என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் முடிந்த பிறகு தாய்மார்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    சிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சுகபிரசவம் செய்த பெண்கள் சீக்கிரமே தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், சிசேரியன் செய்த பெண்களுக்கு கொஞ்சம் கடினம்தான். என்னென்ன பராமரிப்புகள், வழிமுறைகள், டிப்ஸ் (C-Section Recovery Tips) போன்றவை இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

    * குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள். சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

    * தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

    * டாக்டர் உங்களை நடக்கலாம் என சொன்னதும், நீங்கள் நடக்கத் தொடங்கிவிடுங்கள். நடப்பது நல்லது. குறைந்தது 20-30 நிமிடங்களாவது நடப்பது நல்லது.

    * உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம். குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

    * கர்ப்பக்காலம், பிரசவத்துக்கு பின் சில காலம் வரை மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் கால்களுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மலம் கழிக்க சுலபமாக இருக்கும்.

    * முதல் 6 வாரத்துக்கு அதிக எடையை தூக்க வேண்டாம். வலி முழுமையாக நீங்கிய பின் உங்களது தினசரி வேலைகளை செய்யலாம்.

    * சி-செக்‌ஷன் செய்த பிறகு, குழந்தை பிரசவித்த பிறகு ஒருவித மோசமான மனநிலை இருக்கும். இது இயல்புதான். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் துணையுடன், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். மாம்ஸ் கம்யூனிட்டியில் சேர்ந்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    * சில வாரங்கள் வரை வஜினல் டிஸ்சார்ஜ் இருக்கும். குழந்தை வயிற்றில் இருந்த போது உள்ள தேவையில்லாத திசுக்கள், ரத்தம் ஆகியவை வெளியேறும். முதல் வாரம் அடர்சிவப்பாக வெளியேறும் பிறகு பிங்க், பிரவுன், மஞ்சள் என நிறம் மாறி வரும். அப்புறம் தானாக டிஸ்சார்ஜ் நின்றுவிடும். இதற்காக பயம் தேவையில்லை.

    * கொலஸ்ட்ரம் என்ற சீம் பால், உங்கள் குழந்தைக்காக உங்களது மார்பகங்களில் உருவாகுவதால் வீக்கமாக இருக்கலாம். இது இயல்புதான்.



    * சி-செக்‌ஷன் சர்ஜரி என்பது பெரிய சர்ஜரிதான். உடல் தன்னை சரிசெய்து கொள்ள நேரத்தை எடுத்துக்கொள்ளும். 6 வாரங்களுக்கு அவ்வப்போது ஓய்வு எடுங்கள். குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்குங்கள். குழந்தையின் துணி, டயாப்பர் மாற்ற உங்களது துணை, உறவுகள் ஆகியோர் உதவும்படி கேட்டு கொள்ளுங்கள்.

    * 6-7 வாரங்களுக்கு பிறகு நீங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். மிதமான, மெதுவான முறையில் ஈடுபடுவது நல்லது.

    * மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

    * முதல் 4-6 வாரங்கள் வரை ஸ்விம்மிங், டப்பில் சூடாக குளியல் போன்றவற்றைத் தவிர்க்கவும். அனஸ்திஷியா, மருந்துகள் ஆகியவை உடலிருந்து வெளியேற தினமும் ஒரு டம்ளர் ஃப்ரெஷ்ஷான எலுமிச்சை சாறை குடியுங்கள். இதனால் உடலில் சேர்ந்துள்ள மருந்து கழிவுகள் வெளியேறும்.

    * புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். புரத உணவுகளை சாப்பிட்டால் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும். விட்டமின் சி உள்ள உணவுகள் தொற்றுகள் வராமல் பாதுகாக்கும்.

    * பட்டைத் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டையும் குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இளநீர் குடிப்பது நல்லது. செம்பருத்தி டீ குடிக்கலாம். கர்ப்பப்பையை சுத்தமாக்கும்.

    * தழும்பின் மீது ஃப்ரெஷ் ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்துங்கள். ஸ்கரப் செய்ய கூடாது. மைல்டான பாடிவாஷ் பயன்படுத்துங்கள். தழும்பின் மீது விட்டமின் இ காப்சூலில் உள்ள எண்ணெயைத் தடவலாம்.

    * முதல் 3-4 மாதங்களுக்கு உங்கள் முடி அதிகமாக உதிரும். அடர்த்தி குறைந்து போகலாம். இதுவும் இயல்புதான். ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுகிறது. சிவப்பான, அடர் ஊதா நிறத்தில் கூட ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கலாம். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

    * நீங்கள் தும்மும் போது, இரும்பும் போது, சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

    * 2-3 மூச்சுகள் ஆழ்ந்த மூச்சாக இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இதை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்யுங்கள். இதனால் நுரையீரல் உள்ள அடைப்புகள் நீங்கும். படுத்துக்கொண்டே இருப்பதால் உள்ள அசௌகரியம் நீங்கும்.

