என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி மற்றும் தமிழக போலீஸ் துறையில் திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ், ஊர்க்காவல் படை வீரர், பெண் காவலர் என பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இடம் பிடித்து தனி முத்திரை பதித்துள்ளனர்.
புதுச்சேரி தீயணைப்பு துறையிலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். போலீஸ் பணிக்கான தேர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்று இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரி மாநில போலீஸ் துறை சார்பில் நடந்த காவலர் தேர்விலும் செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளதில் இந்த கிராமத்தை சேர்ந்த 7 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே புதுச்சேரி, தமிழக போலீஸ் துறையில் அதிகம் பேர் பணியாற்றி வரும் நிலையில் தற்போதும் இந்த அளவுக்கு தேர்ச்சி பெற்று இருப்பது மாநிலத்தையே போலீஸ் கிராமமாக செட்டிப்பட்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதிலும் தமிழ்ச்செல்வம் என்பவர் மாநில அளவில் 8-வது இடத்தை பிடித்து தேர்வாகி இருப்பது மற்றொரு சிறப்பாகும். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஏற்கனவே இந்த கிராமத்தில் இருந்து போலீஸ் துறையில் பணியில் இருந்து வருபவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வழிகாட்டி வருவது இந்த சாதனைக்கு முக்கிய அம்சமாகும். தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் புதுச்சேரி காவலர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது செட்டிப்பட்டு கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேதராப்பட்டு:
சேதராப்பட்டு தொழிற் பேட்டையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இங்குள்ள இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சேதராப்பட்டு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, கரசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே சேதராப்பட்டு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக கஞ்சா புழக்கம் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக கனரக தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.
சேதராப்பட்டு, துத்திப்பட்டு, வில்லியனூர் பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள அடர்ந்த பகுதியில் கஞ்சா புகைப்பதும் அதனை போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்வதும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று சேதராப்பட்டு ஏரிக்கரையில் ரோந்து பணிமேற்கொண்டனர். அப்போது, அய்யனார் கோவில் அருகே வட மாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தார். சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அவரது உடமைகளை சோதித்தனர். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ஒடிசா மாநிலம் ஹஜிப்பூர் பகுதியைச் சேர்ந்த சோமநாத் (வயது32) என்பதும், திருமணமாகி மனைவியுடன் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
சோம்நாத் வீட்டில் சேதராப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வீட்டுக்குள் அறையில் வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
கர்ப்பிணியான சோமநாத் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் ஒடிசாவில் இருந்து ரெயிலில் கஞ்சா பொட்டலங்களை கிலோ கணக்கில் கடத்தி வந்து 10 கிராம் அளவிற்கு பாக்கெட்டுகளில் அடைத்து அதை ஒரு பொட்டலம் ரூ.500-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
சேதராப்பட்டில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாது திருச்சிற்றம் பலம் கூட்ரோடு, ஆரோவில் பகுதியில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் கஞ்சாவை சோம்நாத் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
சோம்நாத்தை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் கைலாசநாதர் கோவில் வகையறாவை சேர்ந்த, பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ளது. இந்த கோவில் வாசலில், நடு சாலையில் முகப்பு மண்டபம் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் சில காரணங்களால் தடைப்பட்டுப் போனது.
இந்நிலையில், பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மண்டபம் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 18-ந் தேதி ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், காரைக்கால் மாதா கோவில் வீதியில், பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில் எதிரே கட்டப்பட்டு வரும் முகப்பு மண்டபத்தை இடித்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில் காரைக்காலில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று (23-ந் தேதி) கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர். காரைக்காலில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சென்று காரைக்காலில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோவில் வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் மட்டும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதன் கிளை சாலைகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், அரசுத் துறை அலுவலகங்கள் இயங்குகின்றன. ஆட்டோ, பஸ், வேன் இயங்குகின்றன. அனைத்து சாலையிலும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






