என் மலர்tooltip icon

    நீலகிரி

    படுகர் இன மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மஞ்சூர், 
    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கரியமலையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் வருடாந்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
     
     தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூைஜகள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் குந்தை சீமைக்குட்பட்ட 14 ஊர்களை சேர்ந்த படுகர் இன  மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 
    தொடர்ந்து அனைவரும் வரிசையில் நின்றபடி பாரம்பரிய வழக்கப்படி காணிக்கை செலுத்தினார்கள். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் கரியமலை  ராம பால சங்கீத சபா சார்பில் ‘தப்பரி குன்னவெ’ என்ற படுக சமூக நாடகம் மற்றும் பாரம்பரிய நடனம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
     விழா விற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் போஜன் தலைமையில் விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்திருந்தனர். 

    போக்குவரத்து பாதைகளை ஆலோசித்து மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
    ஊட்டி, 
    ஊட்டி  நகரம் என்பது சிறிய நகரமானாலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் சில நேரங்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருக்கும். 
     
    குறிப்பாக மலா்க் கண்காட்சியின்போது அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் அப்போது மட்டும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறான நிலை உருவாகியுள்ளது. 
    இன்னமும் கோடை விழாவே தொடங்காத நிலையில் சேரிங்கிராஸ், மாவட்ட  கலெக்டர்  அலுவலகம், ஹில்பங்க், பிங்கா்போஸ்ட் சாலை, தொட்டபெட்டா சாலை, காந்தல் சாலை, படகு இல்லம் சாலை, மத்திய பஸ் நிலைய சாலை என எங்கு பாா்த்தாலும் போக்குவரத்து பாதிப்புகள்தான் அதிக அளவில் உள்ளன
    நகரில் சுமாா் ஒரு  கிலோ மீட்டா் தூரத்தை கடப்பதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் புலம்பும் நிலை காணப்படுகிறது. இது தானாக உருவாகவில்லை. 
      
     காவல் துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து நெரிசல்தான் என்று அனைவருமே குற்றம் சாட்டுகின்றனா். சேரிங்கிராஸ் சிக்னலில் இருந்து குன்னூா் சாலை செல்ல கோத்தகிரி சாலையில் சென்று அரசு கலைக்கல்லூரி சாலை வழியாக குன்னூா் சாலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால்தான் ஊட்டி  கடந்த சில நாள்களாக போக்குவரத்து பாதிக்க முக்கிய காரணமாக இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனா். போக்குவரத்து நெரிசலால் உள்ளுா் மக்களின் நிலையோ சொல்ல முடியாது.
    வழக்கமாக ஆண்டு தோறும் கோடை சீசன் காலத்தில் ஊட்டிக்கு வரும் ஆயிரக்கணக்கான வாக னங்களை நீலகிரி மாவட்ட காவல் துறை சிறப்பாக கையாண்டு வந்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள சிக்கலை தவிா்க்க அனுபவம் வாய்ந்த காவல் துறையினரின் ஆலோசனையை கேட்டு அதற்கேற்ப போக்கு வரத்து பாதையை ஏற்ப டுத்தினால் இனி வரும் நாள்களில் போக்குவரத்து பாதிப்பை தவிா்க்க முடியும் என்பதோடு, தற்போ துள்ள போக்குவரத்து பாதைகளை ஆலோசித்து மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்றன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரி அரங்கில் ஆா்ட் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் வரைந்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 10-ம் வகுப்பு படித்த காா்த்திகேயன் (வயது 23) என்பவர் கலந்து கொண்டார். 

    இவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறாா். 10-ம் வகுப்பு வரை படித்த அவருக்கு  நோய் தாக்கம் அதிகரித்ததால் தனது பள்ளிப்படிப்பை அவரால் தொடர முடியவில்லை.அப்போது பா்வத் நீலகிரிஸ் என்ற தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் அதன் நிறுவனா் ஷோபா என்பவரால்  அந்த மாணவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

    அந்த மாணவன் ஓவியம் வரைவதில் அதிக ஆா்வம் கொண்டிருந்ததால் அவரை ஓவியம் வரைவதற்கு அதிக ஊக்கமும் அளித்துள்ளார். அந்த ஊக்கத்தின் காரணமாக தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட காா்த்திகேயன் கடந்த 3½ ஆண்டுகளில் 30 படங்களை தத்ரூபமாக வரைந்துள்ளாா். 

