என் மலர்tooltip icon

    கதம்பம்

    • சமணர்கள் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன.
    • சமணமுனிவர்கள் பெரும்பாலும் பள்ளி(குகை)களில் தங்கியே தங்கள் துறவுப்பணிகளை மேற்கொண்டனர்.

    பள்ளுதல் = என்றால் தோண்டுதல்.

    பள்ளப்பட்ட இடமே - பள்ளம்.

    ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) ஆழமாக, பெரிதாகத் தோண்டினால் பள்ளம். குறைவான ஆழத்தில் சிறிதாகத் தோண்டியது பள்ளி(ல்).

    'பள்ளு' இலக்கியம் கேள்விப்பட்டிருப்பீரகள்! வயலைப் பள்ளமிட்டுப் ( ஆழ உழுது) பயிர்த் தொழில் புரிந்த உன்னத மாந்தர்கள் ( பள்ளர்) உருவாக்கியது அந்த இலக்கியம்! அவர்கள் கற்பனைத் திறனும் இசையறிவும் மிக்கவர்கள் கூட! இவர்கள் இசைத்துக் கொண்டே இலக்கியமும் படைத்து, பசியாற உணவும் உண்டாக்கியதால், இந்த இலக்கியம் அவர்கள் பெயராலேயே, 'பள்ளு' எனப்பட்டது.

    படு / படுப்பது என்ற வினைச்சொல்லும் பள் - என்ற மூலத்திலிருந்து உருவானதே. பள்ளப்பட்ட இடத்தில் இரவினில் உடலைச்சாய்த்து ஓய்வெடுப்பதே - படுத்தல் என்ற வினையானது.

    படுத்தல் = கீழாதல், விழுதல், கிடத்தல், தூங்குதல்.

    படுக்கை = கீழ் மட்டத்தில் உள்ள இடம்;

    தாழ்வான இடம்.

    பள்ளிகொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள்.

    பள்ளியெழுச்சி = படுக்கை விட்டு எழுந்திருத்தல்.

    சமணர்கள் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன. சமணமுனிவர்கள் பெரும்பாலும் பள்ளி(குகை)களில் தங்கியே தங்கள் துறவுப்பணிகளை மேற்கொண்டனர்.

    (உதா: குராப்பள்ளி, சிராப்பள்ளி).

    பல நீதி நூல்களை சமணர்கள் இப்பள்ளிகளிலிருந்தே படைத்தனர். இந்தச் சமயப் பள்ளிகளில் பின்னர் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டதால் - கல்விச் சாலைகள் பள்ளி, பள்ளிக்கூடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

    -யாகோப்பு அடைக்கலம்

    • ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்து பின் உண்டு வந்தார்கள்.
    • இன்றும் கூட அழகர் கோவில் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார்கள்.

    நாம் அன்றாட உண்ணும் தோசையில் ஆன்மிகமும் ஜோதிடமும் மறைந்துள்ளது.

    தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்..!

    அக்னி = சூரியன்

    அரிசி = சந்திரன்

    உளுந்து = ராகு.. கேது

    வெந்தயம் = புதன்

    தோசை கல் (இரும்பு) = சனி

    தோசையின் நிறம் = செவ்வாய்

    அதை உண்பவர்கள்= குரு (ஆண்), சுக்கிரன் (பெண்)

    இதன் உருவம் =(Galaxy) பிரபஞ்சமே!!

    தோசையை Clock-wise சுட்டால் தான் வரும்!

    பிரபஞ்சம் சுற்றுவதும்அப்படித்தானே!

    இந்த தோசை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்து பின் உண்டு வந்தார்கள்.

    இன்றும் கூட அழகர் கோவில் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார்கள்.

    அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது. பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறி விட்டது.

    தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல்லும் விளக்கம்:

    (கல்லில்) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில், தோய் + செய் என்னும் இரண்டு சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு.

    • குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் தாயும் மகிழ்ச்சியாக இருப்பாள்.
    • குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அன்றி வேறெந்த உணவும் கொடுக்கக்கூடாது.

    குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு இருக்கும் முக்கிய கவலை மற்றும் கேள்விகள், தனக்கு தாய்ப்பால் சரியாக சுரக்குமா? சுரக்கிறதா?

    பதில் - குழந்தையை ஈன்ற அன்னைகளுக்கு தாய்ப்பால் சரியாக உற்பத்தி ஆகும். மேலும் குழந்தையை ஈன்றவுடனே தாய்ப்பால் ஊற்றெடுத்து சுரக்க ஆரம்பிக்கும். குழந்தை பிறந்தவுடனேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் அதற்கு தாய்ப்பால் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    எடுக்க எடுக்க ஊறும் கிணறு போல குழந்தை உறிஞ்சிப் பருகப் பருக தாய்ப்பால் ஊற்றெடுக்கும். எனவே தாய்ப்பால் சரியாக சுரப்பதற்கு குழந்தை வாய் வைத்து உறிஞ்சிப் பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.

    பெரும்பாலும் முறையான நிலைப்படுத்துதல் POSITIONING & ஒட்டுதல் ATTACHMENT இல்லாததால் குழந்தை தாய்ப்பால் பருகுவுதில் சுணக்கம் ஏற்படுகிறது.

    குழந்தையை எப்படி அணைத்து வைத்துக்கொள்வது?

    இதை positioning என்போம்.

    1. குழந்தையின் உடல் நேர் கோட்டில் இருக்குமாறு கைகளைக்கொண்டு தாங்கிப்பிடிக்க வேண்டும்.

    2. குழந்தையின் தாடை மார்போடு ஒட்டியிருக்க வேண்டும்.

    3. குழந்தையின் மூக்கு மார்பை விட்டும் தள்ளியிருக்க வேண்டும்.

    4. குழந்தையின் உடல் முழுவதும் தாயின் உடல் பக்கம் பார்த்து இருக்க வேண்டும்.

    5. தாய்ப்பால் கொடுக்கையில் தாய் தன் குழந்தையை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

    அடுத்து தாய்ப்பாலை கொடுக்கும்போது தன் குழந்தை மார்போடு வைக்க வேண்டிய ஒட்டுதல் நிலையை Attachment என்போம்.

    1. குழந்தை பால் பருகும்போது அதன் கவாய் நன்றாக திறந்து இருக்க வேண்டும்.

    2. குழந்தை பால் பருகும் பொழுது தாயின் முளைக்கு மேல் பகுதி மட்டுமே சிறிது தெரியவேண்டும்.

    3. குழந்தையின் தாடை பகுதி மார்போடு ஒட்டி அழுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

    தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பால் புகட்டுகையில் இந்த positioning மற்றும் attachment ஐ சரி செய்யுங்கள், பால் நன்றாக சுரக்கும்.

    குழந்தை மகிழ்ச்சியாக பால் பருகும்.

    குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் தாயும் மகிழ்ச்சியாக இருப்பாள்.

    குழந்தை தாயிடம் இருந்து சரியான அளவில் பால் பருகுவதை அந்த குழந்தை சரியான முறையில் சிறுநீர் கழிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    தாய்ப்பாலில் 90% நீர் இருக்கிறது. எனவே வெயில் காலங்களில் கூட சரியான முறையில் தாய்ப்பால் புகட்டினால் போதுமானது.

    வெளியில் இருந்து நீர் கூட கொடுக்கத் தேவையில்லை.

    சிறுநீர் அடிக்கடி கழிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது என்றே அர்த்தம்.

    குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அன்றி வேறெந்த உணவும் கொடுக்கக்கூடாது. ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே முழு உணவாக வழங்க வேண்டும்.

    - டாக்டர் பரூக் அப்துல்லா

    • வாலிப வயதில் திருமணம் என்பது உணர்வுகளுக்கு மதிப்பளித்து உணர்வை நிர்வகிக்கும் அழகிய செயல்.
    • உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காததால் பிண்டம் அழிய தொடங்குகிறது.