    * மருத்துவர் அனுமதித்த பிறகு மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, ஜிம் செல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். 
    தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.
    ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.

    தாய்மைக்குத் தயாராகும் முன்… (Planning for Pregnancy)

    மாதவிலக்கு காலத்தில்...

    மாதவிலக்கின் போது,

    கருப்பு உளுந்து
    கருங்குருவை அரிசி
    நல்லெண்ணெய்
    முட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள்.

    மாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்கும் பொருட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மாதவிலக்கின் போது, குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும்.

    பெண்கள் வீட்டிலே அடைந்து கிடக்காமால் கொஞ்சம் வெளியே சென்று புத்துணர்வு பெற்றுக் கொள்ளுங்கள். சுத்தமான காற்று, ரம்மியமான சூழலில் இருக்கப் பழகலாம்.

    கட்டாயமாக புகை, மது போன்ற இவ்வித பழக்கங்களை தம்பதியர் இருவரும் தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.

    ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள உடற்பயிற்சி செய்வது சிறந்த வழி. உடற்பயிற்சியால் உடல் இயக்கங்கள் சீராகும். கருத்தரிக்க உதவும்.

    மாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.



    சில ஆய்வுகளில் அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாகிறதாக சொல்லப்படுகிறது. டீ குடிப்பதையும் தவிர்க்கலாம். பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில் தயாரித்துக் குடிக்கலாம்.

    வீட்டை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம், டிடர்ஜென்ட், பூச்சிக் கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம்.

    உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.

    ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்...

    பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.
    முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    புரோக்கோலியும் நல்ல உணவு.
    உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
    மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்.
    மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள்.
    வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்.
    அதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
    பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது.
    ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்.
    பூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.

    கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் 48 நாட்களுக்குத் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்து வர கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆரோக்கியமானக் குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.
    பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
    பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம்.

    பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், சர்க்கரை நோய், தைராய்டு, மற்ற ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அரிதான பிரச்சனை இது. மாம்மரி ஹைபோபிளாசியா எனும் தாய்ப்பால் சுரக்கும் திசுவால் சரியாக தாய்ப்பால் சுரக்காமல் போவது. மார்பகத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் நடந்து இருந்திருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் இருப்போர், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பால் சுரக்க மருந்துகளை உட்கொள்ளலாம்.

    கருத்தடை மாத்திரைகள் முன்பு சாப்பிட்டு இருந்தாலும், ஹார்மோன் அளவு மாற்றமடைந்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். நிப்பிளில் வலி காரணமாக, குறைவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். மார்பகத்திலிருந்து பால் லீக் ஆவதில்லை என தாங்களாகவே கருதி குறைவான தாய்ப்பால் சுரப்பு என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

    முன்பை விட மார்பகம் கனமாக இல்லை என்று சில பெண்கள் கருதுகின்றனர். இந்த எண்ணமும் ஒரு காரணம். குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக தேவைப்படும் எனத் தாங்களாகவே ஒரு எண்ணத்தைப் போட்டு கொள்கின்றனர். ரெகுரலாக தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை குறைவான நேரமாக மாற்றிக் கொள்வதாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.

    பெரும்பாலும் தவறான கருத்துகளும் குழப்பங்களுமே குறைவான தாய்ப்பால் சுரப்புக்குக் காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். தாய், மிகவும் குண்டாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். புகைப்பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். கர்ப்பக்காலத்தில் அதிக மனஅழுத்தம் இருந்திருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு குறைவாகும். இரும்புச்சத்து அளவு தாய்க்கு குறைந்து இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு பிரச்சனை இருக்கும். சில மருந்துகளை நீண்ட காலம் தாய் உட்கொண்டு இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பில் பிரச்சனை இருக்கும்.

    குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வப்போது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். 
    உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்.
    நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை 50 ஆண்டுகள் கழித்து இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர். உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் ஆனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.

    பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். வீட்டுக்கு எல்லை உண்டு, ஊருக்கு எல்லை உண்டு, நாட்டுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது.

    ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரே பேருந்து, ஒரே ரெயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள் என பல்வேறு நிலைகளில் நட்பு உருவாகலாம். “நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில் ஏழை தான்,” என யங் என்ற அறிஞர் கூறுகிறார்.

    பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ, மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது அவரவர் வீட்டு உணவுகள் அடுத்தவர் தட்டுக்கு பரிமாறப்படும். அங்கே பரிமாறப்படுவது உணவுகள் மட்டுமல்ல, இருதயங்களும் தான். பொதுவாக வேறுபாடுகளை களையும் விஸ்வரூப விருட்சம் தான் நட்பு.

    நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்கை காற்று, அதற்கு மின்தடையே வராது. என்ன தான் நமக்கு பிரச்சினை என்றாலும், அதை மனதுக்குள்ளே பூட்டி வைத்தால், அது நம்மை நோய் பாதிப்புக்கு கொண்டு போய் விட்டு விடும். ஏனெனில் தாய், தந்தையிடம் பேச அளவு உண்டு. உறவினர்களிடம் பேச அளவு உண்டு. காதலியிடம் பேச அளவு உண்டு. ஆனால் இருதயத்தின் ஆழத்தில் உள்ள உண்மைகளை ஒளிக்காமல் ஒருவன் பேசுவது தன் நண்பனிடம் மட்டும் தான்.

    உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். தாய், தந்தையை விட நம் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே.உயிர் காப்பான் தோழன் என்பார்கள். தன் உயிரை கொடுத்தாவது நண்பன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது நட்பு. அதனால் தான் நட்பை ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்கிறார்கள்.

    திருக்குறளில் நட்பின் மேன்மையை திருவள்ளுவரும், நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் அருமையாக விளக்குகிறார். நட்பு என்பது முகம் பார்த்து பழகுவதல்ல. அது இருதயம் கலந்து பழகுவது. உதட்டிலிருந்து பேசும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல, உள்ளத்தில் இருந்து வரும் ஆழமான வார்த்தைகளால் நீடிப்பது.

    நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். தீயநட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்.
    ஒரு குழந்தை எடை குறைவோடோ, ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
    கருவுற்றிருக்கும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் இது. இதனை நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொண்டால் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். ஒரு குழந்தை எடை குறைவோடோ அல்லது ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

    1. முழுமையாக 37 வாரங்கள் முடிவதற்கு முன்னரே குழந்தை சில சமயம் பிறப்பதால் எடை குறைவு ஏற்படக்கூடும். அதாவது குழந்தை குறை மாதத்தில் பிறந்துவிடுவது. இதற்குக் காரணம் தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் எடை கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்திலே போதிய எடை வளர்ச்சியை அடையும். இது நிகழாத போது, குழந்தையின் எடை நிச்சயம் குறைவாகத் தான் காணப்படும்.

    2. ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கருவில் சுமக்கும் போது இத்தகைய எடை குறைவு ஏற்படக்கூடும். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் கருத்தரித்திருந்தால் குழந்தைகளுக்குப் போதுமான சத்துணவு கிடைக்காமல் 2500 கிராமிற்கும் கீழே எடை குறையக்கூடும். ஏனென்றால் ஒரு குழந்தைக்குச் செல்ல வேண்டிய சத்துக்கள் இன்னொரு குழந்தைக்குச் சென்று விடலாம். அதனால் ஏதாவது ஒரு குழந்தை பலவீனமாக இருக்கலாம் அல்லது ஏனைய குழந்தைகளும் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.ஆக இந்தக் குழந்தைகள் பிறக்கும்போது எடைக் குறைவோடே காணப்படுவார்கள்.

    3. கருவுற்றிருக்கும் தாய் அதிக இரத்தக் கொதிப்போடு பிரசவ காலத்திலிருந்தால் அது குழந்தையைப் பாதிக்கக் கூடும். இதனால் குழந்தை குறைந்த எடையோடு பிறக்கக்கூடும். இதனைத் தவிர்க்கத் தாய் கர்ப்பகாலத்தில் அமைதியான மனநிலையோடு இருப்பதோடு ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதும் நல்லது.அதே கருவில் வளரும் குழந்தையின் எடை வளர்ச்சிக்கு நல்லது.

    4. கருவுற்றிருக்கும் பெண் புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும் வாழ்க்கைமுறைப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது குழந்தையின் எடை குறைபாட்டிற்குக் காரணம். மேலும் பதப்படுத்திய உணவுகளை உண்பது, துரித உணவுகளை அதிகம் உண்பது போன்ற விசயங்கள் எல்லாம் குழந்தைக்குப் போதுமான பிராண வாய்வு கிடைக்காமலும் போதிய சத்து கிடைக்காமலும் போகும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன. இதனால் கருவில் இருக்கும் குழந்தை எடை குறைவோடு பிறக்கும் சதவீதம் அதிகம்.

    5. கருவுற்றிருக்கும் தாயிற்கோ அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கோ சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் கர்ப்ப காலத்தில் உள்ளது. இதனால் குழந்தை பிறக்கும் போது எடை குறைவு அல்லது அதீத எடை போன்ற பிரச்சனைகளோடு பிறக்கக்கூடும்.இதைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் உணவு மேலாண்மையைக் கையாள வேண்டும்.



