என் மலர்
குழந்தை பராமரிப்பு
- குழந்தைகள் முன் பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது.
- ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள் தாம் இன்று அதிகம்.
குழந்தைகளோடு கூடிக்களிப்பது தான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பது போய், குழந்தைகளை விட்டு ஒரு மணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.
இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள் தாம் இன்று அதிகம். அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள். இதற்கே இவ்வளவு போராட்டங்கள்.
அதுமட்டுமில்லை, எவ்வளவுதான் பார்த்து பார்த்து குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் சமைத்துக்கொடுத்து அனுப்பினாலும், அதை முழுவதுமாகச் சாப்பிடாமல் மிச்சம் வைத்துக் கொண்டுவரும் பிள்ளைகள், குழந்தை வளர்ப்பு என்பதைப் புரியாத புதிராக மாற்றிவிடுகிறார்கள்.
இன்னொரு பக்கம், சதா மொபைல் மற்றும் வீடியோ கேம்ஸில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளை அந்த மோகத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் திணறும் பெற்றோர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சரி, கொஞ்சம் வளர்ந்தால் குழந்தைகள் சரியாகிவிடுவார்கள் என்றும் நினைக்க முடியவில்லை. டீன் ஏஜில் இருக்கும் பிள்ளைகளால் இன்னும் பெரிய பிரச்சனைகள்.
குழந்தைகளுடன் வெளியே ஷாப்பிங் செல்வது என்றால் கிளம்புவதற்கு முன்பே, ஷாப்பிங்ல உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீமை நாங்க வாங்கித் தர்றோம். ஆனா, பாக்குற பொருளை எல்லாம் கேக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அழைத்துச் செல்லுங்கள். இப்படி ஓரளவு குழந்தைகளைத் தயார் செய்து வெளியில் அழைத்துக்கொண்டு சென்றால், குழந்தைகளும் பிடிவாதம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.
குழந்தைகள் முன் பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது என்பதுதான். தொடர்ந்து குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது, குழந்தைகள் மனதளவில் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.
- பி.எஸ்.சி. விஸ்காம் பாடத்திட்டம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
- இத்துறை பட்டதாரிகள் கலையை உருவாக்குவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
விஸ்காம் என்பது விஷுவல் கம்யூனிகேஷன் என்பதன் சுருக்கமாகும். விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை அறிவியல் (பி.எஸ்.சி.) என்பது மூன்று வருடப் பட்டப் படிப்பாகும். இந்த இளங்கலை பட்டப்படிப்பானது முழு நேரமுறையில் ஆறு மாதங்களுக்கு ஒரு செமஸ்டர் என்ற வகையில் ஆறு செமஸ்டர்களைக் கொண்டதாகும்.
இது இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வெகுஜன தொடர்பு படிப்புகளில் ஒன்றாக சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றது. பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் பாடநெறியானது பொது தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்தில் காட்சி மற்றும் எழுதப்பட்ட அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
இந்தப் பாடநெறியானது மாணவர்களுக்கு திரைப்படங்கள் மற்றும் ஊடகத் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்கு பிந்தைய செயல்முறைகள் பல்வேறு பட மற்றும் காணொளி தொகுப்பாக்க மென்பொருள், அனிமேஷன் மென்பொருள் மற்றும் எழுதுதல், பிற தகவல் தொடர்பு திறன்களைப் பயன்படுத்துவதற்கு சிறந்த பயிற்சியை அளித்து அவர்களைத் திறமையானவர்களாக உருவாக்குகின்றன.
கல்வித்தகுதி
இந்த மூன்று வருட இளங்கலை பட்டப்படிப்பில் சேருவதற்கு +2வில் அறிவியலை முதன்மை பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில கல்லூரிகள் இப்பட்டப்படிப்பில் இணைவதற்கு தனியாக நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
பாடங்கள்
மனித இணைப்பு, காட்சி எழுத்தறிவு, வரைதல், கலை மற்றும் அழகியல், திரைப்படக் கூறுகள், திரைப்படப் பாராட்டு, வானொலி பிரதிநிதித்துவம், விளம்பர அடிப்படைகள், ஸ்கிரிப்ட் எழுதுதல், கிராஃபிக் வடிவமைப்பு, விளம்பர படைப்பாற்றல், ஊடக கலாச்சாரம் மற்றும் சமூகம், விளம்பரத்தில் ஊடக திறன்கள், புகைப்படம் எடுத்தல், காட்சி அழகியல், நடிப்புத் திறன், காட்சி பகுப்பாய்வு, தொடர்பு கோட்பாடுகள், ஊடக ஆராய்ச்சி முறைகள், தொடர்பு மேம்பாடு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, காட்சிப்படுத்தல் மற்றும் விளக்கம், தொழில்முறை புகைப்படம் எடுத்தல், நகல் எழுதுதல், ப்ராஜெக்ட், ஆய்வு காகிதம் (ஸ்டடி பேப்பர்), கட்டுரைகள், இன்டர்ன்ஷிப், ஊடக விளக்கத்திறன்கள் மற்றும் ஊடக மேலாண்மை இவை அனைத்தையும் இந்த மூன்று வருட பட்டப் படிப்பானது மாணவர்களுக்கு பாடங்களாக வைத்து கற்றுத் தருகின்றது.
