் முதல் தடை என்று பார்த்தோம். அடுத்ததாக வரும் கடன் பழக்கம் தடைக்கல்லா, படிக்கல்லா என்று பட்டிமன்றமே நடத்தலாம். ஏனெனில், பரமபத விளையாட்டில் பாம்புகளும், ஏணிகளும் இருப்பது போல் கடனிலும் நல்ல கடன், கெட்ட கடன் என்று இரண்டு வகை உண்டு. நீங்கள் வாங்கியிருப்பது எந்த வகை என்று பார்க்கலாம், வாருங்கள்.
கடன்கள் பலவிதம். பெற்றோர் வாங்கிய கடன், உற்றாருக்காக செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் பட்ட கடன், நலமாக வாழ விரும்பி வாங்கிய கடன், உடல் நலன் கெட்டதால் வாங்க நேர்ந்த கடன், தேவைக்கான கடன், ஆசைக்கான கடன் என்று சிறிதும், பெரிதுமாகக் கடன்கள் நம் வாழ்வில் விளையாடுகின்றன. வேகமாக மாறிவரும் வாழ்க்கைமுறைகளும், போனைத் தட்டினால் எளிதில் கிடைக்கும் கடன்களும் மக்கள் மனதில், "கடன் வாங்குவதில் தவறில்லை" என்ற எண்ணத்தை வளர்க்கின்றன.
கடன் வாங்குவது தவறில்லைதான். அம்பானி, அதானி கூட கடன் வாங்கி தான் தங்கள் சாம்ராஜ்யங்களைக் கட்டுகின்றனர். ஆனால் எங்கு கடன் வாங்குகிறோம், எதற்காக வாங்குகிறோம், என்ன வட்டி விகிதத்தில் வாங்குகிறோம் என்பது முக்கியம். கல்விக்கடன், வீடு வாங்கக் கடன், பிசினஸ் லோன் போன்றவை நல்ல கடன்கள். அவற்றுக்கு வட்டி கட்ட நேர்ந்தாலும், அவற்றில் இருந்து வருமானம் வரும் என்பதால் நாம் பொருளாதார ரீதியாக அடுத்தடுத்த படிகளுக்கு ஏற உதவும் ஏணிகளாக உள்ளன.
மேலும் இவை திட்டமிட்ட கடன்களாகவும் இருக்கும். எவ்வளவு தேவை, எப்போது தேவை, என்ன வட்டி விகிதம், எவ்வளவு வருடங்கள் கட்டவேண்டியிருக்கும், மாதா மாதம் கட்டவேண்டிய தொகை எவ்வளவு, நல்ல நிறுவனத்தில்தான் கடன் பெறுகிறோமா என்பது போன்ற விஷயங்களில் தெளிவு இருப்பதால் அவற்றைக் கட்டுவது எளிது.
ஆனால் கெட்ட கடன்கள் நம்மைக் கடன் வலையில் சிக்கவைத்து, நம் உழைப்பின் பலனை உறிஞ்ச ஆரம்பிக்கும். பொதுவாக இவற்றில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். மேலும் இவை நமக்கு வருமானம் தரக்கூடிய சொத்து வகைகளை உருவாக்க உதவுவதில்லை. உதாரணமாக கீழ்வரும் கடன்களைக் காணுங்கள்:
பணம் சேர்த்து வீட்டுக்குத் தேவையான உபயோகப் பொருட்களை வாங்குவது அந்தக் காலம். இப்போதோ, புதிதாகக் கட்டிய வீட்டுக்கு புதிய பொருட்களுடன்தான் போகவேண்டும் என்று மனைவி பிடிவாதம் பிடித்ததால் ஒரு நண்பர் வீடு வாங்கும் கடன் தவிர, பர்னிச்சர், டி.வி., கேஸ் ஸ்டவ் போன்ற புதிய பொருட்களுக்காகவும் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கிறார்.
