என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அருகே நடத்தையில் கணவர் சந்தேகமடைந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த ஈரோடு ரோடு பழனிக்காட்டுப் புதூர் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த சிமான் சல்போதா என்பவர் தனது மனைவி சந்தோஷினி(21) மற்றும் அஸ்சின் போதா(3) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் தனது மனைவி அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அது தொடர்பாக கேட்டுள்ளார்.

    இது குறித்து சந்தேகமடைந்த அவர் தனது மனைவியை திட்டினார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சந்தோஷினி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது சேலையில் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீடு திரும்பிய கணவர் தூக்கில் தொங்கிய தனது மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அவர்கள் உதவியுடன் தனது மனைவியை கீழே இறக்கி பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது.

    இது தொடர்பாக பெருந்துறை போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்த சந்தோஷினிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் பிளாட்பார மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    ஈரோடு-சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னையில் இருந்து காலை 6.30 மணியளவில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. பயணிகள் இறங்கி சென்று கொண்டிருந்தனர். 4-வது பிளாட்பார்ம் மற்றும் 3-வது பிளாட்பார்முக்கு இடைப்பட்ட ‘சப்-வே’ வழியில் பயணிகள் வேகமாக இறங்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பிளாட்பார்மின் மேற்கூரை கான்கிரீட் தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது.

    அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஈரோடு என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி (வயது 42) என்பவரது தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் மேற்கூரையின் கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்ததில் நடந்து சென்ற மேலும் 3 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு ஈரோடு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
    ஈரோடு மாவட்டத்தில் 48 ஆண்டுகளாக தமிழ்மொழி கல்வியை எதிர்பார்த்து கொண்டிருக்கும் பழங்குடி குழந்தைகளின் கனவை அரசு நிறைவேற்றி வைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரம் கேர்மாளம் ஊராட்சி பூதாளபுரத்தில் 1970ஆம் ஆண்டு தொடக்கபள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க கன்னட வழிப்பள்ளியாக தொடங்கப்பட்டது.

    பூதாளபுரம் தொடக்கப்பள்ளிக்கு பூதாளபுரம், ஒரத்தி, உருளிகுட்டை, வி.எம்தொட்டி மற்றும் கெரெதொட்டி ஆகிய ஐந்து குடியிருப்புகளிலிருந்தும் 19 குழந்தைகள் படித்துவருகின்றனர் இதில் பூதாளபுரம் தவிர நான்கு கிராமங்களிலும் பழங்குடி மக்கள் வசிக்கின்ற குடியிருப்புகளாகும். 19 குழந்தைகளில் ஏழு குழந்தைகள் மட்டும் கன்னடம் மொழி பயிலும் குழந்தைகள்.

    இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடம் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிற்கு செல்ல வேண்டுமாயின் 70 கி.மீ. தொலைவில் உள்ள தாளவாடிக் குத்தான் செல்லவேண்டும். ஆகவே, இதற்கு பதிலாக ஐந்து கி.மீ தொலைவில் கர்நாடகாவில் உள்ள உடையார்பாளையத்தில் சேர்த்துவிடுகின்றனர்.

    அதுவும், இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடம் படித்தவிட்டு, ஆறாம் வகுப்பிற்கு அனுப்புவதை விரும்பாமல், தொடக்கப்பள்ளி முதலே கர்நாடகவில் உள்ள உடையார்பாளையம் பள்ளியில் சேர்த்து படித்து வைக்கின்றனர் பூதாளபுர குழந்தைகளின் பெற்றோர்கள்.

    மீதமுள்ள 12 குழந்தைகளும் பழங்குடி குழந்தைகள். இக்குழந்தைகள் தமிழ்வழியில் பயில ஏங்குகின்றனர். இவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது கன்னட வழிப்பள்ளி என்பதால் இந்த 19 குழந்தைகளுக்கும் கன்னட வழியில் போதிக்க ஒரு தலைமையாசிரியரும், உடன் ஒரு இடைநிலை ஆசிரியரும் ஆக, இரண்டு கன்னட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இக்குழந்தைகளுக்கு தமிழ்வழியில் போதிக்கத்தெரியாததால், இக்குழந்தைகள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

    இந்த நான்கு பழங்குடி கிராம பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் தமிழில் பயில ஏதுவாக இங்கு தமிழ்வழிப்பள்ளி தொடங்கப்படவேண்டும் என கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் இப்பிரச்சினை தெரியும் ஆனால், தீர்வுதான் எட்டப்படவில்லை.

