என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    • வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

    இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400 பைக்குகள் நிறுத்த முடியும். இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    மேற்கு பகுதியில் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய 5 பாயிண்டுகள் உள்ளன. மேலும் இங்கு மாற்று திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த கார் பார்க்கிங்கிற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும், தரை தளத்தில் உள்ள பிரதான வழியாக தான் நுழைய வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும்போது, வாகனம் வந்த நேரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது.

    உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். டோக்கன்களை தவறவிட்டால், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.150, கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    இந்த புதிய கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்தாலும், ஏற்கனவே பயணிகளை ஏற்றி இறக்கி வரும் வாகனங்களுக்கு 10 நிமிடங்கள் இலவச நேரம் உள்ளது. அந்த இலவச நேரம் தொடரும்.

    விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோரின் வாகனங்கள், தற்போதைய கார் பார்க்கிங்கில் இலவசமாக நிறுத்தப்படுகின்றன.

    ஆனால் இந்த புதிய கார் பார்க்கிங்கில் அவர்களுக்கு 100 கார்கள், 100 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இலவசமாக நிறுத்த முடியும். அதற்கு மேலான வாகனங்களுக்கு சலுகை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதோடு விமான நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு தற்போது மாதாந்திர கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படுகிறது.

    அந்தக் கட்டணம் அதிகரிக்கப்படுமா அல்லது அதே கட்டணம் வசூலிக்கப்படுமா என்பதை இந்த புதிய கார் பார்க்கிங்கை நிர்வகிக்கும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள்.

    மேலும் சென்னை விமான நிலையத்திற்குள் நிரந்தரமாக இயங்கி வரும் பிரீபெய்ட் டாக்சிகள், பார்க்கிங் கட்டணம் குறித்து, அதையும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக வரும் வாகனங்களில் சொந்த வாகனங்களில் வருபவர்கள் விமான நிலைய போர்டிகோ வரையில், ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலை தொடரும்.

    ஆனால் வாடகை கார்களில் வருபவர்கள், போர்டிகோ வரையில் வருவதற்கு, உள்ளே நுழையும் போதே ரூ.40 டோக்கன் வாங்கி விட்டு வர வேண்டும்.

    அந்த வாகனங்கள் 10 நிமிடங்களில் சென்று விட்டால், அதற்கு மேலான கட்டணம் கிடையாது. அதையும் தாண்டி தாமதமாக சென்றால், அவர்கள் 30 நிமிடம் பார்க்கிங் கட்டணமான ரூ.75 செலுத்த வேண்டியது வரும்.

    இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள் நிறுத்தலாம். அதில் 700 கார்கள் உள்நாட்டு முனையத்திற்கான கிழக்கு பகுதியிலும், 1,450 கார்கள் சர்வதேச முனையத்திற்கான மேற்குப் பகுதிகளிலும் நிறுத்த வேண்டும். அதை போல் இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு முனையும் கிழக்குப் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம்.

    இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, பழைய கார் பார்க்கிங் பகுதி முழுவதுமாக மூடப்படுகிறது.

    இனிமேல் அங்கு எந்தவிதமான வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. அந்த பகுதியை முழுவதும் புல் தரைகளாக மாற்றி, பூங்காக்கள் திட்டங்களை இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்த உள்ளது.

    விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி செல்வதற்காக வரும் வெள்ளை போர்டுகளுடன் கூடிய சொந்த வாகனங்கள் போர்டிகோ பகுதி வரையில் வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, 10 நிமிடத்திற்குள் இலவசமாக சென்று விடலாம்.

    ஆனால் வாடகைகார்கள் போர்டிகோ பகுதிக்கு வர முடியாது. வாடகை கார்கள் பிக்கப் பாய்ண்டிலிருந்து தான் பயணிகளை ஏற்றி செல்ல முடியும்.

    கார்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு பயணிகள் உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையத்திற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் வழியாக நடந்து செல்லலாம்.