பள்ளி ஹோம் ஒர்க்குக்காக ஸ்மார்ட் போன் வாங்க விரும்பும் இளைய தலைமுறைக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் ஆண்ட்ராய்ட் போன் போதும்; ஆனால் நண்பர்களுக்குக் காட்டி மகிழும் ஆசையால் ஐம்பதாயிரம் ரூபாய் ஐபோன் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். தங்கள் பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காது என்று எடுத்துக் கூறினால் பிள்ளைகள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்ற பயத்தில் கடன் வாங்கும் பெற்றோர்களும் உண்டு.
நண்பர் ஒருவர் படுக்கையறையின் நீள, அகலங்களை சரியாக அளந்து அதற்கு ஒரு டன் ஏ.சி. போதும் என்று முடிவு செய்து கடைக்குச் சென்றார். ஆனால் அங்கு கடைக்காரரின் பேச்சு சாதுர்யத்தாலும், கிரெடிட் கார்டில் பேலன்ஸ் இருந்ததாலும் ஒன்றரை டன் ஏ.சி.யுடன் வந்து சேர்ந்தார். கிரெடிட் கார்டுக்கு அதிகப் பணம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு புறம்; மாதாமாதம் ஏ.சி.க்கு ஆகும் கரண்ட் பில் அதிகரிக்கும் பிரச்சினை இன்னொரு புறம்.

சுந்தரி ஜகதீசன்
ஒரு சுடிதார் வாங்கப் போய் மூன்றாக வாங்கிவந்தது, 24 இன்ச் டி.வி.க்கு பதில் 49 இன்ச் டி.வி. வாங்கியது என்று ஆரம்பித்த கிரெடிட் கார்ட் பழக்கம், திசை மாறி, உல்லாசப் பயணத்துக்குக் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குப் போவது, 5 லட்ச ரூபாய்க்குக் கார் வாங்கப் போய், வங்கியில் கடன் கிடைப்பதால் 8 லட்ச ரூபாய்க்கு கார் வாங்குவது என்று வளர்ந்திருக்கிறது. இவையெல்லாம் நமது செல்வச்செழிப்பின் அடையாளங்கள் என்று நாம் நம்புவதுதான் வேடிக்கை.
நடப்பு என்னவென்றால், சமீப காலங்களில் பலரும் வேலை இழந்துள்ளனர்; சிலருக்கு சம்பளம் ஏறவில்லை. ஆனால் பெட்ரோல், மின்சாரம், கல்வி, மருத்துவச் செலவுகள் என எல்லாமே பணவீக்கத்தால் விலையேற்றம் அடைந்துள்ளன. நோய்வாய்ப்பட்ட வயதான பெற்றோருக்கு, காலேஜ் பீஸ் கட்ட பணம் வேண்டி நிற்கும் மகனுக்கு, பேறு காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மகளுக்கு என்று நடுத்தரக் குடும்பத்தின் பணத் தேவைகள் ஆயிரம். ஏற்கெனவே வாங்கிய கடனையும் திரும்பக் கட்டவேண்டிய அழுத்தம்; குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன்களை வாங்கிவிட்ட நிலையில் கிரெடிட் கார்ட், பர்சனல் லோன், ஆப்கள் தரும் கடன் என்று அதிக வட்டி விதிக்கும் கடன்களை வாங்கவேண்டிய சூழ்நிலை என்று பலதரப்பிலும் நெருக்கடி உண்டாவதில் கடன் கட்டுவதில் தடை ஏற்படுகிறது.
கடனைக் கட்டத் தவறியவர்கள், 'வாராக் கடனாளி' என்று அடையாளப் படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குப் பலவகையான கட்டணங்களும், பெனால்ட்டிகளும் விதிக்கப்படுகின்றன. வட்டி விகிதம் அதிகப்படுத்தப்படுகிறது. அவர்களது கிரெடிட் ஹிஸ்டரி பாதிப்படைந்து எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான நல்ல கடன்களைப் பெறுவதில் தடை ஏற்படுகிறது. நன்கு படித்தவர்களும், கடனை ஒழுங்காகக் கட்டிவிடவேண்டும் என்ற ஒழுக்கம் நிறைந்தவர்களும் கூட இந்தக் கடன் வலையில் இருந்து மீளும் வழிவகை தெரியாமல் கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியிருக்கிறது. கிரெடிட் ஸ்கோர் பாதிப்படைவதால், குறைந்த வட்டியில் நல்ல நிறுவனங்கள் தரும் கடன் கிடைப்பதில்லை. மாறாக, கடன் முதலைகள் வலையில் விழும் பேராபத்து உண்டாகிறது.