    பசி, தாகம், தூக்கம், மலம், கல்வி போன்ற உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் பிண்டம் அதாவது உடல் அழியும். தாமத திருமணம் என்பது பாலியல் உணர்வை மழுங்கடிக்கும்.. வயதுக்கு வந்தவுடன் உருவாகும் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் வீரியத்தில் உயர்ந்தநிலையில் இருக்கும். ஆண்டுகள் செல்ல செல்ல அதன் வீரியம் குறைந்து கொண்டே வரும்.

    வாலிப வயதில் திருமணம் என்பது உணர்வுகளுக்கு மதிப்பளித்து உணர்வை நிர்வகிக்கும் அழகிய செயல். உணர்வுகளுக்குய் மதிப்பளிக்கும் போது பிண்டம் வலுபெறும் அதாவது வாலிப திருமணம் உடலை வழுபெற செய்யும். தாமத திருமணம் அதாவது மழுங்கடிக்கபட்ட உணர்வு உடலை வழுவிலக்க செய்யும். உடலை மட்டுமல்ல மனதையும் பிறல செய்யும். பசியின் போது சாப்பிடாமல் இருந்தால் கோபம் வருவதுபோலதான் கல்வி உணர்வின் போது இணை சேராமல் இருந்ததால் கோபம் பயம் பதட்டம் வருகிறது.

    உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காததால் பிண்டம் அழிய தொடங்குகிறது. உடலில் பலம் குறைகிறது. உடலில் பலம் இல்லை என்றால் மனதிலும் பலம் இருக்காது. பாதிக்கும் மேற்பட்ட மனபிரச்சனைகளுக்கு முறையற்ற பாலியல் சிந்தனையும் கல்வி உணர்வுக்கு மதிப்பு கொடுக்காததே காரணம்.

    -ரியாஸ்

    • இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும்.
    • நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.

    "விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது " என்று ஒரு பழமொழி உள்ளது.

    தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.

    அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

    நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

    நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

    சுஷம்னா நாடி பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.

    நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

    பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.

    சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

    மெழுகுவர்த்தி ஏற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.

    மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம். வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

    -சிவ மணிகண்டன்

    • ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனின் வீடாகிய கடகத்தில், சனியின் நட்சத்திரமாகிய பூசம் 4 ஆம் பாதத்தில் 15° தாண்டி சஞ்சரிக்க ஆடிப்பெருக்கு நிகழ்கின்றது.
    • ஆறுகளை தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

    தமிழ் வருடத்தின் 12 மாதங்களிலும் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான பண்டிகைகள் நட்சத்திரத்தின் அடிப்படையிலோ திதியின் அடிப்படையிலோ கொண்டாடப்படுகின்றது.

    நட்சத்திரம் மற்றும் திதி தவிர்த்து தமிழ் தேதியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் சித்திரை முதல் நாள், ஆடி 18 ம் பெருக்கு, தைப் பொங்கல் ஆகும். சித்திரை முதல் நாள், தை முதல் நாள் ஆகிய இவ்விரு நாட்களும் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் ஆகும். ஆனால், ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாட்டிற்கு மட்டுமின்றி சுப காரியங்கள் செய்வதற்கும் உகந்த நாள் ஆகும்.

    ஆடி 18 ம் தேதியோடு மட்டும் தான் பெருக்கு என்ற வார்த்தை இணைகிறது. ஜோதிட ரீதியாக ஆராயும் போது இதற்கு பெரிய காரணங்கள் ஏதும் கூறிவிட முடியாது. ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனின் வீடாகிய கடகத்தில், சனியின் நட்சத்திரமாகிய பூசம் 4 ஆம் பாதத்தில் 15° தாண்டி சஞ்சரிக்க ஆடிப்பெருக்கு நிகழ்கின்றது.

    இயற்கை தனது இடையறாத பணியைச் செய்து விவசாயம் செழித்து மக்கள் வளமான வாழ்வு வாழ சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களின் பங்கு மிகவும் அவசியமாகும். தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க அக்காலத்தில் காவிரியின் பங்கு மிகவும் அத்தியாவசியமானதாகவே இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் காவிரி ஆறு ஆரம்பமாகும் இடத்தில் மழை செழித்து தமிழகத்தில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இது இயற்கை நமக்கு வழங்கும் கொடை ஆகும்.