    அந்த நடை மேம்பாலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • பணம் கேட்டு மிரட்டுவது குறித்து நெல் மண்டி வியாபாரி தியாகு, சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
    • 2 தனிப்படைகள் அமைத்து செல்போனில் மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி,ஆள் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் பொய்யா குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தியாகு, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபா கூறியதாக சொல்லி ரவுடி தியாகு செல்போனில் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த நெல் மண்டி வியாபாரி தியாகு என்பவரிடம் பேசி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    பணம் கேட்டு மிரட்டுவது குறித்து நெல் மண்டி வியாபாரி தியாகு, சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து செல்போனில் மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர். சிவகாஞ்சி போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தீவிர தேடலுக்கு பின்னர் சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பிரபாவின் கோயம்புத்தூர் நண்பர்கள் ஆன செந்தில் குமார், மோகன், அருண் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ரவுடி தியாகு போல பேசி பணம் கேட்டு மிரட்டுவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபரான பிரபாவை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஓடுபாதையில் சென்ற போது சரியான நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்து நிறுத்தியதில் 144 பயணிகள் உயிர் தப்பினர்.
    • விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3.20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த விமானம் தினமும் அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதேபோல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு கத்தார் விமானம் வந்தது.

    இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்ல 144 பயணிகள் அனைத்து பரிசோதனைகளும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

    அதிகாலை 3.50 மணிக்கு விமானம் புறப்பட்டு, ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விட்டு விமானத்தை ஓடு பாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். விமான என்ஜினை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி வரை விமானத்தை சரி செய்ய முடியவில்லை. விமான பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது.

    விமானத்தின் என்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு பின்னர் விமானம் கத்தார் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஓடுபாதையில் சென்ற போது சரியான நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்து நிறுத்தியதில் 144 பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் இன்று காலை சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
    • அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டகலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 59 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது.

    எம்.எல்.எம்.மாமல்லன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பெரிய காஞ்சிபுரம். பாரதி தாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தாண்டவராய நகர், ஓரிக்கை, பெரிய காஞ்சிபுரம், எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பள்ளி, பெரிய காஞ்சிபுரம்.

    ஆதி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சங்கராபுரம், வாலாஜாபாத் எம்.சி.ஏ. மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பழைய சீவரம், வாலாஜாபாத், செயின்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி, பாரதி நகர், வாலாஜாபாத்.மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர்மீனாட்சி அம்மாள மெட்ரிக் மேல்நிலை பள்ளி, உத்திரமேரூர். மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி, பெருங்கோழி, உத்திரமேரூர். மகரிஷி பள்ளாட்டு உறைவிட பள்ளி, சுங்குவார் சத்திரம், மாதா என்ஜினீயரிங் கல்லூரி, குன்றத்தூர்.

    இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியானேhttps://agaram.tn.gov.in/olineforms/formpage-open.phd?id=43-174என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிசீட்டு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டு்கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து விண்ணப்பதாரர்களும் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:

    விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-க்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50-க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டுவரக் கூடாது.

    விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திடீரென எதிர்பாராத விதமாக கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து சிதறியது.
    • வெங்கடாசலபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 24). இவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் 2-வது வார்டுக்குட்பட்ட செல்ல பெருமான் நகரில் வெங்கடாசலபதி பேட்டரி வாகனத்தில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரத்தின் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து சிதறியது.

    இதில் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடாசலபதிக்கு முகம், கழுத்து உடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் பேட்டரி வாகனமும் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் எரிந்துகொண்டு இருந்த வாகனத்தை மண்ணை தூவி தீயை அணைத்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலபதியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு வெங்கடாசலபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • சண்முகநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து தங்க நகை, ரொக்க பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • திருட்டு தொடர்பாக சண்முகநாதன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகள் பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்து இருந்தார். குழந்தை பிறந்து மகளை செய்யாறில் உள்ள மருமகன் வீட்டில் அழைத்து சென்று விடுவதற்கு நேற்று முன் தினம் சண்முகநாதன் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.

    நேற்று சண்முகநாதனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    சண்முகநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் தங்க நகை, ரொக்க பணம் ரூ.1 லட்சம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சண்முகநாதன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கடை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
    • வண்ண சுவர்கள், திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்ட முகப்பு சுவர் பார்வையாளர்களை பெரிதும் கவருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு, கணேஷ் நகரில் ரேசன் கடை உள்ளது. இந்த கடை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

    இந்த ரேஷன் கடையில் எந்த நேரமும் ஸ்மார்ட் கார்டு வேலை செய்யும் வகையில் வைஃபை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடை முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வழி பாதை, மழைநீர் சேகரிப்பு, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்கள் உள்ளது.

