என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • விவசாய பெருமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
    • கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    இக்கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் அரசு அறிவுரையின்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகலை காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ராஜேஷ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
    • ரமேஷிடம் கொடுப்பதற்காக ரசாயனம் தடவிய பணத்தை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பியதுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் தனக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் (51) என்பவரை அணுகினார்.

    அப்போது அவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ராஜேஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ராஜேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து ரமேஷிடம் கொடுப்பதற்காக ரசாயனம் தடவிய பணத்தை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பியதுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.

    இந்த நிலையில், பணத்தை ரமேஷ் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்சம் வாங்கியது தொடர்பாக ரமேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எஸ்.பி.ஜி. உயா் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசித்தனர்.
    • பழைய விமான நிலையத்துக்கு முறையான அனுமதி இன்றி யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள்(வியாழக்கிழமை) குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்.பி.ஜி. குழுவைச் சேர்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்து உள்ளனா்.

    இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டா் தரை இறங்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

    மேலும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எஸ்.பி.ஜி. உயா் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசித்தனர். இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, விமான நிலைய உயா் அதிகாரிகள், சென்னை மாநகர உயா் போலீஸ் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

    இந்த கூட்டத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் சென்னை விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் ஓய்வறையில் சுமார் முக்கால் மணி நேரம் தங்குகின்றார். பிரதமரை வரவேற்க எத்தனை பேருக்கு பாஸ்கள் வழங்குவது?. அவரை சந்திப்பதற்கு யாருக்கெல்லாம் அனுமதி கொடுப்பது? போன்றவைகளும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து பிரதமர் புறப்பட்டு செல்லும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக அதிகரிக்கப்படுகிறது.

    அதன்படி சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பழைய விமான நிலையத்துக்கு முறையான அனுமதி இன்றி யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பழைய விமான நிலைய வளாகத்தில் காா்கோ, கொரியா், வெளிநாட்டு அஞ்சலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்களில் தற்காலிக பணியாளா்களுக்கு அனுமதி இல்லை. நிரந்தர ஊழியா்கள் முறையான அனுமதி பெற்று உரிய அடையாள அட்டையை அணிந்து கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் பழைய விமான நிலைய பகுதிகளில் ஓடுபாதை பராமரிப்பு பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய நிரந்தர பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்பட்டு உள்ளது.

    இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 29-ந் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 3,552 காலிப்பணியிடங்களக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி பதிவு செய்தவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


    • பொன்னேரி அண்ணா சிலை அருகில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வினை திரும்ப பெற கோரியும், சொத்து வரி உயர்வினை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், மதனந்தபுரம் பழனி, கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, தும்பவனம் ஜீவானந்தம், ஜெயராஜ், திலக் குமார், படு நெல்லி தயாளன், கரூர் மாணிக்கம், வாலாஜாபாத் ஹரிகுமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அண்ணா சிலை அருகில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன் ராஜா, விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், கோபால் நாயுடு, முத்துக்குமார் நகர செயலாளர் செல்வகுமார், பட்டாபி, எஸ்.டி.டி.ரவி, பா. சங்கர், கவுன்சிலர்கள் சுமித்ரா குமார், பானு பிரசாத், கிருஷ்ணா பிரியா வினோத், செந்தில் குமார், ஸ்ரீதர், டிசி மகேந்திரன், கோளுர் குமார், எம் எஸ் எஸ் சரவணன், மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. வி.ரமணா தலைமை தாங்கினார். இதில் மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளைக்கழக திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. கனிதாசம்பத், மாவட்ட துணை செயலாளர் ப.தன்சிங் , என்.சி.கிருஷ்ணன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சாந்தகுமார், பகுதி செயலாளர்கள் ஜெயபிரகாஷ், அப்பு வெங்கடேசன், மோகன் கோபிநாதன் ,எல்லார் செழியன், கூத்தன் ஜெகன் வழக்கறிஞர் சதீஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 2159 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 17 லட்சத்து 86 ஆயிரத்து 973 (94.6 சதவீதம்) பேருக்கும், இரண்டாம் தவணை 15 லட்சத்து 27 ஆயிரத்து 565 (80.9 சதவீதம்) பேருக்கும் என மொத்தம் 33 லட்சத்து14 ஆயிரத்து 538 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இன்று மாவட்டத்தில் மொத்தம் 1100 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் கூறும்போது, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள் உணவகங்கள் மற்றும் தொழிற்நுட்ப கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை மற்றும் முன்எச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1059 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த 3-ந்தேதி அகழாய்வு பணி தொடங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர்.

    இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு கிடத்த பானை ஓடு மற்றும் கற்கள் கி.மு. 300 முதல் கி.பி. 300-ம் ஆண்டு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியது என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த 3-ந்தேதி அகழாய்வு பணி தொடங்கப்பட்டது.

    தொடர்ந்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து மேற்பார்வையில் அகழ்வாய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால கட்டிட சுவர்கள் காணப்பட்டது. இதனை தொடர்ந்து அரியவகை பொருட்களான கண்ணாடி மணிகள், வட்ட சில்கள், இரும்பு பொருட்கள், கூர்மையான ஆயுதம் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற பொருட்களை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து பார்வையிட்டார். அவருடன் தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    அகழ்வாய்வு பணி முழுமையாக முடிவடைந்தால்தான் என்னென்ன வகை பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.

    கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பல நூறு கோவில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இக்குளத்தில் நீராடிய பின் காஞ்சி ஏகாம்பர நாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம் மேலும் ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண உற்சவத்தின் போது தீர்த்தவாரி நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இத்திருக்குளத்தில் நீத்தார் ஈம சடங்குகளை நடத்தி வழிபாடு செய்வது வழக்கம் மேலும் கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் இதில் மிதந்துள்ளதால் பக்தர்கள் நீராட செல்வதில்லை.

    இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி தன்னார்வர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை மேயர் மகாலட்சுமி துவக்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குளத்தில் மிதந்து கிடந்த கழிவுகள் மற்றும் நடைபாதைகள் இருந்த கழிவுகள் என அனைத்தையும் அகற்றும்பணியில் ஈடுபட்டனர்.

    இது போன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருக்குளங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தி பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக செவிலிமேடு, சதாவரம் ஆகிய பகுதிகளிலும் குளங்கள் தூர் வாரப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆய்வாளர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • ஏகாம்பரநாதர் ஆலய ராஜகோபுரம் முன்பு ராஜகோபுர ஆறுமுக பெருமான் உள்ளார்.
    • சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலய ராஜகோபுரம் முன்பு சுமார் 12 அடி உயரம் உள்ள ராஜகோபுர ஆறுமுக பெருமான் உள்ளார்.

    சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிக்கிருத்திகையை ஒட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

    இவ்விழாவில் காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டனர்.

    • கொட்டவாக்கம் பகுதியில் வசித்து வந்த உஷா, அம்மு, சிவசங்கரி உள்ளிட்ட 9 பேரின் வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர்.
    • கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் ஒன்றியம் கொட்டவாக்கம் ஊராட்சியில் கால்வாய் ஓரம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் 9 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். கடந்த 8 மாதத்துக்கு முன்பு பரந்தூர்-கம்மவார் பாளையம் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முடிவெடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கொட்டவாக்கம் பகுதியில் வசித்து வந்த உஷா, அம்மு, சிவசங்கரி உள்ளிட்ட 9 பேரின் வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர்.

    இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாற்று இடம் அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து இருந்தது.

    ஆனால் வீடுகள் இடிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் 9 குடும்பத்தினருக்கும் இதுவரை வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்துடன் கிராம சேவை கட்டிடத்தில் தவித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடுகளை இழந்தவர்கள் இடிக்கப்பட்ட தங்களது வீட்டு முன்பு மாவட்ட நிர்வாகத்தையும், நெடுஞ்சாலைத்துறையினரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வீட்டை இழந்த சிவசங்கரி என்பவர் கூறியதாவது:-

    எங்கள் வீட்டை இடித்து தள்ளியதால் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சேவை மைய கட்டிடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தங்கி வருகிறேன். இங்கு உள்ளவர்களை திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள் வீட்டை இழந்ததால் தங்கள் கணவரை பிரிந்து சென்று விட்டனர்.

    வீடுகளை இழந்த குடும்பத்தினர் 45 பேரும் இரண்டு அறைகளில்தான் தங்கி உள்ளோம். பெண்கள் கழிவறை செல்வதற்கு கூட இடமின்றி தவித்து வருகிறோம். இங்கு சமையல் செய்யவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ போதிய வசதிகள் இல்லை.

    எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் 118 -வது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் 118 -வது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. வங்கி ஆரம்பித்து 118 ஆண்டுகளில் முதல் முறையாக 1 கோடியே 30 லட்சத்திற்கு மேல் லாபம் இந்த ஆண்டு வங்கி ஈட்டி உள்ளது. மேலும் 22 ஆண்டுகளுக்கு பிறகு 11 சதவீதம் டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது.  இதையொட்டி வங்கி தலைவர் வி. பாலாஜிக்கு சிறந்த தலைவருக்கான விருது வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் வங்கியின் துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சாய்குமாரி, வங்கியின் பொது மேலாளர் ஹரி கிருஷ்ணன், துணைத் தலைவர் கணேசன், இயக்குனர்கள் சித்தாரா, லதா, ரவி, கருணாகரன், வசீகரன், மாமல்லன், தமின்அன்சாரி, நரேந்திரன், பிரேமாவதி, ரகுராமன், சுரேஷ் மற்றும் வங்கிப் பணியாளர்கள், வாடிக்கை யாளர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
    • நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்து வமனைகளிலும் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகளிலும் கோவாக்சின் தடுப்பூசியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு மூலமாகவும் கோவிசீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (96.45 %) இலக்கையே எட்டியுள்ளது.

    இதுவரை 2,03,453 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கிராமம் வாரியாக ஆட்டோக்களின் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலமே நோய் எதிப்பு சக்தி முழுமையாக கிடைக்கும் . இரண்டு தவணை தடுப்பூசி போடப் பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் மற்றும் இறப்பை தடுக்க முடியும் என இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.

    நம்முடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும். எனவே நாளை (ஞாயிற்றுக் கிழமை) அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தபட்டுள்ள 1059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

    18 முதல் 59 வயதினருக்கு ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×