    இப்பள்ளிக்கு அடுத்து தமிழ்வழியில் இவர்கள் பயில வேண்டுமாயின், இதற்கு அடுத்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் கேர்மாளம் உயர்நிலைப்பள்ளி தான் அமைந்துள்ளது. ஆக, இந்த பூதாளபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உடனடியாக தமிழ்வழிப்பள்ளி தொடங்கப்படவேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

    இந்த பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி என்பது ஒரு எட்டாக் கனியாகவே உள்ளது. ஆகவே, இவர்களுக்கு வாழிடத்தில் கல்வி வழங்கப்படவேண்டுமென தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், சுடர் அமைப்பு ஆகிய கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றன. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை எனும் கதையாக, வாழிடத்தில் பள்ளியிருந்தும் பயனில்லாமல் தவிக்கின்றனர்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் பிரிதொன்றறியோம் என்று தமிழ்மொழியின் பெருமை பேசும், செம்மொழி அந்தஸ்தை பெற்ற இந்த தமிழ் ஏன் பழங்குடி குழந்தைகளுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது? இந்த பழங்குடி குழந்தைகளின் தமிழ்க்கனவு என்று நிறைவேறும்..?
    ரோட்டில் ஓடிய ஆம்னிவேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பள்ளிப்பாளையம் அருகே ஆயக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஊரில் வசித்து வருகிறார். மேலும் ரவிச்சந்திரன் ஆயக்காட்டூரில் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சங்ககிரியில் உள்ள சொந்தக்காரர் ஒருவரது வீட்டிற்கு இன்று செல்ல முடிவு செய்திருந்தார். அதன்படி இன்று காலையில் ரவிச்சந்திரன் தனக்கு சொந்தமான ஆம்னிவேனில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சங்ககிரிக்கு புறப்பட்டார். காரில் மொத்தம் 4 பேர் இருந்தனர்.

    ஆம்னிவேனை ரவிச்சந்திரன் ஓட்டினார். காலை 7.30 மணி அளவில் வெப்படை என்ற இடத்தில் ஆம்னிவேன் சென்றபோது, என்ஜீன் பகுதியில் இருந்து திடீரென புகை குபு குபுவென கிளம்பி வெளியே வந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக ஆம்னி வேனை நிறுத்தினார். இதையடுத்து அனைவரும் காரிலிருந்து படபடவென கீழே இறங்கி சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்று கொண்டனர்.

    கொஞ்சம் நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வருவதற்குள் ஆம்னிவேன் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாக மாறியது.

    ரோட்டில் ஓடியபோது ஆம்னிவேன் வெடித்து சிதறி இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக ரவிச்சந்திரன் சுதாரித்துக் கொண்டு ஆம்னி வேனை நிறுத்தியதால் அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

    சத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் வசதி கோரி 100-க்கும் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அத்தாணி ரோடு பகுதியில் இந்திரா நகர், வீனஸ் நகர், ரோஜா நகர் ஆகிய 3 பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 3 மாதமாக சீரராக குடிநீர் வரவில்லையாம்.

    ஆகவே சீரான குடிநீர் வசதி கோரி அந்த பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் கள் காலி குடங்களுடன் இன்று காலை 10.30 மணிக்கு சத்தி- அத்தாணி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர்.

    அவர்கள் சாலை மறியல் நடத்திய பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7 வனச்சரகங்களிலும் வன விலங்குகள்  கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தி, பவானி சாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், டி.என்.பாளையம், கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த 7 வனச்சரகங்களிலும் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு வனச்சரகத்திலும் வனக்காப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர் என 3 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்று வனத்துக்குள் புகுந்துள்ளனர்.

    இவர்கள் வனப்பகுதியில் உள்ள நீர் நிலை, கால்தடம், விலங்குகளின் எச்சம் ஆகியவற்றை வைத்து வன விலங்குகளை கணக்கெடுப்பார்கள். இந்த வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது. கணக்கெடுப்பு பணி முடிந்ததும் எந்த விலங்குகள் அதிகரித்து உள்ளது என்றுதெரியவரும்.

    வனவிலங்குகள் புதிய கணக்கெடுப்பு முடிவுகள் சென்னை தலைமை வன அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    ஈரோட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் 5 அடிக்கு உயர்த்தப்படும் அடுக்குமாடி வீட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு தில்லைநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). ஜவுளி உற்பத்தி மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.

