என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 60) மற்றும் தேவராஜ் (55). இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக புஷ்கர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மணல் இறங்கியது. மேலும் அருகில் காய்ந்த பூமாலை, ஊதுபத்திகள் கிடந்தது.
    • அந்த இடத்தில் புஷ்கரின் உடலை உறவினர்கள் இங்கு புதைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் புஷ்கர் (வயது62). இவர் குடும்பத்துடன் காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் அடுத்த நெய்குப்பம் பகுதியில் தங்கி கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த மாதம் பணியில் இருந்த போது தொழிலாளி புஷ்கர் மாரடைப்பால் இறந்து போனார். இதையடுத்து உடலை பீகாருக்கு கொண்டு செல்லாமல் இங்கேயே புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

    அவர்கள் புஷ்கரின் உடலை புதைக்க அருகில் உள்ள ஊத்துக்காடு மற்றும் கித்திரிப்பேட்டை பகுதியில் அனுமதி கேட்டனர். ஆனால் அந்த ஊராட்சி தலைவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் புஷ்கரின் உடலுடன் இருந்த உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் நீரேற்றும் குழாய் அருகே திறந்த வெளியில் புதைத்து சென்று விட்டனர். இது அப்பகுதி மக்களுக்கு உடனடியாக தெரியவில்லை.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக புஷ்கர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மணல் இறங்கியது. மேலும் அருகில் காய்ந்த பூமாலை, ஊதுபத்திகள் கிடந்தது. இதன் பின்னரே அந்த இடத்தில் புஷ்கரின் உடலை உறவினர்கள் இங்கு புதைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    குடிநீர் குழாய் அருகே உடல் புதைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடலை தோண்டி எடுத்து மயானத்தில் புதைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெய்குப்பம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மரணம் அடைந்த பீகார் தொழிலாளியின் உடலை புதைக்க இடம் கொடுக்காமல் ஊத்துக்காடு மற்றும் கித்திரிப்பேட்டையில் தடுத்து இருப்பது வேதனைக்குரியது. இதனால் அவரது உறவினர்கள் உடலை நெய்குப்பம் கிராமத்தில் குடிநீர் குழாய் அருகே புதைத்து சென்று விட்டனர்.

    தற்போது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்குகிறது. குடிநீர் குழாயில் பாதிப்பு ஏற்படும் முன்பு உடலை தோண்டி எடுத்து சுடுகாட்டில் புதைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்ததால் இது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றனர்.

    இதுகுறித்து உடலை புதைக்க இடம் அளிக்க மறுத்த ஊராட்சி தலைவர்கள் கூறும்போது, இறந்தவர்கள் உடலை புதைக்க வெவ்வேறு சாதியினருக்கு இடம் உள்ளது. இதனால் வடமாநில தொழிலாளியின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க வேண்டியது இருந்தது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் இல்லாமல் வேறு இடத்தில் உடலை அடக்கம் செய்ய கூறியிருந்தோம்" என்றனர்.

    இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். தொழிலாளி புஷ்கரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது.
    • திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏரிகள் முழு அளவை எட்டி உள்ளன.

    மழை விட்டு விட்டு பெய்து வந்தாலும் கடும் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. மழைக்காலத்தில் பனியின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு வானிலை மாறி உள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம் இருந்தது. சாலைகளே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து இருந்தது.

    கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரி கரை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஊட்டியை போல் மாறியது.

    இதனால் பொதுமக்கள் கடும் குளிரால் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.

    திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. எங்கும் பார்த்தாலும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்பட்டது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் பனி மூடி குளிர் பிரதேசமாக காட்சியளித்தது.

    இதன் காரணமாக திருவள்ளூரில் முக்கிய சாலையான சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்றன.

    சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கூட தெரியாத அளவிற்கு பனி படர்ந்து இருந்தது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் காலை 8 மணி வரை பனி நீங்காததால் எந்த நடைமேடையில் ரெயில் வருகிறது என தெரியாமல் மேம்பாலத்தின் மீது நின்றபடி பயணிகள் பார்த்துவிட்டு அதன் பின் நடைமேடைகளுக்கு சென்றனர்.

    கடும் பனி மூட்டம் நீடித்தாலும் சில இடங்களில் இன்றும் லேசான சாரல் மழை பெய்தது.

    • ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற டிரம்மர் மாயமாகி இருந்தார்.
    • தலைமறைவான வீட்டின் காவலாளி மற்றும் அவருடன் தங்கி இருந்த உறவினர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி, 12-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். நடிகர்.இவர் எல்லாம் அவன் செயல் திரைப்படத்தில் நடித்து உளளார். இவர் மனைவி ராஜி மற்றும், மகள், மருமகனோடு வசித்து வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ராஜியை கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். பின்னர் பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற டிரம்மர் மாயமாகி இருந்தார். கொள்ளை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு காவலாளி ரமேசுடன் அவரது உறவினர்கள் 2 பேர் நேபாளத்தில் இருந்து வந்து தங்கி உள்ளனர்.