மேலும், கடன் இ.எம்.ஐ.க்கள் நம் வருமானத்தை சேமிப்பின் பக்கம் போக விடாமல் செலவின் பக்கம் செலுத்துவதால் நம் பொருளாதார உயர்வு தடைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கிரெடிட் கார்டில் வாங்குவது, இ.எம்.ஐ.யில் வாங்குவது போன்ற பழக்கங்கள்தான்.
நாம் வேலைக்குச் சேர்ந்த உடனேயே கிரெடிட் கார்ட் கம்பெனிகள் ஏதாவது ஒரு கார்டை நம் தலையில் கட்டி விடுகின்றன. வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.5 சதவீதம் என்றால், 8 சதவீதத்துக்கு கிடைக்குமா என்று தேடும் நமக்கு, கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் மினிமம் 36 சதவீதம் என்று தெரிவதில்லை. ஏனெனில் கார்ட் கம்பெனிகள் அதை நாசுக்காக 3 சதவீதம் மாத வட்டி என்றே குறிப்பிடுகின்றன. நாம் தப்பித் தவறி கிரெடிட் கார்டில் பணம் எடுத்துவிட்டால், அடுத்த நிமிடத்தில் இருந்து வட்டி 45 சதவீதம். அது தவிர, பணம் கையாளும் கட்டணம் தனி.
ஒரு ஸ்வீட் வாய்ஸ் செல்பேசியில் வந்து "இனி உங்கள் லிமிட் ஒன்றரை லட்சம்!" என்று ஏதோ லாட்டரி பரிசு தருவது போல இன்பத் தேனை ஊற்றும். ஒன்றரை லட்சத்துக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்றுதான் எண்ணம் ஓடுமே தவிர, அந்த ஒன்றரை லட்சத்தை எப்படித் திருப்பிக் கட்டப் போகிறோம் என்ற கவலை அப்போது தோன்றாது.
கிரெடிட் கார்டின் முக்கியக் கவர்ச்சி அம்சமே ப்ரீ கிரெடிட் எனப்படும் இலவசக் கடன்தான். அதாவது கிரெடிட் கார்டில் பொருட்கள் வாங்கி, 45-50 நாட்கள் கழித்து பணம் கட்டினால் போதும். ஆனால் ஒரு 7000 ரூபாய்க்கு ஏதாவது வாங்கிவிட்டால், உடனே "மொத்தமாகக் கட்ட வேண்டாம்; தவணை முறையில் கட்டுங்களேன்!" என்று ஒரு குறுஞ்செய்தி கண் சிமிட்டுகிறது. நாம் தவணைமுறைத் தேர்வை பதிவு செய்தவுடன் இலவசக்கடன் ரத்தாகி விடும். நம் சிபில் ஸ்கோரும் குறைந்துவிடும்.
"என்ன சொல்கிறீர்கள்? கிரெடிட் கார்ட் இல்லாத வாழ்க்கையா? நீங்கள் சொன்ன இலவசக்கடன் தவிர, சேரும்போது போனஸ், கேஷ் பேக் ஆபர்ஸ், நிறையப் பொருட்களுக்குத் தள்ளுபடி, ப்ரீ பாய்ண்ட்ஸ் என்று எத்தனை வசதிகள்! மேலும் நம் அரசாங்கமே "பணத்தை உபயோகிக்காதே! கார்டை உபயோகி" என்றுதானே வலியுறுத்துகிறது?" என்று நீங்கள் பொரிந்து தள்ளுவது புரிகிறது.