    இவர் தில்லைநகரில் 2 தளமுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மழை காலங்களில் இந்த வீட்டுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டது.

    எனவே வீட்டை அஸ்தி வாரத்தில் இருந்து 5 அடி உயரம் உயர்த்த முடிவு செய்தார். இதற்காக நவீன தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்துகிறார். இந்த தொழில்நுட்பத்துடன் அஸ்திவாரத்தை 5 அடிக்கு உயர்த்தும் பணி கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்கியது.

    இந்த பணியின் தொடக்கமாக கட்டிடத்தை சுற்றி அஸ்திவார பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் தரைதள கட்டிட பகுதியில் 1 அடிக்கு உடைக்கப்பட்டு அதில் ஜாக்கிகள் பொருத்தப்பட்டன.

    மொத்தம் 2 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவுள்ள இந்த கட்டிடத்தை 5 அடிக்கு உயர்த்தும் வகையில் 1200 ஜாக்கிகள் பொருத்தப்பட்டன. பின்னர் அந்த ஜாக்கிகளை சிறிது சிறிதாக உயர்த்தி கட்டி கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்தப்பட்டு வருகிறது. இன்னும் 10 அல்லது 15 நாளில் இந்த பணி முடிவடையும் என்று தெரிகிறது.

    இது பற்றி தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-

    நான் சென்னையில் கட்டுமான தொழில் செய்து வருகிறேன். வேளச்சேரியில் இதுபோன்று 2 அடுக்குமாடி கட்டிடங்களின் உயரத்தை உயர்த்தி உள்ளேன்.

    இந்த தொழில்நுட்பம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். தமிழகத்தில் சென்னை, மதுரையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது அஸ்திவார பகுதியில் ஜாக்கிகள் பொருத்தப்பட்டு அவற்றின் உதவியுடன் 5 அடிக்கு உயர்த்தும் பணி நடக்கிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டதும் அஸ்திவாரத்தில் ஏற்படும் வெற்றிடம் கான்கீரிட் கற்கள் மூலம் நிரப்பி கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பணி இன்னும் நடந்து வருகிறது. வெளிநாட்டில்தான் இந்த யுக்திகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோட்டில் முதன் முறையாக நடந்து வரும் அடுக்குமாடி வீடு உயர்த்தப்பட்டு வருவதை பலர் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் தண்ணீர் பிடிக்க ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணி பெண் தவறி விழுந்ததால் பலத்த காயம் அடைந்தார்.
    ஈரோடு:

    பீகார் மாநிலம் ஜான்தான் பகுதியை சேர்ந்தவர் குண்டூன். இவரது மனைவி ஜோதி. இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தனர். ஜோதி கர்ப்பிணியாக இருந்தார்.

    நேற்று ஜோதி மட்டும் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் சென்ற ரெயில் நேற்று நள்ளிரவில் ஈரோடு ரெயில் நிலையத்தை நெருங்கியது. 2-வது பிளாட்பாரத்தில் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது பிளாட்பாரத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க ஜோதி இறங்கினார்.

    ஓடும் ரெயிலில் இருந்து அவர் இறங்கியதால் பிளாட்பாரத்தில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி திருப்பூரில் இருந்த ஜோதியின் கணவர் குண்டூனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வட மாநில வாலிபர்கள் மீது வேனின் கதவு திறந்து மோதியதால் பலத்த காயமடைந்த இருவரும் பலியாகினர்.
    பெருந்துறை:

    ஒடிசா மாநிலம், டிஜிடூ பத்ராஜ் மாவட்டம், திகார்பூர் பகுதியை சேர்ந்த அமர்மாலிக் என்பவரது மகன் டேனியல் மாலிக் (வயது 25).

    இவர் தற்போது பெருந்துறை அடுத்த பணிக்கம் பாளையம் பகுதியில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டைலராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை டேனியல் மாலிக் அதே பகுதியில் தங்கி தன்னுடன் வேலை பார்த்து வரும் நண்பரான ஒடிசா மாநிலம், பானிமோரா பகுதியை சேர்ந்த மானு சாந்த் என்பவரது மகன் பிவேக் சாந்த்(31) என்பவருடன் தனது பைக்கில் பெருந்துறைக்கு சென்றார்.

