என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிர நடைபெற்று வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த மாதம் 10-ந்தேதி பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் 10-ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18-ந்தேதி மூடப்பட்டன.

    பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்தது.

    இதன்படி புதுவையில் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆணையர், இளநிலைப் பொறியாளர், வருவாய் ஆய்வாளர்கள், ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று பிற்பகல் ஆணையர்,ரமேஷ் மேலாளர், இளநிலைப் பொறியாளர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர்கள், அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்,மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

     அதே இடத்தில் அக்கிரமம் செய்தால் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    காரைக்காலில் பொது இடத்தில் அத்துமீறியதாக போலீசாரால் கைதான சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காரைக்கால்:

    காரைக்கால் நகர் பகுதியில், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை (வயது 14), கூலி வேலை செய்துவரும் சிறுவன் (17) ஒருவன், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தான். பல நாட்கள் வெளியில் சுற்றி வந்த இந்த இளம் காதல் ஜோடி, காரைக்கால் கடற்கரைக்கு சென்று சுற்றியுள்ளனர். அப்போது பொது இடத்தில் இருவரும் அத்துமீறி நடந்து கொண்டனர்.

    அப்போது அங்கு வந்த சிறுமியின் தந்தை, 2பேரையும் கையும், களவுமாக பிடித்து கடுமையாக கண்டித்துள்ளார். பின்னர் சிறுவனை காரைக்கால் டவுன் போலீசில் ஒப்படைத்தார். மேலும் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், சிறுவன் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அரசு சட்ட விதிகள் படி, சிறுவனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தனர். சோதனையின் முடிவில் சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    புதுச்சேரியில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 1-ந் தேதி  3 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக ஆயிரத்து 742 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 531, காரைக்காலில் 136, ஏனாமில் 65, மாகியில் 10 பேர்   புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 99, காரைக்காலில் 29, ஏனாமில் 8, மாகியில் 10 பேர் என 146 பேர்   தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    புதுவையில் 2 ஆயிரத்து 139, காரைக்காலில் 610, ஏனாமில் 389,  மாகியில் 13  பேர் என 3 ஆயிரத்து 151 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 840 பேர்   குணமடைந்துள்ளனர்.  

    புதுவையில் 4 ஆயிரத்து 278, காரைக்காலில் ஆயிரத்து 949, ஏனாமில் 434, மாகியில் 45 பேர் என 6 ஆயிரத்து 706 பேர்  வீட்டு  தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 6 ஆயிரத்து 852 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  புதுவை அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த 84 வயது மூதாட்டி, ராமநாதபுரத்தை சேர்ந்த 76 வயது முதியவர், தந்தை பெரியார் நகரை சேர்ந்த 62 வயது பெண், சாந்தி நகரை சேர்ந்த 89 வயது முதியவர், மணக்குள விநாயகர் நகரை சேர்ந்த 81 வயது முதியவர், காரைக்கால் நெடுங்காடை சேர்ந்த 77 வயது மூதாட்டி என 6 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியா னோர்  எண்ணிக்கை ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது  தவணை உள்பட 15 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 
    இத்தகவலை  சுகா தாரத்துறை தெரிவித்து உள்ளது. 

    புதுவையில் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை வேளாண் விளை பொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்கும் வகையில் புதுவை குடிமைப்பொருள் துறை மூலம் மத்திய அரசின் இந்திய உணவு கழகத்தால் விவசாயிகளிட மிருந்து நேரடி நெல் கொள் முதல் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. 

    புதுவையில் உள்ள விற்பனைக்குழுவின் அனைத்து ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகங்களும், நேரடி கொள்முதல் நிலையங்களாக அறிவிக்கப்படுகிறது. 

    இங்கு இந்திய உணவுக் கழகம் நிர்ணயித்துள்ள தரக்கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொருட்டு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் சன்ன ரகங்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.ஆயிரத்து 960, மோட்டா ரகங்களுக்கு குவிண்டாலுக்கு 
    ரூ.ஆயிரத்து 940 விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. 