அரசாங்கம் சிபாரிசு செய்வது கிரெடிட் கார்ட் அல்ல; டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்ட், பே.டி.எம். கார்ட், ரூபே கார்ட் போன்ற பிளாஸ்டிக் பணம். இவற்றில் கிரெடிட் கார்ட் தவிர மற்றவை டெபிட் கார்டின் வெவ்வேறு வடிவங்கள்தான் என்பதால் அவற்றால் எந்த அபாயமும் இல்லை. மேலும் நமக்கு மனக் கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில் நாம் கிரெடிட் கார்டையும் தாராளமாக உபயோகிக்கலாம்; அதில் லாபமும் சம்பாதிக்கலாம். கிரெடிட் கார்டை உபயோகிக்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்:
1. கிரெக்டிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள்.
2. பணம் கட்டவேண்டிய தேதிக்குள் முழுப் பணத்தையும் கட்டிவிடுங்கள்; தவணைமுறையைத் தேர்வு செய்யாதீர்கள்.
3. ஆன்லைனுக்கு ஒன்று, லோக்கல் பர்ச்சேசுக்கு ஒன்று என்று பல கார்டுகள் வைத்திருக்காதீர்கள். ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்பதோடு ஒவ்வொன்றின் பணம் கட்டும் தேதியும் வேறு வேறாகிக் குழப்பும். அதிகபட்சம் ஒரு ஆட்-ஆன் (add-on) கார்ட் வைத்துக் கொள்ளுங்கள். அதற்குக் கட்டணம் கிடையாது.
4. பாயிண்ட்சுக்கு பொருட்கள் வாங்காமல், பணமாகக் கேட்டால் 10000 பாயிண்ட்களுக்கு ரூ. 2500 என்ற விகிதத்தில் உங்கள் கார்ட் அக்கவுண்டில் பணம் சேர்ந்து விடும்.
5. உங்கள் மாத வருமானத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமாக கார்ட் லிமிட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கஸ்டமர் சர்வீசுக்கு ஒரு போன் கால் மூலம் உங்கள் லிமிட்டை நீங்களே நிர்ணயம் செய்யலாம்.
மேற்கண்ட 5 விதிகளில் நீங்கள் எத்தனையை கடைப்பிடிக்கிறீர்கள்? ஐந்தை யும் கடைப்பிடிக்க முடியுமா?
ஆல் த பெஸ்ட்!
- உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன.
- தமிழகத்தில் மட்டுமே உருளைக்கிழங்கிற்கு இந்த நிலை உள்ளது.
உருளைக்கிழங்கு என்றதுமே 99 சதவீதம் பேர் அது வாயு என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு அதை ஓரம் கட்டிவிடுவார்கள். தமிழகத்தில் மட்டுமே உருளைக்கிழங்கிற்கு இந்த நிலை உள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் உருளைக்கிழங்கை சரியானபடி பயன்படுத்தி உடல் நலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்கிறார்கள்.
உருளைக்கிழங்கில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால், உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே வாயு, உடல் எடை அதிகரிப்பு எல்லாம் ஏற்படும்.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் சி, உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. அதுபோல, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உண்மையில் இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் தேவையான சத்தாகும்.
அதேபோல உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிட்டால் முழு நன்மையையும் பெற முடியும் என்று கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். வயிற்றுப்புண் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகள், குடல், இரைப்பைக் கோளாறுகள் ஆகியவற்றுக்கு உருளைக்கிழங்கு வரப்பிரசாதமாகும்.
இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உணவில் உருளைக்கிழங்கு வறுவல் இல்லாமல் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை பார்த்திருக்கலாம். ஆனால், உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற கவலை பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 9 முதல்17 வயதுடைய சிறுமிகளுக்கு தினமும் 1 முதல் 1.5 கப் உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. இந்த அளவில் எந்தவித பாதக விளைவுகளும் ஏற்படவில்லை. மாறாக, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.
உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றில் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்று கண்டறியப்பட்டாலும் சில முடிவுகளை வரையறுக்க இதுகுறித்த அடுத்தகட்ட ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உருளைக்கிழங்கு உண்ணுவதில் சிறு கவனமும் இருக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடையது. அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
அதில் ஓலனைன், சாக்கோனைன் மற்றும் ஆர்செனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால், இவை அதிக அளவு உடலினுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
அதே சமயத்தில் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.
கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமான மின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவாய் விளங்குகிறது.
வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.
உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், இது கீழ்வாதம் நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நிவாரணியாக இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சங்கடமும் உண்டு. ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் அளவு உருளைக்கிழங்கில் அதிகளவு இருப்பதால், பொதுவாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். இதுவே கீழ்வாதம் உள்ளவர்களுக்கோ கேடாக போய் முடியவும் வாய்ப்புள்ளது.

வாய் புண் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும். மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்சிஜன் வரத்து, வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
உருளைக்கிழங்கு மேற்கூறிய அனைத்தையும் தருவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளது. இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது. இருப்பினும் இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கூட்டுவதாலும், இதை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன் அதிகரித்து விடும்.
இதனால் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். எனவே மிகவும் குண்டாக இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்த உணவு அல்ல. வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும். ஏனென்றால் இதில் சுலபமாக செரிமானமாகிவிடும் ஆற்றல் இருக்கிறது. இருப்பினும் இதை அதிகமாக உட்கொண்டால் அதிக அளவு ஸ்டார்ச் உடலின் உள்ளே செல்லுவதால் வயிற்றுப்போக்கு அதிகரிக்கச் செய்யும்.
ஆனால், மனித இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து ஒரு அவசியத் தேவை என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.
ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர பொட்டாசியம் உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு உருளைக்கிழங்கை சாப்பிட வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர், 100 கிராம் உருளைக்கிழங்கில் வெறும் 0.1 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. வாழைப்பழத்தை விட உருளைக்கிழங்கில் அதிக பொட்டாசியம் உள்ளது.
சைவ உணவு உண்பவர்கள் உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து என்பதால் நல்லது என்கிறார்கள். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து போல் செயல்படும் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து நிறைந்துள்ளது மற்றும் உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது," என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உருளைக்கிழங்கில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. உருளைக்கிழங்கில் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து உள்ளது, இது சிறுகுடலில் செரிக்கப்படாமல், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, மனநிறைவை ஊக்குவிக்கிறது மற்றும் பசியைக் குறைக்கிறது. என்றாலும், நீரிழிவு நோயாளிகள் உருளைக்
கிழங்கை எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும், ஏனெனில் அவை "உங்கள் ரத்த சர்க்கரையின் அளவை" அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு தயாரிக்கப்படும் விதம் அவற்றை ஆரோக்கிய மற்றதாக்கும். ஆழமாக வறுத்தல், அதிகப்படியான வெண்ணெய், கிரீம், உப்பு சேர்ப்பது அல்லது முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மசாலாவைப் பயன்படுத்துவது உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து மதிப்பை மாற்றலாம். உருளைக்கிழங்கின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, அவற்றை ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது முக்கியம்.
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். இது சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்து விடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்சி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
உருளைக்கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து, இரண்டு கண்களின் மேலும் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணாமல் போகும்.
வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களையும் உருளை போக்கக் கூடியது, மலச்சிக்கலை மறையச் செய்கிறது. உருளைக்கிழங்கின் தைலத்தை வெந்நீரில் கலந்து காயமுற்ற உறுப்புகளின் மேலாக ஒத்தடம் கொடுக்க குணம் உண்டாகும்.
இப்படி உருளைக்கிழங்கில் அதிகம் நன்மைகள் உள்ளது. எனவே உருளைக்கிழங்கை ஒதுக்காதீர்கள்.
- வேங்கடசாமி நாட்டாரின் முதல்நிலைக் கல்விப் படிப்பு என்பது திண்ணைப் படிப்புதான்.
- நாட்டார் எழுத்துத் துறையில் மட்டுமல்லாமல் பேச்சுத் துறையிலும் தம் முத்திரையை நாட்டியவர்.