    6. கருவுற்றிருக்கும் தாய்க்குக் கருப்பையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். இதனால் வேறு பல பிரச்சனைகளும் குழந்தைக்கு ஏற்படக்கூடும். இது மருத்துவ பரிசோதனைகளும், ஆலோசனைகளும் மிக முக்கியம்.

    7. கருவுற்றிருக்கும் தாய் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக சத்தான கீரை வகைகள், பழங்கள், காய் மற்றும் பசும் பால் போன்ற ஊட்டச்சத்து நிரம்பிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தை சீரான உடல் எடையோடு பிறக்கும்.

    8. தாய் கருவுற்றிருக்கும் போது தாயிற்கோ அல்லது குழந்தைக்கோ நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் குழந்தை பிறக்கும் போது உடல் எடை குறைபாட்டோடு பிறக்கக்கூடும். இதனால் கர்ப்ப காலத்தில் நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் தாயிற்கு ஏற்படும் எந்த வித நோய்ப் பாதிப்புகளும் கருவில் வளரும் குழந்தையையும் தாக்குகின்றன. இதன் விளைவாக அந்த குழந்தை பிறக்கும் போது உடல் எடை குன்றியே காணப்படுகிறது.

    9. சரியான பருவத்தில் தாய் கருவுற வேண்டும். குறைந்த வயதிலோ அல்லது அதிக வயதிலோ ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற எண்ணினால், அதுவும் உங்கள் குழந்தை எடை குறைபாட்டோடு பிறக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். அதனால் பெண்கள் இயன்ற வரை உரிய வயதில் தாய்மை கொள்வது நல்லது.

    10. கருவுற்றிருக்கும் பெண் முடிந்த வரை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் தனது கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டும். தாய் மனச் சோர்வோடும் மன அழுத்தத்தோடும் இருந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக் கூடும். ஆக தாய் மனத் தெளிவோடு எந்த ஒரு விசயத்திற்கும் கவலை கொள்ளாது தன் கர்ப்ப காலத்தைக் கழித்தால் பிறக்கும் குழந்தை போதிய எடையோடு நிச்சயம் இருக்கும்.

    இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் புரிந்து கொண்டு தன் குழந்தை சரியான உடல் எடையோடும் ஆரோக்கியத்தோடும் பிறக்க உதவ வேண்டும். 
    தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெயரளவில் மட்டுமே இனிப்பைக்கொண்டது நீரிழிவு நோய். ஆனால் அது கொடுக்கிற இம்சைகள் அனைத்தும் கசப்பு. தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது என மாறிப்போன வாழ்க்கை முறையால் இப்போது இளம் வயதிலேயே நீரிழிவு நோய் தாக்குகிறது. நீரிழிவு நோய்க்கும் மலட்டுத் தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    குடும்ப பின்னணியில் நீரிழிவு இருந்தால் அந்த வழியில் வருவோருக்கும் அது பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அது தவிர நிறைய பெண்களுக்கு இப்போது பி.சி.ஓ.டி. என்னும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போவது என்று அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

    இவர்களுக்கு தைராய்டு கோளாறும் வரலாம். தைராய்டு ஹார்மோன், சினைப்பைகளில் இருந்து சுரக்கிற எப்.எஸ்.எச். திரவம், நீரிழிவுக்கு காரணமான இன்சுலின், இதுவெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்ற இறக்கம் வரும்போது அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு நோய் வரலாம்.

    நீரிழிவு நோய் இருக்கிற பெண்கள் கருத்தரிப்பது க‌‌ஷ்டம். அப்படியே கருத்தரித்தாலும் அது கலையவும் கரு சரியாக உருவாகாமல் போகவும் அபாயங்கள் அதிகம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் வரும். பிரசவமானதும் அது தானாக போய்விடும். ஆனால் தாமதமாக கருத்தரிக்கிற, உடல் பருமன் அதிகமுள்ள, பி.சி.ஓ.டி. பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலம் முடிந்ததும் நீழிரிவு நோய் நிரந்தரமாக உடம்பில் தங்கலாம். கருத்தரிக்கும்போது அது தாயை மட்டுமல்ல குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும்.

    முறையற்ற மாதவிலக்கு, உடம்பெல்லாம் முடி வளர்ச்சி, தாறுமாறாக எகிறும் உடற்பருமன் இதுவெல்லாம் இருக்கிற பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவே ஸ்கேன் மூலமாக பி.சி.ஓ.டி. பிரச்சினை இருக்கிறதா? என்று தெரிந்து கொள்வது நல்லது. எடைக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இதையெல்லாம் சரி செய்தாலே நீரிழிவு நோய் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
    அம்மாவிற்கு எப்படி சில விஷயங்கள் பிடிக்காதோ, அதே போல கருவில் இருக்கும் குழந்தைக்கும் சில விசயங்கள் பிடிக்காது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பமாக இருக்கும் போது, நமக்கு நேரும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களைக் குறித்து தெரிந்து கொண்ட அளவிற்கு, கருவைப் பற்றியோ, கருவிற்குப் பிடித்த பிடிக்காத விசயங்களைப் பற்றியோ நாம் பெரிதாகச் சிந்திக்க மாட்டோம். பலர் வயிற்றில் வளரும் கருவிற்கு உணர்ச்சிகள் கிடையாது என்று கூடச் சொல்லுவார்கள்,நினைப்பார்கள். ஆனால், கருவில் உள்ள குழந்தைக்கு நம் அகப் புற உணர்வுகள் துல்லியமாகத் தெரிந்து விடுவதோடு நில்லாமல், அது மேற்கொண்டு அந்தக் குழந்தையையும் பாதிக்கவும் செய்கின்றன.