பி.எஸ்.சி. விஸ்காம் படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு எம்.எஸ்.சி. வெகுஜன தொடர்பு (மாஸ் கம்யூனிகேஷன்), விஸ்காம், ஒளிபரப்பு, விளம்பரம், சந்தைப்படுத்தல், டிஜிட்டல் ஊடகம் போன்ற துறைகளில் முதுகலை பட்டப்படிப்பை படிக்கலாம். எம்.எஸ்.சி. மட்டுமல்லாமல் முதுகலை டிப்ளமோ படிப்பையும் தேர்ந்தெடுக்கலாம். பி.எஸ்.சி. பட்டதாரிகள் முதுகலை எம்.பி.ஏ. படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு முக்கிய காரணம் எம்.பி.ஏ. முடித்தவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பும் உயர்ந்த ஊதியமுமே ஆகும்.
கற்பனை மற்றும் படைப்பாற்றல் குறைவான மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பி.எஸ்.சி. விஸ்காம் பாடத்திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துறை பட்டதாரிகள் கலையை உருவாக்குவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
வேலை வாய்ப்புகள்
* ஊடகத் தொழில் துறை
* திரைப்படத்துறை
* வீடுகளை வடிவமைத்தல்
* ப்ரொடக்ஷன் ஹவுசஸ்
* விளம்பரத்துறை
* தொலைக்காட்சி தயாரிப்பு
* வீடியோ கேமிங்
* வலைத்தளம்
பதவிகள்
* கிராபிக் ஆர்டிஸ்ட் - இவர்கள் காட்சி கருத்துக்களை கையால் அல்லது கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கி நுகர்வோரை வசீகரிக்கிறார்கள்.
* டெஸ்கிடாப் பப்ளிசர்ஸ் - கணினி மென்பொருளைப் பயன்படுத்தி செய்தித் தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், சிற்றேடுகள் மற்றும் பிற பொருட்களுக்கான பக்க தாளவமைப்புகளை வடிவமைக்கின்றனர்.
* புகைப்படக் கலைஞர்
* அனிமேட்டர்
* கார்டூனிஸ்ட்
* வெப் டிசைனர்
இதுபோன்ற இன்னும் பல பதவிகள் இளங்கலை விஸ்காம் பட்டதாரிகளுக்கும் காத்துக் கிடக்கின்றன.
இத்துறையில் வேலைக்கு புதியதாக நுழைபவர்களுக்கு துவக்க வருமானம் குறைந்த அளவில் இருந்தாலும் ஆர்வமும், கற்பனைத் திறனும், அனுபவமும் அவர்களுக்கு எதிர்காலத்தில் மிக நல்ல வருமானத்தை ஈட்டித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
- உடன்பிறந்தவர்களைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதை நிறுத்துங்கள்.
- உடன்பிறந்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.
ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் மனோபாவம் நமக்குள் வளர்வதை 'தாழ்வு மனப்பான்மை' என்கிறோம். ஒரு குழந்தை வளரும்போது, தன்னை சுற்றியுள்ளவர்களைப் போல தானும் ஆக வேண்டும் என்று விரும்பும். அந்த இடத்தில் இருந்தே தாழ்வு மனப்பான்மை ஆரம்பிக்கிறது. அது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
உடன் பிறந்தவர்களுக்கு இடையில், ஒருவரை விட மற்றொருவர் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும்போதும், அதை ஒப்பிட்டு, ஒருவர் மற்றவரை விமர்சிக்கும்போதும் அல்லது தங்கள் மீது அதிகாரத்தை நிலைநாட்டும்போதும் 'தாழ்வு மனப்பான்மை' ஏற்படும். இது அதிகமாகும்போது, 'வெற்றி அடைவோம்' என்ற எண்ணம் குறைந்து கொண்டே சென்று, மனதளவில் விரக்தி அடையச்செய்யும். இதன் மூலம், தொடர்ந்து தோல்வியும், முயற்சி செய்ய விரும்பாத மன நிலையும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மீதான பாசம் குறையும். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு கொண்டிருப்பதிலேயே வாழ்க்கை ஓடும். இதில் இருந்து மீள்வதற்கு கீழ் உள்ளவற்றை செய்யலாம்.