மாபெரும் தமிழறிஞரான ந.மு. வெங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள நடுக்காவேரி என்னும் சிற்றூரில் முத்துச்சாமி நாட்டார் அவர்களுக்கும் தையல் அம்மாள் என்ற பெண்மணிக்கும் 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் பன்னிரண்டாம் தேதி மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் சிவப்பிரகாசம் என்பது.
சிவப்பிரகாசம் என்ற பெயர் வேங்கடசாமி என ஏன் மாற்றப்பட்டது? அவ்விதம் மாற்றப்பட்டதன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு.
சிறுவயதில் உயிர் போகுமளவு பெரும் உடல்நலக் கோளாறுகள் சிவப் பிரகாசத்திற்கு இருந்தன. அவை அனைத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டும் எனத் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை அவரின் பெற்றோர் வேண்டிக் கொண்டனர்.
சிவப்பிரகாசம் படிப்படியாகத் தேறி நல்ல உடல்நலனைப் பெற்றார். வேங்கடவன் அருளால் அவர் உயிர் பிழைத்ததாகக் கருதிய பெற்றோர் நன்றிக் கடனைச் செலுத்தும் வகையில் சிவப்பிரகாசத்தின் பெயரை வேங்கடசாமி என நிரந்தரமாக மாற்றினர்.
அவரது தந்தையார் விவசாயி மட்டுமல்ல, மிகச் சிறந்த கல்விமானும் கூட. அவரைக் காண பற்பல தமிழ் அறிஞர்கள் வருவார்கள். அவரோடு பல இலக்கியச் செய்திகளை விவாதிப்பார்கள்.
அவற்றையெல்லாம் நாள்தோறும் கேட்டுக் கேட்டு வேங்கடசாமியின் மனத்தில் ஆழமான தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உண்டாயின.
வேங்கடசாமி நாட்டாரின் முதல்நிலைக் கல்விப் படிப்பு என்பது திண்ணைப் படிப்புதான். அதுவும் நான்காம் வகுப்பு வரை மட்டும்தான்.
ஆனால் தம் தந்தையாரிடமிருந்து ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உள்ளிட்ட நூல்களையும் அந்தாதி முதல் கலம்பகம் முடியப் பலவகைப்பட்ட இலக்கியங்களையும் ஏட்டுக் கல்வி மூலமே அறிந்து கொண்டார். முத்துசாமி நாட்டார் அவருக்குத் தந்தை மட்டுமல்ல, ஆசானாகவும் இயங்கினார்.
வேங்கடசாமியின் தமிழ்ப் பற்றையும் இலக்கிய இலக்கண ஆர்வத்தையும் கண்டு வியந்தார் அவரது தந்தையின் உற்ற நண்பரான ஐ.சுவாமிநாத முதலியார். அவர் வேங்கடசாமியை நான்காம் தமிழ்ச் சங்கம் என்ற பெருமைக்குரியதும் மதுரைத் தமிழ்ச் சங்கமாக விளங்கியதுமான செந்தமிழ்க் கல்லூரியில் சேர்த்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நாட்டார் அவர்கள் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களின் கரங்களால் தங்கப் பதக்கம் பெறும் பெருமையும் பெற்றார்.

திருப்பூர் கிருஷ்ணன்
தமது இருபத்து நான்காம் வயதில் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் நாட்டார். பின்னர் கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சிறிதுகாலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
அதன்பின்னர் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற பிஷப்ஹீபர் கல்லூரியில் தொடர்ச்சியாக இருபத்தி நான்கு ஆண்டுகள் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவரது திறமையைப் பலர் மூலம் அறிந்துகொண்ட அண்ணாமலை அரசர் தமது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியராக நியமித்தார். அங்கு ஏழாண்டுகள் பணிபுரிந்த பின் ஓய்வு பெற்ற வேங்கடசாமி நாட்டார் தமது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
இவரது மாணவர்களில் பலர் புகழ் பெற்றவர்கள். அவர்களில் பெரிதும் குறிப்பிடத் தக்கவர், `தமிழ்க் காதல், கம்பர்` போன்ற உயர்ந்த நூல்களைப் படைத்த மாபெரும் தமிழறிஞரான டாக்டர் வ.சுப. மாணிக்கம்.
