என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    லாட்டரி சீட்டு விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை பாக்கு முடையான்பட்டு கொக்கு பார்க் சந்திப்பில் கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது 3 பேர் நின்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி முடிவுகளை செல்போனில் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புதுவை 45 அடி ரோடு பாலன்நகரை சேர்ந்த ராஜாமுகமது(வயது31), லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையை சேர்ந்த செல்வம்(47) மற்றும் ஜீவானந்தபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த சங்கர்(52) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து  அவர்களிடமிருந்து 3  செல்போன்கள், லாட்டரி விற்பனை பணம் ரூ-.21 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுபோல் நயினார் மண்டபத்தில் கேரள லாட்டரி சீட்டு விற்ற நயினார்மண்டபம் பாரதிவீதியை சேர்ந்த விஜயகுமார்(70) மற்றும் புதுவை சக்திநகரை சேர்ந்த ராஜேந்திரன்(58) ஆகிய 2 பேரையும் முதலியார் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் இளவரசன் கைது செய்தார். அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ.13 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டது.
    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கென்னடி நகர் சுப்புராயப்பிள்ளை சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வசந்தி. இவரது 2-வது மகள் சுவாதி (வயது 24). இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் வயிற்று வலியால் சுவாதி அவதிப்பட்டு வந்ததாகவும் இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் அகலங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது70). விவசாயம் செய்துவரும் இவர், தனது தெருவில் கார் ஓட்டி பழகி வந்தார். அப்போது, தெருவில் நின்று கொண்டிருந்த செல்லம்மாள் (76), முத்துலட்சுமி (48), புனிதா (36) ஆகிய 3 பெண்கள் மீது கார் மோதியது. இதில், 3 பேரும் காயம் அடைந்தனர். அருகில் உள்ளோர், 3 பேரையும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், செல்லம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து, காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசார், காரை தவறாக ஓட்டிய முருகையன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வானூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்/ இவரது மனைவி அன்னபூரணி (வயது 52). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை புதுவையில் இருந்து திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து புதுவை நோக்கி திரும்பினர். மோட்டார் சைக்கிள் ஆரோவில் உள்ள போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட் டார் சைக்கிளை வேகமாக இயக்கியதில் எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த அன்னபூரணி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அன்னபூரணி இறந்தார்.

    இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மத்திய அரசோடு இணைந்து, மாநில அரசும் இணைந்து மாணவர்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கவர்னர் தமிழிசை கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

    இந்தியாவில் இருந்து மாணவர்கள் உள்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    உக்ரைன் நாட்டு எல்லைகளில் உள்ள நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். புதுவையிலிருந்து மருத்துவம் படிக்க சென்ற 23 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர்.

    நேற்று நள்ளிரவில் தமிழகத்தை சேர்ந்தவர்களோடு புதுவையை சேர்ந்த மாணவி ரோஜாசிவமணி நாடு திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையை சேர்ந்த ரோஜா சிவமணி, தமிழகத்தை சேர்ந்த மாணவர்களோடு திரும்பி வந்துள்ளார். மத்திய அரசின் கடுமையான முயற்சியால் இந்தியர்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த மாணவி 6-ம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார். 2 மாதத்தில் தன் படிப்பை நிறைவு செய்திருப்பார். அதற்குள் போர் வந்துவிட்டது. அவர் பத்திரமாக மீட்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது.

    புதுவையில் இருந்து சென்ற 23 மாணவர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது.

    புதுவை அரசு வெளியுறவுத்துறையிடம் தொடர்புகொண்டு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ள பிரதமருக்கு நன்றி.

    இந்தியர்களை மீட்க 26 விமானங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளது. 4 மந்திரிகளை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் ஈடுபடுத்தியுள்ளார்.

    ‘ஆபரே‌ஷன் கங்கா’ என்ற திட்டம் மிக சிறப்பாக, மனிதாபிமானத்தோடு இந்தியர்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. இது மனநிம்மதியை தருகிறது.

    உக்ரைனில் போர் சூழல் கவலை அளிக்கிறது. அனைத்து மாணவர்களும் வந்து சேர்ந்தால்தான் மிகவும் ஆறுதலாக இருக்கும். மத்திய அரசோடு இணைந்து, மாநில அரசும் இணைந்து மாணவர்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புதுவை சட்டசபை உறுதிமொழி குழுவின் ஆலோ சனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது.
    புதுச்சேரி:

    சட்டசபை உறுதி மொழிக் குழு தலைவர் நேரு தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கென்னடி, ராமலிங்கம், ஏகேடி.ஆறுமுகம், அசோக் பாபு, சிவசங்கரன், சட்ட சபை செயலர் முனுசாமி, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் அரசு துறைகளில் முதல்&அமைச்சர், அமைச்சர்கள் சட்டப்பேரவையில் அறிவித்த நலத்திட்ட உறுதிமொழிகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    புதுவையில் இருந்து பெங்களுருவுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றார்.

    ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி இன்றோடு 300 நாட்களை நிறைவு செய்தது. 

    இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 300 நாட்கள் சாதனை தொகுப்பை அமைச்சர் லட்சுமிநாராயணன்  வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல் ஆதாயத்துக்காக சிலர் ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என கூறு கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு தகுதியான 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உள்ளோம். இதற்காக மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.105 கோடி கூடுதல் செலவாகிறது. அனைத்து முதியோருக்கும் ரூ.500 உதவித்தொகையை உயர்த்தி உள்ளோம். 

    இதற்காக ஆண்டுக்கு ரூ.36 கோடி கூடுதல் செலவாகி உள்ளது. கொரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம், அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம், மீனவ முதியோருக்கு ரூ.500 ஓய்வூதியம் உயர்வு, தீபாவளிக்கு அரிசி, பொங்கல் பொருட்கள், துணிக்கு ரூ.
    ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

    கொரோனா நிவாரண மாக மத்திய அரசின் பங்களிப்போடு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. காமராஜர் மணி மண்டப பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளது. ரூ.60 கோடியில் ஆரியப்பாளையம் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

    இந்திராகாந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை ரூ.400 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யும் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கினால் 2 ஆண்டில் பாலம் கட்டி முடிக்கப்படும். 

    சென்டாக் மூலம் தேர்வாகும் அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீதம் கட்டணத்தை அரசே செலுத்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். புதிய சட்டசபை கட்ட மத்திய அரசு ரூ.300 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

    பெட்ரோல், டீசல் விலையை இந்தியாவிலேயே அதிகபட்சமாக ரூ.20 புதுவையில் குறைக்கப் பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் மட்டும் 300 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளோம். துறைவாரியாக அனைத்து பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. வாரிசு சான்றிதழ் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே புதுவை யிலிருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை இயங்கியது. மத்திய அரசு 3 ஆண்டுக்கு டெண்டர் விட்ட காலம் முடிவடைந்தது. இப்போது மீண்டும் விமான சேவையை வருகிற 27-ந் தேதி தொடங்க உள்ளோம். 

    புதுவையிலிருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கும். அடுத்த வாரத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு தொடங்கும். ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

    மக்கள் எண்ணத்தை பூர்த்தி செய்யும் அரசாக முதல்&அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திகழ்கிறது. கடந்த ஆண்டும் மத்திய அரசின் நிதி ரூ.ஆயிரத்து 750 கோடிதான் கிடைத்தது. இந்த ஆண்டும் அதே நிதிதான் கிடைத்துள்ளது. ஆனால் செய்ய முடியாது என சொல்லப்பட்டதையும் ரங்கசாமி அரசு செய்து முடித்துள்ளது. 

    மத்திய அரசிடம் புதுவையின் வளர்ச்சிக்காக கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி அரசு கோரியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளார்.  

    இவ்வாறு அவர் கூறினார். 
    கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சி சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி :

    கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சி சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.

    மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில கமிட்டி உறுப்பினர் பழனி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. தலைவர் மோதிலால், கட்டுமான தொழிலாளர் சம்மேளன உறுப்பினர் முருகன், விவசாய, கிராமப்புற தொழிலாளர் சங்கம் மல்லிகா, முற்போக்கு பெண்கள் கழகம் விஜயா, புரட்சிகர இளைஞர் இயக்கம் ராஜராஜன் உட்பட பலர் உரையாற்றினர். 

    உக்ரைனில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் அரசு செலவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தத்தில் ஈடுபட பிரதமர் மோடி தலையிட வேண்டும். உக்ரைனில் படிப்பை தொடர முடியாத மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண் 
    டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    வம்பாகீரப்பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில்  மயான கொள்ளை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை மகா அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு யாளி வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை நாள்தோறும் சிறப்பு பூஜைகள், மகா அபிஷேகம், பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா வருகிற 7-ந் தேதி நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள்நீர், விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 
    விழாவுக்கான ஏற்பாடுகளை மீனவ கிராம ஆலய கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். 
    புதுவை கடற்கரை சாலையில் இயற்கை உணவு பொருட்கள் விற்பனைக்கூடம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    புதுச்சேரி:

    புதுவை பிரெஞ்சு ஆய்வு மையத்தில் பாரம்பரிய உணவு குறித்த கருத்தரங்கு நடந்தது. ஆய்வு மைய இயக்குனர் பிளாந்தின் ரிபேர்ட் வரவேற்றார்.  சமூக அறிவியல் துறை டெல்பின்திவே, வெங்கடசுப்பிரமணியன், சுற்றுப்புறவியல் துறை டோரிஸ் பார்போனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

     பாரம்பரிய விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. பொது மக்களிடமும் பாரம்பரிய உணவு, பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளது. முன்பு வீடுகளில் கத்திரி, முருங்கை, வாழை வளர்த்தனர். சிலகாலம் இந்த பழக்கம் அறவே நின்றுவிட்டது. 

