என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சாலைகளை அசுத்தம் செய்யும் வகையில் மாடுகள் சாணம் போட்டால் அதன் உரிமையாளர்களே அதனை அகற்ற வேண்டும்.
    • பிடிப்படும் மாடுகளை கட்டி வைப்பதற்காக தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குன்றத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கோவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் குன்றத்தூர் - போரூர் சாலையில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் மாடுகள் சுற்றி திரிகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்திருப்பதால் வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது இதனை தடுக்கும் விதமாக கோவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்பவர்களை அழைத்து கூட்டம் ஒன்று ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகள் பிடித்து செல்லப்பட்டு மாட்டின் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து பிடிபடும் மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சாலைகளை அசுத்தம் செய்யும் வகையில் மாடுகள் சாணம் போட்டால் அதன் உரிமையாளர்களே அதனை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பிடிப்படும் மாடுகளை கட்டி வைப்பதற்காக தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே மோட்டார் சைக்கிளில் வடபழனியில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றனர்.
    • பலியான முனியப்பனின் உடல் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சேலையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்கள் முனியப்பன் (வயது21).அன்புமணி (21). நண்பர்களான இருவரும் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வடபழனியில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றனர். பின்னர் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் அவர்கள்வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அன்புமணி மோட்டார்சைக்கிளை ஓட்டினார். முனியப்பன் பின்னால் அமர்ந்து இருந்தார். ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்பு மணியும், முனியப்பனும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முனியப்பன் பரிதாபமாக இறந்தார். அன்பு மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான முனியப்பனின் உடல் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • வாலிபர் ரெயில் பெட்டி மீது ஏறி நின்றபடி அருகில் சென்ற மின்கம்பியை பிடித்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில உள்ள தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நாடு முழுவதும் ஏற்றி செல்ல சரக்கு ரெயில் முனையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் சரக்கு ஏற்றி செல்வதற்காக ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென சரக்கு ரெயில் மீது சரசரவென ஏறினார். இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் ரெயில் பயணிகள் கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் வாலிபர் ரெயில் பெட்டி மீது ஏறி நின்றபடி அருகில் சென்ற மின்கம்பியை பிடித்தார்.

    இதில் அவர் வாலிபரின் உடல் முழுவதும் தீப்பற்றிஎரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பதறியபடி கூச்சலிட்டனர். இதற்குள் தீ மளமளவென பரவி அந்த வாலிபர் உடல் கருகி சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். உடல் கருகிய வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான வாலிபர் யார்? மன நலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எடையூர் கிராமத்தில் பழமையான பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது.
    • திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அருகே உள்ள எடையூர் கிராமத்தில் பழமையான பிடாரி செல்லியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு வந்த மர்ம கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி, கம்மல், மூக்குத்தி மற்றும் பீரோவில் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 20 பவுன் நகை, வெள்ளி கொலுசு, உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து டிரைவர் சுப்பிரமணி மற்றும் கண்டக்டர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் புறப்பட்டனர்.
    • பஸ் கண்ணாடி உடைந்து விழுந்ததை கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து டிரைவர் சுப்பிரமணி மற்றும் கண்டக்டர் சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் புறப்பட்டனர்.

    கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது போக்குவரத்து நெரிசலால் பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் பஸ்சை வழிமறித்து ஆர்ன் அடித்தால் வழிவிட முடியாதா என்று கேட்டிருக்கின்றனர்.

    இதையடுத்து டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பட்டாக்கத்தியை கொண்டு பஸ்சின் முன்புற கண்ணாடியை தாக்கியதில் பஸ் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். பஸ் கண்ணாடி உடைந்து விழுந்ததை கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், சந்தேகம்படும்படியான சில நபரின் பெயர்களை கேட்டு தெரிந்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர்.
    • 7 பொக்லைன் எந்திரங்கள், 2 லாரி போன்றவற்றை போலீஸ் நிலையம் அருகே போலீசார் நிறுத்தி வைத்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கட்ரம்பாக்கம் பகுதியில் சவுத்ரி கால்வாயில் தொடர்ந்து மண் திருடப்படுவதாக மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி மற்றும் சோமங்கலம் போலீசாருக்கு காட்ரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கஜேந்திரன் தெரிவித்தார். அதன்பேரில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் காட்ரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கட்ரம்பாக்கம் ஏரி கால்வாயில் மண் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் ஏரி கால்வாய் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் திருடியபோது 7 பொக்லைன் எந்திரங்கள், 2 டிப்பர் லாரி போன்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு 6 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த அரசகுமார் (வயது 29), பழனி (36), மகேந்திரன் (38), செல்வகுமார் (35), சக்திவேல் (42), கோவிந்தராஜ் (51) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏரியில் மண் திருடியது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து 6 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 7 பொக்லைன் எந்திரங்கள், 2 லாரி போன்றவற்றை போலீஸ் நிலையம் அருகே போலீசார் நிறுத்தி வைத்தனர்.

    • உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    • வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

    இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400 பைக்குகள் நிறுத்த முடியும். இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    மேற்கு பகுதியில் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய 5 பாயிண்டுகள் உள்ளன. மேலும் இங்கு மாற்று திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த கார் பார்க்கிங்கிற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும், தரை தளத்தில் உள்ள பிரதான வழியாக தான் நுழைய வேண்டும். வாகனங்கள் உள்ளே நுழையும்போது, வாகனம் வந்த நேரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது.

    உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் இரண்டுக்குமே ஒரே டோக்கன் தான். அதன் பின்பு அவர்கள் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரிந்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    வாகனங்கள் உள்ளே நுழையும்போது நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கும் டோக்கனை வாகன ஓட்டிகள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். டோக்கன்களை தவறவிட்டால், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.150, கார் போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

    இந்த புதிய கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்தாலும், ஏற்கனவே பயணிகளை ஏற்றி இறக்கி வரும் வாகனங்களுக்கு 10 நிமிடங்கள் இலவச நேரம் உள்ளது. அந்த இலவச நேரம் தொடரும்.

    விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோரின் வாகனங்கள், தற்போதைய கார் பார்க்கிங்கில் இலவசமாக நிறுத்தப்படுகின்றன.

    ஆனால் இந்த புதிய கார் பார்க்கிங்கில் அவர்களுக்கு 100 கார்கள், 100 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இலவசமாக நிறுத்த முடியும். அதற்கு மேலான வாகனங்களுக்கு சலுகை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதோடு விமான நிலையத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் இருசக்கர வாகனங்களுக்கு தற்போது மாதாந்திர கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படுகிறது.

    அந்தக் கட்டணம் அதிகரிக்கப்படுமா அல்லது அதே கட்டணம் வசூலிக்கப்படுமா என்பதை இந்த புதிய கார் பார்க்கிங்கை நிர்வகிக்கும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள்.

    மேலும் சென்னை விமான நிலையத்திற்குள் நிரந்தரமாக இயங்கி வரும் பிரீபெய்ட் டாக்சிகள், பார்க்கிங் கட்டணம் குறித்து, அதையும் ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக வரும் வாகனங்களில் சொந்த வாகனங்களில் வருபவர்கள் விமான நிலைய போர்டிகோ வரையில், ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலை தொடரும்.

    ஆனால் வாடகை கார்களில் வருபவர்கள், போர்டிகோ வரையில் வருவதற்கு, உள்ளே நுழையும் போதே ரூ.40 டோக்கன் வாங்கி விட்டு வர வேண்டும்.

    அந்த வாகனங்கள் 10 நிமிடங்களில் சென்று விட்டால், அதற்கு மேலான கட்டணம் கிடையாது. அதையும் தாண்டி தாமதமாக சென்றால், அவர்கள் 30 நிமிடம் பார்க்கிங் கட்டணமான ரூ.75 செலுத்த வேண்டியது வரும்.

    இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள் நிறுத்தலாம். அதில் 700 கார்கள் உள்நாட்டு முனையத்திற்கான கிழக்கு பகுதியிலும், 1,450 கார்கள் சர்வதேச முனையத்திற்கான மேற்குப் பகுதிகளிலும் நிறுத்த வேண்டும். அதை போல் இருசக்கர வாகனங்கள் உள்நாட்டு முனையும் கிழக்குப் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம்.

    இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, பழைய கார் பார்க்கிங் பகுதி முழுவதுமாக மூடப்படுகிறது.

    இனிமேல் அங்கு எந்தவிதமான வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. அந்த பகுதியை முழுவதும் புல் தரைகளாக மாற்றி, பூங்காக்கள் திட்டங்களை இந்திய விமான நிலைய ஆணையம் செயல்படுத்த உள்ளது.

    விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி செல்வதற்காக வரும் வெள்ளை போர்டுகளுடன் கூடிய சொந்த வாகனங்கள் போர்டிகோ பகுதி வரையில் வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, 10 நிமிடத்திற்குள் இலவசமாக சென்று விடலாம்.

    ஆனால் வாடகைகார்கள் போர்டிகோ பகுதிக்கு வர முடியாது. வாடகை கார்கள் பிக்கப் பாய்ண்டிலிருந்து தான் பயணிகளை ஏற்றி செல்ல முடியும்.

    கார்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு பயணிகள் உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையத்திற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் வழியாக நடந்து செல்லலாம்.