    ஆறுகளை தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை ஆகும். எனவே நமது வளமான வாழ்க்கைக்கு கட்டியம் கூறும் விதமாக காவிரித் தாயானவள் பெருக்கெடுத்து ஆடியும் ஓடியும் வரும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இது இயற்கையின் அமைப்பு. இதற்கு வேறு எந்த கற்பனையான காரணங்களையும் கூறி விட முடியாது.

    இந்நாள் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் நாளாக நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். இந்நாளில் பூஜை புனஷ்காரங்களுடன் காவிரித்தாயைப் போற்றி வணங்கும் மரபை தொன்று தொட்டு ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இன்றும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. காவிரிக்கரையோரங்களில் வாழும் மக்கள் ஆடிப்பெருக்கை சீர் மிகும் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இங்கு கூடும் மக்கள் தீபமேற்றி காவிரித்தாயைப் போற்றிப் பணிகின்றார்கள். பெண்கள் திருமாங்கல்ய சரடு அல்லது கயிற்றை பிரித்து மாற்றிக் கொள்கிறார்கள்.

    தமிழர்களாகிய அனைவரும் இந்நாளில் தங்கள் இல்லத்தை அலங்கரித்து பூஜை புனஷ்காரங்களுடன் இந்நாளை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் விவசாயம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆரம்பிக்கலாம். வீட்டிற்குத் தேவையான புதிய டீவி, ப்ரிட்ஜ், பீரோ போன்ற பொருள்கள் வாங்கலாம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கலாம். சாப்பாட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கலாம். தங்கம் வாங்கலாம்.

    திருமணம் தவிர்த்து வாஸ்து பூஜை, கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பித்தல், கிரஹப் பிரவேசம், வேறு வீடு மாறுதல், திருமணம் பேசி முடித்தல், குழந்தைக்கு பெயர் சூட்டல், வளைகாப்பு போன்ற சுப காரியங்களையும் இந்நாளில் செய்யலாம். இதன் மூலம் தொடர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் வெற்றியே உண்டாகும். இவ்வருடம்(2023)வரக்கூடிய ஆடிப் பெருக்கு கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளது.

    ஜோதிட கலாமணி

    கே. ராதா கிருஷ்ணன்.

    • உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்..!
    • நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால், பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்..!

    ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார்,

    "ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன?"

    பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன..

    "நிறுத்துவதற்கு"

    "வேகத்தைக் குறைப்பதற்கு"

    "மோதலைத் தவிர்ப்பதற்கு"

    "மெதுவாக செல்வதற்கு"

    "சராசரி வேகத்தில் செல்வதற்கு"

    என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

    "வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

    அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.

    ஆம்... பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத்தான் வைக்கப்பட்டுள்ளன.

    உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.

    பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம்.

    தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்..!

    உங்கள் வாழ்க்கையில் வரும் "பிரேக்குகள்" உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்..!

    நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால், பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்..!

    -எச்.கே. சாம்

    • மல்லிகைப்பூற்கு கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி உண்டு.
    • மகிழம்பூவின் மணம் கண் நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

    மணம் வீசும் மலர்களில் மருத்துவ குணங்களும் நிரம்ப உள்ளன. அவற்றைப் பார்ப்போம்:-

    இலுப்பைப் பூ:

    இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும்.

    ஆவாரம்பூ:

    ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும்.

    அகத்திப்பூ:

    அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

    நெல்லிப்பூ:

    நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச்சிக்கலுக்கும் இது உகந்தது.

    செம்பருத்திப்பூ:

    இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

    ரோஜாப்பூ:

    ரோஜாப்பூவின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

    முருங்கைப்பூ:

    முருங்கைப்பூ ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.