வேங்கடசாமி நாட்டார் பிஷப் ஹீபர் கல்லூரியில் பணிபுரிந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்று அவர் பெருமையை உணர்த்தும்.
நாட்டார் இக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிந்த காலகட்டத்தில், இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவர் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமிழ்த் துறைத் தலைவராக விளங்கிய வேங்கடசாமி நாட்டாரின் கல்வித் தகுதி என்னவென ஆராய்ந்தார். வேங்கடசாமி நாட்டார் புலவர் பட்டம் பெற்றவர். அது பி.ஏ. என்னும் இளங்கலைப் பட்டத்திற்குத் தான் நிகரானது. முதுகலைப் பட்டமான எம்.ஏ.வுக்கு நிகரானதல்ல.
ஆனால் முதுகலை மாணவர்களுக்கு வேங்கடசாமி நாட்டார் பாடம் நடத்தி வந்தார். இது எப்படிச் சரியாகும்? இளங்கலை மட்டுமே தேறியவர் எப்படி முதுகலை வகுப்புக்குப் பாடம் எடுக்கலாம்?
சிந்தனையில் ஆழ்ந்த அந்த முதல்வர் நாட்டாரை அழைத்துப் பேசினார். அவர் விரைவில் முதுகலைத் தேர்வு எழுதித் தேறவேண்டும் என நிபந்தனை விதித்தார்.
சற்றுநேரம் மெளனமாக இருந்த நாட்டார் பின் அது சாத்திமில்லை என்றும், அவ்விதம் செய்வது அறம் ஆகாது என்றும் தெரிவித்தார். விளங்கவில்லையே என முதல்வர் கேட்ட போது நாட்டார் தம் பதிலை விளக்கினார்.
`ஐயா, பல ஆண்டுகளாக பல இடங்களில் நடக்கும் முதுகலைத் தேர்வுக்கு நான்தான் கேள்வித்தாள் தயாரித்து அளித்து வருகிறேன். எனவே நான் தேர்வெழுதினால் நான் தயாரித்தளித்த கேள்விகளுக்கே நான் பதில் எழுத வேண்டியிருக்கும். அது அறமல்லவே?` என்றார் நாட்டார்!
அந்த பதிலைக் கேட்டு திகைப்பில் ஆழ்ந்த முதல்வர் அப்போதுதான் நாடுபோற்றும் நாட்டாரது தமிழறிவின் பேரெல்லையைப் புரிந்துகொண்டார். அவரிடம் மன்னிப்பு வேண்டினார். அவர் பணிபுரிவது தங்கள் கல்லூரிக்கே பெருமை எனத் தெரிவித்து அவரைப் பணியில் தொடருமாறு அன்புடன் வேண்டிக் கொண்டார்.
அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற பின் தமிழறிஞர் கரந்தைக் கவியரசு தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் விருப்பத்திற்கு இணங்க கரந்தை புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியமின்றி மதிப்பியல் முதல்வராகப் பணியாற்றினார்.
வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்குத் தமிழ் தொடர்பாக ஒரு கனவு இருந்தது. தமிழுக்காக தனிப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்று திருச்சி அல்லது தஞ்சாவூரில் நிறுவப்பட வேண்டும் என்பதே அது. அந்தக் கனவு பின்னாளில் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப் பட்டதில் நிறைவேறியது.
நாட்டார் எழுத்துத் துறையில் மட்டுமல்லாமல் பேச்சுத் துறையிலும் தம் முத்திரையை நாட்டியவர். மிகச் சிறந்த தமிழ்ப் பேச்சாளர். தமிழ்த் தாத்தா உ.வே.சா. தலைமையில் சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் நாட்டார் ஆற்றிய தொல்காப்பியம் பற்றிய உரை எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. திருச்சி வானொலி நிலையத்திலும், திருச்சி சைவ சித்தாந்த சபையிலும், திருப்பாதிரிப் பூலியூர் ஞானியார் சங்கத்திலும் மதுரை திருநெல்வேலி தமிழ்ச் சங்கங்களிலும் இலங்கைத் தமிழ்ச் சங்கத்திலும் அவர் ஆற்றிய உரைகள் தமிழ் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவை.