    * தன் அம்மா இதமான இசையைக் கேட்பதும், தகவல்களைக் கேட்பதும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த இசையின் தன்மை சற்று மாறினாலோ, ஒலி அதிகமானாலோ குழந்தைக்குப் பிடிக்காது. பேரிரைச்சல், கடினமான சத்தங்களை ஏற்படுத்தும் சில வாத்திய கருவிகளின் இசை எல்லாம் குழந்தைக்குப் பிடிக்காதவை.

    * நாம் சோகமாக இருப்பதோ, மனச்சோர்வில் இருப்பதோ குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்புடையது  கிடையாது.ஆகையால் சிரித்துக்கொண்டே இருங்கள்!நம் அகம் நிறைந்தால்,கருவறையில் குடி இருக்கும் குழந்தையின் மனமும் பூத்துக் குலுங்கும். உங்கள் மகிழ்ச்சிதான் குழந்தையின் மகிழ்ச்சியாகவும் எதிரொலிக்கும் என்பதை மறந்து விடவே கூடாது.

    * தனது மூன்றாம் கர்ப்பகாலத்தில் அம்மா உடலுறவு வைத்துக் கொள்வது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.எனவே அது குழந்தைக்குப் பிடிக்காது. இது குழந்தையைக் கோபப்படுத்தவோ, வருத்தமாக்கவோ கூட செய்துவிடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், உடலுறவில் ஈடுபடும்போது அம்மாவின் வயிற்றுச் சதைகள் இறுக்கமாகி விடுகின்றன. ஏற்கெனவே குழந்தை முழு வளர்ச்சி அடைந்துவிட்டதால், அதற்கு வயிற்றில்  இடம் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் சதை இறுக்கமானால், இடம் மிகவும் குறைந்துவிடும். எனவே, குழந்தைக்கு இது பிடிக்கவே சாத்தியம் கிடையாது.

    * குழந்தை வளர வளர, அம்மாக்களுக்குப் படுப்பது மிகவும் சிரமமாகிவிடும். சரியாகப் படுத்து உறங்குவதற்குள் விடிந்தே போய்விடும். புரண்டு புரண்டு படுத்துச் சிரமப்படுவார்கள்.தாய் படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க, குழந்தையும் வயிற்றில் உருண்டு கொண்டே இருக்கும்! அங்கும் இங்கும் திரும்பிப் படுக்கும் போதெல்லாம், குழந்தையும் இடம் மாறுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.இது குழந்தைக்குப் பிடிக்காத ஒரு முக்கியமான செயல் ஆகும். வாகனத்தில் குலுங்குவது எப்படியோ அதேபோலத் தான் இதுவும். பகலில் நன்றாக வேலை பார்த்துவிட்டு, இரவில் படுத்ததும் தூங்கிவிடுவது மாதிரி பார்த்துக் கொண்டால், தாய்க்கும் சேய்க்கும் பரம திருப்தியாக இருக்கும்!

    * குழந்தைக்கு தாயின் குரல் மிகவும் பரிட்சயமானது.அதே சமயம் மிகவும் பிடித்தமானது.அதற்கு செவிப்புலன் வந்தது முதல் கேட்ட முதல் குரல் உங்களுடையது தான். எப்போது எல்லாம் உங்கள் குரல் அதன் செவிகளில் விழுகிறதோ, அப்போதெல்லாம் அது கருவறையில் மிகவும் பாதுகாப்பாக உணரும்.அப்படி இருக்க அதை மறந்து நீங்கள் யாரிடமாவது வாதிட்டாலோ, கடுமையான குரலில் சண்டையிட்டாலோ அது அச்சம் கொள்ளும்.குழந்தைக்கு இந்த செயல் சுத்தமாகப் பிடிக்காது.அதனால் இயன்றவரை தேவையில்லா வாதத்தை தவிர்த்து, இனிமையான குரலோடே எல்லோரிடமும் பேசிப் பழகுங்கள்.