    மல்லிகைப்பூ:

    மல்லிகைப்பூற்கு கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

    குங்குமப்பூ:

    குங்குமப்பூவை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

    மகிழம்பூ:

    மகிழம்பூவின் மணம் கண் நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

    தாழம்பூ:

    தாழம்பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

    - சிங்காரவேலு பாலசுப்பிரமணியம்

    • பயம், பதட்டம், கோபம், பரபரப்பு, ஆதங்கம் இவற்றிற்கு அடிமையானவர்களே நோயாளிகளாக மாறுகிறார்கள்.
    • தற்போதைய நேரத்தில் நல் சிந்தனை நற்செயலில் கவனம் செலுத்தி பயிற்சி எடுங்கள்..

    பயம், கோபம், பதட்டம், பரபரப்பு இவை எல்லாம் நம் உடலில் இயல்பாக நடைபெறும் வளர்சிதை மாற்றத்தில் இடையூறு ஏற்படுத்தி நம் முக்கிய உறுப்புகளை செயல் இழக்க வைக்கிறது.

    ஒரு செயலை நினைத்தோ ஒரு நபரை நினைத்தோ உங்களுக்கு பயம், கோபம், பதட்டம், ஆதங்கம் வருமானால் உங்கள் உடல் பாதிப்படைந்து உங்களுக்கு நோய் வர போகிறது என தெரிந்துகொள்ளுங்கள்.

    மற்றவர்கள் உங்கள் மீது தீயது நினைத்தாலும் நீங்கள் அவர் மீது நல்லதே நினையுங்கள்.. அவர் தீய விசயங்களுக்கு பயற்சி எடுக்கிறார், நீங்கள் நல்ல விசயங்களுக்கு பயிற்சி எடுக்கிறீர்கள்..

    அடுத்த நொடி அடுத்தடுத்து வரும் நேரங்களை உங்களின் தற்போதைய பயிற்சிதான் முடிவு செய்ய போகிறது.. தீயது நினைத்தவர்தான் எதிர்காலத்தில் நோயாளியாக போக போகிறார்.

    பயம், பதட்டம், கோபம், பரபரப்பு, ஆதங்கம் இவற்றிற்கு அடிமையானவர்களே நோயாளிகளாக மாறுகிறார்கள்.

    இறந்தகாலம் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருப்பவர்களே பயம், பதட்டம், கோபம், பரபரப்பு, ஆதங்கம் இவற்றில் சிக்கி கொள்கிறார்கள்.

    தற்போதைய நேரத்தில் நல் சிந்தனை நற்செயலில் கவனம் செலுத்தி பயிற்சி எடுங்கள்.. அந்த பயற்சி உங்களுக்கு உடல் மன ஆரோக்கியத்தை கொடுக்கும்.

    -ரியாஸ்

    • வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.
    • ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.

    அது டாட்டாவின் அலுவலகம்.

    டாட்டா எதேச்சையாக கேமராவில் ஒரு நபரை பார்க்கிறார். உதவியாளரை அழைத்து... யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்? என கேட்கிறார்.

    அவர் உங்கள் அப்பாயிண்மெண்ட் கேட்டு ஒரு மாதமாக தினமும் வந்து கொண்டிருக்கிறார், என்றார் உதவியாளர்.

    அப்படியா அடுத்த வாரம் திங்கள் காலை 9-9.15 வரை.. கால்மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் கூறி விடுங்கள் என்கிறார்.

    டாட்டாவுக்கு ஒவ்வொரு நொடியும் பணம். நேரத்தை வீணாக்க மாட்டார். அந்த இளைஞனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்பட்டது.

    கொடுத்தது கால் மணி நேரம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுவே எனக்கு அதிகமான நேரம் என்ற இளைஞனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

    குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. காலை 8.30 க்கு அந்த இளைஞன் உள்ளே இருந்தான். 9 மணிக்கு அனுமதிக்கப்படுகிறான்.

    இளைஞன்: குட் & க்ரேட் மார்னிங் சார்.

    டாட்டா: குட் மார்னிங். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தாய்...? உடனே சொல் எனக்கு நேரமில்லை.

    இளைஞன்: ஒரு பிஸ்னஸ் விசயமாக உங்களிடம் பேச வேண்டும்.

    டாட்டா: என்ன பிஸ்னஸ்?

    இளைஞன்: நீங்கள் உப்பு விற்க வேண்டும்.

