என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும்.
    • ஏரியில் தண்ணீரை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்படும்.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரைக் கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள 2 ஏரிகளை ஒன்றிணைத்து சுமார் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.350 கோடி செலவில் புதிய ஏரிஅமைக்க உத்தரவிட்டார். இதைத்தொடரந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5-வது ஏரியாக கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி கடந்த 2020-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும். இதில் சேமிக்கப்படும் தண்ணீரை தேவைப்படும் போது பூண்டி ஏரிக்கு அனுப்பி வைக்கும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி தேர்வாய்கண்டிகை ஏரியில்ருந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் வரை ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டது. கண்ணன்கோட்டை ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த ராட்சத குழாய் வழியாக அம்பேத்கர் நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் வந்து சேர்ந்து அதன் பிறகு பூண்டி ஏரிக்கு சென்றடையும் வகையில் உள்ளது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி உருவான பின்னர் கடந்த ஆண்டு ஏரியில் இருந்து சோதனையை முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தங்கு தடையின்றி ஊத்துக்கோட்டை அருகில் அம்பேத்கர் நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் வந்து சேர்ந்தது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் தற்போதைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 301 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியில் தண்ணீரை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்படும்.

    இதனை கருத்தில் கொண்டு கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து பூண்டி ஏரிக்கு முதன் முதலாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 50 கன அடி நீர் ராட்சத குழாய்கள் மூலம் பாய்ந்து கிருஷ்ணா கால்வாயில் சேர்ந்து பூண்டி ஏரிக்கு சென்றடைகிறது. வரும் நாட்களில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்ட இருக்கிறது. பூண்டிஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 19.88 அடியாக பதிவானது. 240 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு பேபி கால்வாயில்17 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
    • உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.

    மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இனிப்பு, காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர். தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலா வதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு மற்றும் FSSAI உரிமம் /பதிவு எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

    உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதாக பொன்னேரி மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
    • வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கோளூர் காலனியில் வசிப்பவர் தென்றல் சாந்தி (வயது 32). இவர் சமூக வலைதளங்களில் "டிக் டாக்" பிரபலமாக இருந்த காலத்தில் அதிகமாக வீடியோக்களை வெளியிட்டு நடிகையாகவே வலம் வந்தார்.

    நேற்றுமுன்தினம் காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருட்டுதனமாக கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தென்றல் சந்தி மதுபாட்டிகளை வாங்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதாக பொன்னேரி மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு சென்ற மதுவிலக்கு போலீசார் தென்றல் சாந்தி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் அவர் மது விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் கோளூர் பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.
    • வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது.

    புழல்:

    சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3,400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் இந்த கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என 700 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பார்வையாளர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. அத்துடன் கைதிகளை சந்திக்க பார்வையாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

    இவற்றை தவிர்த்திட தற்போது புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சிறை கைதிகளை சந்திப்பதற்காக அரை மணிநேரம் கொண்ட 13 சுற்றுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 56 கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் வகையில் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த அட்டவணைப்படி வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை (அரசு விடுமுறை நீங்கலாக) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஏதேனும் 2 நாட்களில் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

    அத்துடன் கைதிகள் சந்திக்க வரும் பார்வையாளர்கள் வசதிக்காக முன்பதிவு முறையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 044-26590000 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கைதிகளை சந்திப்பதற்கு வசதியான நேரத்துக்கு ஒரு நாள் முன்னதாவே முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்கள் பதிவு செய்த நேரத்துக்கு 45 நிமிடங்கள் முன்னதாக வந்தால் போதும்.

    இந்த புதிய நடைமுறையின் மூலம் பார்வவையாளர்கள் கைதிகளை காலதாமதம், கூட்ட நெரிசல் இன்றி மிகவும் எளிய முறையில் சந்திக்க முடியும்.

    இதே போல் வக்கீல்கள் சந்திக்கும் அறையும் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வக்கீல்கள் சந்திப்பு அறையில் புதிய அறைகள் அமைத்து கைதிகள், வக்கீல்களுக்கு புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 50 வக்கீல்கள் கைதிகளை சந்திக்க முடியும். இவர்களுக்கும் முன்பதிவு செய்ய தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய நடைமுறையின்படி வக்கீல்கள் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை கைதிகளை சந்திக்கலாம். இதனால் வக்கீல்கள், கைதிகளை வழக்கு சம்பந்தமாக சந்தித்து பேச போதுமான நேரம் கிடைக்கிறது.

    புழல் சிறையில் மேம்படுத்தப்பட்ட பார்வையாளர் சந்திப்பு முறை மற்றும் புனரமைக்கப்பட்ட வக்கீல் நேர்காணல் அறையை நேற்று சிறைத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

    இதேபோல் புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பறை இசை, நாடகம், சங்கீத பயிற்சி, காட்சி கலைகள், பாட்டு கச்சேரி, கானா ஆகியவற்றை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி நிறைவு விழாவிலும் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பயிற்சி பெற்ற கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வரர் தயாள், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், சிறைத்துறை தலைவர்(தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் முருசேன், தொண்டு நிறுவன நிறுவனர் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

    • ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அதிகாலை 2 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே கடந்த 4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாலை 2 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    வடமாநிலங்களை இணைக்கும் சென்னை-கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
    • மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதன் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பூண்டி ஏரிக்கு மழை நீர்வர தொடங்கியதால் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கடந்த மாதம் 16-ந் தேதி இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 76 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அல்லது கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே இனிமேல் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அடுத்த மணவூர் ரெயில் நிலையம் அருகே சங்கமித்ரா நகர் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவு பூட்டை உடைத்தார். சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனது கை, காலைகட்டிப்போட்டு சரமாரியாக தாக்கி நையப்புடைத்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.