உடன்பிறந்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள். ஒரே தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் அழகு, நிறம், படிப்பு, உடல் தோற்றம் போன்றவற்றில் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைகளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பது, உங்கள் நிறைகளை பார்க்க முடியாமல் செய்துவிடும்.
உடன்பிறந்தவர்களைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதை நிறுத்துங்கள். மற்றவரைப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். நீங்கள் நீங்களாகவே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய இயல்பான தன்மையை நேசியுங்கள். எந்த விஷயத்திற்காக நீங்கள், உடன்பிறந்தவர்களுடன் தாழ்வு மனப்பான்மை கொள்கிறீர்கள் என்று நிதானமாக யோசித்து எழுதுங்கள்.
அவர்களை விட, நீங்கள் எவற்றில் எல்லாம் உயர்வாக இருக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். ஒவ்வொருவரும் நேர்மறை பண்புகள் மற்றும் குறைபாடுகளின் வெவ்வேறு கலவையாகும். இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, உங்களை யதார்த்தமாக யோசிக்க வைக்கும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.
கடந்த கால தவறுகளைப் பற்றி சிந்திப்பதற்கோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதற்கோ இடம்கொடு்க்காமல், தற்போதைய தருணத்திற்கு உங்களை மீண்டும் கொண்டு வர தியானம் உதவும். இதனால் உங்கள் தாழ்வு மனப்பான்மை குறையும். உங்களுடைய தனித்திறமை எதுவெனக் கண்டுபிடியுங்கள். அவற்றை வளர்த்து வாழ்வில் முன்னேறும்போது, உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
- இன்றைய கால சிறுவர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போனில் செலவிடுகின்றனர்.
- சிறுவர்கள் புத்தகங்களைப் படிப்பது என்பது சொற்ப எண்ணிக்கையில்தான்.
ஒரு செடியை நட்டுப் பராமரிக்க வேண்டும். கால அவகாசம் முடிந்து உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு செடியை நட வேண்டும்.
உலகம் முழுவதும் இன்றைய கால சிறுவர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போன்களிலும், கார்ட்டூன்களைக் காண்பதிலும் செலவிடுகின்றனர். இது இரண்டும் இல்லாமல் ஒரு சிறுவரையோ அல்லது சிறுமியையோ காண்பது அரிது. அதேசமயம் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களே கூட புத்தகங்களைப் படிப்பது என்பது சொற்ப எண்ணிக்கையில்தான். நிலைமை இப்படி இருக்க, 9 வயதில் அதிக புத்தகங்களை வாசித்ததுடன், ஒரு நூலகத்தையும் அமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஒரு சிறுவன்.
கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் அல்லினி எரிக் லால். இவனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்லு என்று அழைப்பது வழக்கம். இந்தச் சிறுவன் தனது பெரும்பாலான நேரத்தைப் புத்தகங்கள் வாசிப்பதற்குச் செலவிட்டு வந்தார். கொரோனா ஊரடங்கு இவரது புத்தக வாசிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில், தான் படித்த புத்தகங்கள் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் சேகரித்த புத்தகங்களைக்கொண்டு ஒரு நூலகத்தை அல்லு தொடங்கிவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் இந்த நூலகத்தை சிறுவர்கள் உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ரெனி அந்தோணி திறந்து வைத்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்த நூலகம் செயல்படும். 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். அவர்களுக்கு ஒரே ஒரு நிபந்தனைதான். அல்லுவின் நூலகத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால் ஒரு செடியை நட்டுப் பராமரிக்க வேண்டும். கால அவகாசம் முடிந்து உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு செடியை நட வேண்டும்.
இந்தச் சிறுவயதில் அல்லு சமூகத்திற்குச் சொல்லும் பாடம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சிறுவர்கள் நாட்டில் அதிகரித்தால் அது இயற்கைக்கும், எதிர்கால இந்தியாவுக்கும் பெரும் பலத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
- தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம்.
- பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம்.
இதயப் பாதுகாப்பிற்குப் புகைபிடித்தலைத் தவிர்க்கச் சொல்வது மருத்துவர்களின் வழக்கம். ஆனால் பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு. இதயத்தைப் பாதுகாக்கும் முறைகளில் குழந்தை நலம் மிக முக்கியமானது. பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம்.
