என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு, கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் அதே பகுதியை சேர்ந்த 5 பேருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கன்னிமார் கருப்பராயன் கோவில் உள்ளது. சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டு சுற்றிலும் கிரில் கம்பிகளால் அமைக்கப்பட்ட இக்கோவில் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் 5 பேரில் ஒருவருக்கு தனியாக பாத்தியப்பட்ட நிலம் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது. கோவில் அருகில் உள்ளதால் தன்னுடைய நிலத்தின் மதிப்பு உயரவில்லை என்று கூறி நேற்று மாலை கோவிலில் உள்ள சாமி சிலைகளை அங்குள்ள புறம்போக்கு இடத்தில் வைத்து விட்டு கோவில் கிரில் கம்பிகளை அவர் அகற்றி உள்ளார்.
மேலும் அங்கிருந்த சில மரங்களையும் வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு வழிபட வந்தபோது பொதுமக்கள் சாமி சிலைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இந்து முன்னணியினர் கோவில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் அமைந்துள்ள இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் சூரம்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் வெங்கடேஷ் (23) பெயிண்டர்.
ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி மூங்கில்பட்டி என்ற பகுதியில் வெங்கடேசின் பாட்டி வீடு உள்ளது. இங்கு அடிக்கடி வெங்கடேஷ் சென்று வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன் என்பவரது மகள் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
வெங்கடேஷ் அந்த மாணவியை 6 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிய வந்ததும் மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
கடந்த 8-ந்தேதி இரவு இதுதொடர்பாக வெங்கடேஷ் தரப்புக்கும் மாணவியின் பெற்றோர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் வெங்கடேஷ் தலையில் பலமாக தாக்கப்பட்டார். இதையடுத்து அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ஆப்பக்கூடல் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை சரவணன் (37), அவரது அத்தை சித்ரா (45) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விசைத்தறிகள் மற்றும் கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதையடுத்து நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
இதனால் கைத்தறி பட்டு உற்பத்தி கூடங்கள் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
நூல் விலை உயர்ந்தாலும் பட்டு சேலைகள் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே நூல் விலையை குறைக்கக் கோரி இன்று முதல் 10 நாட்களுக்கு பட்டு நூல் வார்ப்பதையும், நெசவு செய்வதையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
எனவே மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து பட்டு நூல் விலை மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






