என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஏரியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் ஏரியில் இரண்டாவது மதகு பகுதியில் முதியவர் உடல் மிதப்பதாக ரிஷிவந்தியம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேரில் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரரணயில் இறந்தவர் பிரிவிடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி(70) என்பதும், குளிக்கச் சென்ற போது ஏரி நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற தலைவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நகரசபை தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    இதில் கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவிக்கு 2வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுப்ராயலு மற்றும் 11 வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 16 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 5 வாக்குகளும் போடப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுப்ராயலு நகர சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் குமரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து மதியம் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை தலைவருக்கு சக கவுன்சிலர்கள், கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க நகர சபை தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தியாகதுருகம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கடந்த மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 14 வார்டுகளிலும், தே.மு.தி.க. 1 வார்டுடிகளிலும் வெற்றிபெற்றனர். இதன் மூலம் அதிக வார்டுகளில் வெற்றிபெற்றதால் தியாகதுருகம் பேரூராட்சியை பெரும்பான்மையுடன் தி.மு.க. கைப்பற்றியது.

    இதனை தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவராக 2வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வீராசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற தலைவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.


    சங்கராபுரம் அருகே தி.மு.க. கொடியை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சே‌ஷசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாயவேல் மகன் தனவேல்(வயது41). இவர் அதே பகுதியில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் இருந்த கொடியை சேதப்படுத்தினார்.

    இது குறித்து தி.மு.க. கிளை செயலாளர் மணிகண்டன் புகார் செய்தார. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தனவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான குமரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 14 திமுக கவுன்சிலர்கள், 5 அதிமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் மற்றும் அமமுக தலா ஒரு கவுன்சிலர்கள் ஆக மொத்தம் இருபத்தி ஒரு கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் 14 திமுக கவுன்சிலர்கள், ஒரு தேமுதிக கவுன்சிலர் ஆக மொத்தம் 15 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மொத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.
    தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சாராய வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவுப்படி தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகமணி (வயது49) என்பவர் அரசம்பட்டு காட்டுக்கொட்டாய் அருகே லாரிடியூப்பில் சாராயத்தை விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சங்கராபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 175 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.

    இவர் மீது சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.

    அதன்படி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் நாகமணியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட கோரி கிராம மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியானது அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. 2 ஆண்டுகளை கடந்த பின்னரும் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்படாததால் போதிய வசதிகள் இன்றி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே ரிஷிவந்தியம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே திடீரென உண்ணாவிரத போரட்டம் நடத்தினர். அப்போது ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் ரிஷிவந்தியம் போலீசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கோரிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு எடுத்து சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்தி சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை சுப்பிரமணியன் நகரைச் சேர்ந்தவர் பழனி முத்து (வயது 62). இவர் ஓய்வுபெற்ற தபால் ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி சாலையில் சந்தைப்பேட்டை டேனிஷ் மி‌ஷன் மருத்துவமனை அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பழனிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிமுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்தி சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    ரிஷிவந்தியம் ஒன்றியம் ஏந்தல் காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி லீலா(வயது 50). இவர் நேற்று அத்தியூரில் உள்ள தனது தங்கை அம்மாசியை பார்த்து விட்டு, மதியம் 2 மணியளவில் அந்த வழியாக வந்த பெரியகொள்ளியூரை சேர்ந்த பஞ்சன் மகன் கோவிந்தராஜ்(40) என்பவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி பகண்டை கூட்டுரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

     பகண்டை கூட்டுரோடு அருகே சாலையில் உள்ள சிறிய வளைவில் வந்த போது எதிரே கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் டிரெய்லரை பார்த்த கோவிந்தராஜ் திடீரென பிரேக் பிடித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இதில் பின்னால் அமர்ந்திருந்த லீலா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது டிராக்டர் டிரெய்லரின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி லீலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஆசனூரை சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர், திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, முருகனை பிடித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 350 ரூபாய் மதிப்புள்ள 69 லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முருகனிடம், போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் திருவண்ணாமலை அண்ணா நகரில் வசிக்கும் முத்து என்பவர் மூலம் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்துள்ளவர்கள் இருந்தால் அவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர்கள் உதவிக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
    கள்ளக்குறிச்சி:

    உக்ரைன் நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் தற்போது போர் நடைபெற்று வருகிறது. எனவே உக்ரைன் நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்துள்ளவர்கள் இருந்தால் அவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர்கள் உதவிக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 04151-228801 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் செல்போன் எண் 9444605018, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசங்கரன் செல்போன் எண் 9453050814) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சிக்காக செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னணி நிறுவனத்தின் செல்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இளநிலை கல்வி பயிலும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவிகள், வேலையில்லாத பட்டதாரிகள், சுயதொழில் புரிபவர் தனியார் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய ரூ.12,000 மதிப்புள்ள திறன்பேசிகள் ஆண்ட்ராய்டு செல்போன் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும், பணிக்குச்செல்லும், மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல்தொடர்பு கல்வி வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சிக்காக செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னணி நிறுவனத்தின் செல்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் 18 வயது பூர்த்தியடைந்த நிலையில் பட்டயபடிப்பு Diplomapolytechinic படிப்பு ITI பயிற்சி பெற்றுவரும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். விண்ணப்பதாரர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி, பணி, சுயதொழில் ஆகியவை தொடர்பான சான்றுகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய படிவத்தில் வரும் 07.03.2022க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வருமான உச்சவரம்பு ஏதுமின்றி இத்திட்டத்திற்கு உரிய விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்து தர தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆண்ட்ராய்டு செல்போன் பெற்றிட விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    தனியார் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாகலூர், கண்டாச்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பள்ளிக்கு வேப்பூரில் இருந்து கள்ளகுறிச்சி நோக்கி வரும் தனியார் பஸ்சில் மாணவர்கள் பலரும் வருகின்றனர்.

    இவ்வாறு பஸ்சில் வரும் மாணவர்கள் பஸ்சின் படியில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் படியில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள் தவறி கீழேவிழ வாய்ப்பு உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கும், தனியார் பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×