பொதுவாகத் திருமணம் ஆன உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பெண் கருக்கொண்டதை அறிவதற்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் இதயம் முழுமையாக உருவாகிவிடும். பொதுவாகப் பெண்கள் முகக் கிரீம்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
பருவ வயதில் ஏற்படும் பருக்களையும், இப்பருக்களால் உண்டாகும் ஆக்னே எனப்படும் பிளாக் ஹெட்ஸ் போன்றவற்றை நீக்கவும் இளம்பெண்கள் கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை நீக்க ரெடினாய்க் அமிலம் கலந்த, முகக் கிரீம்கள் பயன்படுத்துவது வழக்கம். இக்கிரீம்கள் அபாயத்தை வரவழைக்கின்றன. இவை கருவில் சிசுவின் இதயத்தைப் பாதிக்கின்றன.
திருமணத்திற்கு முன்னர் இவற்றைப் பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
இந்த அபாயத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்க, இக்கிரீம்களில் ரெடினாய்க் அமிலம் கலக்காமல் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். கருத்தரிக்கும் காலத்திலாவது இந்த வகை கிரீம்களைத் தவிர்த்தல் சிசுவின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
இக்காலத்தில் ஆண்கள்கூட முகப்பருக்களை நீக்க இவ்வகை கிரீம்களைப் பயன்படுத்துவது உண்டு. ஆண்கள் பயன்படுத்துவதால் கரு சிசுவுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்த அமிலம் விந்துகளைத் தாக்குவது இல்லை. இந்த அமிலம் தோலின் மேற்புறத்தின் வழியாகப் பயணிப்பதால் கருவை மட்டுமே பாதிக்கும், விந்துவைப் பாதிப்பதில்லை.
குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தாய்க்குப் பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்குக் கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அது கருவிலேயே சிசுவைப் பாதிக்கும். முன்னர்ச் சொன்னது போல் கரு உருவாகும் காலத்தில் முதல் இரு மாதங்களில் ரெடினாய்க் அமிலம் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தி இருந்தால், இதயப் பாதிப்பு அதிகமாகும். தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம்.
கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர்க் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தைப் பிடித்துவிடும். சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவைப் பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்.
பொதுவாக இந்த நேரத்தில் தாய்க்குக் காய்ச்சல் வந்தால், மருந்து, மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படும். இது சாதாரணமான காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. இக்காய்ச்சல் டார்ச்- TORCH என்ற வைரஸ், கூட்டமாகத் தாயைத் தாக்குவதால் ஏற்படலாம். இதனால் தாய்க்கு ஏற்படும் அபாயம் மட்டுமில்லாமல், கருவிலுள்ள சிசுவையும் அது தாக்கிவிடும். இதனால் குழந்தைக்குக் காது கேளாமல் போய்விடலாம். மேலும் கண்ணில் காடராக்ட் வளர்ச்சி ஏற்படும். இந்தப் பாதிப்பை 'ருபெல்லா சிண்ட்ரோம்' என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இவ்வகை சளி, காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்துகள் மிக வீரியமுள்ளவையாக இருப்பதால், இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படும். இந்தப் பக்கவிளைவுகள் கருவிலுள்ள சிசுவின் இதயத்தைத் தாக்கக்கூடும்.
கரு தோன்றக்கூடிய முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்போது மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம். அதனால் இளம் பெண்களே முகப்பரு கிரீம்களிடம் உஷாராக இருங்கள்.
- இந்த படிப்புகள் பொது மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
- இந்தப் படிப்பு நவீன வீட்டு பராமரிப்புடன் மாணவர்களை தொடர்பு படுத்துகிறது.
ஹோம் சயின்ஸ் என்பது வீட்டு அறிவியல் என்று எளிமையாக கூறப்பட்டாலும் அது ஒரு அறிவியல் மட்டுமல்ல ஒரு கலையும் கூட. நம்மில் பெரும்பாலானவர்கள் ஹோம் சயின்ஸ் என்பது வெறும் சமையல், சலவை தையல்வேலை ஆகியவை மட்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால், இது இயற்பியல், உயிரியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அறிவைக் பயன்படுத்தும் இடைநிலை ஆய்வுத்துறை ஆகும்.இந்தப் படிப்பு நவீன வீட்டு பராமரிப்புடன் மாணவர்களை தொடர்பு படுத்துகிறது.
ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகளில் பயன்படுத்தப்படும் அறிவியல் கோட்பாடுகள் (சூடு, குளிர்ச்சி, ஊட்டச்சத்து, பாதுகாத்தல் போன்றவை) குறித்த அறிவை வழங்குவதால் இது ஒரு அறிவியல் சார்ந்த படிப்பு என்று சொல்லலாம். சிறந்த வாழ்க்கைக்கான கல்வி என்று கூறப்படும் இந்த வீட்டு அறிவியலின் அடிப்படை குடும்ப அமைப்பாகும்.