    இப்போது பலரும் வீடுகளில் பயிர்களை வளர்க்க தொடங்கியுள்ளனர். இயற்கை முறையில் விளைவிக்கும் பயிர்களை விற்பனை செய்ய கடற்கரை சாலையில் ஒரு விற்பனைக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    பாரம்பரிய விவசாயம் பற்றி அறிய விவசாயிகளை அழைத்துச்சென்று கள ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    கடந்த 5 ஆண்டில் விவசாயம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இப்போது அதை சீரமைக்கும் பணியை செய்து வருகிறோம். மற்ற நாடுகளை விட பிரெஞ்சு மக்கள் தங்களுக்கு தெரிந்த அறிவார்ந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்கின்றனர். 

    அந்த வகையில் இந்த கருத்தரங்கு புதுவை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். பெண்கள் பாரம்பரிய முறையில் உணவு சமைக்க முன்வர வேண்டும். பெண்கள் சமைப்பதை குறைத்ததால் தான் ஓட்டல்கள் அதிகரித்து விட்டன. 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    கருத்தரங்கில் துணை தூதரக அதிகாரி கரோல் ஜோஸ், நபார்டு மேலாளர் சித்தார்த்தன், நம்மாழ்வார் இயக்கை விவசாயி கள் சங்க தலைவர் ராஜவேணு கோபால், ஆத்மா சங்கம் பாக்கியவதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.  ஆவணி தோட்டம் பானுஸ்ரீ நன்றி கூறினார். 

    தொடர்ந்து என் சமையலறை, என் உணவு என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட கண்காட்சியை ரமேஷ்குமார் தொடங்கி வைத்தார். இன்று மாலை கீரை ஆராய்ச்சி, தேனீமகரந்த ஆராய்ச்சி புத்தகம் அலையன்ஸ் பிரான்சேவில் வெளியிடப்படுகிறது. 4 மணிக்கு அனைவருக்கும் உணவு கிடைத்தல் பற்றிய கலந்துரையாடல் பிரெட்ரிக் லாண்டி தலைமையில் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) கரிக்கலாம்பாக்கத்தில் பெண் விவசாயிகள், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான கலந்துரையாடல் நடக்கிறது. தொடர்ந்து 6-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
    4 வழி சாலைக்காக கடைகள்-மரங்கள் அகற்றதால் திருபுவனையில் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரி :

    திருபுவனையில் 4 வழி சாலைக்காக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

    இந்த நிலையில் திருபுவனை பகுதியில் இருந்த மிகவும் பழமையான மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. 

    மேலும் 4 வழிசாலை பணிக்காக திருபுவனை பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக சாலையோரம் நடத்தி வந்த 20-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டது.

    சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகள் தங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை எனக் கூறி தற்போது கடைகளை வைப்பதற்கு இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    திருபுவனையில் உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து வணிக வளாகம் அருகில் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர்சந்தை நடைபெற்று வருகின்றது. 

    தற்போது சாலை அகலப்படுத்தும் பணிக்காக அங்கு மாலைநேர கடைகளை வைக்க முடியாமல் 30-க்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் பாதிப் படைந்துள்ளனர்.

    தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், கீரைகள், பழவகைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த மாலை நேர உழவர் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தற்போது திருபுவனையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் திருபுவனையில் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    மாகி-ஏனாமில் வாடகை இடத்தில் இயங்கும் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி அனைத்து பாடப்பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்று துணைவேந்தரிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
    புதுச்சேரி:


    புதுவையில் இயங்கும் மத்திய பல்லைக்கழகத்துக்கு சட்ட ஆலோசகராக வக்கீல் அசோக்பாபு எம்.எல்.ஏ. உள்ளார். 

    இந்தநிலையில் வக்கீல் அசோக்பாபு எம்.எல்.ஏ. பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    அப்போது புதுவை பல்கலைக்கழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அசோக் பாபு எம்.எல்.ஏ. துணை வேந்தரிடம் ஆலோசனை நடத்தினார். 

    மேலும் மாகி, ஏனாமில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்று துணைவேந்தர் குர்மீத்சிங்கிடம் அசோக் பாபு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக துணைவேந்தர் குர்மீத்சிங் உறுதி அளித்தார்.
    ×