search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை- எச்.ராஜா காட்டம்
    X

    தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை- எச்.ராஜா காட்டம்

    தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரவில்லை என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார். #BJP #HRaja
    கோவை:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘ஈழத்தில் 85,000 இளம் தமிழ் விதவைகள் உருவாக காரணமாக இருந்தாலும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியாவை நல்ல விதமாக வரவேற்பது இயல்புதான்.

    ஆனால் மோடியை ‘சாடிஸ்ட்’ என பேசுவதற்கு என்ன அவசியம் வந்தது? அதனால்தான் ஸ்டாலினை முதிர்ச்சி இல்லாத தலைவர் என்கிறேன். தி.மு.க இன்று முற்றிலும் முதிர்ச்சி இல்லாத தலைமையின் கீழ் இருக்கிறது.

    பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மோடி அரசு. அதில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. கலைஞர் சிலை திறப்பதற்குத் தமிழின துரோகி சோனியா காந்தியை ஸ்டாலின் அழைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருக்கும் பிரிவினை தீய சக்திகளுக்கு தி.மு.கதான் அரவணைப்பு. தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவும் வி.சி.கவும் இல்லை என்று துரைமுருகன் கூறியது போலவே அவர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல் 8 -வது வரிசைக்கு தள்ளிவிட்டனர். துரைமுருகன் தான் தி.மு.கவை வழி நடத்துகிறார்.


    இந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட சிலைகள் மீட்கப்படுகின்றது என்று சொல்லும் அமைச்சர் பாண்டியராஜன் போன்றோர் சிலை திருடுபோனது எப்படி? அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அழைக்கப்பட்டதையே விமர்சித்துப் பதிலளித்தார். உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லுங்கள். காங்கிரஸ் சரி இல்லை என்பதால் தானே உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள். உங்களிடம் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று நிருபர்கள் மீண்டும் கேட்டதற்கு, ‘‘தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை’’. என்று பதிலளித்தார்.

    4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா அடைந்த தோல்வி குறித்த கேள்விக்கு ‘மக்கள் சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அனுபவம் வாய்ந்த மோடியா இல்லை முதிர்ச்சி இல்லாத ராகுலா என மக்கள் முடிவு செய்வார்கள்.

    நாட்டுக்குத் தேவை நிலையான கட்சி. நிலையான அரசு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரே ஏற்கவில்லை. அந்தக் கூட்டணியில் ஆளுக்கு ஆள் நாட்டாமை. கருணாநிதி சிலைக்கு செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே!.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #BJP #HRaja
    Next Story
    ×