    குறிப்பாக அவருக்கு சிறு வயது முதல் காா் மீது அதிகம் விருப்பம் இருந்தால் 20-க்கும் மேற்பட்ட காா் படங்களையும், கிரிக்கெட் வீரா் தோனி, நடிகா்கள் விஜய், சூா்யா, மிஸ்டா் பீன் உள்ளிட்டோரின் படங்களையும் ஓவியமாக வரைந்துள்ளார். தனக்கு ஊக்கமளித்த தனியாா் தொண்டு நிறுவனா் ஷோபாவின் படத்வதையும் வரைந்து அவருக்கு பரிசாக வழங்கியுள்ளாா்.

    திறமையை வெளிப்படுத்த ஊனம் ஒரு குறையில்லை என்பதை காா்த்திகேயன் 30 படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளாா். இதைத்தொடா்ந்து ஊட்டி மலா் கண்காட்சியை திறந்து வைக்க ஊட்டிக்கு வர உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கிட ஸ்டாலின் படத்தையும் காா்த்திகேயன் வரையத் தொடங்கி உள்ளாா். 

    இதுகுறித்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளா் நித்தின் கூறும்போது, ஆா்ட் மாரத்தான் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் உரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்காதோம். காா்த்திகேயனின் கனவை விரைவில் நிறைவேற்ற இருக்கிறோம் என்றார்.

    திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    ஊட்டி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதிரியார் பால் கிரேசாக் தனது 25-வது வயதில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். இவர் காந்தல் பகுதியில் குருசடி திருத்தலத்தை கடந்த 1909-ம் ஆண்டு அமைத்தார். தனது 83 வயது வரை இங்கு பணிபுரிந்த பாதிரியார் பால் கிரேசாக் கடந்த 1967-ம் ஆண்டு இறந்தார். 

    இதைத் தொடர்ந்து அவரது உடல் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. மிகவும் புகழ்பெற்ற இந்த திருத்தலத்திற்கு கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களும் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சுமந்த புனித சிலுவையின் ஒரு சிறு பகுதி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலுவை கடந்த 1939-ம் ஆண்டு ரோம் நகரில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

    இவ்வளவு புகழ் வாய்ந்ததும் தென்னகத்தின் கல்வாரி என்று அழைக்கப்படும் குருசடி திருத்தலத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3-ந் தேதி நடத்தப்படுகிறது. இதன்படி திருவிழா நடந்தது. முன்னதாக கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை பங்கு குரு அமிர்தராஜ் ஏற்றி வைத்தார். 

    இதனை தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு குருக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கினர். திருவிழாவையொட்டி காலை 6 மணி முதல் 9 மணி வரை திருப்பலிகள் நடந்தது. அதன் பின்னர் நீலகிரி மறை மாவட்ட பி‌ஷப் டாக்டர் அமல்ராஜ் தலைமையில் கூட்டுபாடல் திருப்பலி நடைபெற்றது.

    இதில் மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், வட்டார குரு பெனடிக், ஆலய பங்கு குரு அமிர்தராஜ் ஆகியோருடன் பங்கு குருக்கள் பீட்டர் ஜெயக்குமார், பெனடிக்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருச்சிலுவை பவனியாக கொண்டு வரப்பட்டது. தேர் பவனி ஆலயத்தில் தொடங்கி காந்தல் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் ஊட்டியில் புகைப்படக் கண்காட்சி சேரிங்கிராஸில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் நடத்தப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகளுக்கு தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவா்களை மகிழ்விக்கும் வகையிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. அதைத்தொடா்ந்து நீலகிரி கோடைவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மே மாதத்தில் கொண்டாடப்படவுள்ளது.

    7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் ஊட்டியில் புகைப்படக் கண்காட்சி சேரிங்கிராஸில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில், வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய கட்டிடம் போன்ற சிறப்புமிகு வண்ண புகைப்படங்கள் சுற்றுலாப்பயணிகளின் பாா்வைக்காக இக்கண்காட்சியில் இடம்பெறும்.

    இதையடுத்து 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் கூடலூரில் கோடை விழாவுடன் வாசனை திரவிய கண்காட்சியும், 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் ஊட்டியில் அரசினா் ரோஜா பூங்காவில் ரோஜா மலா்கண்காட்சியும் நடக்கிறது.

    கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி மலா்க்கண்காட்சி 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் நடைபெறுகிறது.

    கோடைவிழாவில் பரதநாட்டியம், கிராமிய கலைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பழங்குடியினா் கலாச்சார மையத்திலும், 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அரசினா் தாவரவியல் பூங்காவிலும், 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஊட்டி படகு இல்லத்திலும் நடத்தப்படவுள்ளது.

    18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மகளிா் சுய உதவிக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், ஆவின், இன்கோசா்வ், டான்டீ போன்றவற்றின் பொருட்காட்சி ஊட்டி பழங்குடியினா் கலாச்சார மைய தரை தளத்தில் நடைபெறவுள்ளது. கோடைவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளான படகுப்போட்டி 19-ந்தேதி ஊட்டி ஏரியில் நடக்கிறது.

    மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
    ஊட்டி, 
    தமிழ்நாடு மின்வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ஆகியவற்றின் சார்பில் உழவர்களுக்கு 1 லட்சம் புதிய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் முதல்- அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.  
     
    நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் புதிய மின் இணைப்புகள் பெறுவதற்கான ஆணையினை விவசாயிகளுக்கு வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 259 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயம் செய்து பயனடைந்து இருக்கின்றனர்.
    இதுகுறித்து விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயி ரமேஷ் கூறும்போது:-
    நான் கடநாடு ஆயட்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 2½ ஏக்கர் நிலம் உள்ளது. அதில் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட் ஆகியவை பயிரிட்டு வருகிறேன். மின் மோட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்வதற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ.7ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். 
     
    இதனால் பிற செலவுகளை மேற்கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் முதல்-  அமைச்சர் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பினை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். இத்திட்டம் குறித்து நான் தெரிந்து கொண்டு உடனடியாக இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தேன். இத்திட்டத்தின் கீழ் என்னுடைய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கிடைத்தது.
    மின் மோட்டார் மூலம் தினசரி தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சி நல்ல முறையில் விவசாயம் செய்து வருகிறேன். மின்கட்டணம் செலவும் மீதமானது. இந்த தொகை எனது குழந்தைகளின் படிப்பு செல்விற்கு மற்றும் குடும்ப செலவினை மேற்கொள்ள மிகவும் உதவியாக உள்ளது என்றார். 
     
    விவசாயி கஜேந்திரன் கூறும்போது,
    நான் ஸ்டோனிஹவுஸ் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட் ஆகியவை பயிரிட்டு வருகிறேன், இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தேன்.
    ஆனால் நீண்ட நாட்களாக மின் இணைப்பு கிடைக்கவில்லை. முதல்- அமைச்சர் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் இலவச மின் இணைப்பு  வழங்கப்பட்டது. 
    இதனால் விவசாயம் மூலம் நல்ல லாபமும் கிடைத்து வருகிறது. மேலும் இலவசமாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்திய முதல் -அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்தும் கொள்கிறேன்.
     
    மக்களின் நலன்காப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட விவசாயிகள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்குடன் கோடையை கழித்த மக்கள் இம்முறை எந்த கட்டுப்பாடும் இன்றி ஊட்டிக்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டிஅரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் இன்று ரம்ஜான் பண்டிகையை யொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அலைமோதுகிறது. ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மிதவை படகு, துடுப்பு படகு, எந்திரப் படகு உள்ளிட்ட படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.



    கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றதாக தெரிவித்ததோடு, அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
    ஊட்டி:

    சேரங்கோடு ஊராட்சி சார்பில் காவயல் அரசு பள்ளியில் கிராமசபை கூட்டம் நடந்தது. தலைவர் லில்லிஏலியாஸ் தலைமை தாங்கினார். 

    துணை தலைவர் சந்திரபோஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஸ், சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி, கூடலூர் வேலாண்மை பொறியல்துறை உதவி பொறியாளர் கமலி, வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார் அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தார் சாலை, தெருவிளக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டிதரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

    மேலும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது திடீரென்று கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றதாக தெரிவித்ததோடு, அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

    அப்போது அவர்கள் இதுதொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உபதலை ஊராட்சி பெரியபிக்கட்டியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்ரா மச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
     
    மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.   கூட்டத்தில் கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும்,அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்துதல் குறித்தும், மகளிர் திட்டம்,குழந்தைகள் உதவி அவசர எண், முதியோர் உதவி எண்,விவசாயிகள் கடன் அட்டை ஆகிய கூட்டுப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் பொது மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல் படுத்தி வருகிறார். கிராம சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும். 
     
    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பசுமை வீடு, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளான சாலை வசதி,மின்சார வசதி, மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம் சார்பில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எடை ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்குதல்,கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்குதல், தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு கடனுதவி பெற பி.எம்.கிசாம் கார்டு, பயோ மெட்ரிக் கார்டு போன்றவைகளும் வழங்கப்படுகின்றன. 