    * தாய் உண்ணும் உணவுகளை கருவில் வளரும் குழந்தையும் சுவைக்கத் தொடங்கிவிடும்.இது நிறைய தாய்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் குழந்தை முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே சுவைகள் பற்றி உணர்ந்து கொள்கின்றது என்பது அழகான ஆச்சரியம். ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைக்கு அது பிடிப்பதில்லை.ஆக,தாய் மிகவும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
    உங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா? தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு பெண்ணும், தான் கருவுற்றிருக்கும் காலத்திலேயே எப்படி நாம் குழந்தை பிறந்த பின் சூழலைச் சமாளிப்பது, மேலும் தங்களது வேலைகளை எளிதாக்கிக் கொண்டு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

    உங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா? தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் குழந்தை, கணவர் மற்றும் குடும்பத்தினர்களுடன் வாழ துணைபுரியும் குறிப்புகளை பார்க்கலாம்.

    * சத்தான உணவு (Nutritious food)

    முதலில் உங்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிந்த வரை புரதம், உயிர்ச்சத்துகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த வேலை இருந்தாலும் சரியான நேரத்திற்குப் பசித்தவுடன் சாப்பிட வேண்டும். இது உங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவும்.

    * போதுமான தூக்கம் (Enough sleep)

    உங்கள் குழந்தை மட்டும் போதுமான நேரம் தூங்கினால் பற்றாது. நீங்களும் தூங்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தையை நீங்கள் நன்றாக வளர்க்க முடியும். நீங்களும் ஆரோக்கியத்தோடும் நல்ல சிந்தனைகளோடும் அவனை/அவளை வளர்க்க முடியும். முடிந்த வரை உங்கள் குழந்தை தூங்கும் போதே நீங்கள் தூங்கி விடுங்கள். மற்ற வீட்டு வேலைகளை ஒத்தி வையுங்கள்.

    * உடற்பயிற்சி (Exercise)

    இது முக்கியமான ஒன்று. அநேக தாய்மார்கள், குழந்தை பிறந்தவுடன் தங்கள் உடல் தோற்றம் மற்றும் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதில்லை. இதனால் அவர்களது உடல் எடை சராசரிக்கும் அதிகமாக ஆவதோடு, பல நோய்களும் காலப்போக்கில் ஏற்படுகின்றன. அதனால் முடிந்த வரை தினமும் 10 முதல் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்.

    * பெரிய வாழ்க்கை மாற்றங்களைத் தள்ளி வையுங்கள் (Postpone major changes in life)

    குழந்தை பிறந்தவுடன் அநேக தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்ய முயற்சி செய்வார்கள். குறிப்பாக வீடு மாறுவது, வேலை மாற்றம், இட மாற்றம், வெளி நாட்டிற்குக் குடி பெயருவது என்று மேலும் பல. ஆனால் நீங்கள் குழந்தை பிறந்தவுடன் அத்தகைய மாற்றங்கள் செய்ய முயலும் போது உங்கள் உடலும் மனமும் அதிக வேலைச் சுமையாலும் அதிக பொறுப்புகளாலும் சக்தி இழக்கின்றன. இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.

    * மகிழ்ச்சியாக இருங்கள் (Be happy)

    ஒவ்வொரு பெண்ணும், குழந்தையைச் சுமக்கும் போது மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது, அவள் குழந்தை பிறந்த பிறகுதான் அதிக மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, குழந்தை, கணவன் மற்றும் தன்னையும் சரியாகக் கவனித்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

    * உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் (Prepare yourself)

    குழந்தை பிறப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரே உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், தாய் மற்றும் பாட்டி உட்படப் பலரிடம் ஆலோசனை மற்றும் சில அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவை சமயத்தில் உங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு எளிதாக வேலையைச் சமாளித்து மகிழ்ச்சியாக வாழ உதவும்.

    * உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் (Hire a maid)

    அனைத்து வேலைகளையும் நீங்களே செய்ய முயற்சி செய்யாதீர்கள். குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு போதுமான ஓய்வு தேவை. அந்த ஓய்வுக் காலத்தில் உங்கள் தளர்ந்த எலும்பு மற்றும் உடல் உறுப்புகள் இழந்த சக்தியை மீண்டும் பெற்று உரிய ஆரோக்கியத்தை அடையும். அதனால் உங்களுக்கு உதவ ஒருவரை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.

    * போதுமான நீர் பருகுங்கள் (Drink enough water)

    நம்மில் பலர் நீர் அருந்துவதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நீங்கள் போதுமான நீரைப் பருகும் போது உங்கள் உடல் நல்ல சக்தி பெறும். உங்கள் மனமும் தெளிவு பெறும். இதனால் மன அழுத்தம் குறையும்.

