என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் ஏரியில் இரண்டாவது மதகு பகுதியில் முதியவர் உடல் மிதப்பதாக ரிஷிவந்தியம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேரில் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரரணயில் இறந்தவர் பிரிவிடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி(70) என்பதும், குளிக்கச் சென்ற போது ஏரி நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நகரசபை தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
இதில் கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவிக்கு 2வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுப்ராயலு மற்றும் 11 வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 16 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 5 வாக்குகளும் போடப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுப்ராயலு நகர சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் குமரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மதியம் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை தலைவருக்கு சக கவுன்சிலர்கள், கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க நகர சபை தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகதுருகம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கடந்த மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 14 வார்டுகளிலும், தே.மு.தி.க. 1 வார்டுடிகளிலும் வெற்றிபெற்றனர். இதன் மூலம் அதிக வார்டுகளில் வெற்றிபெற்றதால் தியாகதுருகம் பேரூராட்சியை பெரும்பான்மையுடன் தி.மு.க. கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவராக 2வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வீராசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற தலைவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாயவேல் மகன் தனவேல்(வயது41). இவர் அதே பகுதியில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் இருந்த கொடியை சேதப்படுத்தினார்.
இது குறித்து தி.மு.க. கிளை செயலாளர் மணிகண்டன் புகார் செய்தார. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தனவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவுப்படி தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகமணி (வயது49) என்பவர் அரசம்பட்டு காட்டுக்கொட்டாய் அருகே லாரிடியூப்பில் சாராயத்தை விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சங்கராபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 175 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.
இவர் மீது சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் நாகமணியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை சுப்பிரமணியன் நகரைச் சேர்ந்தவர் பழனி முத்து (வயது 62). இவர் ஓய்வுபெற்ற தபால் ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி சாலையில் சந்தைப்பேட்டை டேனிஷ் மிஷன் மருத்துவமனை அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பழனிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிமுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்தி சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாகலூர், கண்டாச்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளிக்கு வேப்பூரில் இருந்து கள்ளகுறிச்சி நோக்கி வரும் தனியார் பஸ்சில் மாணவர்கள் பலரும் வருகின்றனர்.
இவ்வாறு பஸ்சில் வரும் மாணவர்கள் பஸ்சின் படியில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் படியில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள் தவறி கீழேவிழ வாய்ப்பு உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கும், தனியார் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