    தகவல் அறிந்ததும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் புட்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பது தெரிந்தது. அவர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே கிராமமக்கள் தங்களது பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவலாங்காடு போலீஸ் நிலையம் அருகே திருவள்ளூர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த டாக்டர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

    மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் ஆஸ்பத்திரி வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆஸ்பத்திரி உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை டாக்டரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார்.

    அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.

    • தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருக்கம்பாக்கத்தில் பர்னிச்சர் கம்பெனியில் இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரவாயல், விருகம்பாக்கம், பூவிருந்தவல்லி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்பனி மற்றும் குடோனில் வைத்திருந்த ஷோபா, பெட், கட்டில் என பர்னிச்சர் பொருட்கள் மொத்தம் தீயில் கருகி சேதம் ஆயின. தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.

    தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 14 வயதுக்குட்பட்ட ஃபேன்சி இன்லைன் பிரிவில் பங்கேற்றார்.
    • இரண்டிலும் முதலாவது இடம்பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    திருவள்ளூர் மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024 போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த கௌரவ் ஹசன் 14 வயதுக்குட்பட்ட ஃபேன்சி இன்லைன் பிரிவில் பங்கேற்றார்.

    இதில் 200 மீட்டர் மற்ரும் 400 மீட்டர் போட்டிகளில் கலந்து கொண்டு போட்டியிட்ட அவர், இரண்டிலும் முதலாவது இடம்பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    எஸ்.எஸ். அகாடமியின் மாஸ்டர் ரமேஷ் பாபுவிடம் பயிற்சி பெற்று வரும் கௌரவ் ஹசன் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கொரவ் ஹசன் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதோடு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    • தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
    • தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆறு திருமழிசை, பூந்தமல்லி வழியாக சென்னைக்குள் வருகிறது.

    புதுச்சத்திரம் கிராமத்தில் கூவம் ஆற்றை வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக கடந்த 1950-ம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலம் திருநின்றவூர் வழியாக, ஆவடி, பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியமானது ஆகும்.

    இந்த தரைப்பாலத்தில் புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, பெரியபாளையம், புதுவாயல் கூட்டுச்சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியார், தொழிற்சாலை பஸ்கள், கனரக வாகனங்கள் உட்பட தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    பருவமழையின் போது, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலத்த சேதம் அடைந்த இந்த தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு ரூ.90 லட்சம் செலவில் இந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

    ஆனால் பயன்பாட்டிற்கு வந்த 3-வது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. அதன் பின்னர் மீண்டும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரைப்பாலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை. கரையின் இருபக்கமும் எந்த வித தடுப்பு சுவரும் இல்லாமல் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    இந்த தரைப்பாலத்தில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக சவுக்கு கம்புகளை தடுப்புகளாக அதிகாரிகள் கட்டி வைத்துள்ளனர். இந்த கம்புகளும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டவை.

    தற்போது கம்புகள் அனைத்தும் சேதம் அடைந்து உடைந்து விழுந்து கிடக்கிறது. மேலும் இந்த தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. தரைப்பாலப்பகுதியில் தெரு மின்விளக்குகள் எதுவும் கிடையாது.

    இரவு நேரத்தில் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடு வதற்காக சாலையோரம் திருப்பும் போது வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

    வாகன விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தில் கட்டப்பட்டு உள்ள தடுப்பு கம்புகளை வாகன ஓட்டிகள் வேடிக்கையுடன் பார்த்து செல்கிறார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் புதுச்சத்திரம் கூவம் ஆற்றில் வாகனங்கள் எளிதில் சென்று வர வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டி செல்வது சவாலானது.

    கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் சென்றால் கூவம் ஆற்றிற்குள் விழும் அபாயம் உள்ளது. தரைப்பாலத்தில் எந்த தடுப்புகளும் இல்லை.

    இதில் விபத்தை தடுப்பதற்காக தரைப்பாலத்தின் பக்கவாட்டில் சவுக்கு கம்புகளை கட்டி வைத்தி ருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. இந்த கம்புகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள் அதிவேகத்தில் வந்தால் எப்படி தடுக்கும்.

    எதன் அடிப்படையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருக்கிறது என்றே தெரிய வில்லை. இது அதிகாரிகளுக்கு தெரியாதா? தரைப்பாலத்தில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே புதுச்சத்திரம் கூவம் ஆற்று தரைப்பாலம் உள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்தால் பருவமழையின் போதும் பாதிப்பு ஏற்டாமல் செல்ல முடியும் என்றனர்.

    • உமாராணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கிருந்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாள் ஒன்றுக்கு சுமார் 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கார்த்தியின் மனைவி உமாராணி(வயது30) ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு உமாராணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.

    பால் பாக்கெட்டுகள் தயாராகி வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் உமா ராணி இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த துப்பட்டாவும், அவரது தலை முடியும் அருகில் இருந்த எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது.

    கண்இமைக்கும் நேரத்தில்அதில் இழுக்கப்பட்ட உமா ராணி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவரது தலை எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டிலும், உடல் கீழே தரையிலும் விழுந்தது. இதனை கண்டு அருகில் நின்று கொண்டு இருந்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    தகவல் அறிந்ததும் துணைப் போலீஸ் சூப்பிரண்டு கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான உமா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான உமாராணியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் பொம்மியம்பட்டி கிராமம் ஆகும். இவரது கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×