இயற்கையாக அமைந்திருக்கும் குடும்பத்திற்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை கையாள்வதற்கு இந்தப் படிப்பு பெருமளவில் உதவி செய்கின்றது.இல்லற வாழ்வு, குடும்ப வாழ்க்கை, அறிவார்ந்த சிந்தனை மற்றும் இந்த வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, வீட்டையும் குடும்பத்தையும் சமூகக் கட்டமைப்பின் பயனுள்ள பகுதிகளாக மாற்றி, வாழ்க்கையை மிகவும் அழகாகவும்,பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு நவீன அறிவியல் என்று ஹோம் சயின்ஸ் படிப்பைக் கூறலாம்.
ஹோம் சயின்ஸ் படிப்பிற்கான அடிப்படை தகுதி
இளங்கலை பட்டப்படிப்பை படிப்பதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக படித்தும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சில கல்வி நிறுவனங்களில் இந்த இளங்கலை பட்டப் படிப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பில் எந்த பாடத்திட்டத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் சேர்க்கைஅனுமதிக்கப்படுகின்றது .இந்தப் பட்டப் படிப்பின் முதல் வருடத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலின்
அடிப்படைகளை கற்க வேண்டி இருப்பதால் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இத்துறை படிப்பிற்கான சேர்க்கையை அனுமதிக்கிறார்கள்.
கல்லூரிகள்
சண்டிகர், புனே, உதய்பூர், தார்வாட், பங்கா, புது தில்லி மற்றும் தமிழ்நாட்டிலும் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஹோம் சயின்ஸ் படிப்புகளை சிறப்பாக வழங்கி வருகிறார்கள்.
பாடநெறிகள்
* பிஎஸ்சி ஹோம் சயின்ஸ்:இது 3 ஆண்டு கால தொழில்முறை பட்டப் படிப்பாகும். ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி அளவீடுகள் போன்ற அறிவியலின் பல்வேறு துறைகளை இந்தப் படிப்பு உள்ளடக்கி இருக்கின்றது. சுற்றுப்புறம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பல்வேறு அறிவியல் சிக்கல்களை கையாள்வதும் இதில் அடங்கும். இந்த இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் மேற்கொண்டு படிக்க விரும்பினால் ஊட்டச்சத்து, உடை, குடும்ப உறவுகள், வீட்டு மேலாண்மை, குழந்தை மேம்பாடு போன்ற சிறப்பு பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடரலாம்.
* பிஏ ஹோம் சயின்ஸ்: இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த மூன்று ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பானது மிகவும் சிறப்பாக வழங்கப்படுகின்றது. பல்வேறு வளங்களை திறம்பட நிர்வகிப்பதில் இந்தப் பாடநெறி கவனம் செலுத்துகிறது. ஒருவரது வீட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அறிவுசார் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கான அறிவியலும் இதில் அடங்கும். இத்துறை பட்டதாரிகளுக்கு ஆடை விற்பனை, உணவு விடுதிகள், நலன்புரி நிறுவனங்கள் போன்ற தொழில்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன..இந்தப் பட்டப் படிப்பில் மாணவர்களுக்கு கோட்பாடு, நடைமுறைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை கொடுக்கப்படுகின்றன.
* டிப்ளமோ ஹோம் சயின்ஸ் மற்றும் பிஜி டிப்ளமோ ஹோம் சயின்ஸ்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்பில் இணைந்து படிக்க முடியும்.
* எம்எஸ்சி ஹோம் சயின்ஸ்: பிஎஸ்சி ஹோம் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான இளங்கலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்தவர்கள் இந்த முதுகலை பட்டப் படிப்பில் இணைந்து படிக்க முடியும்.
தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்
ஹோம் சயின்ஸ் படிப்புகள் பொது மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. மாநில அரசுத்துறைகளில் பல்வேறு வேலைகளில் இத்துறை பட்டதாரிகள் பணி அமர்த்தப்படுகிறார்கள்.
உணவு நிபுணராக இருக்கும் இத்துறை பட்டதாரிகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் மிகப்பெரிய அங்கீகாரம் உள்ளது. இந்தத் துறை பரந்த அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறது.. கற்பித்தல், உணவுத்தொழில் , சுகாதார பாதுகாப்பு துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் இத்துறை பட்டதாரிகள் பணியாற்ற முடியும். உற்பத்தித் தொழிற்சாலைகள், சுற்றுலா மற்றும் சேவை நிறுவனங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து, ஜவுளித் தொழில் மற்றும் ஆடை நிறுவனங்கள், வள மேலாண்மை, சுய வேலைவாய்ப்பு என பலவிதமான வேலை வாய்ப்புகளை ஹோம் சயின்ஸ் பட்டதாரிகள் பெற முடியும்.