    மேலும் வண்ண சுவர்கள், திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்ட முகப்பு சுவர் பார்வையாளர்களை பெரிதும் கவருகிறது.

    உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் ஒதுக்கிய அனைத்து நிதியும் முழுமையாக வீணடிக்காமல் செலவு செய்து கூடுதலாகவும் தனது சொந்த பணத்தை செலவிட்டு கவுன்சிலர் கார்த்திக் இந்த ரேசன் கடை கட்ட ஏற்பாடு செய்து இருந்தார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காஞ்சிபுரம் கணேஷ் நகர் ரேஷன் கடை முன்மாதிரி கடையாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அதில் 2 குட்டிகள் இறந்து கிடந்தன.
    • உயிருடன் உள்ள மற்ற 2 குரங்கு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது நசிருதீன் என்ற பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது உடைமைகளை 'ஸ்கேன்' செய்ததில் ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அதில் இருந்த பையை திறந்து பாா்த்தனா். அதில் பச்சை நிற கூடை ஒன்றில் 4 அரிய வகை குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, "அவை அபூர்வ வகை குரங்கு குட்டிகள். இதை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன்" என்று கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை.

    மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால் அவரிடம் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அதில் 2 குட்டிகள் இறந்து கிடந்தன. 2 குட்டிகள் மட்டும் உயிருடன் இருந்தன. அதில் உயிருடன் இருந்த 2 குரங்கு குட்டிகளும், உலகிலேயே நீண்ட வாலுடன் கூடிய சிறிய குரங்கு இனமான 'பிக்மி மார்மோசெட்' என்ற வகையை சேர்ந்தவைகள் என தெரியவந்தது. இவை தென் அமெரிக்காவின் மேற்கு அமேசான் படுகையில் உள்ள மழைக்காடுகளை பூர்வீகமாக கொண்ட குரங்கினம். பிரேசில், கம்போடியா மற்றும் பெரு நாட்டிலும் காணப்படுகிறது.

    இறந்து கிடந்த குரங்கு குட்டிகள், மயங்கிய இலை குரங்கு வகையாகும். இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா காடுகளில் காணப்படுகின்றன. பாலூட்டி வகையாகும். உயிருடன் உள்ள மற்ற 2 குரங்கு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கோவிலுக்கு பூட்டு போட்டு இருப்பது தெரிந்தது.
    • இதைத்தொடர்ந்து கோவிலுக்கு போடப்பட்டு இருந்த பூட்டு உடைத்து திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், தும்பவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற தும்பவனம் மாரியம்மன் கோவில் உள்ளது.

    அப்பகுதியில் உள்ள பலரது குடும்பங்களுக்கு இது குலதெய்வமாக உள்ளது. இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கோவிலை தும்பவனம் பகுதியில் வசிப்பவர்கள் நிர்வகித்து வந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு அறங்காவலர் குழுவையும் நியமித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே கோவிலுக்கு பூஜைக்காக பூசாரி சென்ற போது வெளிப்புற கேட்டில் மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பரபரப்பு பேனர் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கோவிலுக்கு பூட்டு போட்டு இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து கோவிலுக்கு போடப்பட்டு இருந்த பூட்டு உடைத்து திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு பூட்டு போட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அறங்காவலர்கள் நியமனத்தில் உள்ள சிலர் குறித்தும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    • வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதை பெற தகுதியுள்ளவர்.
    • உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் அடங்கும். இந்த பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை காப்பதில், வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதை பெற தகுதியுள்ளவர்.

    2023-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.

    மேலும், உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறைனர் அகற்றி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற முடிவு செய்தனர். இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இந்திரா காந்தி சிலையை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

    சிலையின் அடிபாகத்தை இடித்து கொண்டு இருந்தனர். இது குறித்து தகவல் காட்டு தீ போல அந்த பகுதியில் பரவியது.

    தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சியினர் அங்கு குவிந்து சிலையை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். அங்கு பதற்றம் நிலவியது.

    ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

    அதன் பின்னர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குள் ஏன் சிலையின் பீடத்தை உடைத்தீர்கள் என கண்டித்தார். பின்னர் சிலையை அகற்றும் பணியை நிறுத்துமாறு கூறினார்.

    இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிலையை அகற்றும் பணியை நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவியது.

    இந்த இந்திரா காந்தி சிலையை முன்னாள் பிரதமர் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×