    எனவே பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
      
    முன்னதாக, உபதலை ஊராட்சிக்குட்பட்ட பெரியபிக்கட்டியில்  வனத்துறை அமைச்சர்  மரக்கன்றுகளை நடவு செய்தார். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம் சார்பில், அதனைதொடர்ந்து உபதலை ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பொது மக்களும் பயன் பெறும் வகையில் உபதலை ஊராட்சி தலைவர் சார்பில் கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை வாகன சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக பலாப்பழமே உள்ளது.

    இதனால் பலா வாசனையை நுகரும் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பலா உள்ள இடங்களை நோக்கி படையெடுத்து வருகிறது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையிலும், குடியிருப்பையொட்டிய பகுதிகளிலும் காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மேட்டுப்பாளையம் கோத்தகிரி நெடுஞ்சாலை குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே யானை கூட்டம் சென்றது.

    அதில் இருந்து பிரிந்த ஒற்றை பெண் காட்டு யானை பலாப்பழத்தை தேடி அந்த பகுதியில் நீண்ட நேரமாக தனியாக சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. யானை வருவதை பார்த்தும் காரை ஓட்டி வந்தவர் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். இதற்கிடையே கார் வருவதை பார்த்த யானை காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. ஆவேசத்துடன் காரின் அருகே வந்த யானை திடீரென காரின் முன்பகுதியில் தும்பிக்கையால் தாக்கியது. இதில் கார் சேதமடைந்தது.

    காரில் இருந்தவர் சுதாரித்து கொண்ட காரை பின்நோக்கி இயக்கி சென்றார். இருப்பினும் அந்த யானை சுமார் ஒரு மணி நேரம் சாலையில் உலா வந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

    உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் நீண்ட நேரம் போராடி யானையை வனத்திற்குள் விரட்டினர்.

    தற்போது சாலையில் உலா வரும் யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சாலையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் யானைகளை சாலை ஓரங்களில் கண்டால் புகைப்படம் எடுக்க முயற்சி மேற்கொள்ள கூடாது எனவும் வாகனத்தை நிறுத்த கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் அதனை கேட்டு தெரிந்து கொண்டு, 2005 விதிகள் தெரிவித்துள்ளபடி மனுதாரர்கள் அளித்த மனுக்கள் மீது பதில்கள் வழங்க வேண்டும்
    ஊட்டி:
      
    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தொடர்பான பொது தகவல் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் அறிவுரைகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
     
    கூட்டத்தில் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் பிரதாப் குமார் பேசியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பொது தகவல் அலுவலர்களுக்கு தகவல் உரிமை சட்டம்  தொடர்பாக பயிற்சி, அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    2005-ல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு மனுதாரர்களின் மனுக்கள் மீது பதில் கிடைக்க பெற்றுள்ளது. இது நமது நாட்டிற்கு கிடைத்த 2-வது சுதந்திரமாக நான் பார்க்கிறேன்.
     
    இந்த சட்டத்தில் 30 பிரிவுகள் உள்ளது. இதில் நாம் 28 பிரிவுகளை பயன்படுத்தி வருகிறோம். பொது தகவல் அலுவலர்கள் 5 முதல் 10 பிரிவுகளை நன்றாக தெரிந்திருந்தால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு எளிதாகவும், தெளிவாகவும் பதில்கள் அளிக்க முடியும்.

    தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 விதிகளை பொது தகவல் அலுவலர்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனுதாரர் தங்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளிப்பதற்கு முன்னதாக தங்களது அலுவலகத்தை நாடி ஏதேனும் தகவல் கோரும் பட்சத்தில் அவர்களை நல்ல முறையில் அணுகி தேவையான பதில்களை வழங்கினால் இதுபோன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்களின் மனுக்களை குறைக்க முடியும்.
     
    மேலும் பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் அதனை கேட்டு தெரிந்து கொண்டு, 2005 விதிகள் தெரிவித்துள்ளபடி மனுதாரர்கள் அளித்த மனுக்கள் மீது பதில்கள் வழங்க வேண்டும். மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுதாரர்களின் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனப்பிரியா மற்றும் பொது தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    ஊட்டி:
      
    சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் கேரளா கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 
     
    தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் கலெக்டர் அம்ரித் உணவகங்களில் இருந்த பழைய சிக்கன் உள்பட சுமார் 100 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். 
     
    பின்னர் அந்த பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு சுமார் தலா 2,000 ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும் உணவகங்களில் கெட்டுப்போன உணவுகள் இருப்பது தெரியவந்தால் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
    ×