1940இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் சென்னையில் ஒரு தமிழ் மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் வேங்கடசாமி நாட்டாரின் தமிழ் ஆற்றலையும் தொண்டையும் பாராட்டி அவருக்கு நாவலர் என்ற பட்டம் வழங்கப் பட்டது.
செப்பேட்டில் பொறிக்கப்பட்டு இந்தப் பட்டம் வழங்கப் பட்டபோது விழாவில் கூடியிருந்த அத்தனை தமிழ்ச் சான்றோர்களும் மகிழ்ச்சியோடு கரவொலி எழுப்பி அந்தப் பட்டத்தை மனப்பூர்வமாக அங்கீகரித்தார்கள்.
நூற்று ஐம்பத்தெட்டு கட்டுரைகள், இருநூற்று எழுபத்தெட்டு பதிப்பு நூல்கள், நானூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி ஆவணங்கள் படைத்தவர் நாட்டார். பல்வேறு சந்தர்ப்பங்களில் பற்பல தமிழ் அறிஞர்கள் அவரைச் சந்தித்துத் தங்கள் ஐயங்களுக்கு விளக்கம் பெற்றிருக்கிறார்கள்.
1912இல் மகாகவி பாரதியார் நாட்டார் அவர்களைச் சந்தித்து சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியம் தொடர்பாக சில விளக்கங்களைப் பெற்றார் என ஒரு சரித்திரச் சான்று உள்ளது. தமிழ்த் தாத்தா நாட்டார் எழுதிய `கள்ளர் சரித்திரம்` என்கிற படைப்பை சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பரிந்துரை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேங்கடசாமி நாட்டார் நக்கீரர் பற்றியும் கபிலர் பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்த் தாத்தாவுடன் இணைந்து சோழர் சரித்திரம் என்ற நூலைப் படைத்துள்ளார். பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையாரான அ.மு. சரவண முதலியாருடன் இணைந்து திருவிளையாடல் புராணம் குறித்து நூல் எழுதியுள்ளார். இன்னும் எண்ணற்ற நூல்களால் தமிழை அணிசெய்தவர் நாட்டார். வேங்கடசாமி நாட்டாரின் நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அவரது நூல்களைக் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் என்றே கூற வேண்டும்.
பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தூய தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்ததும் நாட்டாரின் முக்கியமான தமிழ்ப் பணிகளில் ஒன்று. எஞ்சினியர் என்ற சொல்லைப் பொறியாளர் என்றும் ஜட்ஜ் என்ற சொல்லை நீதிபதி என்றும் கோர்ட்டை நீதி மன்றம் என்றும் அட்வகேட் என்பதை வழக்கறிஞர் என்றும் மாற்றிய பெருமையெல்லாம் இவருடையதே.
தமிழே வாழ்வாக வாழ்ந்த வேங்கடசாமி நாட்டார் 1944 இல் தம் அறுபது வயது நிறைவடையும் தருணத்தில் மணிவிழாவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் காலமானார். அவர் பிறந்த ஊரான நடுக்காவேரியில் அவருக்கு ஒரு கற்கோயில் எழுப்பப் பட்டுள்ளது. அங்கு தினசரி வழிபாடு நிகழ்த்தப் படுகிறது. ஒரு தமிழ் அறிஞருக்கு ஆலயம் எழுப்பப் பட்டு நாள்தோறும் வழிபாடு நிகழ்த்தப் படுவது என்பதே அவரது மாபெரும் பெருமையை உணர்த்தும்.
திரு.பி.விருத்தாசலம் என்பவரின் முயற்சியால் வேங்கடசாமி நாட்டார் பெயரில் தொடங்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி `திருவருள் கல்லூரி` என்ற பெயரில் தஞ்சாவூரில் சுயநிதி கல்லூரியாக இயங்கி வருகிறது. இந்தச் செய்தியும் நாட்டாரின் பெருமையை விளக்கும்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com