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து மதகடிப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்  தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்ச்சியில் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், அங்காளன் எம்.எல்.ஏ., விற்பனைக்குழு செயலர் சிவசங்கரமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
    திட்டங்கள் இல்லாத பட்ஜெட் என காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு இந்தியாவில் இந்துத்துவா ஆட்சியில் பணக்காரர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளது. 

    இது மேலும் அதிகரிக்க பா.ஜனதா பட்ஜெட்டில் 5 சதவீத வரிச்சலுகை கொடுத் துள்ளது. வைரத்துக்கு 5 சதவீத வரி குறைத்துள்ளது. ஆனால் குடைகளுக்கு 20 சதவீத வரி உயர்ந்துள்ளது. கங்கை- காவிரி இணைப்பை கைவிட்டுள்ளனர். 

    அதற்கு பதிலாக கோதாவரி- காவிரி இணைப்பு என்று 25 ஆண்டுகால திட்டத்தை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல், விளம்பரத்துக்காக அறிவித்துள்ளனர். 

    100 நாள் வேலை திட்டத்தில் 25 சதவீத நிதியை குறைத்து சமூக அநீதி செய்துள்ளனர். சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு கடன் மட்டும் அளிப்போம், எந்த சலுகையும் தர மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். 

    நாட்டின் சொத்துக்களை திட்டமிட்டு விரும்பி தாரை வார்ப்பதின் தொடர்ச்சியாக, எல்.ஐ.சி. பங்குகளை விற்கிறோம் என்று வெளிப்படையாக பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர். 

    ஒரே நாடு ஒரே கொள்கை என்று கூறி மாநில பத்திரப்பதிவு அலுவலக உரிமையை பறித்துள்ளனர். 

    கொரோனா ஊரடங்கால், வேலை இழந்து வருமானம் இழந்து தவிக்கும் மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு, திட்டங்கள் எதுவும் இல்லை. 

    சம்பளதாரர்களுக்கு, நடுத்தர மக்களுக்கு, ஏழைகளுக்கு, இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு நிறுவனங்களுக்கு என்று எதுவுமே இல்லை. வரும் தேர்தல்களில், பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காமராஜர் சிலை சதுக்கத்தில் அல்வா வழங்கும் போராட்டம் நடந்தது.

    கார்ப்பரேட் ஆதரவு மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், மின்துறையை தனியார் மயமாக்க துடிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்தும் இந்த நூதன போராட்டம் நடந்தது. 

    போராட்டத்துக்கு பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். பொருளாளர் 
    சஞ்சய் முன்னிலை வகித்தார். பிரதேச செயலாளர் ஆனந்த் கண்டன உரையாற்றினார். 

    போராட்டத்தில் நிர்வாகிகள் ரஞ்சித், பிரதாப், நவீன், நிலவழகன், கவுசிகன், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். 

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கினர்.
    மருத்துவ கல்வியில் புதுவை இடங்களை நிரப்ப ஜிப்மருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை ஒதுக்கீடாக 64 இடங்கள் உள்ளன. இது புதுவை மாணவர்களுக்கு கிடைக்குமா? என்ற நிலை  உருவாகியுள்ளது. 

    புதுவை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த சில மாணவர்களின் குடியிருப்பு, சாதி சான்றிதழ் புதுவையை சேர்ந்ததாக இல்லை.  சான்றிதழ்களை மீண்டும் சரிபார்த்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். 

    தவறாக விண்ணப்பித்த மாணவர்கள் குறித்து எம்.சி.சி.க்கு  தெரிவிக்க வேண்டும் என ஜிப்மர் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

    ஜிப்மரில் சேர்க்கை அதிகாரம் டெல்லிக்கு மாற்றப்பட்டதால் புதுவையை  சேர்ந்தவர்கள் புகார் கூட அளிக்க முடியாத நிலை உருவாகி யுள்ளது. புதுவை இடங்களை நிரப்பும் அதிகாரம் ஜிப்மருக்கே கிடைக்க கவர்னர்,  முதல்&அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.

    1&ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதுவையில் படித்தவர்களுக்கு மட்டுமே ஜிப்மர், அரசு, தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடங்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டும் காமராஜர் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். 