    டாட்டா: தம்பி என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கிறது.... எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டு உள்ளேன். என்னை உப்ப விற்க சொல்லும் அளவு அது பெரிய பொருளா...?

    இளைஞன்: சார். உப்பு சிறிய பொருள் தான். ஆனால் தினமும் பயன்படக்கூடியது. அது இல்லாமல் நீங்களோ நானோ உண்ணவே முடியாது. தினமும் பயன்படுத்தக்கூடியது. அடிக்கடி வாங்கப்படக்கூடியது. நமக்கு இவ்வளவுக்கு உப்பு கிடைக்கிறது. நாம் இவ்வளவுக்கு விற்கலாம். உங்கள் டாட்டா ப்ராண்டு என்றால் மக்கள் நம்பிக்கையோடு வாங்குவார்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் இங்கு வந்தேன்.

    டாட்டா இரண்டு நிமிடம் யோசிக்கிறார். பின் இளைஞனிடம்... சரி.. காண்ட்ராக்ட்டில் சைன் பண்ணி விட்டு, அட்வான்ஸ் பெற்றுக்கொள். நாளை மறுநாள் முதல் நம் உப்பு வெளிவர வேண்டும்.

    ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.

    ஒருவேலை அந்த இளைஞனின் வார்த்தையை நிராகரித்திருந்தால் அவன் வேறு நிறுவனத்தை நாடியிருப்பான்.

    வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.

    -ஆர். எஸ். மமோகரன்

    • எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
    • நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டை அதாவது பாஸ்போர்ட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் இருந்த ஜப்பானை மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது

    எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.

    சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்தால்192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

    அடுத்து ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    மூன்றாவதாக ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்சு, ஜப்பான், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    இங்கிலாந்து, அயர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    பெல்ஜியம், மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, செச்ரிபப்ளிக் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    ஆஸ்திரேலியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு செல்லலாம்.

    கனடா, கிரீஸ் - 185 நாடுகள்.

    8வது இடத்தில் உள்ள அமெரிக்கா , லிதுவேனியா- 184 நாடுகள்.

    லேத்வியா, சுலோவாக்கியா, சுலோவேனியா- 183 நாடுகள்.

    10வது இடத்தில் உள்ள எஸ்டோனியா, ஐஸ்லாந்து - 182 நாடுகள்.

    மலேஷியா 11 ஆம் இடம் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

    தாய்லாந்து 64 ஆம் இடம் - 79 நாடுகள்.

    80வது இடத்தில் உள்ள நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    இலங்கை 95 ஆம் இடம் - 41 நாடுகள்.

    100 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் - 33 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    -தனுராஜன்

    • திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது.
    • வானொலியில் நான் நிகழ்த்திய உரைக்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஃபோனை கீழே வைத்தேன்.

    கண்ணதாசனிடமிருந்து அப்படி ஒரு கேள்வியை அந்த கல்லூரிப் பேராசிரியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

    தனக்கு நடந்த நிகழ்வை அந்த பேராசிரியையே சொல்கிறார் இப்படி:

    "ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.

    இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரையை நிகழ்த்தினேன்.

    அது வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணிநேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன்.

    மறுமுனையில் 'நான் கண்ணதாசன் பேசுகிறேன்' என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. கண்ணதாசன் தொடர்ந்து பேசினார். 'சற்று முன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன். மிகவும் அருமையாக பேசியிருந்தீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் நல்ல பல விஷயங்கள், உங்களைப் போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.

    ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.

    உதாரணமாக திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 'நான் மனமாக இருந்து நினைப்பேன். நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும்.

    அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் அதையே நான் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா' என்று கண்ணதாசன் கேட்டார்."

    என்ன பதில் சொல்ல முடியும் கண்ணதாசனின் இந்த கேள்விக்கு?

    வானொலியில் நான் நிகழ்த்திய உரைக்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஃபோனை கீழே வைத்தேன்.

    "கண்ணதாசன் அப்படி சொன்னதைக் கேட்டது முதல் அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. ஏனெனில் அவர் என்னிடம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை."

    -ஜான் துரை ஆசிர் செல்லையா

    ×