என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகிகள் நினைவு தினத்தை கவர்னர் தமிழிசை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.
    X
    தியாகிகள் நினைவு தினத்தை கவர்னர் தமிழிசை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    தியாகிகளின் வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - தமிழிசை அறிவுறுத்தல்

    மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் தியாகிகள் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் அரபிந்தோ ஆசிரம ஆடிட்டோரியத்தில் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை தலைமையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரங்கில் இருந்த மாணவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். 
    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:&

    சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் தினமாக இந்த தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ந் தேதி கட்டாயமாக கொண்டாடப்பட வேண்டும் என்று பாரதப் பிரதமர் எடுத்துக் கூறினார். 
    அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அவருக்கு வயது 23. 3 இளைஞர்கள் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்ட நாள். 

    எங்களுடைய உயிர் ஒரு மெழுகுவர்த்தி போல இங்கு கரைந்தாலும் எங்களது தியாகத்தின் வெளிச்சம் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித் தரும் என்று சொல்லிவிட்டு தூக்குமேடை ஏறினார்கள்.

    பகத் சிங் தூக்கு மேடைக்கு போவதற்கு முன்னால் கூட புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட இளைஞர்கள் வாழ்ந்த நாடு இந்த நாடு. தூக்கு மேடைக்கு யார் முதலில் செல்கிறீர்கள் என்று கேட்டபோது நான் செல்கிறேன் என்று சுகதேவ் சொன்னார். 

    இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்காக தூக்கு மேடையை எந்த அளவிற்கு விருப்பமாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    காந்தியக் கொள்கை அகிம்சைக் கொள்கை. இவர்கள் தேர்ந்தெடுத்தது தீவிரவாதக் கொள்கை. தீவிரவாதம், புரட்சி என்பதை கத்தி, வெடிகுண்டு பயன்படுத்துவது என்று புரிந்து கொள்ள வேண்டாம். 

    தாம் நினைப்பதில் தீவிரமாக இருந்து அதன்மூலம் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவோம் என்று உறுதியாக இருப்பதுதான் புரட்சி. அந்தப் புரட்சியாளர்களுக்காகத் தான் இந்த திருநாள்.

    சுபாஸ் சந்திரபோஸ் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கி தர வேண்டும் என்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இளைஞர்களை அழைத்து வந்தார்.

    நாட்டின் எல்லை வந்தவுடன் இந்த நாட்டின் எல்லையைத் கடக்கும் முதல் 10 பேர் இந்தியர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் என் நாட்டில் கீழே விழும் முதல் ரத்தம் இந்தியனின் ரத்தமாக இருக்க வேண்டும் என்றார். அப்படி ரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திரம் இந்த சுதந்திரம்.

    மாணவர்களைக் கேட்டுக் கொள்வது, சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றி தேடித்தேடி படியுங்கள். ஒவ்வொரு தியாகத்தைப் பற்றி கேட்கும் போது ரத்தம் சூடேறும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று தோன்றும். 

    நாம் வாழ்வதற்காக பல இளைஞர்கள் தியாகம் செய்தார்கள். அந்த தியாகத்தை நினைவு கூறுவதற்காகத்தான் இந்த நாள். தெரிந்தவர்கள் சிலர் மட்டுமே. தெரியாதவர்கள் பல பேர் இருக்கிறார்கள். 

    ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் துப்பாக்கிச் சுடப் பயிற்சி பெற்றது இந்த புதுச்சேரி மண்ணில் தான் என்பது பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட புரட்சியாளர்கள் வாழ்ந்த மண் இந்த மண்.

    பாரத பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்று சுதந்திரமடைந்த 75-வது ஆண்டை ஒரு வருடமாக கொண்டாட தொடங்கி பல நல்ல தகவல்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    ஆசிரியர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியும் தினமும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு அது பற்றி தெரியத் தெரிய இந்த நாட்டுக்கான சிறந்த தலைவர்களாக அவர்கள் உருவாக முடியும். இந்த நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்களின் பங்காற்ற வேண்டும். சுதந்திர போராட்டத்திற்காக பெண்களும் தியாகம் செய்திருக்கிறார்கள் அவர் களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மாணவிகள் வந்திருப்பது சிறப்பு. மாணவர்களுக்கு தேசப்பற்று வேண்டும். அதே போல சுயமுயற்சியும் வேண்டும். நீங்கள் வெற்றியாளர்களாக வளர வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு, தாய்-தந்தையைப் போற்றுவதற்கு, இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் வளர்ச்சி பெற வைப்பதற்கு வெறி இருக்க வேண்டும். அந்த வெறி இருக்கும்போது நீங்கள் வெற்றியாளர்களாக மாறுவீர்கள்.

    நாட்டுக்காக தியாகம் செய்த அந்த இளைஞர்களை நாம் நினைப்போம். ஒருகாலத்தில் இளைஞர் களாகிய நம்மால் இந்த நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுப்போம். சுதந்திரத்தை மனதில் விதைக்கும் தினமாக அந்த நாள் அமைய வேண்டும்.
    இவ்வாறு தமிழிசை பேசினார். கவர்னர் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு நாதழுதழுக்க பேசினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார்,  எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், செய்தித்துறை இயக்குனர் வினயராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×