    இதன் மூலம் புதுவை  இடங்களை வெளி மாநிலத் தினர் பறிப்பதை தடுக்க முடியும். அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பட்டியலை சென்டாக்  இணையதளத்தில் வெளியிட வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை பாரதி வீதியில் அழகு நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார் (வயது61). இவர் புதுவை பாரதி வீதியில் பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்கள் சென்ற பின்னர் குமார் அழகு நிலையத்தை பூட்டி சென்றார். 

    இந்த நிலையில் ஒதியஞ்சாலை போலீசார் நள்ளிரவு பாரதி வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமாருக்கு சொந்தமான அழகு நிலையத்தின் கதவை ஒரு வாலிபர் உடைத்துக் கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்.

    இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ மாணிக்கம் (26) என்பதும், அழகு நிலைய கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. 

    மேலும் இவர் மீது காரைக்கால் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜமாணிக்கத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
    புதுவையில் கர்ப்பமானதாக நாடகமாடிய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி தர்மாபுரி பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரரின் மனைவி 21 வயது பெண். இவர் கர்ப்பமாகாமலேயே கர்ப்பமானதாக கூறி குடும்பத்தினரை நம்ப வைத்தார். இப்படியே நிறைமாதம் வரை வந்து விட்ட நிலையில் பரிசோதனைக்காக தனது மனைவியை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு போலீஸ்காரர் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுக்கச் சென்றபோது திடீரென அந்த பெண் மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் முதலில் அந்த செல்போன் விழுப்புரம் சிக்னலை காட்டியது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண் போலீஸ்காரரான தனது கணவருக்கு போன் செய்து பேசினார்.

    அப்போது தன்னை யாரோ கோவைக்கு கடத்தி வந்து விட்டதாகவும், தனது வயிற்றில் இருந்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் கோரிமேடு போலீசார் கோவைக்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், அந்த பெண் கர்ப்பமாக இருந்ததாக கூறி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஏமாற்றி நாடகமாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை புதுவை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால் மாவட்டத்திலுள்ள வேறு எந்த மின் துறை சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைநிறுத்தம் செய்வது, சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது, போராட்டம் நடத்த 144 கீழ் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    காரைக்கால்:

    யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மின்துறை ஊழியர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(பிப்.1) முதல் மின் துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டம் நடந்தால், மின் துறை சார்ந்த பல்வேறு அன்றாட பணிகள் தடைபடும் எனவும், அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்சாரம் மக்களுக்கான அத்தியாவசிய தேவை என்பதால் மின் விநியோகம் தடைபடக் கூடாது. மின் துறை சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. மின்துறை சார்ந்த ஊழியர்கள், அவர்கள் சார்ந்த அமைப்புகள், சங்கங்கள், மின்துறை அலுவலகத்திலோ, மின் உற்பத்தி மற்றும் மின்சாரம் வழங்கும் இடங்களிலோ, துணை மின்நிலையத்திலோ, காரைக்கால் மாவட்டத்திலுள்ள வேறு எந்த மின் துறை சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைநிறுத்தம் செய்வது, சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது, போராட்டம் நடத்த, 144 கீழ் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் இதர சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருநள்ளாறில் செல்போனை பெற்றோர் பறித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். அவரது மகள் விஜயலட்சுமி (வயது19). இவர் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் ஆண்டு தாவரவியல் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை என்பதால், விஜயலட்சுமி வீட்டில் இருந்துவந்தார்.

    ஆன்லைன் பாடத்திற்காக பெற்றோர் வாங்கிகொடுத்த செல்போனில், விஜலட்சுமி எப்போதும் கேம் விளையாடிகொண்டிருப்பது வாடிக்கையாம். பலமுறை பெற்றோர் சொல்லிபார்த்தும், செல்போனில் விளையாடுவதை விஜயலட்சுமி விடவில்லை.

    சம்வத்தன்று செல்போனில் வழக்கம் போல், கேம் விளையாடிய விஜலட்சுமியை பெற்றோர் திட்டி, செல்போனை பிடுங்கிவைத்து கொண்டனர்.

    இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரத்தில், துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்க்கத்தினர் உதவியுடன், விஜயலட்சுமியை தூக்கில் இருந்து கீழே இறக்கி, தேனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விஜயலட்சுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×