    இவர்கள் பணிக்கம் பாளையம் ரோட்டில் உள்ள பள்ளக்காட்டுத்தோட்டம் பகுதியில் வந்த போது எதிரே பெருந்துறையில் இருந்து பணிக்கம் பாளையம் நோக்கி வந்த ஒரு வேன் இவர்களை கடந்த போது திடீரென வேனின் பின் பகுதியில் உள்ள வலதுபுற டோர் திறந்து இவர்கள் மீது மோதியது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் டேனியல் மாலிக் மற்றும் பிவேக் சாந்த் ஆகிய இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே டேனியல் மாலிக் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட பிவேக்சாந்த் ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரும் பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan

    கோபி:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி அடுத்த குள்ளம்பாளையத்தில் அவரது வீட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் தலைமையில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் 1,250 தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அரசு அதில் தனிக்கவனம் செலுத்தி, வேகப்படுத்தி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, தற்போது தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்பட்டு வருகிறது.

    தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடத்தில் அதிகமாக உள்ளது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 50 சதவீதம் வரை ஆங்கிலவழியில் மாணவர்கள் படிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    இதன்மூலம் கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். ஏற்கனவே, அரசு அறிவித்த படி தேர்வு எழுதிய சிறப்பாசிரியர்களுக்கான காலிபணியிடங்கள் ஒளிமறைவின்றி முறைப்படி வெளிப்படைத் தன்மையோடு நிரப்பப்படும்.

    மேலும் கூடுதல் காலி பணியிடங்களுக்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    அடுத்த கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும். சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சியளிக்கப்படும்.

    இதில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உடனுக்குடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வார்கள். இதன் மூலம் மத்தியஅரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். #ministersengottaiyan

    ஈரோடு எஸ்.பி. அலுவலக கேன்டீனில் இன்று முதல் கேரிபேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    கேரி பேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பல மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளனர்.

    சில மாநகராட்சிகளிலும் இந்தநடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கு முன்னோடியாக ஈரோடு எஸ்.பி. அலுவலக கேன்டீனில் இன்று முதல் கேரிபேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதற்கு மாற்றாக துணிப் பைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் காவலர் நல கேன்டீன் இயங்கி வருகிறது. இந்த கேன்டீனுக்கு போலீசார் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். டீ, காபி, ஸ்னாக்ஸ் மட்டுமன்றி மதிய உணவும் பொட்டலங்களாக விற்பனை செய்யப்படுகிறது இங்கு உணவுப் பொருட்களை எடுத்து செல்ல கேரிபேக் பயன்படுத்துவது இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    கேரி பேக் உள்பட பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைகிறது. எனவே அதை பயன்பாட்டில் இருந்து தவிர்க்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன் பேரில் இன்று (சனிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்துவதில்லை. மதிய உணவு வாழை இலை மூலமாக மடித்து தருகிறோம். கேரிபேக்குக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். சிறிய பை ஒரு ரூபாய் பெரிய பை இரண்டு ரூபாய் என்று செலவாகிறது. இருந்தாலும் விலை ஏதும் இல்லாமல் கேரிபேக் அதற்கு பதிலாக இலவசமாகவே துணிப்பையை சேவை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறோம்.பொதுமக்களும் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எஸ் பி ஆபீஸ் கேன்டீனில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருப்பது பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற உணவகங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மக்கும் தன்மையுடைய துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஈரோட்டில் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு நகராட்சி நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 38). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    தட்சிணாமூர்த்தி சொந்தமாக 2 மணல் லாரி வைத்து மணல் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த 3 பேரிடம் தொழில் வளர்ச்சிக்காக ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    மாதாமாதம் வட்டி பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் தொழில் மந்தம் காரணமாக சரி வர வட்டி பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் தட்சிணா மூர்த்திக்கு நெருக்கடி கொடுத்தனர். பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    2 தினங்களுக்கு முன்பாக தட்சணாமூர்த்தியின் 2 மணல் லாரிகளை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதனால் மனமுடைந்த தட்சிணாமூர்த்தி சோலாரில் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள். நிதி நிறுவன உரிமையாளர்கள் அடியாட்களுடன் வந்து தட்சிணா மூர்த்தியை மிரட்டி விட்டு 2 லாரிகளையும், ஒரு பைக்கையும் எடுத்துச் சென்றதால் மனமுடைந்து தட்சிணா மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி சித்ரா போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய லக்காபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவரை கைது செய்துள்ளனர்.

    மேலும் நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேரை தாலுகா போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×