    அந்த நடை மேம்பாலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • பணம் கேட்டு மிரட்டுவது குறித்து நெல் மண்டி வியாபாரி தியாகு, சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
    • 2 தனிப்படைகள் அமைத்து செல்போனில் மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி,ஆள் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரம் பொய்யா குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தியாகு, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபா கூறியதாக சொல்லி ரவுடி தியாகு செல்போனில் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த நெல் மண்டி வியாபாரி தியாகு என்பவரிடம் பேசி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    பணம் கேட்டு மிரட்டுவது குறித்து நெல் மண்டி வியாபாரி தியாகு, சிவகாஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைத்து செல்போனில் மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர். சிவகாஞ்சி போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தீவிர தேடலுக்கு பின்னர் சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பிரபாவின் கோயம்புத்தூர் நண்பர்கள் ஆன செந்தில் குமார், மோகன், அருண் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ரவுடி தியாகு போல பேசி பணம் கேட்டு மிரட்டுவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபரான பிரபாவை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஓடுபாதையில் சென்ற போது சரியான நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்து நிறுத்தியதில் 144 பயணிகள் உயிர் தப்பினர்.
    • விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3.20 மணிக்கு, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு, கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த விமானம் தினமும் அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதேபோல் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு கத்தார் விமானம் வந்தது.

    இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்ல 144 பயணிகள் அனைத்து பரிசோதனைகளும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

    அதிகாலை 3.50 மணிக்கு விமானம் புறப்பட்டு, ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விட்டு விமானத்தை ஓடு பாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

    பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். விமான என்ஜினை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.

    காலை 6 மணி வரை விமானத்தை சரி செய்ய முடியவில்லை. விமான பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது.

    விமானத்தின் என்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு பின்னர் விமானம் கத்தார் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஓடுபாதையில் சென்ற போது சரியான நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறை விமானி கண்டுபிடித்து நிறுத்தியதில் 144 பயணிகள் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் இன்று காலை சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
    • அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டகலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 59 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது.

    எம்.எல்.எம்.மாமல்லன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பெரிய காஞ்சிபுரம். பாரதி தாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தாண்டவராய நகர், ஓரிக்கை, பெரிய காஞ்சிபுரம், எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிக் பள்ளி, பெரிய காஞ்சிபுரம்.

    ஆதி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சங்கராபுரம், வாலாஜாபாத் எம்.சி.ஏ. மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பழைய சீவரம், வாலாஜாபாத், செயின்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி, பாரதி நகர், வாலாஜாபாத்.மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர்மீனாட்சி அம்மாள மெட்ரிக் மேல்நிலை பள்ளி, உத்திரமேரூர். மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளி, பெருங்கோழி, உத்திரமேரூர். மகரிஷி பள்ளாட்டு உறைவிட பள்ளி, சுங்குவார் சத்திரம், மாதா என்ஜினீயரிங் கல்லூரி, குன்றத்தூர்.

    இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியானேhttps://agaram.tn.gov.in/olineforms/formpage-open.phd?id=43-174என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணையும், கைபேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிசீட்டு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டு்கொள்ளப்படுகிறார்கள்.

    அனைத்து விண்ணப்பதாரர்களும் தேர்வு நாளன்று கீழ்காணும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:

    விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-க்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50-க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்பு பால்பாயின்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டுவரக் கூடாது.

    விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திடீரென எதிர்பாராத விதமாக கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து சிதறியது.
    • வெங்கடாசலபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 24). இவர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் 2-வது வார்டுக்குட்பட்ட செல்ல பெருமான் நகரில் வெங்கடாசலபதி பேட்டரி வாகனத்தில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரத்தின் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கொசுமருந்து தெளிக்கும் எந்திரம் வெடித்து சிதறியது.

    இதில் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடாசலபதிக்கு முகம், கழுத்து உடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் பேட்டரி வாகனமும் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் எரிந்துகொண்டு இருந்த வாகனத்தை மண்ணை தூவி தீயை அணைத்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலபதியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு வெங்கடாசலபதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • சண்முகநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து தங்க நகை, ரொக்க பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • திருட்டு தொடர்பாக சண்முகநாதன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகள் பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்து இருந்தார். குழந்தை பிறந்து மகளை செய்யாறில் உள்ள மருமகன் வீட்டில் அழைத்து சென்று விடுவதற்கு நேற்று முன் தினம் சண்முகநாதன் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.

    நேற்று சண்முகநாதனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    சண்முகநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் தங்க நகை, ரொக்க பணம் ரூ.1 லட்சம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சண்முகநாதன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×