*வகிக்கும் பதவிகள்
ஆடைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி மேலாளர்கள், வண்ண ஆலோசகர்கள், உணவு ஆலோசகர்கள், பேஷன் டிசைனிங், உட்புற வடிவமைப்பாளர்கள், ஆசிரியர்கள்.
- குழந்தைகளை பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது.
ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியை பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். இன்றைக்கு எல்லா குழந்தையுமே ஏதாவது பரிசை கட்டாயம் வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாக பிரித்து நடத்துகிறார்கள்.
விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாக காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்து விடுகிறது. பெரியவர்கள் பாராட்டும்போது தங்களை திறமைசாலி, அறிவாளி என்று மன மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு, எதிலாவது தோல்வி ஏற்பட்டால் மனம் சோர்ந்து விடுகின்றனர்.
சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரையச் சொல்லி அவர்களை கண்காணித்தனர். நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் தேவையில்லாமல் புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்கு காரணமாக இருந்தது.
ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ, கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமை காட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும், பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்து கொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையை போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்து விடும்.
குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதை போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்க கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக் காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
தவறு செய்தால் தவறு செய்தவர்களை மட்டும் தண்டித்து திருத்தும் நாம், பாராட்டும்போது எல்லோரையும் பாராட்டுவது சரியல்ல. அது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவாது. நன்றாக செயல்பட்டார்களோ இல்லையோ எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க எல்லோருக்கும் பரிசு தர வேண்டும் என்ற மனப்பான்மை சரியல்ல.
- மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்களை இங்கு பார்ப்போம்.
நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போன்று இருப்பதால், குழந்தைகளின் செல்லப்பிராணிகள் ஆகின்றன. அப்படி குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்களை இங்கு பார்ப்போம்.
கோமண்டர் (Komondor)
இது ஒரு வகையான ஹங்கேரியன் ஷெபெர்டு நாய். இந்த நாய்க்கு அதிகமான ரோமங்கள் இருப்பதோடு, அவை சுருண்டு இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.
மால்தீஸ் (Maltese)
மொசுமொசுவென இருக்கும் குட்டி நாய். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த நாய். இந்த நாயிடம் அன்பை காட்டினால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு அது பாசம் வைக்கும்.
பூடில் (Poodle)
இந்த மொசுமொசு நாய், பொம்மை போன்று இருக்கும். இந்த நாய் சிறிய பெண் குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருக்கும். நன்கு விளையாடுவதோடு, வீட்டில் எந்தவொரு பிரச்சினையையும் கொடுக்காது.
ஆப்கன் ஹவுண்ட் (Afghan Hound)
இந்த நாய்கள் மிகவும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பதோடு, அழகான பட்டுப்போன்ற ரோமங்களைக் கொண்டவை. இவை நன்கு வேகமாக ஓடக்கூடியவை மற்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவை.
இவை அனைத்தும் பார்ப்பதற்கு மட்டுமல்ல, பழகுவதற்கும் பாசமான நாய் இனங்கள். குழந்தைகளை ஒருபோதும் அச்சுறுத்தாத நாய் இனங்கள் இவை.
- குழந்தைகளின் செவித்திறனை பிறந்தது முதல் 3 வயதுக்குள் கண்டறிவது மிகவும் அவசியம்.
- வீட்டில் காது கேளாத குழந்தை இருந்தால் தனித்து விடாது தினமும் பேசவேண்டும்.
உறவு முறைத் திருமணம் தாய் வழித் தொற்றுகளான ரூபெல்லா மேக நோய் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிற தொற்று நோய்கள், பயன்படுத்தப்படும் நச்சு மருந்துகள், கடும் மஞ்சள் காமாலை போன்றவை பிறந்த குழந்தையின் காது நரம்பை பாதிக்கின்றன. இதனால் பிறப்பின் போதே குழந்தை காது கேளாத் தன்மையை பெறுகிறது.
தற்போது அறிவியல் வளர்ச்சியால் குழந்தையின் கேட்கும் திறனை முதல் நாளிலேயே கண்டறிந்து விடலாம். இதற்காக இரண்டு விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.செவித்திறனை இழந்து அவதிப்படுகிறவர்களுக்காக காதில் பொருத்திக் கொள்ளக் கூடிய சிறிய உபகரணங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
'ஆர்.எச். நெகட்டிவ்' குருதி முறை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கருவுற்றிருக்கும் போது தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். கூரிய பொருட்களை காதில் இடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இயர்போனில் பாடல்கள் கேட்கும் போது இசை சத்தமாக இருந்தாலோ நீண்ட நேரம் கேட்டாலோ, காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும்.