    கொள்ளை நடந்த நாள் அன்று காவலாளி ரமேஷ் விடுப்பு எடுத்து வெளியே சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவருடன் தங்கிஇருந்த உறவினர்களும் மாயமாகி இருப்பதால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, வட மாநிலத்தில் தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் தலைமறைவான வீட்டின் காவலாளி மற்றும் அவருடன் தங்கி இருந்த உறவினர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    • உள்ளாவூர் ஊராட்சியில் சென்னை எஸ்.டி.என்.பி.வைணவ மகளிர் கல்லூரி சமூக பணி துறையில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.
    • பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் சென்னை எஸ்.டி.என்.பி.வைணவ மகளிர் கல்லூரி சமூக பணி துறையில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.

    இதில் இளைஞர்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பழக்கம் எதிர்ப்பு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். முகாமின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை உள்ளாவூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தொடங்கி வைத்தார். இதில் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர். எம் ஆஸ்பத்திரியில் இருந்து மக்கள் நல மருத்துவத்துறை டாக்டர் சந்தியா தலைமையில் சிறப்பு டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, தோல், எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் கிராமப்புற மக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 300-க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் லலிதா, சாந்தி, ஏகவல்லி, பானுமதி, சபாபதி, ஊராட்சி செயலாளர் முனுசாமி, சமூக பணித்துறை தலைமை பேராசிரியை பிரியதர்ஷினி, துணை பேராசிரியை வினு, மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அருண்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசியிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணிமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). என்ஜினீயர். நேற்று முன்தினம் அருண்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசியிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருண்குமார் என்ஜினீயரிங் படித்தும் வேலை இல்லாமல் இருந்ததாகவும் இதனால் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம்.
    • விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட கோரி கிராம மக்கள் போராட்டம்.

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்தது. பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

    இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா எனவும், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கூறி முழக்கமிட்டனர்.

    • விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு, சமூக நல துறையின் சார்பில், 2023-ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் உலக மகளிர் தின விழா அன்று மார்ச் 2023-ல் வழங்கப்பட உள்ளது.

    மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

    10.12.2022-க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் இரு பிரதிகளை நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
    • ஊத்துக்காடு கிராமத்திற்கு விரைந்து சென்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்று கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சமாதானம் அடையாததால் காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், ஆகியோர் ஊத்துக்காடு கிராமத்திற்கு விரைந்து சென்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மருத்துவன்பாடி கிராம சாலையில் நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை உத்திரமேரூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூரை அடுத்த மருத்துவன்பாடி கிராமம் அருகே இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை மர்ம நபர்கள் வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மருத்துவன்பாடி கிராம சாலையில் நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை உத்திரமேரூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த ருத்ரா என்ற ருத்ரகுமார் (வயது 28), அண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற அண்ணாத்தூர் மணி (26) மற்றும் எடமச்சி பகுதியை சேர்ந்த தமிழ்மணி (23) திருப்புலிவனம் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) என்பதும் தெரிய வந்தது.

    இதில் ருத்ரா, மணிகண்டன் இருவரும் 2 கொலை வழக்குகள் உள்பட 12 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த உத்திரமேரூர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது.
    • விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

    புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 115-வது நாளாக நீடித்து வருகிறது.

    பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் சேவையை பரந்தூர் வரை நீடிப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய விமான நிலையம் வருகை காரணமாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

    இதனை கணக்கிட்டு இப்போதே ரியல் எஸ்டேட் அதிபர்கள், பெரும் முதலாளிகள் கிராம மக்களிடம் நிலத்தை மொத்தமாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 லட்சமாக இருந்த 600 சதுர அடி நிலம் தற்போது ரூ.10 லட்சம் வரை விலை போகிறது. இந்த விலையை தாண்டியும் போகும் என்பதால் பலர் தங்களது நிலத்தை விற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    பரந்தூர் விமான நிலையம் வருகையால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல இடங்களில் இப்போதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குடியிருப்பு பிளாட்டுகள் விற்பனை விளம்பரத்தை அதிகரித்து உள்ளனர். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை விற்பது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தடையில்லா சான்றிதழ் பெறாமல் எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மாடம்பாக்கம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
    • கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள படப்பை அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் வெங்கடேசன்.

    மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் மாடம்பாக்கம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவருடன் 3-வது வார்டு உறுப்பினர் சத்யாவும் சென்றார்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் 9 பேர் வந்தனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் 3 பேர் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே இறங்கி ஒரே நேரத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு 'டமார்' என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    வெடிகுண்டு வீச்சு தாக்குதலால் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் சத்யா ஆகியோர் நிலை குலைந்தனர். இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்புவதற்காக இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

    அப்போது வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்ட 9 பேரும் வெங்கடேசனை விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். வெங்கடேசனை வெட்டிக்கொன்ற கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பி ஓடி தலைமறைவானது.

    ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மாடம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்துள்ளார். புரட்சி பாரதம் கட்சியில் இருந்த அவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகி இருந்தார்.

    இதனால் அரசியல் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியதையடுத்து மாடம்பாக்கம் பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.

    அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மாடம்பாக்கம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கொலையாளிகள் 9 பேரையும் இரவோடு இரவாக பிடித்து விட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டது. விடிய விடிய சோதனை நடத்தியும் கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. போலீசாரின் கண்ணை மறைத்து கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இருப்பினும் கொலை கும்பலை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கொலையுண்ட ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு வெங்கடேசனின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. வெங்கடேசனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். வெங்கடேசனுக்கு எதிராக அப்பகுதியில் செயல்பட்டு வந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ×