என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருசடி ஆலய திருவிழா
    X
    குருசடி ஆலய திருவிழா

    காந்தலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த குருசடி ஆலய திருவிழா

    திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    ஊட்டி:

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதிரியார் பால் கிரேசாக் தனது 25-வது வயதில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். இவர் காந்தல் பகுதியில் குருசடி திருத்தலத்தை கடந்த 1909-ம் ஆண்டு அமைத்தார். தனது 83 வயது வரை இங்கு பணிபுரிந்த பாதிரியார் பால் கிரேசாக் கடந்த 1967-ம் ஆண்டு இறந்தார். 

    இதைத் தொடர்ந்து அவரது உடல் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. மிகவும் புகழ்பெற்ற இந்த திருத்தலத்திற்கு கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களும் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சுமந்த புனித சிலுவையின் ஒரு சிறு பகுதி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலுவை கடந்த 1939-ம் ஆண்டு ரோம் நகரில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

    இவ்வளவு புகழ் வாய்ந்ததும் தென்னகத்தின் கல்வாரி என்று அழைக்கப்படும் குருசடி திருத்தலத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3-ந் தேதி நடத்தப்படுகிறது. இதன்படி திருவிழா நடந்தது. முன்னதாக கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை பங்கு குரு அமிர்தராஜ் ஏற்றி வைத்தார். 

    இதனை தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு குருக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கினர். திருவிழாவையொட்டி காலை 6 மணி முதல் 9 மணி வரை திருப்பலிகள் நடந்தது. அதன் பின்னர் நீலகிரி மறை மாவட்ட பி‌ஷப் டாக்டர் அமல்ராஜ் தலைமையில் கூட்டுபாடல் திருப்பலி நடைபெற்றது.

    இதில் மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், வட்டார குரு பெனடிக், ஆலய பங்கு குரு அமிர்தராஜ் ஆகியோருடன் பங்கு குருக்கள் பீட்டர் ஜெயக்குமார், பெனடிக்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருச்சிலுவை பவனியாக கொண்டு வரப்பட்டது. தேர் பவனி ஆலயத்தில் தொடங்கி காந்தல் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×