    * யோகா மற்றும் தியானம் செய்யுங்கள் (Practice yoga and meditation)

    நீங்கள் தினமும் சில நிமிடங்கள் யோகா மற்றும் தியானம் செய்வதால் உங்கள் மன அழுத்தம் பெரிய அளவில் குறைந்து தெளிவான மனதோடும், சிந்தனையோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பீர்கள். இதனால் நீங்கள் உறுதியாக மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

    * இசை (Music)


    மன அழுத்தத்தைக் குறைக்க இசை பெரிய பங்கு வகிக்கிறது. உங்களுக்குப் பிடித்த மற்றும் உங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரின் இசையை அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதோ அல்லது வீட்டு வேலை பார்க்கும்போதோ கேளுங்கள். உங்கள் மனம் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள். மேலும் உங்கள் குழந்தையும் அந்த இசையை இரசிக்கத் தொடங்கும். இது உங்கள் குழந்தையை நீங்கள் சமாதானப்படுத்த மற்றும் விரைவில் தூங்க வைக்க ஒரு எளிதான வழியாக இருக்கும்.

    இங்குக் கொடுக்கப்பட்டுள்ள 10 குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இனி நீங்கள் தேவை இல்லாமல் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மருத்துவரை அணுகுவது என்று எதுவும் செய்யத் தேவை இல்லை. இந்த எளிய முறைகள் நிச்சயம் உங்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சூழல், உடல் நலம் மற்றும் மன நலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் நீங்கள் உங்கள் குழந்தையோடு மகிழ்ச்சியான நேரத்தைக் கழிப்பதோடு உங்கள் கணவருக்கும் நல்ல நேரத்தை ஒதுக்க முடியும்.
    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? ஏன் ஸ்கேன் நல்லது என்பதை என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan)

    இந்த ஸ்கேன் மூலம் அல்ட்ராசவுண்ட் ஒலி, கருவில் உள்ள குழந்தை மீது பட்டு எதிரொலிக்கிறது. அந்த எதிரொலியைக் காணொளியாக மாற்றி, குழந்தையின் ஒரு இமேஜ் கிடைக்கிறது. குழந்தை எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எந்த இடத்தில் இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எதற்காக செய்ய வேண்டும்?

    குழந்தையின் இதயத் துடிப்பை தெரிந்துகொள்ள உதவும். கருவில் இருப்பது ஒரு குழந்தையா, இரட்டைக் குழந்தைகளா அல்லது எத்தனை குழந்தைகள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். Ectopic Pregnancy எனப்படும், கருவிற்கு வெளியில் குழந்தை வளர்வது போன்ற பிரச்சனைகளைக் கண்டுபிடிக்கலாம். உடலுக்குள் ஏதேனும் ரத்த கசிவு ஏற்படுகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தை டவுன் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதித்து உள்ளதா என்பதைக் கண்டறியலாம். குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தை எந்த இடத்தில், எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

    குழந்தையின் அனைத்து உறுப்புகளும் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். வயிற்றில் உள்ள அமினியாடிக் திரவம் சரியான அளவில் உள்ளதா எனக் கண்டுபிடிக்கலாம். குழந்தை எப்போது பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியும். குழந்தையின் அனைத்து உறுப்புகளும் சரியாக வளர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். முக்கியமாக மூளை மற்றும் தண்டுவடம் குறைபாடுகளைக் கண்டறிய உதவும்.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் குழந்தைகளையோ தாய்மார்களையோ பாதிப்பதாக இதுவரை ஆதாரங்கள் இல்லை. ஸ்கேனின் போது சிறிய அளவிலான சூடு ஏற்படும். ஆனால், இது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

    ஒரு டிகிரிக்கும் குறைவான வெப்பமே இது உருவாகும். அதுவும் நம் திசுக்களால் எடுத்துக்கொள்ளப்படும். ஒருவேளை வெப்பம் நான்கு டிகிரிக்கு அதிகமானால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சரியான இடங்களில் ஸ்கேன் செய்து கொண்டால், எந்தவித பயமும் இல்லை.

    அதிகமான இடங்களில் 2D ஸ்கேன்களே செய்யப்படுகின்றன. இதில், குறைந்த அளவிலான அல்ட்ராசவுண்ட் ஒலி, அதிகமான இடத்தில் பரவலாக சென்று எதிரொலிக்கிறது. அதுமட்டுமில்லாமல், குழந்தையைச் சுற்றி உள்ள நீரில் பெருவாரியான வெப்பம் தணிக்கப்படுகிறது. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    3D ஸ்கேன் என்பது சில தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதிலும், 2D ஸ்கேன் சற்று அதிக நேரம் எடுக்கப்பட்டு, முப்பரிமாண படமாகத் தெரிகிறது. எனவே இதுவும் பெரிய பாதிப்பில்லை. ஆனால், 4D ஸ்கேன் என்பதை முதல் ஐந்து மாதங்கள் செய்ய வேண்டாம் என்பது மருத்துவர்களின் கருத்து. காரணம், குழந்தை சிறியதாகவும், அதிகமான அசைவில்லாமலும் இருப்பதால், வெப்பம் உடனடியாகத் தாக்கக்கூடும்.