சத்தமான இடங்களை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி எண்ணெய் அல்லது திரவங்களை காதில் இடக்கூடாது. கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இவற்றை கடைபிடித்தால் நாம் கேட்கும் திறன் இழப்பை தடுக்க முடியும்.
காது கேட்கும் திறனை இழந்தால், அது நமக்கு பெரும் இழப்பாக அமையும். பிறரோடு உரையாட இயலாமல் போவதே காது கேளாமையின் முக்கிய பாதிப்பாகும். இதனால் குழந்தைகளால் பேச்சு மொழியை வளர்க்க முடியாமல் போகிறது. காது கேளாமையும், இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் கல்வி பயிலும் முறையை அதிகமாக பாதிக்கிறது.
எனினும் காது கேளாமை குறைபாடு உள்ளவர்களுக்கு தகவல் தொடர்புக்கான வாய்ப்பை கொடுத்தால் அவர்களும் பிறரைப் போல செயலாற்ற முடியும். தகவல் தொடர்பு தடைபடும் போது அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது.தனிமை, பிரிவு, அதிருப்தி போன்ற உணர்வுகளை உண்டாக்குகிறது. காது கேளாத பெரியவர்களில் பலர் வேலை வாய்ப்பின்றி துன்பப்படுகிறார்கள். வேலையில் இருப்போரும் பொதுவாக உழைப்பவரோடு கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.
காது கேளாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைப் போக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது. குழந்தைகளின் செவித்திறனை பிறந்தது முதல் 3 வயதுக்குள் கண்டறிவது மிகவும் அவசியம். மொழி வளர்ச்சிக்கும், பேச்சு வளர்ச்சிக்கும் உகந்த கால கட்டம் இதுவே ஆகும்.
இக்கால கட்டத்தில் கண்டறிந்து தகுந்த பயிற்சி அளித்தால் சாதாரண குழந்தைகள் போல் அனைத்து அறிவு சார் திறனும் பெற்று குழந்தைகள் ஒளிர்விடுவார்கள். வீட்டில் காது கேளாத குழந்தை இருந்தால் தனித்து விடாது தினமும் பேசவேண்டும். இது அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க நன்கு உதவும்.சைகை மொழியில் அவர்களுடன் பேசுவதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். செவித்துணைக் கருவிகள் நன்முறையில் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்டறிய வேண்டும்.
பெற்றோருக்கு அடுத்த பங்கு ஆசிரியர்களிடம் உள்ளது. 'வாய் வழிக் கல்வி' முறையே காது கேளாத குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். கல்வி கற்றுக் கொடுக்கும்போது கண்டிப்போடு இருப்பதை விட அன்போடு இருப்பது மிக முக்கியம். பிற மாணவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை இவர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும்.அவர்கள் சொல்வதை காது கொடுத்துக்கேட்போம்.
காது கேளாதோரை நம்மோடு இணைப்போம்! நாம் அவர்களோடு இணைவோம்!
- ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது.
- ஆன்லைன் விளையாட்டுகளில் வன்முறையே அதிகமாக இருக்கிறது.
தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பது போராடிப்பதால் பெரியவர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்வள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவத அதிகரித்துள்ளது. இது உடல் நல சிக்கல்களுக்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல் மனலந பிச்சனைகளை ஏற்படுத்துவதோடு பல குற்றங்களுக்கும் வழி வகுப்பதாக அமைந்து விடுகிறது.
ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதே சமயம் பள்ளி பாடங்களையும் செல்போனில் தான் படிக்க வேண்டி இருப்பதால் அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை பல சமயங்களில் தடுக்க முடிவதில்லை. சில நேரங்களில் விடலைப் பிள்ளைகளை கண்டிப்பது விபரீதத்தில் கூட முடிகிறது.
ஆன்லைன் கேம்கள் எனப்பொதுவாக கூறினாலும், குறிப்பிட்ட விபரீதான விளையாட்டுகளையே மாணவர்கள் அதிகம் விளையாடுகின்றனர். இவ்வகை விளையாட்டுகளில் வன்முறையே அதிகமாக இருக்கிறது.
பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்து நாளடைவில் அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் கவனச்சிதறல், மனஅழுத்தம், படபடப்பு போன்ற மனநோய்களுக்கும், கோபம், பதற்றம்போன்ற நடத்தை சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர்.
ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் ஆர்வத்தில் மொபைலை மிக அருகில் வைத்து கொள்கிறார்கள். இதனால் கண்கள் பாதிக்கப்படும் சரியான கோணத்தில் அமராதபோது பகுத்துவலி முதுகுவலி, உறக்கம் கெடுவதால் மலச்சிக்கல் தலைவலி போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
தேவையற்ற நேரத்தில் கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டில் இருந்து அவர்களை விலக்க வேண்டும்.இதனால் அவர்கள் கோபப்பட்டாலும் சோர்வாக நடந்து கொளடாலும சலுகை அளிக்கக்கூடாது. மாறாக அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். மாற்று வழிகளை காண்பிக்க வேண்டும். திரும்பவும்விடையாடத்தோன்றும் போதெல்லாம் இது தவறு என்பதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
- குழந்தையுடன் உரையாடலில் ஈடுபடும் போது சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
- குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும்.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
* அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
* அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
* அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
* ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
* நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
* இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
- மாற்று திறன் கொண்ட குழந்தைகள் நலனுக்காக ரூ.3 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
- இந்த விளையாட்டு பூங்கா பாதுகாப்பான பிசியோ தெரபி மையமாக செயல்படுவதுதான் சிறப்பம்சம்.
பூங்கா என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பிரமாண்டமாக பரந்து விரிந்திருக்கும் பூங்காக்கள் முதல் தெரு மூலையில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பூங்காக்கள் வரை எல்லாவிதமான பூங்காக்களிலும் குழந்தைகளை கவரும் அம்சங்கள் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். அதிலும் குழந்தைகள் விளையாடுவதற்கென்றே பிரத்யேக பகுதி அமைக்கப்பட்டிருக்கும்.
அங்கு ஊஞ்சல் முதல் சீசா வரை விதவிதமான விளையாட்டு சாதனங்கள் இடம் பிடித்திருக்கும். ஆனாலும் அவற்றை எல்லா குழந்தைகளும் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகள், மன வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் விளையாடுவதற்கு சவுகரியமான அம்சங்கள் அதில் இருக்காது. அந்த குறையை போக்கும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் முதல் முறையாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தை களுக்கான பிரத்யேக விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நகரின் மைய பகுதியில் பசுமையான மரங்கள் சூழ்ந்த அடர் வனமாக காட்சி அளிக்கும் கப்பன் பூங்காவில் சிறப்பு திறன், மாற்று திறன் கொண்ட குழந்தைகள் நலனுக்காக ரூ.3 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு பூங்கா பாதுகாப்பான பிசியோ தெரபி மையமாக செயல்படுவதுதான் சிறப்பம்சம். பல்வேறு வகையான குறைபாடு கொண்ட குழந்தைகள் இங்கு மகிழ்ச்சியாக விளையாடி பொழுதை போக்கலாம். அவர்களின் உடல் நலன் மட்டுமின்றி மன நலனையும் மீட்டெடுக்கும் வண்ணம் இங்குள்ள விளையாட்டு சாதனங்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
குழந்தைகள் தங்களின் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூகத்துடன் தங்களை ஒன்றிணைக்கும் திறன் உள்ளிட்ட பன்முக அனுபவங்களை பெறலாம். ஆமை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா உடல், மனம் சார்ந்த தெரபி சிகிச்சைகள், ஓய்வு, தொடுதல் மற்றும் உணரும் செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த விளையாட்டு பூங்காவை நிர்வகிக்கும் அதிகாரிகள் கூறியதாவது, ''மாற்றுத்திறனாளி குழந்தைகளின் முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட சிறு முயற்சியின் வெளிப்பாடுதான் இது. இந்த பிரத்யேக பூங்கா அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், தங்களை சுற்றியுள்ள உலகத்துடன் நெருக்கமாக இணைந்திருப்பதை உணர்வதற்கு ஒரு வாய்ப்பையும் வழங்கும்.
அவர்களின் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவும், உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், விளையாட்டு சாதனங்களை பக்குவமாக கையாளும் தன்மையை வளர்த்துக்கொள்ளவும் வழிகாட்டும். சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் குழந்தைப் பருவத்தை பாதுகாப்பான சூழலில் அனுபவிக்க உதவும். பூங்காவில் செலவிடும் நேரம் சிறப்புக் குழந்தை களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மன அழுத்தத்தைப் போக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கிறோம். நகர மக்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அனைத்து திறனாளிகளும் பயன்படுத்தினால் மட்டுமே அவை வெற்றி பெறும். இந்த பூங்கா மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவும். விளையாடுவது, அங்குள்ள சூழலை ஆராய்வது, நட்பை வளர்ப்பது போன்றவற்றை அனுபவிப்பது மட்டுமல்லாமல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், அவர்களின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும். அவர்களை சுற்றியுள்ளவர்கள் புதிய கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கும் வழிவகை செய்யும்'' என்கிறார்கள்.






