என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் கோவில் மண்டபம் இடிக்க எதிர்ப்பு- காரைக்காலில் இன்று கடையடைப்பு போராட்டம்
காரைக்கால்:
காரைக்கால் கைலாசநாதர் கோவில் வகையறாவை சேர்ந்த, பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ளது. இந்த கோவில் வாசலில், நடு சாலையில் முகப்பு மண்டபம் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் சில காரணங்களால் தடைப்பட்டுப் போனது.
இந்நிலையில், பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மண்டபம் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 18-ந் தேதி ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், காரைக்கால் மாதா கோவில் வீதியில், பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில் எதிரே கட்டப்பட்டு வரும் முகப்பு மண்டபத்தை இடித்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில் காரைக்காலில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று (23-ந் தேதி) கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர். காரைக்காலில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சென்று காரைக்காலில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோவில் வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் மட்டும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதன் கிளை சாலைகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், அரசுத் துறை அலுவலகங்கள் இயங்குகின்றன. ஆட்டோ, பஸ், வேன் இயங்குகின்றன. அனைத்து சாலையிலும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