    மருத்துவர் பரிந்துரைக்காமல், தாங்களாகவே ஸ்கேன் செய்ய கூடாது. தேவையற்ற கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகள் மீதும் குழந்தையின் மீதும் படுவதைத் தவிர்க்க வேண்டும்.

    டாப்லர் ஸ்கேன்களும் முடிந்தவரைத் தவிர்க்கலாம். குழந்தைக்கு ஆக்சிஜன் (மூச்சுக் காற்று) சரியாகச் செல்கிறதா என்றும், தொப்புள்கொடி வேலை செய்கிறதா என்றும் பார்க்கவே இவ்வகை ஸ்கேன் செய்யப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாராளமாகச் செய்யலாம்.
    இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
    இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்தசோகை ஏற்படுகிறது. உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை ‘இரத்தசோகை நோய்’ என்கிறார்கள்.

    * பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் இரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்தசோகை.

    * மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

    * இரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    * இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

    * இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

    * பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.

    * இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.

    * வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
    பெண்களின் முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.
    பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு வி‌‌ஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முகத்தில் சின்னப் பரு வந்துவிட்டாலே வருத்தப்படுவார்கள். அழகை பெரிய அளவில் பாதிக்கும் வேறு ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லவே வேண்டாம், உடைந்து போய் விடுவார்கள். முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும்.

    நம் மூளையில் இருந்து முகத்திற்கு செல்லும் 12 நரம்புகளில் முகத்தசைகளுக்குச் செல்லும் 7-வது நரம்பு பாதிக்கும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை ஏற்பட்டவர்களுக்கு எந்த பக்கத்து நரம்பு பாதிக்கப்படுகிறதோ அந்தப் பக்க தசைகள் செயல்படாது. இதனால் ஒரு பக்கம் கண் திறந்தே இருக்கும். சிரிக்கும் போது வாய் ஒரு பக்கம் கோணலாக போகும். காரணம், சிரிப்பின்போது வாய்க்கு இரண்டு பக்கமும் உள்ள தசைகளும் விரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது அந்த பக்கம் உள்ள முகத்தசைகள் செயல்படாது.

    இதனால் சிரிக்கும்போது ஒரு பக்கம் மட்டும் முகத்தசைகள் விரிவடையும். இன்னொரு பக்கம் அப்படியே இருக்கும். அதனால் சிரித்தால் முகம் கோணலாக இருக்கும். இந்தப் பிரச்சினை சில சமயம் கடுமையான வியாதிகளாலும் வரலாம். அல்லது சாதாரணமாகவும் வரலாம். சாதாரணமாக, இந்தப் பிரச்சினை ஏற்படும்போது இதனை முழுவதுமாக சரி செய்துவிட முடியும். அதற்கு சரியான வைத்தியமும், முகத்திற்கான பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். முறையாக இவ்விரண்டையும் செய்யும்போது குறைந்தபட்சம் இரண்டு வாரத்தில் இந்தப் பிரச்சினையை சரி செய்துவிட முடியும்.

    பெலெப்ரோபசம் என்பதும் ஒரு நரம்பு வியாதி தான். சிலருக்கு ஒரு பக்கம் முகம் சுருங்கி கண் அடித்து, பின் முகம் விரியும். கண்ணடிப்பது போல் ஒரு கண் அடித்துக்கொண்டே இருக்கும். பொதுவாக ஏற்படும் பிரச்சினை இது. இவர்களுக்குக் குறிப்பாக அதிக டென்சன் ஏற்படும் போதோ, கூட்டத்தில் இருக்கும்போதோ தொடர்ச்சியாக இது போல் வரும். தூக்கத்தில் வராது. இதற்கும் மருத்துவம் இருக்கிறது.

    முழுவதுமாக குணப்படுத்தமுடியாவிட்டாலும் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. எனினும் இந்த வியாதி அதிக அளவில் பாதிக்கும்போது கண்கள் பாதிக்கப்படும். அதனால் சிலருக்கு அன்றாட வாழ்வே பிரச்சினையாகத்தான் இருக்கும். உதாரணமாக கார் ஓட்டுதல், படித்தல், சமைத்தல் என்பது போன்ற பல வேலைகளை செய்தல் மிகச் சிரமமான ஒன்றாக இருக்கும். எனவே நரம்புகளை பாதிக்கும் வி‌‌ஷயங்களை நாம் தவிர்த்து விட்டாலே இது போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
    கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
    யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை புற்றுநோய் உருவாகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.

    இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.

    கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.



    1. அசாதாரண ரத்தப்போக்கு

    கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

    2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்

    சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.

    3. உடலுறவின்போது வலி

    பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
    ×