என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்பு ராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து கனமழையால் பாதிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் வருகிற 15-ந்தேதி 
    பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்.

    கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் வாங்கிக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பொது நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில் 
    15-ந்தேதி வரை பாரத பிரதமர் காப்பீடுத்திட்டம் செய்ய கடைசி நாள். 

    எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு 
    தெரிவித்துள்ளார்.
    தை கடைசி வெள்ளியையோட்டி சிக்கல் பார்வதீஸ்வரர்கோவிலில் நெய்க்குள தரிசன வழிபாடு நடந்தது.
    நாகப்பட்டினம்:

    தை கடைசி வெள்ளியையொட்டி நாகை மாவட்டம், சிக்கல் பர்வதவர்த்தனி உடனுறை பார்வதீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு அன்னப்பாவாடை என்னும் நெய்க் குளத் தரிசனம், மஹா தீபாராதனை நடைபெற்றது. 

    15 கிலோ சர்க்கரை பொங்கலில் 25 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு பிரசாதத்தில் நெய் குளம் போல் காட்சி அளிக்கும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் அக்குளத்தில் தெரிந்த அம்பாளின் திருவுருவத்தை கண்டு பக்திப் பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    கேக்கிற்கு பணம் கேட்டதால் சுவீட் கடையை 4 போதை ஆசாமிகள் அடித்து நொறுக்கினர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி கடை தெருவில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருபவர் முகமது அலி. வழக்கம் போல முகமது அலி வியாபாரம் செய்த போது, போதையில் கடைக்கு ஆட்டோ ஒன்றில் வந்த 4 பேர் அரை கிலோ கேக் கேட்டுள்ளனர். 

    கேக்கை கொடுத்த கடை உரிமையாளர், பணம் கேட்டுள்ளார். அதற்கு போதை ஆசாமிகள் ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியதோடு முகமதுஅலியையும் தாக்கியுள்ளனர். மேலும், ஆட்டோவில் இருந்த அரிவாளை எடுத்து தாக்க முயற்சி செய்துள்ளனர். 

    இதனால் அதிர்ச்சியடைந்த கடைக்காரரின் கூச்சலை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் அங்கு கூடியதால் 3 பேர் ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

    ஒருவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் காரை நகர் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து தப்பி சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    ஓசியில் கேக் கேட்டு தராத ஸ்வீட் கடையில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போதை கும்பல் அடித்து நொறுக்கிய சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 10,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு நாளை 12-ந்தேதி 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட முதல்வர் ஆணையின்படி 
    மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு 
    பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் நாளை காலை 9 மணி முதல் 
    மாலை 50 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனை, 
    ஆரம்ப சுகாதார நிலையங்கள்.துணை சுகாதார நிலையம் 
    மற்றும் 350 சிறப்பு முகாம்களில் 10,000 பேருக்கு தடுப்பூசி 
    செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா 
    தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

    எனவே மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் 
    நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி 
    போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

    மேலும், விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை 
    தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து 
    தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் 13.5.21-க்கு முன் 2-வது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 
    60 வயதிற்கு மேற்பட்டு இணை நோய் உள்ளவர்கள், சுகாதார 
    பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் 
    அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு  
    அவர் கூறியுள்ளார்.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் 
    ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இந்த திருக்கோயில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

    இந்த ஆண்டு 29.1.22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 
    நடந்து வருகிறது. 8-ந்தேதி இரவு பஞ்சமூர்த்தி சகிதம் 
    சந்திரசேகர சுவாமி இந்திர விமானத்தில் எழுந்தருளி 
    வீதியுலா காட்சி நடைபெற்றது. 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 
    வழிபாடு செய்தனர். மேலும் வரும் 13-ந்தேதி ஞாயிற்று கிழமை 
    தேர் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கு தேர் அலங்கரிக்கும் 
    பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரார்கள், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
    நாகை அருகே தோப்பில் காயத்துடன் கிடந்த மயிலை மீட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவர் தோப்பில் 50க்கும் மேற்பட்ட மாமரங்களை வைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல மரங்களை பராமரிப்பதற்காக தனது மாந்தோப்புக்கு வந்துள்ளார்.

    அப்போது மரத்தின் கீழே கால் முறிந்த நிலையில் மயில் ஒன்று பறக்க முடியாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். அதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு மஸ்தான் தகவல் தெரிவித்தார். 

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனஉயிரின காப்பாளர் யோகேஷ்குமார்மீனா, வனசரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் ஆனந்தீஸ்வரன், வன காப்பாளர் பாக்யராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மயிலை மீட்டு நாகை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு மயிலை வனப்பகுதிக்குள் கொண்டுவிட இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    புதுச்சேரி விக்னபுரம் கிராமத்தில் கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி நாகை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் முக்கிய இடங்களில் நூலகத்தினை தொடங்க உத்தரவிட்டதின் அடிப்படையில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி வழிகாட்டுதலின் படி 

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுச்சேரி விக்னபுரம் கிராமத்தில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்படி, உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நூலகத்தினை திறந்து வைத்தார்.

    இந்த நூலகத்தில் மாணவர் களின் எதிர்காலத்திற்கும், இளைஞர்களின் வாழ்க்கையினை நெறிமுறைபடுத்தும் வகையிலும், இல்லத் தரசிகளின் பொழுதினை இனிமையாக்கும் வகையிலும், சிறுவர்களின் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும், 

    முதியவர்களின் பொழுதினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் புராண கதைகளும், போட்டித் தேர்விற்கு தயராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தலைவர் களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் வாழ்க்கை முறை கோட்பாடுகள் மற்றும் பொது அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய நூல்களும் உள்ளன. இதனை பொது மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    வேதாரண்யத்தில் அருகே பாரம்பரிய நெல் விதைகளை ஆவணப்படுத்தும் பெண் விவசாயி பெயரை கின்னஸில் இடம் பெற செய்ய பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வந்தார். அங்கு பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி சரவணகுமார் 1250 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டுள்ளதை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனிசரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1250 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.

    அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் 1250 பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்துள்ளனர். அதனை தற்போது அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.1250 வகையான நெல்மணிகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்களை அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வருகின்றனர்.

    பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு அதனை காட்சிப்படுத்தி வருகின்றனர். 
    இவர்களது மீட்டெடுப் புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய&மாநில அரசுகள் கின்னஸில் இடம் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தேவையான தொழில் நுட்பங்களையும் ஆலோசனைகளையும் உடனடியாக வேளாண் பல்கலைக்கழக வேளாண் விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி வைத்து உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி விதை பரவலாக்க திட்டத்தை அரசு கொள்கை ரீதியாக திட்டமிட முன்வரவேண்டும். குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
     
    தமிழக அரசு பாரம்பரிய நெல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிவரஞ்சனி சரவணகுமாரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஆவணப் படுத்துவதற்ககான முழு செலவையும் அரசே எற்க வேண்டும்.
    இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் மகசூல் இழப்பை கருத்தில் கொண்டும், மருத்துவ குணத்தை கவனத்தில் கொண்டும் கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட வேண்டும். 

    அதனை மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவு கூடங்களில் உணவுப் பொருட்களாக பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினர் அசோகன், வேதாரண்யம் ஒன்றிய தலைவர் கருணைநாதன், செய்தி தொடர்பாளர் மணிமாறன், இயற்கை வேளாண் ஆர்வலர் சிவாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    வேதாரண்யம் அருகே சொத்து தகராறில் சகோதரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன்கள் அஞ்சப்பன் (65), சுரேஷ் (30). இவர்களுக்குள் பூ£¢வீக சொத்து சம்மந்தமாக பிரச்சினை இருந்ததாக தெரிகிறது.
    இந்நிலையில் சுரேஷ் பிரச்சினைக்குரிய இடத்தில் வேலி அமைப்பதற்காக சென்றபோது அஞ்சப்பன் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் மண்வெட்டி, கட்டையால் தாக்கிக் கொண்டனராம்.

     இதுகுறித்து அஞ்சப்பன் கொடுத்த புகாரில் சுரேஷ், வேலுசாமி, வேலுசாமி மனைவி ஜோதி ஆகிய மூவர் மீதும், சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சப்பன், அஞ்சப்பன் மனைவி இளவரசி, வெங்கடேஷ் ஆகியோர் மீது தனித்தனியே வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இதில் காயமடைந்த இருதரப்பையும் சேர்ந்த சுரேஷ், அஞ்சப்பன், 
    அஞ்சப்பன் மனைவி இளவரசி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    நாகை அருகே பாரதிய ஜனதா நிர்வாகி காரை தீ வைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் புவனேஸ்வர்ராம். இவர் பா.ஜனதா இளைஞரணி மாவட்ட துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு முன்பு உள்ள செட்டில் தனது புதிய காரை நிறுத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு புவனேஸ்வர்ராமின் காருக்கு மர்மநபர்கள் தீவைத்து விட்டு சென்று விட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சக்திகுமார் என்பவரது தந்தை குஞ்சையன் இதனை பார்த்து உடனடியாக வீட்டிற்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வர்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி கார் முழுவதும் எரிவதற்குள் தீயை அணைத்தனர். இதில் காரின் இடதுபக்க கதவு மற்றும் டயர் எரிந்து சேதமானது.

    இதுகுறித்து கீழையூர் போலீசில் புவனேஸ்வர்ராம் புகார் அளித்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மர்மநபர்கள் பெட்ரோலை கார் மீது ஊற்றி தீவைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியா-இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணஇரு நாட்டு பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்களின் சிறப்பு பிரதிநிதி மனோகர் வலியுறுத்தி உள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் சிறப்பு பிரதிநிதி மனோகர் நிருபர்களிடம் பேசிய போது கூறியதாவது:
    கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகின்றன. இதனிடையே இந்த விவகாரம் இந்திய&இலங்கை இருநாட்டு மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் ஆகிய 4 மாவட்ட மீனவர்களின் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழகத்தில் உள்ள 4 மாவட்ட மீனவர்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதித்தனர். 

    இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் ஆகியவற்றை விடுதலை செய்யும் நேரத்தில் இந்தியா அரசால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை நாட்டு மீனவர்கள், படகுகள் ஆகியவற்றை விடுதலை செய்ய வேண்டும்.

    எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இரு நாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தியா&இலங்கை இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் கொண்ட குழு திமுக ஆட்சி காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது. 

    சென்னையில் காணொலி வாயிலாக நடந்து முடிந்தது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
    நாகப்பட்டினம் நகராட்சி தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், உத்தரவின்பேரில் நாகப்பட்டினம் உட்கோட்டம் மக்கள் நெருக்கடி மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    துணை காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன். (நாகப்பட்டினம் உட்கோட்டம்), சுந்தர்ராஜ் (ஆயுதப்படை), கீதா (பயிற்சி), இன்ஸ்பெக்டர்கள், சப்&இன்ஸ்பெக்டர்கள், தாலுகா காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மற்றும் ஊர்க்காவல் படை என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.

    ×